இரண்டாம் மறுவீட்டுக்கு செல்லும் போது வெங்கட்டிடம் சொல்லி சிகரட் வாங்கச் சொல்லி அவளே தன்னுடைய காலில் சூடு வைத்துக் கொண்டாள்.
அதைப் பார்த்தவன் துடித்து தான் போனான். “ஐயோ வேண்டாம் வெண்ணிலா. என்னால நீ கஷ்டப் படாத”, என்று அவன் கெஞ்ச அவள் காதிலே வாங்க வில்லை. பரணி மீதிருந்த காதல் அவளை அப்படிச் செய்ய வைத்தது.
பிறந்த வீட்டுக்கு சென்றதும் அவள் மல்லிகாவிடம் தான் அதைக் காட்ட நினைத்தாள். ஆனால் அதற்கு வாய்ப்பு இல்லாமல் போக சுஜியிடம் மட்டுமே காட்ட முடிந்தது.
அதற்கு பின்னரும் மல்லிகாவிடம் போனில் பேசும் போது வெங்கட் அடிக்கிறான், மாமனார் மாமியார் திட்டுகிறார்கள் என்று பேச மல்லிகா அவளைத் தான் பொறுத்துப் போகச் சொன்னாள்.
இந்த விஷயம் எல்லாம் வெங்கட்டின் பெற்றோருக்கு தெரியாமல் பார்த்துக் கொண்டார்கள். ஆனால் இருவரும் விலகி இருப்பது போன்ற பிரம்மையை அவர்களுக்கு கொடுத்தார்கள்.
மகனும் மருமகளும் சந்தோசமாக இல்லை என்று புரிந்த பெற்றவர்களுக்கு அது எதனால் என்று தெரிய வில்லை. அவர்களும் கொஞ்ச நாளில் சரியாகி விடும் என்று பொறுத்திருந்தார்கள்.
இதற்கிடையில் அருணா வீட்டில் அவளுக்கு மாப்பிள்ளை பார்க்க வெங்கட் அதை வெண்ணிலாவிடம் சொல்லி புலம்பினான். ஒரு நொடி தீவிரமாக யோசித்தவள் “அம்மா அப்பா எங்க?”, என்று அவனிடம் கேட்டாள். வெங்கட்டின் பெற்றோரை அவள் அப்படி தான் அழைத்தாள்.
“நம்ம வாழ்க்கை நல்லா இருக்கணும்னு கோவிலுக்கு போயிருக்காங்க”
“சரி இது தான் சரியான டைம். என்ன நடந்தாலும் நீங்க கண்டுக்காதீங்க”, என்று சொன்னவள் நேராக சமையல் அறைக்கு தான் சென்றாள்.
என்ன செய்ய என்ன செய்ய என்று வேகமாக யோசித்தாள்.
கத்தியை வைத்து கீறினால் அது பெரியதாக இருக்காது. அது கொலை முயற்சி என்று திசை மாறலாம். அதனால் தன்னை எதை வைத்து அடிக்க என்று யோசித்து குக்கரை கையில் எடுத்துக் கொண்டாள்.
அப்போது வெங்கட் அங்கே வர “இதை வச்சு என்னை அடிங்க”, என்றாள்.
“என்ன விளையாடுறியா?”, என்று திகைப்புடன் கேட்டான்.
“சொன்னா கேளுங்க வெங்கட். இதுக்கு மேல அருணாவை நீங்க தனியா தவிக்க விடக் கூடாது. அவ பாவம்”
“அதுக்கு? நீ மட்டும் பாவம் இல்லையா?”
