இப்படியே நாட்கள் செல்ல அனைவரின் வாழ்க்கையும் இப்படியே தான் இருந்தது. வெண்ணிலா இப்போதெல்லாம் ஊருக்கு வருவதே இல்லை. வீட்டுக்கு வந்தால் திருமணம் பற்றி பேசுகிறார்கள் என்பதால் அவள் வருவதில்லை. மைதிலியும் கவர்ன்மெண்ட் வேலைக்கு போய்க் கொண்டு இருந்தாள்.
சுஜிக்கு ஒன்பதாம் மாதம் ஆன போது அவளது அம்மா சுந்தரி போனில் வளைகாப்பு ஏற்பாடு பற்றி கேட்டாள். சுஜி அதை பாரியிடம் கேட்க அதற்கு பின்னர் நல்ல நாள் பார்த்து ஏற்பாடு செய்யப் பட்டது.
வளைகாப்பு நல்ல படியாக முடிந்தது. அவளை அழைத்துக் கொண்டு சென்றார்கள். அவள் சென்றதும் புவி தனிமையை உணர்ந்தான்.
அவளும் அப்படி தான். அவனிடம் இருந்து ஒரு போனாவது வராதா என்று எதிர் பார்த்தாள். அது இல்லாததால் மனதுக்குள் மறித்து தான் போனாள். அவளது சந்தோஷம் அவனுடன் கூடிய நாளை எண்ணிப் பார்ப்பது மட்டுமே. ஆனால் புவி தினமும் சுஜியைத் தவிர மற்றவர்களிடம் பேசி அவள் நலனை தெரிந்து கொண்டு தான் இருந்தான்.
சுஜிக்கு பெண் குழந்தை பிறந்தது. மதன் தான் புவிக்கு தகவல் சொன்னான். அன்றே அவளையும் குழந்தையும் பார்க்கச் சென்றான். அவன் வரவில் அவளுக்கு உள்ளுக்குள் சந்தோஷம் தான். ஆனால் அதை அவள் வெளியே காட்ட வில்லை.
மூன்று மாதம் கழித்து அவளையும் குழந்தையையும் வீட்டுக்கு அழைத்து வந்தான் புவி. குழந்தைக்கு பவித்ரா என்று அவன் தான் பெயர் வைத்தான். அவளிடம் கூட அவன் கேட்க வில்லை. மனைவியிடம் ஒன்ற முடியாத புவி குழந்தையுடன் ஒன்றிப் போனான். அதில் சில நேரம் சுஜிக்கு பொறாமையாக கூட இருக்கும்.
ஒரு நாள் அறையில் வைத்து சுஜி குழந்தைக்கு பால் கொடுத்துக் கொண்டிருந்தாள். அது தெரியாமல் அறைக்குள் வந்த புவி “சாரி”, என்று சொல்லி விட்டு வெளியே சென்று விட்டான்.
அவன் விலகிச் செல்ல அவளுக்கு எரிச்சல் தான் வந்தது. “நான் அவன் பொண்டாட்டி தானே? இப்படி சாரி சொல்லிட்டு விலகி போகனுமா?”, என்று எண்ணி கவலைப் பட்டாள். அதன் பிறகு அவன் கண் முன்னே இருக்க மாட்டாள். அப்படியே தான் அவர்கள் வாழ்க்கை சென்றது.
இப்போது பவித்ராவுக்கு மூன்று வயது ஆனாலும் கூட அவர்கள் வாழ்க்கை அப்படியே தான் இருக்கிறது. பழைய விஷயங்களை எல்லாம் எண்ணிப் பார்த்த சுஜிக்கு அன்று தூங்க வெகு நேரம் ஆனது. அவளது வேலைகளும் அப்படியே தான் இருக்கிறது. சுஜிக்கு அதெல்லாம் பழகி விட்டது. ஆனாலும் சில நேரம் கணவனின் அருகாமைக்காக ஏங்கத் தான் செய்வாள்.
ஆனால் இருவருக்கும் அன்பு இருக்கிறது என்று இருவருமே உணர வில்லை. அவளுக்கு பிடிக்க வில்லை என்று அவனும் அவனுக்கு பிடிக்க வில்லை என்று அவளும் விலகியே நாட்கள் ஓடிக் கொண்டிருக்கிறது.
