“உன் மூலமா தான் தெரியும்”, என்று வெண்ணிலா சொல்ல சுஜி திகைத்து தான் போனாள்.
“என் மூலமா வா? நான் சும்மா என் குடும்பததைப் பத்தி பேசுவேன். ஆனா என் அண்ணனை மைத்தி பாத்துக் கிட்டதே இல்லையே?”
“உன் கல்யாண விஷயம் பேச போகும் போது தான் அவ உன்னோட அண்ணனைப் பாத்தா. மதன் அத்தான் அவ கிட்ட காதலைச் சொல்லிருக்காங்க. அவளுக்கு தான் அவளை யாராவது பிடிச்சிருக்குன்னு சொன்னா போதுமே? அதனால அவளுக்கும் மதன் அத்தான் மேல காதல் வந்துருச்சு”
“என்ன சொல்ற வெண்ணிலா?”
“திடீர்னு எப்படி எங்க வீட்ல இருந்து உன்னை பொண்ணு கேட்டாங்கன்னு யோசிச்சியா சுஜி?”
“வெண்ணிலா”, என்று அதிர்வாக அழைக்க “மைத்தி தான் உன் கல்யாணம் நடக்க காரணம். எங்க அண்ணன் மேல உனக்கு இருந்த காதலைச் சொன்னது அவ தான். உங்க அண்ணன் கிட்ட உன் மனசை புரிய வச்சதும் அவ தான்”, என்றாள்.
“வெண்ணிலா நீ நிஜமாவா சொல்ற?”
“ஆமா டி. உன் கல்யாணம் நடக்க காரணமே அவ தான். ஆனா இப்ப நீ அவளை ஒதுக்கி வைக்கிறல்ல?”, என்று கேட்டாள்.
“ஐயோ சத்தியமா அவளை ஒதுக்கி வைக்க நினைக்கலை டி. அவ என் கிட்ட சொல்லலைன்னு கோபம். அது தான்”
“நீ உன் காதலை என் கிட்ட சொல்லலைன்னு நான் கோபப் படவா சுஜி? இல்லை உன்னோட காதலை நீ மைத்தி கிட்ட தான் சொன்னியா? அவளா தானே கண்டு பிடிச்சா? அப்படின்னா அவளும் உன் மேல கோபப் படட்டுமா?”
“சாரி டி வெண்ணிலா. என் தப்பு இப்ப புரியுது”
“எல்லார் மனசுலயும் சில தனிப் பட்ட உணர்வுகள் இருக்கும் சுஜி. அதை பிரண்ட்ஸ் கிட்ட கூட சில நேரம் சொல்ல முடியாது. அவ ஏற்கனவே உங்க வீட்ல அன்னியமா உணருறா. அவளுக்கு சப்போர்ட்டா இருக்க வேண்டிய நீயும் அவளைக் கஷ்டப் படுத்தாத”, என்று சொல்லி போனை வைத்தாள் வெண்ணிலா.
உடனே மைதிலியை அழைத்து விட்டாள் சுஜி. அதை எடுத்த மைதிலி “சாரி சுஜி… நான் வேணும்னு பண்ணலை”, என்று சொல்ல “நீ ஏன் சாரி கேக்குற? உன்னைக் கஷ்டப் படுத்தினதுக்கு நான் தான் சாரி கேக்கணும். எனக்கு பிடிச்ச வாழ்க்கையை ஏற்படுத்திக் கொடுத்ததுக்கு உனக்கு நான் நன்றி தான் சொல்லணும்”, என்று சொன்னாள் சுஜி.
அதற்கு பின் தோழிகள் இருவரும் வெகு நேரம் பேசிக் கொண்டிருந்தார்கள். வெண்ணிலாவும் லைனில் வர வெகு நாட்கள் கழித்து மூவரும் சந்தோஷமாக பேசினார்கள்.
அடுத்த இரண்டு நாட்கள் கழித்து மதன் மைதிலி கல்யாணப் பத்திரிக்கையை கொடுக்க தணிகாச்சலம் மற்றும் சுந்தரி இருவரும் புவியின் வீட்டுக்கு வந்தார்கள். அதற்கு முந்தைய நாள் தான் ரோஹினியும் வெண்ணிலாவும் பிறந்த வீட்டுக்கு வந்திருந்தார்கள்.
