“ஏய் சுஜி இங்க வா டி”, என்று மல்லிகா கத்த தன்னுடைய போனை எடுத்த பாரி புவியை அழைத்து “புவி வீட்டுக்கு வா”, என்று சொன்னார். ஏனென்றால் அவருக்கு தெரியும் மல்லிகா பிரச்சனையை கிளப்புவாள் என்று. சும்மாவே சாமி ஆடுபவள் இன்று சலங்கையைக் கட்டிய பிறகு சும்மா இருப்பாளா? அவளை அடக்க மகனால் தான் முடியும் என்று எண்ணிக் கொண்டார்.
சுஜி அறையில் இருந்து வெளியே வந்து அமைதியாக நின்றாள். அவளுக்கே தவறு செய்து விட்டதாக தோன்றியது. மல்லிகா சுஜியை கேள்வி கேட்க ஆரம்பிக்க வெண்ணிலா அப்போது தான் வெளியே வந்தாள். ஆனால் எதுவுமே பேச வில்லை. ஒவ்வொரு முறையும் தன்னால் சுஜியை காப்பாற்ற முடியாது. ஒன்று அவளே வாய் திறந்து பேச வேண்டும். இல்லை என்றால் அண்ணன் அவளுக்காக பேச வேண்டும் என்று அமைதியாக நின்றாள்.
“எதுக்கு டி பிள்ளைங்களை சாப்பிட விடாம சோத்துல தண்ணி ஊத்தின?”, என்று மல்லிகா கேட்கும் போது அங்கே வந்த புவி “என்னப்பா எதுக்கு கூப்பிட்டீங்க?”, என்று கேட்டான்.
“வீட்ல நடக்குற பிரச்சனை உனக்கும் தெரியணும்ல?”, என்று கேட்டார் பாரி.
“இன்னைக்கு என்ன பிரச்சனை?”
“இனி தான் தெரியும்”, என்று அவர் சொல்ல “அம்மா என்ன ஆச்சு?”, என்று கேட்டான் புவி.
“எல்லாம் நீ கட்டிட்டு வந்து வச்சிருக்கியே? அவளைக் கேளு”, என்று மல்லிகா கத்த “நானா கட்டிட்டு வந்தேன்? நீங்க தானே கட்டி வச்சீங்க?”, என்று கேட்க அவனுக்கு வாய் வந்தது தான். ஆனால் அப்படிக் கேட்டால் அது சுஜிக்கு மரியாதையாக இருக்காது என்பதால் அப்படிக் கேட்காமல் “நீயே சொல்லு மா. என்ன ஆச்சு?”, என்று அன்னையிடமே கேட்டான்.
“ரோஹினியும் ரேணுகாவும் பசிக்குதுன்னு சாப்பிட உக்காந்துருக்காங்க. ஆனா உன் பொண்டாட்டி அவங்களை சாப்பிட விடக் கூடாதுன்னு சோத்துப் பானைல தண்ணியை ஊத்தி வச்சிருக்கா. அதுவும் அவங்க கண்ணு முன்னாடியே? வீட்ல யாருமே இப்ப வரைக்கும் சாப்பிடலை”, என்றாள் மல்லிகா.
ஏன் சுஜி அப்படிச் செய்தாள் என்று அவனுக்கு குழப்பமாக இருந்தது. “அம்மா சொல்றது உண்மையா?”, என்று கேட்டான் புவி.
“ஆம்”, என்பதாக சுஜி தலை குனிய “பாத்தியா பதில் சொல்ல மாட்டிக்கா? எனக்கு ரெண்டுல ஒண்ணு தெரியணும். இவ மனசுல என்ன நினைச்சிட்டு இருக்கா?”, என்று மல்லிகா சுஜியை திட்ட சுஜி அமைதியாக நின்றாள். புவிக்கு நிலைமையை எப்படி சமாளிக்க என்று தெரிய வில்லை.
யாரும் எதுவும் பேச மாட்டார்கள் என்று புரிந்து கொண்ட வெண்ணிலா “அம்மா வாயை மூடு, என்ன நடந்ததுன்னு தெரியாம வாய்க்கு வந்ததை பேசாத”, என்றாள்.
“நான் வாயை மூடனுமா? அப்ப இவ மட்டும் என் பொண்ணையும் மருமகளையும் சாப்பிட விடாம செய்யலாமா?”
“அப்ப இவங்க பண்ணின வேலைக்கு சுஜி இவங்களுக்கு சாப்பாடை வாய்ல ஊட்டி விடுவாளா?”
