Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

ஏகாந்த பொழுதும் காதலும்

ஏகாந்த பொழுதும் காதலும் 16 2

சற்று நேரம் அந்த மோன நிலையில் இருவரும் திளைத்திருந்தார்கள். அவளுடைய உச்சந்தலையில் இதழ் பதித்த புவி “ஐ லவ் யு சுஜி”, என்று சொல்லி அவளுடைய தலையில் தன்னுடைய கன்னத்தை வைத்து அழுத்திக் கொண்டான்.



Advertisement

அவன் சொன்னதைக் கேட்டு நம்ப முடியாத அதிர்ச்சியில் அவள் அவனை நிமிர்ந்து பார்க்க முயல “விலகாத டி, இப்படியே இரு பிளீஸ்”, என்று சொல்லி அவளை மீண்டும் அணைத்துக் கொண்டான். எவ்வளவு நேரம் அப்படி இருந்தார்களோ அவள் அவன் மார்பில் சாய்ந்து தூங்கி விட அவள் தலை சாயவும் தான் அவள் தூக்கத்தை உணர்ந்தான்.

சிறு சிரிப்புடன் அவளை விட்டு விலகி அவளை படுக்க வைத்தவன் அவள் நெற்றியில் இதழ் பதித்து விட்டு பவி அருகில் சென்று படுத்தான்.

Advertisement

Advertisement

தூங்கும் இரண்டு குழந்தைகளையும் பார்த்தவனுக்கு தான் ஏன் இத்தனை நாள் முட்டாளாக இருந்தோம் என்று தோன்றியது. மனைவியையும் குழந்தையாக தான் பார்த்தான் புவி.

காலையில் எப்போதும் போல கண் விழித்தவள் அவளுடைய வேலையைத் தொடர இன்று அவள் உடலில் அலுப்பே இல்லை. புத்துணர்ச்சியாக உணர்ந்தாள். கணவனின் அன்பு கிடைத்த சந்தோசத்தால் கூட இருக்கலாம்.

Advertisement

எப்போதும் போல சட்னி சாம்பார் என்று செய்து முடித்தவள் இட்லியை ஊற்றி வைக்க அப்போது தான் எழுந்து வந்த ரேணுகா “சாரி சுஜி தூங்கிட்டேன்”, என்றாள்.

“பரவால்ல விடு, எல்லா வேலையும் முடிஞ்சிருச்சு”

“ஏதாவது சின்ன வேலையாவது கொடு”

“பாத்திரம் மட்டும் தான் கிடக்கு. அதுவும் வேலைக்கார அக்கா வராததுனால தான் கிடக்கு. உன்னால முடிஞ்சா செய். கட்டாயம் இல்லை”

சந்தோசமாகவே “நானே செய்றேன்”, என்று சொன்னாள் ரேணுகா.

சமையல் கட்டில் வேலை செய்து கொண்டிருக்கும் போதே கணவன் நினைவு வந்தது சுஜிக்கு. நேற்று நடந்தது எல்லாம் உண்மை தானே? கனவு இல்லையே? இன்று தன்னைக் கண்டால் அவன் முகத்தில் அதே மலர்ச்சி இருக்குமா? அதே காதலோடு தன்னைப் பார்ப்பானா என்று நினைக்க ஒரு படபடப்பு அவளை ஆட்கொண்டது.

எழுந்த புவியும் மனைவியைப் பற்றி எண்ணிக் கொண்டே குளித்து முடித்து கிச்சன் வந்தான். அவனைக் கண்டதும் “நீங்க என்ன இங்க? ஹாலுக்கு போங்க, டீ எடுத்து தரேன். குளிச்சிட்டீங்களா? டிபன் எடுத்து வைக்கவா?”, என்று படபடப்பாக கேட்க அவளை இறுக்கிக் கொள்ளும் ஆசை வந்தது அவனுக்கு.

பாத்திரம் கழுவிக் கொண்டிருந்த ரேணுகாவைப் பார்த்தவன் “ரேணு, ஒரு ரெண்டு நிமிசத்துக்கு உன் தலை இங்க திரும்பவே கூடாது சரியா?”, என்றான்.

