“எல்லாம் சொல்றேன் சுஜி. சொன்னதுக்கு அப்புறம் நீ இதை வேற யார் கிட்டயும் சொல்லக் கூடாது. யாருமே மாமாவை தப்பா பாக்க கூடாது. அப்படி ஒரு விஷயம் நடந்துச்சுன்னா நான் உயிரோடவே இருக்க மாட்டேன்”, என்றாள் வெண்ணிலா.
“சொல்லு வெண்ணிலா, பரணி அண்ணாவுக்கு எந்த கெட்ட பேரும் வர விட மாட்டேன்”
“எனக்கு பரணி மாமாவை சின்ன வயசுல இருந்தே ரொம்ப பிடிக்கும். பிடிக்கும்னா கல்யாணம் பண்ணிக்கிற அளவுக்கு”, என்று சொல்ல அதைக் கேட்டு திகைத்து போனாலும் “அவங்களுக்கு உன்னைப் பிடிக்குமா?”, என்று கேட்டாள் சுஜி.
“இல்லை. அவங்க மனசுல நான் இல்லை. இப்ப வரைக்கும்”
“நீ அவங்க கிட்ட உன் மனசை சொன்னியா?”
“எனக்கு மாப்பிளை பாக்குற வரைக்கும் சொல்லலை. அந்த பேச்சு வந்ததும் என்னைக் கட்டிக்கோங்கன்னு சொன்னேன். ஆனா அவங்க கேக்கலை. என்னை அவாய்ட் பண்ணிட்டாங்க. ஆனா என்னால அவங்களை மறக்க முடியலை. கல்யாண பேச்சை நிறுத்த தான் உங்க அண்ணா கிட்ட மைதிலி வேலைக்கு கேட்டா. நானும் பேங்க்ளூர் போனேன். அன்னைக்கு….”
“அன்னைக்கு என்ன ஆச்சு, சொல்லு?”
“பிளீஸ் டி யார் கிட்டயும் சொல்லாத. என்னையும் தப்பா நினைக்காத”
“நீ என்னோட பிரண்டு டி. நீ கொலையே செஞ்சிருந்தா கூட உன்னை எப்படி என்னால வெறுக்க முடியும். அங்க என்ன ஆச்சுன்னு சொல்லு? பரணி அண்ணா உன்னை கல்யாணம் பண்ண சம்மதம் சொன்னாங்களா?”
“இல்லை… நான் தான்… அவங்களை கட்டாயப் படுத்தி….”
“என்ன டி பண்ணின?”
“இன்னைக்கு ஒரு நாள் என் கூட வாழலைன்னா இந்த நிமிசமே செத்துருவேன்னு சொல்லி…”, என்று சொல்லும் போதே அவள் கன்னத்தில் ஓங்கி அறைந்திருந்தாள் சுஜி.
“என்ன டி வேலை பாத்துருக்க? நீயா இப்படி? மிரட்டி வாங்குற விஷயமா வெண்ணிலா அது?”
“என்னை என்ன பண்ணச் சொல்ற? எனக்கு என் மாமா வேணும். அது மட்டும் தான் முக்கியமா தெரிஞ்சது. வீட்ல எனக்கு மாமாவை தான் பிடிக்கும்னு நான் சொல்லிருந்தா கண்டிப்பா எங்க வீட்ல மாமா தான் என் மனசை கலைச்சதுன்னு சொல்லி அவங்களை வீட்டை விட்டே விரட்டிருப்பாங்க. இந்த வீட்ல இருந்து அவங்க எங்க போவாங்க சொல்லு? ஆனா எனக்கும் அவங்களைத் தவிர வேற யாரையும் ஏத்துக்க மனசில்லை. அதனால தான் அப்படி பண்ணினேன். வேற யார் கூடவாது கல்யாணம் நடந்தா கண்டிப்பா செத்துறணும்னு முடிவு பண்ணினேன். சாகுறதுக்கு முன்னாடி என் மாமா கூட வாழ்ந்த திருப்தி வேணும்னு தான் அப்படி பண்ணினேன். எனக்கு இப்ப வரைக்கும் அது தப்பா தெரியலை சுஜி. அந்த நாளோட நினைவுகள் மட்டும் தான் என்னை இப்ப வரைக்கும் உயிரோட வச்சிருக்கு”
“அப்படின்னா வெங்கட் கூட கல்யாணம்”
“வெங்கட் தாலி கட்டுற கடைசி நிமிஷம் வரைக்கும் மாமா என்னைக் கல்யாணம் பண்ண மாட்டாங்களான்னு வெயிட் பண்ணினேன். ஆனா அவங்க வரவே இல்லை டி”
“அவங்களுக்கு அடி பட்டுருச்சு டி…”, என்று ஆரம்பித்து நடந்ததைச் சொன்னாள் சுஜி.