“என்ன நடந்துச்சு வெண்ணிலா? இவங்க என்ன பண்ணினாங்க?”, என்று கேட்டார் பாரி.
“மதன் அத்தான் கல்யாணத்துக்கு சுஜியோட அம்மா அப்பா பத்திரிக்கை கொண்டு வந்தாங்க”, என்றாள் வெண்ணிலா.
“ஆமா, நான் தானே அவங்களை வீட்டுக்கு அனுப்புனேன்”, என்றான் புவி.
“அவங்க அப்ப தான் சாப்பிட உக்காந்தாங்க அண்ணா. ஆனா அவங்களை சாப்பிட விடாம இவங்க ரெண்டு பேரும் அசிங்கப் படுத்தினாங்க. அவங்க ஏதோ சாப்பாட்டுக்கே வழி இல்லாதவங்க மாதிரி ரேணுகா பேசினா. அதுக்கு ரோஹினியும் கூட்டு. அவளும் அவங்களை கண்டவங்கன்னு சொன்னா. அதனால அவங்க அப்படியே எழுந்துட்டாங்க. அங்க பாருண்ணா அவங்களுக்கு போட்ட இலையை”, என்று காட்ட அனைவரும் அங்கே பார்த்தார்கள்.
அதில் சாதமும் குழம்பும் அப்படியே இருக்க புவியும் பாரியும் திகைத்து விட்டார்கள். மல்லிகாவுக்கே ஒரு மாதிரி தான் இருந்தது.
“தன்னோட அம்மா அப்பாவை அவமானப் படுத்தினவங்களுக்கு சுஜி எப்படி கறி விருந்து பரிமாறுவா அப்பா?”, என்று கேட்டாள் வெண்ணிலா.
“என்ன ரோஹினி இதெல்லாம்? இது தான் நீ வளந்த லட்சனமா? இவ்வளவு கேவலமானவளா நீ?”, என்று பாரி கேட்க “அப்பா அது வந்து…”, என்று சொல்லும் போதே ரோஹினி கண்கள் கண்ணீரால் நிறைந்து விட்டது.
“வீட்டுக்கு வந்தவங்களை உபசரிக்கணும்னு கூட அறிவு இல்லை. நீயெல்லாம் எனக்கு தங்கச்சியா?”, என்று புவி கேட்க அண்ணனின் பேச்சில் அரண்டு விட்டாள் ரோஹினி.
“அப்பா, வந்தது என்னோட மாமனார் மாமியார். அவங்களை இப்படி அசிங்க படுத்தினதை என்னால தாங்கிக்க முடியாது. நீங்க தான் வீட்டுக்கு பெரியவங்க. என்ன செய்யப் போறீங்க?”, என்று தந்தையிடம் கேட்டான் புவி.
ரோஹிணியை முறைத்துப் பார்த்த பாரி “உடனடியா உன் வீட்டுக்கு கிளம்பு. உன் அண்ணனோட மாமனார் மாமியாரை கண்டவங்கன்னு சொன்ன நீயும் இனி எங்களுக்கு கண்டவ தான். கிளம்பு போ”, என்று சொல்ல அழுத படியே சென்றாள் ரோஹினி. யாரும் அவளை தடுத்து நிறுத்த வில்லை.
பின் தன்னுடைய போனை எடுத்த பாரி ரேணுகாவின் தந்தை சிதம்பரத்தை அழைத்தார். “மாப்பிள்ளை”, என்று சொன்னவருக்கு மகள் இன்று என்ன பிரச்சனையை இழுத்து வைத்திருக்கிறாளோ என்று கவலை வந்தது.
“யோவ் நீ சோறு தான் திங்குறியா? இல்லை வேற எதுவுமா? பொண்ணையா பெத்து வச்சிருக்க? இவ எல்லாம் ஒரு பொண்ணே கிடையாது. இன்னும் கொஞ்ச நேரத்துல என் மகன் உன் பொண்ணைக் கூட்டிட்டு உன் வீட்டுக்கு வருவான். உன் பொண்ணை உன் வீட்டோடவே வச்சு அழகு பாரு”, என்று பொரிந்து விட்டார் பாரி.