“ஒரு நாள் அடி வாங்கினா ஒண்ணும் செய்யாது”
“என்னால முடியாது”
“அப்படின்னா நானே அடிச்சிக்கிறேன்”
“அப்படி உன்னையும் செய்ய விட மாட்டேன். வலிக்கும் வெண்ணிலா. அப்படி உன்னைக் கஷ்டப் படுத்தி எனக்கு எதுவும் வேண்டாம்”
“ஆனா அருணா பாவம் வெங்கட்”
“ஆமா தான். அதுக்கு வேற வழி பாப்போம். உங்க வீட்ல வந்து நான் பேசுறேன். எனக்கு உன்னைப் பிடிக்கலைன்னு சொல்லி உன்னை உன் வீட்ல வந்து விடுறேன். நாம அப்படி பிரிஞ்சிறலாம். அப்படி இல்லைன்னா கடவுள் கொடுத்தது இது தான்னு இருந்துக்கலாம் வெண்ணிலா. அருணா வேற ஆளைக் கல்யாணம் பண்ணிக்கட்டும்”
“நீங்க எனக்காக பாவம் பாக்கலாம் வெங்கட். ஆனா என்னால என் மாமாவை மறந்துட்டு உங்க கூட வாழ முடியாது”, என்று எண்ணியவள் “அப்படி நடந்தா எங்க வீட்ல இருந்து வந்து உங்க வீட்ல சமாதானம் பேசி இங்க விட வருவாங்க. என்னை இங்க விட வந்தா உங்களுக்கு ஏன் என்னைப் பிடிக்கலைன்னு உங்க அம்மா அப்பா உங்களை கேள்வி கேப்பாங்க. ஆனா நான் சொல்ற மாதிரி நடந்தா நேரா விவாகரத்து தான். பிளீஸ் எனக்கு சப்போர்ட் பண்ணுங்க”, என்றாள்.
“இதை வச்சு அடிச்சா உனக்கு வலிக்கும் வெண்ணிலா”
“நீங்க வேலைக்கு ஆக மாட்டீங்க. கொஞ்சம் வெளிய போங்க”, என்று சொல்ல தயங்கிய படியே வெளியே சென்றான்.
அடுத்த நொடி அந்த குக்கர் மூடியை வைத்து ஓங்கி தன்னையே அடித்துக் கொண்டாள். அதில் இருந்த விசில் மாட்டும் கம்பி அவளுக்கு தெரியாமலே அவள் தலையை நன்கு பதம் பார்த்தது.
என்னதான் உணர்ச்சி வசப் பட்டு அடித்துக் கொண்டாலும் வலி தாங்க முடியாமல் கதறி விட்டாள்.
“வெண்ணிலா”, என்று பதறிய படி உள்ளே வந்தவனின் கண்களில் ரத்தம் வழிய நின்றவளின் தோற்றம் பதிய துடித்து விட்டான்.
“ஐயோ ரத்தம், வா வெண்ணிலா ஹாஸ்பிட்டல் போகலாம். எல்லாம் என்னால தான். நான் பாவி. நான் ஒரு கோழை”, என்று அவன் புலம்பி அழ “அழாதீங்க வெங்கட். நான் ஹாஸ்பிட்டல் போய்க்கிறேன். நீங்க என் கூட வரக் கூடாது. வந்தா பிளான் சொதப்பிரும்”, என்று சொல்லி போனை எடுத்துக் கொண்டு வெளியே வந்தவள் எதிரே வந்த ஆட்டோவில் ஏறி கிளம்பி விட்டாள்.
துடிதுடித்த மனதுடன் அவள் பின்னேயே வண்டியை எடுத்துச் சென்றான் வெங்கட்.
ஹாஸ்பிட்டலில் அவள் ஆட்டோவில் இருந்து இறங்கும் போது வெங்கட் வருவது தெரிய கண்களாலே அவனை வரக் கூடாது என்று எச்சரித்தாள். மரத்தடியில் வண்டியை நிறுத்தி விட்டு தளர்ந்து போய் தரையில் அமர்ந்தான்.
மிகப் பெரிய பாவம் செய்து விட்டது போல அவன் மனது வலித்தது. அப்போது பார்த்து அருணா போன் செய்ய நடந்ததைச் சொல்லி கதறி விட்டான். அருணாவுக்கு அதைக் கேட்டு பேச்சே வர வில்லை.
வெண்ணிலாவை பெண்ணா இல்லை தேவதையா என்று எண்ணிக் கொண்டாள். வெண்ணிலாவுடன் ஆட்டோ டிரைவர் தான் கூட வந்து அட்மிட் செய்து விட்டுச் சென்றார்.
