அன்று மாலை ஆறு மணிக்கு வீட்டுக்கு வந்தான் புவி. எப்போதும் போல அவனுக்கு சுஜி டீ கொடுக்க அவளைப் பார்க்காமலே அதை வாங்கிக் கொண்டான். ஏனோ இருவருக்கும் இடையே விரிசல் இன்னும் அதிகமாக ஆனது போலத் தான் தோன்றியது.
டீ குடித்துக் கொண்டிருந்தாலும் அவன் முகம் ஒரு மாதிரி இருக்க “என்ன டா ஏதோ யோசனையிலே இருக்க?”, என்று கேட்டார் பாரி.
“வெண்ணிலாவுக்கு ஒரு வரன் வந்திருக்கு பா. அதை தான் யோசிச்சிட்டு இருந்தேன். மாப்பிள்ளை பேர் வெங்கட். இன்ஜினியரிங் முடிச்சு நல்ல வேலையில் இருக்கார். மாப்பிள்ளைக்கு பூர்வீகம் தஞ்சாவூர். ஆனா இங்கயே செட்டில் ஆகிட்டாங்க. இவருக்கு கொடுத்தா நம்ம வெண்ணிலாவை அடிக்கடி பாத்துக்கலாம். ரோஹினியை டெல்லில கட்டிக் கொடுத்ததுனால அவளை எப்பவாது தான் பாக்க முடியுது. அதனால எனக்கு இந்த சம்பந்தம் சரியா வரும்னு தோணுது”, என்று ஆரம்பித்து மாப்பிள்ளை வெங்கட் பற்றி, அவனுடைய குடும்பத்தைப் பற்றி அப்பா அம்மாவிடம் சொன்னான்.
“எனக்கு அவ கல்யாணம் தான் கவலை. அது முடிஞ்சா சந்தோஷம் தான். மாப்பிள்ளை குடும்பமும் நல்லவங்கன்னு சொல்ற? எனக்கு சம்மதம் தான்”, என்றாள் மல்லிகா.
“எனக்கும் சம்மதம் பா”, என்றார் பாரி. அப்போது ஒரு பில்லை எடுக்க வீட்டுக்கு வந்தான் பரணி. அவனுக்கும் சுஜி டீ குடிக்க அதை வாங்கிய படி புவி அருகில் அமர்ந்தான். அவனிடமும் வெண்ணிலா திருமணம் விஷயத்தைச் சொன்னான் புவி.
“ரொம்ப நல்ல விஷயம் மாப்பிள்ளை”, என்று சொன்னான் பரணி. “சரி அவ கிட்ட கேப்போம்”, என்று சொன்ன புவி “வெண்ணிலா இங்க வா”, என்று தங்கையை அழைத்தான்.
“என்னண்ணா?”, என்ற படி வந்த வெண்ணிலா மல்லிகா அருகில் அமர்ந்தாள்.
“உனக்கு கல்யாணம் பண்ணலாம்னு இருக்கோம்”, என்று சொல்லி அவள் தலையில் குண்டைப் போட்டான் புவி.
அதைக் கேட்டு அதிர்ந்து போனவள் அவசரமாக நிமிர்ந்து பரணியைப் பார்த்தாள். “என்ன வெண்ணிலா?”, என்று அவன் கேட்க “ஒண்ணும் இல்லை”, என்பதாக தலையசைத்தவள் அண்ணனிடம் “இன்னும் கொஞ்ச நாள் போகட்டும் அண்ணா”, என்றாள்.
“இன்னும் கொஞ்ச நாளா? அதுக்கு வாய்ப்பே இல்லை. இது தான் கல்யாணம் பண்ண சரியான வயசு. புவி கல்யாணம் முடிஞ்சா நாங்க சொல்றதைக் கேப்பேன்னு சத்தியம் பண்ணிருக்க வெண்ணிலா? அதனால எதுவும் மறுத்து பேசக் கூடாது”, என்று மகளை அரட்டிய மல்லிகா மகனிடம் அந்த மாப்பிள்ளை வீட்டில் பேசச் சொன்னாள்.