பெற்றவர்களைக் கண்டதும் “அப்பா அம்மா, வாங்க வாங்க”, என்று சந்தோஷமாக வரவேற்று அவர்களை அமர வைத்தாள் சுஜி. அவள் உடல் மெலிவு மனதை உறுத்தினாலும் சுந்தரி வேறு எதுவும் கேட்க வில்லை. அப்போது வீட்டில் சுஜி, வெண்ணிலா மட்டுமே இருந்தனர்.
வெண்ணிலாவும் அறைக்குள்ளே இருக்க சுஜி மட்டும் தான் அவர்களை வரவேற்றாள். “உனக்கு தான் விஷயம் தெரியுமே? நம்ம மதனுக்கு கல்யாணம் வச்சிருக்கோம். பத்திரிக்கை கொடுக்கணும். மாப்பிள்ளையை கடைல போய் பாத்துட்டோம். சம்பந்தி எல்லாம் எங்க?”, என்று கேட்டார் தணிகாச்சலம்.
“சரி மா அவங்க வந்தா சொல்லிரு. பத்திரிக்கையை கொடுத்துரு. நாங்க கிளம்புறோம்”, என்று எழுந்து கொண்டார் தணிகாச்சலம்.
“சாப்பிட்டு போங்கப்பா”, என்று சொன்னாள் சுஜி. அவர் மறுக்க சுந்தரியும் மறுத்தாள். ஆனால் சுஜி கெஞ்சிக் கேட்கவும் இருவரும் சாப்பிட அமர்ந்தார்கள். வெண்ணிலாவும் ரோஹினியும் வந்திருந்ததால் அன்று காலையிலே பாரி மட்டன் வாங்கிக் கொடுத்து விட்டார்.
பெற்றவர்கள் முன் இலையைப் போட்டு கறி சோறை சுஜி பரிமாறும் போது தான் ரேணுகா மற்றும் ரோஹினி இருவரும் ஷாப்பிங் சென்று விட்டு வந்தார்கள். இவர்களைக் கண்டதும் அவர்கள் ஒரு வார்த்தை கூட பேசாமல் அறைக்குள் செல்லப் போக “எப்படி இருக்கீங்க மா ரெண்டு பேரும்”, என்று கேட்டாள் சுந்தரி.
ரோஹினி “ம்ம்”, என்று சொல்லி விட்டு உள்ளே செல்ல ரேணுகா அதைக் கூட சொல்ல வில்லை.
“அவங்க கிடக்குறாங்க மா. நீங்க சாப்பிடுங்க. சாப்பாடு எப்படி இருக்கு? ஆனா உன் டேஸ்ட் வராது”, என்று புன்னகையுடன் சுஜி சொல்ல “அருமையா இருக்கு. ஆனா எங்களுக்கு தான் நீ செஞ்சு கொடுத்ததே இல்லை”, என்றாள் சுந்தரி.
“என்னை மன்னிச்சிரு மா”, என்று சுஜி சொல்ல “விடு டா”, என்று மகளைத் தேற்றினாள் சுந்தரி.
“சரியான பசில வந்தேன் ரேணு”, என்று ரோஹினி செல்ல “நானும் தான் சரியான பசில வந்தேன். ஆனா எல்லாம் போச்சு”, என்றாள் ரேணுகா. அவர்கள் குரல் கேட்டதும் மூவரும் திரும்பிப் பார்த்தார்கள். சுஜி மௌனமாக நிற்க “வாங்க மா சாப்பிடலாம்”, என்று அழைத்தாள் சுந்தரி.
“கண்டவங்க சாப்பிடுற இடத்துல நாங்க எப்படி சாப்பிட முடியும்?”, என்று ரோஹினி கேட்க “ரோஹினி வாயை மூடு”, என்றாள் சுஜி. தணிகாச்சலம் மற்றும் சுந்தரிக்கு ஒரு மாதிரி போய் விட்டது.