ரத்தம் வெளியேறிக் கொண்டிருக்க டாக்டர் டிரெட்மெண்ட் ஆரம்பிக்க “இதுல புவி அண்ணான்னு போட்டுருக்குற நம்பர்க்கு தகவல் சொல்லிருங்க சிஸ்டர்”, என்ற படி மயங்கி விட்டாள்.
அந்த சிஸ்டரும் அழைக்க புவி சிறிது நேரத்தில் அங்கு வந்து விட்டான். அவனைக் கண்ட வெங்கட் ஒரு மரத்தடியில் ஒளிந்து கொண்டு புவி உள்ளே சென்றதும் வண்டியை எடுத்துக் கொண்டு கிளம்பி விட்டான்.
இதற்கு மேல் எல்லாம் புவி பார்த்துக் கொள்வான் என்று மனம் சொன்னாலும் வெண்ணிலா என்ன ஆனாளோ என்று பதட்டமாக இருந்தது. இனி அவனால் வெண்ணிலாவைப் பார்க்க முடியாது என்று புரிந்தது.
அவன் வீட்டுக்கு சென்ற போது அவனது பெற்றோர் கோவிலில் இருந்து வந்திருக்க “டேய் வெங்கி என்ன டா ஆச்சு? கிட்சன்ல ஒரே ரத்தமா இருக்கு. நீ வேற இடிஞ்சு போய் இருக்க?”, என்று கேட்டார்கள்.
“வெண்ணிலாவுக்கு என் கூட வாழப் பிடிக்கலையாம் மா. சாகப் போறேன்னு ஒரே அழுகை. கடைசில குக்கரை வச்சு அவ தலையில அவளே அடிச்சிக்கிட்டா. ஹாஸ்பிட்டல்ல சேத்துருக்கேன். அவ அண்ணா வந்துட்டாங்க. என்னை ரொம்ப கேவலமா பேசிட்டாங்க. நான் சொல்ல வரதைக் கூட கேக்கலை. இதுக்கு மேல அவ இங்க இருக்க வேண்டாம் மா. அவளை டைவர்ஸ் பண்ணிறலாம்”, என்று சொல்ல பெற்றவர்களிடம் பொய்ச் சொல்கிறோமே என்று அவனுக்கு குற்ற உணர்வாக இருந்தது. ஆனால் இதை தானே வெண்ணிலா செய்யச் சொன்னாள் என்பதால் அதை அப்படியே செய்தான்.
“சரிப்பா, வேணாம். எல்லாம் முடிச்சிக்கலாம். ஆனா அவங்க வீட்ல பேசணும்”, என்றார் அவனது தந்தை.
“அவங்களா பேச வந்தா பேசிக்கலாம் பா. நாமளா பேச வேண்டாம்”, என்று சொல்ல அவர்களுக்கும் அது சரி என்று பட்டது.
ஐ. சி. யு கண்ணாடி வழியாக தங்கையின் நிலையைக் கண்டு அதிர்ந்து விட்டான் புவி. உடனே வெங்கட்டின் சட்டையைப் பிடித்து கேள்வி கேட்க வேண்டும் போல இருந்தது. ஆனால் தங்கையிடம் விசாரிக்காமல் அதைச் செய்ய முடியவில்லை. கூடவே அவள் தனியாக வந்து அட்மிட் ஆனது அவன் மனதை குழப்பி இருந்தது. வெண்ணிலா கண் விழிப்பதற்காக காத்திருந்தான்.
கண் விழித்த வெண்ணிலா அண்ணனைக் கண்டு கதறி அழ அவன் துடித்து விட்டான்.
“என்ன மா ஆச்சு? எப்படி அடி பட்டுச்சு?’
“குக்கர் வெடிச்சிருச்சு”
“மாப்பிள்ளை ஏன் உன் கூட வரலை?”
“எனக்கு அடி பட்டப்ப யாருமே வீட்ல இல்லைண்ணா”
“அதுக்கப்புறமும் ஏன் வரலை? நான் கால் பண்ணவா?”
“வேண்டாம்ணா”
“ஏன் வெண்ணிலா?”