“சரிங்க அத்தான். நான் இந்த ரூம்லே இல்லை”, என்று சொல்லி விட்டு அவள் அறையை விட்டே வெளியே ஓட சுஜியின் இடையில் கரம் கோர்த்து தன்னை நோக்கி இழுத்தான். சமையல் அறையில் வைத்து இது என்ன வேலை என்று அவள் விதிர்த்து போக அவள் கன்னத்தில் அழுந்த முத்தமிட்டான் .

“ஐயோ என்ன பண்ணுறீங்க? யாராவது வரப் போறாங்க”, என்று அவள் அவனை விலக்க நினைக்க அவன் உதடுகள் அவளுடைய மறு கன்னத்திலும் பதிந்தது. தவிப்புடன் நின்றிருந்தாள் சுஜி.

அவள் மோன நிலையைப் பார்த்தவன் “கொஞ்சம் வெளிய போகணும். டிபன் எடுத்து வை. ஐ லவ் யு பொண்டாட்டி”, என்று சொல்லி விட்டே வெளியே சென்றான்.

அவள் முகம் சிவந்து நிற்க அங்கே வந்த ரேணுகா “சுஜி”, என்று உலுக்கினாள்.

சிறு திகைப்பும் பெரு வெட்கமும் சங்கடமும் கொண்டு அவள் நிற்க “ரொம்ப அழகா இருக்க சுஜி”, என்று சொல்லி அவளை மேலும் வெட்கப் பட வைத்தாள் ரேணுகா.

“அத்தான் டேபிள்ல உக்காந்துட்டாங்க. கனவை அப்புறம் கண்டுக்கோ. இப்ப அவங்களைக் கவனி”, என்று சொல்ல சிரிப்புடன் அவனுக்கு உணவை எடுத்து வைக்கச் சென்றாள்.

அதற்கு பின்னர் இரண்டு வாரம் கடந்திருந்தது. அப்போது மைதிலி அவளை அழைத்தாள்.

“சொல்லு மைத்தி”

“டாக்டர் கிட்ட போனோம் டி. பேபின்னு கன்பார்ம் பண்ணிட்டாங்க. வீட்ல இருக்குறவங்களுக்கு சந்தோஷம் தாங்க முடியலை”, என்று பூரிப்புடன் சொல்ல “ஏய் நிஜமாவா? நான் அத்தை ஆகப் போறேனா?”, என்று சந்தோஷப் பட்டாள் சுஜி.

“ஆமா டி”

“அப்பா அம்மா உன்னை நல்லா பாத்துக்குறாங்களா?”

“பாத்துக்குறாங்களாவா? அத்தையும் மாமாவும் என்னை மக மாதிரி தாங்குறாங்க டி. ரகு அண்ணி அண்ணின்னு ரொம்ப அன்பா இருக்கான். அப்புறம் உங்க அண்ணன் சொல்லவே வேண்டாம், உள்ளங்கையில் வச்சு தாங்குறார்”

“அது தான் எனக்கும் வேணும். நானும் இங்க ரொம்ப சந்தோஷமா இருக்கேன் டி. இவரும் ரொம்ப அன்பா இருக்கார். ஆனா வெண்ணிலா வாழ்க்கை இப்படி ஆனது தான் கஷ்டமா இருக்கு டி”

“உன்னோட காதலை ரத்தம் கொடுத்து அவ தான் சேத்து வச்சா சுஜி. அவ வாழ்க்கையையும் உன்னால தான் சரி பண்ண முடியும்”

“என்ன சொல்ற நீ? என்ன ரத்தம்?”, என்று சுஜி கேட்க புவியை திருமணத்துக்கு சம்மதிக்க வைக்க வெண்ணிலா கையை வெட்டிக் கொண்டதைச் சொல்ல தோழியை நினைத்து பிரம்மித்துப் போனாள் சுஜி.

