வெண்ணிலாவுக்கு கெட்ட பெயர் வர விடக் கூடாது என்று எண்ணி உண்மையைச் சொல்லி விட்டான் வெங்கட். இப்போது அவனது பெற்றோர்கள் மகனைத் திட்ட அவனோ அவர்களிடம் மண்டியிட்டான். மகனை மன்னித்தவர்கள் மனதளவில் வெண்ணிலாவை தேவதையாக தான் பார்த்தார்கள். கூடவே அருணாவை ஏற்றுக் கொள்ளவும் தயாராகி விட்டார்கள்.
டைவர்ஸ் கேஸ் கோர்ட்க்கு வர வெங்கட் பாவம் போல வந்து அமர்ந்திருந்தான். புவி உடன் இருந்ததால் வெண்ணிலா அவனை திரும்பிக் கூட பார்க்க வில்லை. ஆனால் புவியோ அவனை கொலைவெறியோடு முறைத்தான்.
நீதிபதி இருவரிடமும் விசாரிக்க இருவருமே சேர்ந்து வாழ விருப்பம் இல்லை என்று சொன்னதும் அவ்வளவு பிரம்மாண்டமாக நடந்த திருமணம் ஒரு நொடியில் முறிவு செய்யப் பட்டது. அதை எண்ணி இருவருக்குமே சந்தோஷம் தான் .
வெங்கட்க்கு அவளை கஷ்டப் படுத்திவிட்டோமோ என்ற கவலை தான் அதிகம் இருந்தது.
என்ன தான் தங்கைக்காக அமைதியாக இருந்தாலும் ஒரு நொடியில் புவி வெங்கட்டின் சட்டையைப் பற்றி விட்டான்.
“அண்ணா என் மேலே சத்தியம் பண்ணிருக்க”, என்று வெண்ணிலா சொல்ல அப்படியே விட்டுவிட்டு தங்கையை இழுத்துக் கொண்டு சென்றான். அப்போது தான் வெங்கட் அவளைக் கும்பிட்டதையும் அவள் அவனைக் கண்டு நட்பாக புன்னகைத்ததையும் புவி பார்த்தது. ஆனால் இருந்த கோபத்தில் அதை பெரிதாக எடுக்க வில்லை.
அதற்கு பின்னர் வெண்ணிலா பேங்க்ளூருக்கு வேலைக்குச் சென்றாள். அடிக்கடி அவளிடம் வெங்கட் நலம் விசாரிப்பான். அருணா வெங்கட் திருமணத்துக்கு அவளை அழைக்க சந்தோசமாகவே சென்றாள்.
வெங்கட்டின் பெற்றோர் அவளைக் கண்டதும் கை கூப்ப அவர்களை பாசமாக அணைத்துக் கொண்டாள் வெண்ணிலா.
அவளுடைய உடைகள், நகைகள், பாத்திரங்கள் எல்லாம் அங்கே இருப்பது அப்போது தான் நினைவுக்கு வர அதை எடுத்துச் செல்ல முடிவு செய்தாள். ஆனால் அதை எல்லாம் எடுத்து என்ன செய்ய என்று மிகப் பெரிய கேள்வி எழுந்தது.
பாத்திரங்களை அங்கே வைத்து விட்டுச் சென்றால் அருணா பயன்படுத்திக் கொள்வாள் தான். ஆனால் அவர்கள் தன்னை மறக்க வேண்டும். அவர்கள் நினைவில் தன்னைப் பற்றிய எந்த நினைவும் இருக்க கூடாது என்று முடிவு எடுத்தவள் அருணா வெங்கட் இருவரும் மறுவீடு சென்றிருந்த போது அவள் நினைத்ததை முடித்துக் கொண்டாள்.
பாத்திரங்களை வாங்கிய கடைக்கே அழைத்து எடுத்துக் கொள்ளச் சொல்லி விட்டாள். கொஞ்சம் பணம் குறைப்போம் என்று சொல்லியே அவர்கள் அதை எடுத்துச் சென்றார்கள். அதை போல கொஞ்சப் பணத்தை குறைத்து விட்டு தான் அவளுக்கு கொடுத்தார்கள்.