“மாப்பிள்ளை, என்ன நடந்துச்சு? ரேணு என்ன பண்ணினா?“
“அதான் கொஞ்ச நேரத்துல அவளே உன் வீட்டுக்கு வருவால்ல? அவ கிட்டயே கேளு”
“நான் அவளுக்கு புத்திமதி சொல்றேன் மாப்பிள்ளை”
“நீ என்னமும் செஞ்சிக்கோ. ஆனா இவ இனி இந்த வீட்டுக்கு வேண்டாம்”, என்று சொல்லி போனை வைத்தவர் மகேஷை அழைத்தார்.
“சொல்லுங்கப்பா”
“சீக்கிரம் வீட்டுக்கு வந்து உன் பொண்டாட்டியை அவ வீட்ல விட்டுட்டு வா. இல்லை பொண்டாட்டி தான் வேணும்னா நீயும் அவளோடவே போயிரு”, என்று சொல்லி விட்டு வைத்து விட்டார்.
“இங்க பாரு ரேணுகா, நானும் நீ மாறுவேன்னு ரொம்ப எதிர் பாத்தேன். ஆனா நீ குடும்பத்தை சீரழிச்சிருவ. உன் புருஷன் இப்ப வருவான். அவன் கூட உன் வீட்டுக்கு கிளம்பு. திருந்தி வரதா இருந்தா வா. இல்லைன்னா வரவே செய்யாத”
“மாமா நான்….”, என்று தயக்கத்துடன் சொன்னாள் ரேணுகா.
“நீ எதுவும் பேசத் தேவை இல்லை. என்னைத் தேடி என் வீட்டுக்கு வந்தவங்களை நீ அவமானப் படுத்துவியா? உனக்கு யாரு அந்த உரிமையைக் கொடுத்தது? உன்னை மாதிரி அந்த பொண்ணும் இந்த வீட்டுக்கு வாழ தான் வந்துருக்கா. இந்த வீட்ல புவி தான் எல்லாமே. அவன் பொண்டாட்டியை நீ இன்சல் பண்ணினா நீயும் மகேசும் தனியா தான் வாழனும். அதுவும் மகேஷ் இந்த குடும்பத்தை விட்டு உன் கூட வரது கஷ்டம். அப்புறம் நீ உன் வீட்ல வாழா வெட்டியா தான் இருக்கணும். இனிமேலாவது திருந்தப் பாரு. இப்ப போய் கிளம்பு”
“இனி இப்படி செய்ய மாட்டேன் மாமா”
“சொல்லாத செய். இப்ப உன் வீட்டுக்கு கிளம்பு. மகேஷ் இப்ப உன்னை விட வருவான். போ”, என்று சொல்ல வேறு வழியில்லாமல் அறைக்குச் சென்றாள். அங்கே ஏகப் பட்ட அழைப்பு தந்தை மற்றும் கணவனிடம் இருந்து வந்திருந்தது.
தந்தையை அழைத்து அவள் நடந்ததைச் சொல்ல “உனக்கு எத்தனை தடவை சொல்றது ரேணு? இங்க வீட்டுக்கு வந்த கொன்னுருவேன் கொன்னு. என் தங்கச்சி வீட்ல வாழுறதுக்கு உனக்கு என்ன கஷ்டம்? அது மட்டுமில்லாம வீட்டுக்கு வந்தவங்களை இப்படி தான் பேசுவியா? இங்க வந்த நான் என்ன செய்வேன்னு தெரியாது”, என்று சொல்லி போனை வைத்து விட்டார்.
ரேணுகாவுக்கு என்ன செய்ய என்று தெரிய வில்லை. அழுது கொண்டே இருந்தாள்.
“நீ என்ன மரம் மாதிரி நிக்குற? நீ பேசின பேச்சுக்கு சுஜி கிட்ட மன்னிப்பு கேளு”, என்று மல்லிகாவிடம் சொன்னார் பாரி.
அவள் திகைத்து விழிக்க “என்ன பாக்குற? மன்னிப்பு கேளு”, என்று சொல்ல “என்னை மன்னிச்சிரு சுஜி”, என்றாள் மல்லிகா.
“அவ கிட்ட மட்டும் மன்னிப்பு கேட்டா பத்தாது. சம்பந்திக்கு அதான் சுஜியோட அப்பாவுக்கு கால் பண்ணி உன் பொண்ணும் மருமகளும் செஞ்ச தப்புக்கு அவர் கிட்டயும் மன்னிப்பு கேளு”, என்று சொல்ல வேறு வழியில்லாமல் தணிகாச்சலத்தை அழைத்து மன்னிப்பு வேண்டினாள் மல்லிகா.