அதற்கு மேல் என்ன பேச என்று தெரியாமல் அறைக்குள் சென்று விட்டாள் வெண்ணிலா. “ஏன் ஒரு மாதிரி இருக்க வெண்ணிலா?”, என்று சுஜி கேட்டதுக்கு அவள் எதுவுமே சொல்ல வில்லை. “உனக்கு வேற யாரையும் பிடிச்சிருக்கா?”, என்று கூட சுஜி கேட்டு விட்டாள். ஆனால் அவள் வாயைத் திறக்கவே இல்லை. ஆனால் வெண்ணிலா அப்படி இருப்பது சுஜிக்கு கஷ்டமாக இருந்தது.
அதனால் அன்று இரவு வெண்ணிலாவுக்காக புவியிடம் பேச முடிவு எடுத்தாள் சுஜி. அவள் அவன் முகத்தை தயக்கமாக பார்க்கவும் “என்ன ஆச்சு? ஏதாவது சொல்லணுமா?”, என்று கேட்டான் புவி. மனதுக்குள்ளோ அவள் தன்னுடன் வாழ்ந்து விட மாட்டாளா என்று ஏக்கமாக இருந்தது.
“அது வந்து…. வெண்ணிலாவுக்கு இந்த கல்யாணம் பிடிக்கலை போல? அவ மனசுல என்ன இருக்குனு தெரியலை. ஆனா கொஞ்ச நாள் பொறுமையா இருக்கலாமே?”, என்றாள்.
“அவ மனசுல யார் இருந்தாலும் என் கிட்ட சொல்லச் சொல்லு. நான் கட்டி வைக்கிறேன். அவ சந்தோஷம் தான் எனக்கு முக்கியம். அப்புறம் அவளுக்கு வேலைக்கு போகணும்னு ஆசை. அதான் கல்யாணம் வேண்டாம்னு சொல்றா. பெருசா ஒண்ணும் இருக்காது”, என்று புவி சொல்லி விட வெண்ணிலாவிடம் அது பற்றி பேசினாள் சுஜி.
“உன் மனசுல என்ன இருக்குனு சொல்லு வெண்ணிலா. ஒரு வேளை யாரையாவது விரும்பினா கூட உங்க அண்ணன் கல்யாணம் பண்ணி வைப்பேன்னு சொல்றாங்க”, என்று சுஜி சொன்னதும் வெண்ணிலா கண்கள் மின்னியது.
தன்னுடைய மனதின் ஆசையைச் சொன்னால் அது நடக்குமா என்று மனதில் எண்ணியவள் முதலில் சம்பந்தப் பட்டவனிடம் பேச முடிவு எடுத்தாள்.
அடுத்த நாள் மாலை எதையோ எண்ணிய படி தோட்டத்தில் அமர்ந்திருந்தாள் வெண்ணிலா. அப்போது “ஏய் வாயாடி எதுக்கு இப்படி இருக்குற?”, என்று கேட்ட படி அங்கு வந்த பரணி அவளுக்கு சற்று இடைவெளி விட்டு அமர்ந்தான்.
“ஒண்ணும் இல்லை மாமா”, என்று அவனிடம் சொன்னாலும் மனதுக்குள் அவனிடம் காதலைச் சொல்லி விட வேண்டும் என்ற எண்ணம் மட்டும் தீவிரம் அடைந்தது.
“வேலைக்கு போகணும்னு நினைக்கிறியா நிலா?”, என்று கேட்டான் பரணி. இல்லை என்னும் விதமாய் தலையசைத்தாள்.
“அது இல்லைன்னா வேற என்ன? ஏன் இப்படி இருக்குற? என்ன விவரம்னு சொல்லு நிலா. உன் அண்ணன் பாத்த மாப்பிள்ளை உனக்கு பிடிக்கலையா?”
