தன்னுடைய மனைவியும் அண்ணியும் சமையல் அறையில் நிற்பதைப் பார்த்த மகேஷ்க்கு “ரேணுவும் கொஞ்சமே கொஞ்சம் நல்லவள் தான்?”, என்ற எண்ணம் வந்தது.
அதற்கு பின் சுஜி இரவு உணவை டைனிங் டேபிளில் எடுத்து வைக்க அனைவரும் அமர்ந்து சாப்பிட்டார்கள். “நீயும் சாப்பிடு மா”, என்றான் பரணி.
“நான் அப்புறம் சாப்பிடுறேன் அண்ணா”, என்று சொன்ன சுஜி பவிக்கு குழைந்த ரசம் சாதத்தை ஊட்ட ஆரம்பிக்க அவளோ “மா எனக்கு சப்பாத்தி வேணும்”, என்றாள்.
அவள் கையில் ஒரு சப்பாத்தியை முழுதாக கொடுக்க “என்ன அப்படியே கொடுக்குற? குழந்தை எப்படி சாப்பிடுவா? கொஞ்சமாவது அறிவிருக்கா?”, என்று கேட்க வந்தாள் மல்லிகா.
ஆனால் இப்போது மகனுக்கு மரியாதை கொடுத்து என்ன தான் செய்யுறான்னு பாப்போம் என்று எண்ணி உணவில் கவனமாக இருக்க குழந்தையோ சப்பாத்தியை பிய்த்து பிய்த்து கீழே கீழே போட்டாளே தவிர உண்ணவே இல்லை. ஆனால் அவள் சப்பாத்தியுடன் விளையாடிக் கொண்டிருக்க சுஜி அனைத்து சாப்பாடையும் பிள்ளைக்கு ஊட்டி இருந்தாள்.
ஒரு அதட்டல் இல்லை, சத்தம் இல்லை. அவ்வளவு அமைதியாக அவள் குழந்தையை சாப்பிட வைக்க அந்த சமத்துக் குட்டியும் அம்மாவை படுத்தி எடுக்காமல் உண்டது. மனதுக்குள்ளே மருமகளை மெச்சிக் கொண்டாள்.
“ரேணு யாருக்கு என்ன வேணுமோ கவனி. நான் பாப்பாவை கொஞ்ச நேரம் தோட்டத்துல விளையாட வச்சிட்டு வரேன். அப்ப தான் செமிக்கும். நைட் நல்லாவும் தூங்குவா”, என்று சொல்லிச் செல்ல மருமகளையே தான் பார்த்திருந்தாள் மல்லிகா.
“என்ன அக்கா சுஜியையே பாக்குற?”, என்று கேட்டான் பரணி.
“இல்லை டா பரணி, நான் தான் இவளை தப்பா எடை போட்டுட்டேன் போல? எவ்வளவு அருமையா குழந்தைக்கு சாப்பாடு ஊட்டினா பாரு? குழந்தை பிச்சு போட்ட சப்பாத்தியை கூட எடுத்து தனித் தட்டில வச்சிட்டா. என்னமோ இப்படி ஒரு மருமக கிடைச்சதுக்கு பெருமையா இருக்கு டா”
“இதை அவ முன்னாடி சொல்றதுக்கு என்ன? சொன்னா அந்த பிள்ளை சந்தோஷப் படும்ல? சரி நான் கடைக்கு போய்ட்டு மாமாவை அனுப்புறேன்”, என்று சொல்லி விட்டுச் சென்று விட்டான்.
இரவு உணவு முடிந்து அறைக்கு வந்த ரேணுகாவை மகேஷ் இழுத்து அணைக்க திகைத்து போய் அவனைப் பார்த்தாள். “என்ன ஐயாவுக்கு இன்னைக்கு தேடல் அதிகமா இருக்கு?”, என்று அவள் சிணுங்க “தெரியலை டி, இன்னைக்கு உன்னைப் பாக்க ரொம்ப பொறுப்பா இருக்குற மாதிரி தெரிஞ்சது. ரொம்ப அழகா தெரியுற?”, என்றான்.