“நீங்க ரெண்டு பேரும் எனக்காக அவ்வளவு கஷ்டப் பட்டுருக்கீங்க? நான் தான் உங்களுக்கு எதுவும் செய்யலை”, என்று வருந்தினாள் சுஜி.

“எனக்கு நீ செஞ்சிட்ட சுஜி? எனக்கு கிடைக்காத அம்மா அப்பா பாசத்தை உன் அம்மா அப்பா மூலமா எனக்கு திருப்பிக் கொடுத்துருக்க. வெண்ணிலா வாழ்க்கையையும் நீ தான் சரி பண்ண முடியும்?”

“எங்க மைத்தி? கல்யாணம் பத்தி பேசினாலே தெரிச்சு ஓடுறா?”

“ஓடினா விட்டுருவியா? அவளுக்கு பிடிச்ச மாதிரி மாப்பிள்ளை கிடைச்சா கண்டிப்பா சரின்னு சொல்லுவா”

“அவரை நான் எங்க தேட?”

“அது பரணி அண்ணா தான்”

“மைத்தி”

“என்னோட டவுட்டை தான் சொல்றேன். நீ அவ கிட்ட பேசிப் பாரு. அப்புறம் இன்னொரு விஷயம், வெண்ணிலா கல்யாணம் நடந்தப்ப பரணி அண்ணா அங்க இல்லவே இல்லை. அவங்க எங்க போனாங்க, என்ன நடந்துச்சுன்னு கேட்டுட்டு வெண்ணிலா கிட்ட பேசு”

“நான் கேட்டா பரணி அண்ணா சொல்லுவாங்களா?”

“உன் மாமனார் கிட்ட போட்டு வாங்கு டி. அவருக்கு தெரியும்”

“சொல்லிட்டல்ல? நான் பாத்துக்குறேன்”, என்று சொன்ன சுஜி வெகு நேரம் மைதிலியிடம் பேசிக் கொண்டிருந்தாள். மதனிடமும் பேசினாள்.

“சரி டைம் கிடைக்கும் போது பாக்க வரேன்”, என்று சொல்லி போனை வைத்தாள்.

மைதிலி குழந்தை உண்டான விஷயமும் வெண்ணிலா வாழ்க்கையை சரி செய்ய நூல் கிடைத்து விட்ட சந்தோசமும் சேர்ந்து சுஜியை உற்சாகமாக மாற்றி இருந்தது. “என்ன மேடம் உங்க முகம் சந்தோஷமா இருக்கு?”, என்று கேட்ட படி அறைக்குள் வந்தான் புவி.

“மைத்தி கால் பண்ணினா”

“என்னவாம்?”

“கன்ஸீவா இருக்காளாம்?”

“நாளைக்கு பாக்க போவோம்”, என்று சொன்ன புவி போனில் மதனை அழைத்து வாழ்த்து சொல்ல அவனை வியப்பாக பார்த்துக் கொண்டிருந்தாள். மதனுடன் பேசி விட்டு அவன் குளிக்கச் செல்ல அவளோ அவன் நினைவில் அப்படியே அமர்ந்து விட்டாள்.

கடந்த இரண்டு வாரங்களில் அவளிடம் அன்பாக நடந்து கொண்டான். இரவில் சிறிது நேரம் அவளை தன்னுடைய தோளில் சாய்த்து அன்றைய நிகழ்வுகளைச் சொல்வான். அவன் அவளிடம் பேசுவது மட்டுமின்றி அவளையும் பேச வைத்தான். வெளியில் நடந்தவையை அவன் சொல்வான் என்றால் வீட்டில் நடந்தவைகளையும் அவர்களின் செல்ல மகளின் சேட்டைகளையும் அவள் அவனிடம் சொல்வாள்.

மறந்தும் கூட அவன் அடுத்த கட்டத்துக்கு முன்னேற வில்லை. அவளும் அவனைத் தூண்ட வில்லை. வெண்ணிலாவின் வாழ்க்கை சரியாகும் முன் இது தேவையில்லை என்பதே அவளது எண்ணம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!