இத்தனை நாள் அமைதியாக இருந்த சுஜி இன்று அப்படிச் சொல்லவும் ரோஹினி வாயை மூடி கொள்ள ரேணுகா சும்மா இருக்காமல் “எதுக்கு கத்துற சுஜி? நீ அவங்களுக்கு பரிமாறு. நாங்க அப்புறமா சாப்பிட்டுக்குறோம். உன்னோட அம்மா அப்பா இந்த மாதிரி சாப்பாடை எல்லாம் எப்ப பாத்துருப்பாங்களோ? அதனால தின்னுட்டு போகட்டும்”, என்றாள்.
ரோஹினியும் ரேணுகாவும் பேச ஆரம்பித்ததும் எழுந்து வந்த வெண்ணிலா அவர்கள் பேச்சில் அப்படியே திகைத்து நின்று விட்டாள். அதுவும் சுஜி ரோஹினியைப் பேசவும் அவளே பேசட்டும் என்று அங்கேயே நின்று விட்டாள்.
அதற்கு சுஜி ஏதோ சொல்ல வர “வேண்டாம் டா, எங்களுக்காக நீ எதுவும் பேச வேண்டாம். நாங்க கிளம்புறோம் டா”, என்று எழுந்து கொண்டார் தணிகாச்சலம். சுந்தரியும் எழுந்து விட்டாள்.
“உங்க பேச்சைக் கேக்காம போனதுக்கு தான் எனக்கு இந்த தண்டனைப் பா. எனக்கு இது தேவை தான். இனி என்னைப் பாக்க நீங்க ரெண்டு பேரும் இங்க வராதீங்க”, என்றாள் சுஜி.
“சரி மா”, என்று சொல்லி விட்டுச் சென்றனர்.
அவர்கள் போனதும் எதுவுமே நடக்காதது போல “வா ரோஹினி நாம ஒரு கட்டு கட்டலாம்”, என்று சொன்னாள் ரேணுகா.
இருவரும் டைனிங் டேபிளில் அமர்ந்து இலையைப் போட இதை பொறுமையாக பார்த்துக் கொண்டிருந்த சுஜி சோற்றுப் பானையில் ஒரு செம்புத் தண்ணீரை அப்படியே ஊற்றினாள். இருவரும் அதிர்ந்து விழிக்க சுஜியோ ஒரு வார்த்தை கூட பேசாமல் அறைக்குள் சென்று விட்டாள். இந்த காட்சியைப் பார்த்த வெண்ணிலா அப்படியே திரும்பி அறைக்குள் சென்று விழுந்து விழுந்து சிரித்தாள். கூடவே இன்னைக்கு ஒரு பஞ்சாயத்து இருக்கு என்று எண்ணிக் கொண்டாள்.
பாரி மற்றும் மல்லிகா வந்ததும் ரேணுகா மற்றும் ரோஹினி இருவரும் உர்ரென்று இருந்தார்கள்.
“என்ன ஆச்சு ரெண்டு பேரும் இப்படி உக்காந்துருக்கீங்க?”, என்று கேட்டாள் மல்லிகா.
“பசிக்குது மா”, என்று ரோஹினி சொல்ல “மணி தான் ரெண்டு ஆகிருச்சே? சாப்பிட வேண்டியது தானே?”, என்று கேட்டார் பாரி.
“என்ன சொல்ற நீ?”, என்று கேட்டாள் மல்லிகா. பாரிக்கும் குழப்பமே. “நீங்களா பண்ணிட்டு சுஜி மேல பழி போடுறீங்களா?”, என்று கேட்டார் பாரி.
“இல்லைப்பா, நாங்க சாப்பிடக் கூடாதுன்னே எங்க கண்ணு முன்னாடியே சுஜி தான் தண்ணி ஊத்தினா”, என்று ரோஹினி சொல்ல பாரியுமே அதிர்ந்து போனார். வீட்டில் இன்னும் ஒருவருமே சாப்பிட வில்லை. பாரியும் மல்லிகாவும் கூட பசியுடன் தான் வந்திருந்தார்கள். இன்னும் சற்று நேரத்தில் புவி மற்றும் பரணியும் வந்து விடுவார்கள். அப்படி இருக்க இப்படி ஒரு செய்கையை யாரும் சுஜியிடம் இருந்து எதிர் பார்க்க வில்லை.