அதைக் கேட்டு பரணி மீதிருந்த கோபம் எல்லாம் அவளை விட்டுச் சென்றது. “உண்மையாவா சுஜி? அதனால தான் மாமா என்னை பொண்ணு கேக்கலையா? அப்ப அந்த உண்மை தெரியாதுள்ல? மாமாக்கு என்னை பிடிக்கலைன்னு நினைச்சேன். கல்யாணம் முடிஞ்சிருச்சு. வெங்கட் கூட அவங்க வீட்டுக்கு போனப்ப என்னால இயல்பா இருக்க முடியலை. வெங்கட் கிட்ட உண்மையைச் சொல்லி விலகனும். இல்லைன்னா சாகணும்னு நான் முடிவுல இருந்தப்ப தான் வெங்கட் என் கிட்ட அவங்க காதலி அருணா பத்தி சொன்னாங்க”
“இப்ப கல்யாணம் பண்ணிருக்கானே? அந்த பொண்ணா?”
“ஆமா”
“அப்படின்னா நீ வெங்கட் கூட வாழவே இல்லையா டி?”
“என் மாமா கூட வாழ்ந்த நான் எப்படி அடுத்தவங்க கூட … சி அந்த நினைப்பே அருவருப்பா இல்லை?”
“அப்புறம் எப்படி டி அந்த சூடு எல்லாம்”
“அது எனக்கு நானே போட்டுக்கிட்டது”, என்று சொல்ல “வெண்ணிலா”, என்று அதிர்ந்து போய் அழைத்தாள் சுஜி.
“வெங்கட் அருணா பத்தி சொன்னதும் அவங்களுக்கு நான் வாக்கு கொடுத்தேன் சுஜி. அவங்களை அவங்க காதலி கூட சேத்து வைக்கிறேன்னு”
“பெரிய தர்ம பிரபு, அப்புறம் உன் நிலைமை என்ன ஆகும்னு நீ யோசிக்கவே இல்லையா டி?”
“அப்படி நான் வாக்கு கொடுத்தது கூட என்னோட சுயநலத்துக்காக தான் சுஜி. வெங்கட் என் வாழ்க்கைல இருந்து விலகிட்டா நானும் என் மாமாவை நினைச்சிட்டே வாழ்க்கையை ஒட்டிறலாம்ல?”, என்று சொன்ன தோழியை இறுக அனைத்துக் கொண்டாள் சுஜி.
அந்த நிமிடம் அவள் மனம் எந்த அளவுக்கு வேதனைப் பட்டிருக்கும் என்று சுஜியால் புரிந்து கொள்ள முடிந்தது. கூடவே தனக்கு இப்படி ஒரு நிலை வந்திருந்தால் தானும் திருமணம் ஆகாமலே காதலுக்காக புவியுடன் வாழ்ந்திருப்போம் என்று புரிந்தது.
“சாரி டி உன்னை அடிச்சதுக்கு”, என்று சொல்லி அவள் கன்னம் வருடினாள் சுஜிதா.
“அதை விடு. என்னை தப்பா நினைக்கிறியா சுஜி?”
“சத்தியமா இல்லை டி. உங்க அண்ணனை லவ் பண்ணினப்ப எனக்கும் வீட்ல வேற மாப்பிள்ளை பாத்திருந்தா நானும் கண்டிப்பா சாகத் தான் துணிஞ்சிருப்பேன். அந்த நேரத்துல உங்க அண்ணா கூட வாழ ஒரு வாய்ப்பு கிடைச்சா கண்டிப்பா அதை சந்தோஷமா ஏத்துகிட்டு இருப்பேன் டி”
தன்னை புரிந்து கொண்ட தோழியைப் பார்த்து சிரித்த வெண்ணிலா “உன்னை எப்படி அப்படி கஷ்டப் பட விடுவோம்? அப்புறம் எதுக்கு பிரண்ட்ஸ்ன்னு நாங்க இருக்கோம். அதான் பிளான் போட்டு உன்னை அண்ணாவுக்கு கட்டி வச்சிட்டோம்”, என்றாள்.
“எனக்காக எல்லாரும் கஷ்டப் பட்டிருக்க ஆனா நான் பக்கா சுயநலவாதி டி. உனக்காகவும் மைத்திக்காகவும் நான் எதுவும் செய்யலை”
“லூசா நீ, எங்க அன்பு போல உன்னோட அன்பும் தூய்மையானது தான் டி. மைதிலி நல்லா இருக்கணும்னு நீ உங்க அம்மா கிட்ட சண்டை போட்ட தானே? அதனால தானே உங்க அம்மா அவளை தன்னோட சொந்த பொண்ணு மாதிரி பாத்துக்குறாங்க? அப்புறம் என்னோட சந்தோசத்துக்காக தானே நீ அண்ணா கூட வாழ முடியாம தவிக்கிற?”