தன்னுடைய ஒரு நாள் மாற்றம் அவனிடம் இவ்வளவு அன்பை பெற்றுத் தருமா என்று வியந்து போன ரேணுகா “காலைல கொஞ்சம் சீக்கிரம் எழுப்பி விடுங்க. சுஜிக்கு ஏதாவது உதவுறேன். பாவம் அவ”, என்றாள்.
“கண்டிப்பா டி செல்லம்”, என்று சொன்னவனின் உதடுகள் அவள் முகத்தில் ஊர்வலம் போக அதற்கு பின் அவள் பேச்சு மறைந்தது.
இரவு உணவை முடித்து விட்டு அனைவரும் உறங்கி இருக்க குழந்தையை உறங்க வைத்து விட்டு வெளி வராண்டாவில் வந்து அமர்ந்தாள் சுஜி.
கணவனுக்காக அவள் காத்திருக்க அப்போது பரணி மட்டுமே வந்தான். “அவன் இன்னும் வரலையா மா?”, என்று கேட்டான் பரணி.
“இன்னும் வரலைண்ணா. நீங்க போய் தூங்குங்க”, என்று சொன்னதும் அவன் சென்று விட்டான்.
புவியும் அப்போது வந்தான். வந்தவன் எப்போதும் போல் உள்ளே செல்லாமல் அவளையே பார்த்த படி வர அவள் உதடுகள் முதல் முறையாக சிரிப்பில் மலர்ந்தது.
உள்ளே வந்ததும் “குளிச்சிட்டு வாங்க. நான் குழம்பு சூடு பண்ணுறேன்”, என்று சொல்லி விட்டு அடுப்படிக்குச் சென்றாள்.
வெளிக்கதவு உள்கதவு எல்லாம் பூட்டி விட்டு வந்த புவி அறைக்குச் செல்லாமல் சமையல் அறைக்கு வந்து அவள் பின்னே நின்றான்.
ஒரு நொடி அவனைக் கண்டு திகைத்தவள் “என்ன…. என்ன வேணும்?”, என்று கேட்டாள்.
“தண்ணி குடிக்க வந்தேன் டி. வேற எதுக்கு சமையல் அறைக்கு வருவாங்களாம்?”, என்று கேட்ட படி தண்ணீரை எடுத்துக் குடித்தவன் அவளை ஒரு ஆழ்ந்த பார்வை பார்த்து விட்டே அறைக்குச் சென்றான். படபடப்பாக உணர்ந்தாள் சுஜி.
அவன் குளித்து முடித்து வந்ததும் அவனுக்கு உணவு பரிமாறியவள் பின் அடுப்படியை ஒதுங்க வைத்தாள். வேலை எல்லாம் முடித்து விட்டு அவள் வெளியே வரும் போது புவி டிவி அருகில் இல்லை. அவர்களின் அறைக்குச் சென்றிருந்தான்.
“எப்பவும் இந்நேரம் டிவி தானே பாப்பாங்க? இன்னைக்கு மட்டும் என்ன?”, என்று எண்ணிக் கொண்டே அவர்களின் அறைக்குச் சென்றாள். அங்கு செல்வதற்குள் அவள் கால்கள் நடுங்கியது. முதலிரவுக்கு போகும் போது எப்படி இருந்ததோ அதே உணர்வு தான் அவளுக்கு இப்போதும்.
அவளது இதயத் துடிப்பை இப்போது அளவிட்டால் நிச்சயம் அந்த கருவி பழுதடைந்து விடும். அவனுடனான நெருக்கத்தை நினைக்கும் போது அவனுடனான கூடல் நினைவு வர முத்துமுத்தாக அவளுக்கு வியர்த்தது.