வெண்ணிலாவும் வீட்டில் இல்லாததால் சுஜி எல்லாவற்றையும் உள்ளுக்குள்ளே வைத்துக் கொண்டாள். இப்போதும் மல்லிகா அவளை மட்டம் தட்டுகிறாள் தான். ஆனால் சுஜி அதை வேறு யாரிடமும் சொல்லாததால் அந்த விஷயங்கள் அப்படியே அமுங்கி போய் விடுகிறது. இதை எல்லாம் எண்ணிய படியே உறங்கிப் போனாள் சுஜி.
யாருடைய மனதிலாவது மாற்றம் என்ற ஒன்று வந்தால் எல்லாமே மாறுமோ என்னவோ? ஆனால் அந்த மாற்றம் எப்படி வருமோ? அந்த மாற்றத்துக்காகவே சில பல விஷயங்கள் நடந்தது.
அடுத்த நாள் காலையில் மல்லிகாவின் தூரத்து சொந்தத்தில் இருந்து ஒரு குடும்பம் பத்திரிக்கை வைக்க வந்திருந்தார்கள். அவர்கள் மிகப் பெரிய கோடீஸ்வரர்கள்.
“அண்ணே நீங்களா? மதினி வாங்க வாங்க. எவ்வளவு வருஷம் ஆச்சு பாத்து? வாங்க உக்காருங்க”, என்று வரவேற்றாள் மல்லிகா.
அப்போது அங்கே சுஜி வர அவர்கள் முன்னிலையில் கெத்து காட்டுவதற்காக “ஏய் டீ எடுத்துட்டு வா”, என்று அரட்டினாள் மல்லிகா.
சுஜியும் டீ போட்டு எடுத்துச் செல்ல “இந்த பொண்ணு யாரு மல்லிகா?”, என்று கேட்டாள் வந்திருந்த பெண்மணி.
அன்று மல்லிகாவின் வாயில் சனியன் இருந்ததோ என்னவோ? அவர்களிடம் சுஜியை “எங்க வீட்டு வேலைக்காரி”, என்று சொல்லி விட்டாள். அதைக் கேட்டு கொதித்துப் போனாள் சுஜி. ஆனாலும் அவர்கள் முன்னிலையில் கோபத்தைக் காட்ட முடியாமல் அமைதியாக உள்ளே சென்று விட்டாள். ஆனால் அவள் மனது குமுறிக் கொண்டிருந்தது. இத்தனை நாள் எத்தனையோ முறை அவமானமாக பேசியும் அமைதியாக இருந்தவளுக்கு இன்று பயங்கர கடுப்பாக இருந்தது.
பத்திரிக்கையை கொடுத்து விட்டு அவர்கள் கிளம்பிச் செல்ல சுஜி உடனேயே பவித்ராவை அழைத்துக் கொண்டு அறையை விட்டு வெளியே வந்தாள். அவள் கையில் இருந்த பையைக் கண்டு மல்லிகா திகைத்து விட்டாள்.
“ஏய் எங்க போற?”, என்று மல்லிகா கேட்க அவளுக்கு பதில் கூட சொல்லாமல் வீட்டை விட்டுச் சென்று விட்டாள்.
மல்லிகா எவ்வளவு தடுத்தும் அவள் கேட்க வில்லை. உடனே மல்லிகா பாரியை அழைத்து சுஜி வீட்டை விட்டுச் சென்றதை மட்டும் சொல்ல அதைக் கேட்ட பாரிக்கு திகைப்பு தான்.
வீட்டுக்கு சென்ற சுஜி அழுது கொண்டே இருக்க அனைவரும் விசாரித்தார்கள். சுஜி நடந்ததைச் சொல்லி அழுதாள்.
“எனக்கு அங்க போகவே பிடிக்கலை, எதுக்கு வாழுறோம்னு இருக்கு. அவருக்கு கூட என்னைப் பிடிக்கலை”, என்று அழ அப்போது தான் அவளது மரியாதையைக் காப்பாற்ற புவி அவளுக்கு நகை வாங்கிக் கொடுத்ததைச் சொல்லி அவனை புகழ்ந்து பேசினார் தணிகாச்சலம்.