“அது உங்க அண்ணன் தான் டி”
“பொய், எங்க அண்ணன் ஏக்கமா உன்னைப் பாத்துட்டு தான் திரியுறான்? நீ தான் விலகிப் போற? ஒரு நாள் புல் மீல்ஸைக் கொடுத்துட்டு இப்ப வரைக்கும் அவனை பட்டினியா போட்டுருக்க. கண்டிப்பா அதுக்கு காரணம் இத்தனை நாள் என் அண்ணனா இருந்தாலும் இப்ப நீயா தான் இருக்கும். நான் நல்லா இருக்கணும்னு தானே இப்ப வந்து இப்படி பேசுற?
“சரி எங்களை விடு. நீ அடுத்து என்ன நடந்துச்சுன்னு சொல்லு”
அன்றைய நாளுக்கு பயணித்தாள் வெண்ணிலா. முதலிரவு அறையில் எப்படி சாகலாம் என்று அவள் எண்ணிக் கொண்டிருக்க உள்ளே வந்த வெங்கட்டோ “என்னை மன்னிச்சிரு வெண்ணிலா. நான் உனக்கு பெரிய துரோகம் பண்ணிட்டேன். என் மனசுல அருணா தான் இருக்கா. அவளை தான் விரும்பினேன். ஆனா அம்மா அப்பா என் மனசு தெரியாம கல்யாணம் முடிவு பண்ணிட்டாங்க. அப்பா ஹார்ட் பேசன்ட். உண்மையைச் சொன்னா அவருக்கு ஏதாவது ஆகும்னு தான் சொல்லலை. ஆனா இப்ப என்னால உன்னை ஏத்துக்கவே முடியாது. அருணா வேற இப்ப கையை வெட்டிக்கிட்டு ஹாஸ்பிட்டல்ல இருக்கா”, என்றான்.
“என்ன சொல்றீங்க?”
“ஆமா, நான் அவளுக்கு கிடைக்க மாட்டேன்னு இப்படி பண்ணிட்டா”
“முதல்ல அவளுக்கு போன் போட்டுத் தாங்க”, என்று சொன்னதும் அவன் தயங்கிய படியே அழைத்துக் கொடுத்தான். அதை வாங்கி காதில் வைத்ததும் “எதுக்கு வெங்கி எனக்கு கூப்பிடுறீங்க? உங்க அம்மா அப்பாவுக்காக பாத்த நீங்க என்னை மறந்துட்டீங்கல்ல? இப்ப என்னை எங்க வீட்ல எதுக்கு காப்பாத்தினாங்கன்னு இருக்கு. என்னால நீங்க இல்லாம இருக்க முடியாது வெங்கி. ஆனா உங்களை அந்த பொண்ணை விட்டுட்டு இப்ப என் கூட வாங்கன்னு கூப்பிட மாட்டேன். அந்த பொண்ணும் பாவம். என்னை மறந்துட்டு அவ கூட வாழுங்க. நான் என் வாழ்க்கையை பாத்துக்குறேன்”, என்று சொல்ல அருணாவின் நல்ல மனது புரிந்தது.
“அருணா நான் வெண்ணிலா பேசுறேன்”
“நீ… நீங்களா? நான் வந்து…. நான்”
“எனக்கு தெரியும்”
“வெண்ணிலா அது….”
“கவலைப்படாதீங்க அருணா. கண்டிப்பா உங்க வெங்கட் உங்களுக்கு தான். உண்மையான காதல் ஒரு நாளும் தோக்க கூடாது. எனக்கு கொஞ்ச நாள் மட்டும் டைம் கொடுங்க. ஏன்னா என்னால அடுத்த நாளே போய் எங்க வீட்ல நிக்க முடியாது. அது வரைக்கும் என்னைப் பொறுத்துக்கோங்க. நானே உங்க வாழ்க்கையில் இருந்து விலகிருவேன்”, என்று சொன்ன வெண்ணிலாவை நம்பலாமா வேண்டாமா என்று எண்ணினாள் அருணா.
“உங்களுக்கு என்னை நம்புறது கஷ்டம் தான். வெறும் வாய் வார்த்தையா சொல்லி என்னால புரிய வைக்க முடியாது. ஆனா நான் சொல்றது உண்மைன்னு உங்களுக்கு ஒரு நாள் புரியும். நான் இப்ப வெங்கட் கிட்ட கொடுக்குறேன். பேசுங்க”, என்று சொல்லி போனைக் கொடுத்து விட்டாள்.
அவர்கள் இருவரும் பேச வெண்ணிலா சிறகடிக்கத் துடிக்கும் மனதுடன் குளிக்கச் சென்று விட்டாள்.
அவள் குளித்து முடித்து வரும் போது அவள் வரவுக்காக குற்ற உணர்வுடன் காத்திருந்தான் வெங்கட்.
அவனைப் பார்த்து நட்பாக சிரித்தவள் அடுத்து என்ன செய்ய என்று பேச ஆரம்பித்தார்கள். பிளான் போட்டது போலவே நடந்தது.