உள்ளே சென்றவள் அவனை நிமிர்ந்து கூட பார்க்காமல் கதவை அடைத்து விட்டு சுஜி அருகில் படுத்து விட்டாள். அவன் குழந்தைக்கு அந்த பக்கம் கையில் போனை வைத்துக் கொண்டு அமர்ந்திருந்தான்.
அவளையும் அவள் தன்னை ஒரு முறை கூட நிமிர்ந்து பார்க்காததையும் அவன் பார்த்துக் கொண்டு தான் இருந்தான். முன்பெல்லாம் தன்னை அவளுக்கு பிடிக்க வில்லையோ என்று அவன் நினைத்திருக்க இப்போது அவள் வெட்கம் அவனுக்கு அப்பட்டமாக புரிந்தது.
மெதுவாக எழுந்து அவள் புறம் வந்தான். அவன் அசைவை உணர்ந்தவளுக்கு இதயம் தாறுமாறாக துடித்தது. அவன் அவள் அருகே வந்து நிற்க அதற்கு மேல் தூங்குவது போல நடிக்க முடியாமல் எழுந்து கொண்டவள் “ஏதாவது வேணுமா?”, என்று கேட்டாள்.
“எனக்கு தூக்கம் வரலை. கொஞ்சம் நேரம் பேசலாமா?”, என்று அவன் கேட்க “ம்ம்”, என்று சொன்னதும் அவளை இடித்த படி அவன் அமர அவளால் நகரக் கூட முடியவில்லை.
“இவ்வளவு நாள் இருந்ததை சட்டுன்னு உன்னால மறக்கவோ மாத்தவோ முடியாது தான். எனக்குமே அப்படி தான் இருக்கு. கொஞ்ச நாள் ஆகட்டும், எல்லாம் இயல்பா இருக்கும். ஆனா நீ என்னை நினைச்சு ஒவ்வொரு நிமிசமும் இவ்வளவு டென்ஷன் ஆகக் கூடாது. நான் உன் புருஷன் தானே? எதுக்கு இப்படி தடுமாறுற?”
…..
“இத்தனை நாள் நாம விலகி தானே இருந்தோம்னு நீ கேக்கலாம். அதை தான் அப்பவே சொன்னேன். நாம வாழ்க்கையை நாமளே வேஸ்ட் பண்ணிட்டோம்”, என்று சொன்னவன் அவளுடைய உள்ளங்கையை வருடினான்.
அவள் தவிப்புடன் அவனைப் பார்க்க அவளை இழுத்து அணைத்துக் கொண்டான். அவன் அணைப்பில் காமம் இல்லை, காதல் மட்டுமே. அவளுக்காக நான் இருக்கிறேன் என்ற பாதுகாப்பு உணர்வைத் தான் கொடுத்தான்.
அவளுக்கு இத்தனை நாள் மனதில் இருந்த பாரம் எல்லாம் விலகி ஓடியது போல இருந்தது. நிம்மதி என்று வெறும் வார்த்தையால் சொல்ல முடியாத படி ஒரு நிம்மதி அவளுக்கு வந்திருந்தது. இத்தனை நாள் காடு மேடெல்லாம் அலைந்து திரிந்து இளைப்பாற தன்னுடைய கூட்டுக்கு வரும் பறவைகளுக்கு எப்படி ஒரு நிம்மதி கிடைக்குமோ அது போல ஒரு உணர்வு.
அவன் மனதிலும் அந்த நிமிடம் அவளுக்கு ஆறுதலையும் நிம்மதியையும் கொடுக்க வேண்டும் என்பதை தவிர வேறு எதுவும் இல்லை. சுஜி பவியை எப்படி ஆதரவாக அணைத்துக் கொள்வாளோ அப்படி தான் அவளை தாங்கி இருந்தான். முன்பே இதைச் செய்திருக்க வேண்டும் என்று எண்ணிக் கொண்டான் புவி.