“ம்ம்”
“அடி கழுதை. இது தான் உன் பிரச்சனையா? சரி உன் மனசுல யாராவது இருக்காங்களா? இந்த மாமன் கிட்ட சொல்லு. நான் கட்டி வைக்கிறேன். உங்க அண்ணன் கிட்ட பேச வேண்டியது என்னோட பொறுப்பு”
“என் மனசுல யார் இருந்தாலும் என்னை அவங்களுக்கு கட்டி வைப்பியா மாமா?”, என்று ஆழ்ந்த குரலில் கேட்டாள்.
“ஆமா டா. நீ என் அக்கா மக. கண்டிப்பா உன்னோட சந்தோசத்துக்காக உனக்கு பிடிச்ச வாழ்க்கையை ஏற்படுத்திக் கொடுப்பேன்”
“என் மனசுல நீ தான் மாமா இருக்க. நீயே என்னைக் கட்டிக்கோ. அப்ப தான் நான் சந்தோஷமா இருப்பேன்”, என்று வெண்ணிலா தன்னுடைய மனதைச் சொல்லி விட அதைக் கேட்டு அதிர்ந்து போன பரணி “நீ சும்மா விளையாட்டுக்கு தானே சொல்ற?”, என்று நடுக்கத்துடன் கேட்டான்.
“என் கல்யாண விஷயம் விளையாட்டா மாமா? எனக்கு உன்னைத் தான் பிடிக்கும். பிளீஸ் என்னைக் கல்யாணம் பண்ணிக்கோ. எனக்கு வேற எந்த மாப்பிள்ளையும் வேண்டாம்”, என்று சொன்னவளின் முகத்தில் இருந்த தீவிரத்தில் அவனுக்கு வியர்த்து கொட்டியது.
“ஏய் லூசா டி நீ? ஒழுங்கு மரியாதையா உன் அண்ணன் பாக்குற பையனைக் கட்டிக்கோ. இனி அறிவில்லாம இப்படி பேசிட்டு திரியாத”, என்று சொல்லி விட்டு அவன் எழுந்து சென்று விட்டான். அவன் அப்படி பேசி விட்டுச் செல்ல அவளுக்கு என்ன செய்ய என்று தெரிய வில்லை. அடுத்து வந்த நாட்களில் அவனிடம் எவ்வளவோ கெஞ்சி விட்டாள். அவனோ அவளைப் பார்க்க கூடாது என்பதற்காக ஓடி ஒளிந்து கொண்டிருந்தான்.
இன்னும் நான்கு நாட்களில் மாப்பிள்ளை வீட்டினர் வெண்ணிலாவை பெண் பார்க்க வருகிறார்கள் என்ற விஷயம் வீட்டில் அலசப் பட துடித்துப் போனாள் வெண்ணிலா. கூடவே அதற்கான ஏற்பாடுகளை புவியுடன் சேர்ந்து பரணியும் பார்க்க உள்ளுக்குள் சோர்ந்து போனாள்.
இங்கேயே இருந்தால் திருமணம் பற்றி பேசுவார்கள் என்பதால் வேலைக்குக் செல்ல முடிவு எடுத்து மைதிலியை அழைத்தாள்.
“சொல்லு வெண்ணிலா”
“எனக்கு உடனே ஒரு வேலை வேணும் டி. எப்படியாவது ஏற்பாடு பண்ணு”
“ஏன் என்ன ஆச்சு?”
“இன்னும் நாலு நாள்ல என்னை பொண்ணு பாக்க வராங்க. அதுல இருந்து தப்பிக்கணும்”
“பரணி அண்ணா கிட்ட உன் மனசுல இருக்குறதைச் சொன்னியா?”
“ஆமா. ஆனா மாமா முடியாது சொல்லிட்டாங்க. ஆனா எப்படியும் சம்மதிக்க வச்சிருவேன். அதுக்கு கொஞ்ச நாள் நான் இங்க இருக்க கூடாது. பிளீஸ் மைத்தி ஏதாவது ஏற்பாடு பண்ணு”
“வெண்ணிலா எத்தனை நாள் ஓடி ஒளிய முடியும்? என்னைக்கு இருந்தாலும் நீ விஷயத்தைச் சொல்லி தான் ஆகணும். பேசாம புவி அண்ணா கிட்ட சொல்லேன் டி”