அதைக் கேட்டு அவள் திகைத்துப் போய் இருக்க “அது மட்டுமா? வளைகாப்பு முடிஞ்சு நீ இங்க வந்ததும் உன் புருஷன் எத்தனை தடவை எனக்கு போன் பண்ணி நீ எப்படி இருக்கன்னு கேப்பார் தெரியுமா? அது மட்டுமில்லாம மதன் கல்யாணத்துல அவ்வளவு வேலையை பார்த்தார். ரகுக்கு ஏதோ பீஸ் கட்டணும்னு சொன்னப்ப அவர் தான் சட்டுன்னு பணம் கொடுத்தார். இப்ப அதைக் கொடுத்துட்டாலும் அவர் செஞ்சதை மறக்க கூடாதுல்ல? மாமியார் மருமகள் பிரச்சனை சகஜம் தான். ஆனா உன் புருசனுக்கு உன் மேல பாசமே இல்லைன்னு மட்டும் சொல்லாத சுஜி. நாங்களே பாத்திருந்தா கூட நமக்கு இப்படி ஒரு மாப்பிள்ளை கிடைச்சிருக்க மாட்டார். அதிகம் படிக்கலைன்னாலும் அவர் தங்கம்”, என்று சுந்தரி சொல்ல அனைத்தையும் நம்புவதற்கே சுஜிக்கு கஷ்டமாக இருந்தது.
“ஆமா சுஜி. மாப்பிள்ளை ரொம்ப நல்லவர். நான் அவரை வரச் சொல்றேன். நீ அவர் கூட போ. அவருக்காக உன் மாமியாரை மன்னிச்சிரு மா”, என்று மதன் சொல்ல அவளும் சரி என்று சொன்னாள். உடனே மதன் புவியை அழைத்தான்.
“சொல்லுங்க மச்சான். அப்பா இப்ப தான் சொன்னார், சுஜி கோபப் பட்டு வீட்டை விட்டு போய்ட்டான்னு. என்ன நடந்துச்சுன்னு தெரியலை. சுஜி அங்க தானே இருக்கா?”, என்று பரிதவிப்புடன் கேட்டான்.
“இந்த தான் இருக்கா மாப்பிள்ளை. பிள்ளையைத் தூக்கிட்டு இங்க வந்து ஒரே அழுகை”
“ஓ, என்ன நடந்துச்சுன்னு ஏதாவது சொன்னாளா? வீட்ல என்ன நடந்துச்சுன்னு எனக்கு தெரியலை”, என்று புவி தவிப்புடன் கேட்க நடந்ததைச் சொன்னான் மதன். அதைக் கேட்ட புவிக்கு மல்லிகாவை நினைத்து எரிச்சல் வந்தது.
“எங்க வீட்ல நடக்குற பிரச்சனைக்கு நான் தான் உங்க கிட்டயும் சுஜி கிட்டயும் மன்னிப்பு கேக்கணும். சரி நான் நைட் அவங்களை கூப்பிட வரேன்”, என்று சொல்லி போனை வைத்த புவி பரணி மற்றும் பாரியிடம் மல்லிகா செய்த விஷயத்தைச் சொல்ல அவர்களுக்கும் மல்லிகாவை நினைத்து எரிச்சல் வந்தது. வீட்டுக்குச் சென்று பாரி அவளை ஒரு வாங்கு வாங்கி விட்டார்.
அன்று இரவு புவி அவளை அழைக்கச் செல்ல அவனுடன் கிளம்பி வீட்டுக்கு வந்த சுஜி மல்லிகாவிடம் ஒரு வார்த்தை கூட பேச வில்லை. புவியும் அன்னையிடம் பேச வில்லை. அடுத்து வந்த நாட்களில் சுஜி புவியையே நோட்டம் விட்டாள். அவன் எப்போதும் போல அவளிடம் அதிகம் பேச வில்லை தான். ஆனால் அவன் செயலில் அவள் மீதான சின்ன சின்ன அக்கறையைக் கண்டாள்.
அவள் தூங்கி விட்டாள் என்று எண்ணி அவளுக்கு போர்வை மூடி விடுவது, அவள் தலை கோதுவது என்ற செயல்களில் அவனுடைய அன்பை உணர்ந்தாள் சுஜி. அவனை முழுதாக புரிந்து கொள்ள முடியவில்லை என்றாலும் இதுவே போதும் என்று அவளுக்கு தோன்றியது.