“எனக்கு அங்க போகப் பிடிக்கலைண்ணா. என்னை உன் கூடவே கூட்டிட்டு போயிரு. நீ சமாதானப் படுத்தி என்னை அங்க விட்டுட்டு வந்தா கண்டிப்பா என்னை அடுத்த தடவை நீ பிணமா தான் பாப்ப”
“பெரிய வார்க்தை எல்லாம் பேசாத டா. இப்ப என்ன உனக்கு நம்ம வீட்டுக்கு போகணும் அதானே? போகலாம். ஆனா அவனை என்னனு ஒரு வார்த்தை கேக்குறேன்”
“அண்ணா என் மேல உனக்கு கொஞ்சமாவது பாசம் இருந்தா நீ அவர் கிட்ட எதுவும் விசாரிக்க கூடாது. வீட்ல உள்ளவங்களும் அவரை எதுவும் கேக்க கூடாது”
“அவர் மேல இவ்வளவு அன்பு வச்சிருக்குற நீ அவரை விட்டு எப்படி மா பிரிஞ்சு இருப்ப?”
“அதெல்லாம் கேக்காதண்ணா. எனக்கு அவர் கூட வாழ வேண்டாம். வீட்டுக்கு போன உடனே டைவர்ஸ்க்கு அப்ளை பண்ணனும். அம்மா அப்பான்னு யாருமே அவங்க வீட்டுக்கு பஞ்சாயத்துக்கு போகக் கூடாது. இது என் மேல சத்தியம்”
“சரி மா”, என்று சொல்லி வீட்டுக்கு அழைத்து வந்தான்.
அவள் நிலைமையைக் கண்டு பாரி கொந்தளிக்க மல்லிகா அழ பரணியோ வெங்கட்டை வெட்டியே தீருவேன் என்று சொன்னான்.
அனைத்தையும் அண்ணன் பார்த்துக் கொள்வான் என்று வெண்ணிலா அறைக்குள் சென்று விட சுஜி அவளுக்கு ஆறுதலாக இருந்தாள். அனைவரையும் அடக்குவதற்குள் புவி தான் திணறிப் போனான்.
ஒரு வாரம் கழித்து என்ன செய்யலாம் என்று புவி வெண்ணிலாவிடம் கேட்க “டைவர்ஸ்க்கு அப்ளை பண்ணனும் அண்ணா”, என்று முடித்து விட்டாள்.
வெங்க்ட் பெற்றோரோ வெண்ணிலா வீட்டில் இருந்து சமாதானம் பேச வருவார்கள் என்று காத்திருக்க அங்கிருந்து டைவர்ஸ் நோட்டீஸ் தான் வந்தது.
ஏனோ வெங்கட்டால் அந்த நோட்டிசைப் பார்த்து சந்தோஷப் பட முடியவில்லை. ஒரு பெண்ணின் ரத்த துளிகளில் தன்னுடைய வாழ்வு ஆரம்பிக்கப் போவதை நினைத்து அவன் கண்களில் கண்ணீர் ஆறாக பெருகியது.
அவன் கண்ணீரைக் கண்ட அவனது அன்னை வெண்ணிலாவை அவதூறாக பேச “அம்மா”, என்று கத்தி விட்டான். பெற்றவர்கள் இருவரும் திகைப்பாக அவனைப் பார்க்க தனக்காக அவள் தியாகம் செய்திருக்க அவளை அவர்கள் கொச்சைப் படுத்துவதா என்று எண்ணியவன் அனைத்து உண்மைகளையும் சொல்லி விட்டான்.
வெண்ணிலா சொன்னது என்னவென்றால் டைவர்ஸ் கிடைத்ததும் ஃபிரண்ட் என்று சொல்லி அருணாவை அடிக்கடி வீட்டுக்கு அழைத்து வந்து அம்மா அப்பாவிடம் பேச விட வேண்டும். மகன் வாழ்வுக்காக அவர்களே அருணாவை அவனுக்கு திருமணம் செய்து கொடுப்பார்கள் என்று தான் சொல்லி இருந்தாள்.