சுடிதார் மற்றும் நகைகளை ஹாஸ்டலுக்கு எடுத்துச் சென்றவள் புடவைகளை அப்படியே ஒரு கொரியரில் போட்டு ஊருக்கு அனுப்பி வைத்தாள். அந்த வீட்டில் அவளுடைய நினைவுக்கு வரும் எதையுமே அவள் விட்டு வைக்க வில்லை. ஆனால் அவ்வளவு எளிதில் அவர்கள் அவளை மறந்து விடுவார்களா என்ன?
அடுத்த முறை ஊருக்கு வரும் போது நகைகளை தன்னுடைய லாக்கரில் வைத்து விட்டாள். இவை அனைத்தையும் வெண்ணிலா சொல்லி முடிதததும் பேச்சை மறந்தவள் போல அமர்ந்திருந்தாள் சுஜி. தோழியின் வாழ்க்கையில் இப்படி எல்லாம் நடந்திருக்கும் என்று அவள் கனவில் கூட நினைக்க வில்லை.
“எப்படி டி இதெல்லாம்?”
“வேற என்ன செய்ய சொல்ற?”
“உனக்கு கஷ்டமா இல்லையா வெண்ணிலா?”
“இவ்வளவு நாள் இல்லை. ஆனா இன்னைக்கு மாமா என்னை வேற கல்யாணம் பண்ணிக்கோன்னு சொன்னாங்க பாரு. அப்ப தான் ரொம்ப கஷ்டமா இருந்துச்சு”
“ஆனா பரணி அண்ணா ரொம்ப மோசம் டி. இவ்வளவு நடந்துருக்கு ஒரு வார்த்தை கூட சொல்லலையே?”
“நான் தான் சொல்லக் கூடாதுன்னு அவங்க கிட்ட சத்தியம் வாங்கினேன்”
“ஏன் அப்படி பண்ணின? சொல்லிருந்தா உனக்கும் அண்ணனுக்கும் கல்யாணம் ஆகிருக்கும்ல?”
“அப்படிச் சொல்லிருந்தா உண்ட வீட்டுக்கே ரெண்டகம் பண்ணிட்டேன்னு எல்லாரும் மாமாவை பேசிருப்பாங்க. அவருக்கு கெட்ட பேர் வரக் கூடாது”
“சரி இப்ப என்ன தான் உன் மனசுல ஓடுது?”
“மாமா என்னைக் கல்யாணம் பன்னிக்கணும்னு ஆசையா இருக்கு. ஆனா சொல்ல மாட்டாங்க. அவங்க மனசுல நான் இல்லை”
“முன்னாடி அது உண்மையா இருக்கலாம். ஆனா இப்ப அவங்க மனசுல நீ தான் இருக்க”
“என்ன சொல்ற சுஜி?”
“இவ்வளவு நடந்த பிறகு அவங்க மனசுல நீ இல்லாம இருந்தா தான் அதிசயம். ஒரு கன்னிப் பையனை சம்சாரி ஆக்கிருக்க டி”
“சி, போ”
“அப்ப தெரியலையா இது உனக்கு?”
“சத்தியமா அந்த நிமிஷம் எனக்கு எதுவுமே தப்பா தெரியலை டி”
“சரி உங்க அண்ணா வந்துருவாங்க. நான் போய் டீ போடுறேன். உன் வாழ்க்கைல என்ன நடக்கும்னு நான் முடிவு பண்ணுறேன். கவலைப்படாதே உனக்கும் பரணி அண்ணனுக்கும் கல்யாணம் பண்ணி வைக்க வேண்டியது என் பொறுப்பு”
“எங்களுக்குள்ள நடந்தது….”
“யாருக்கும் தெரியாது. சொல்ல மாட்டேன் டி”
“அப்படின்னா சரி”, என்று வெண்ணிலா சிரிக்க “ஆனா நீ மைதிலிக்கும் நன்றி சொல்லணும் டி. அவ தான் உனக்கு பரணி அண்ணாவை பிடிக்கும்னு சொன்னது. அவ சொல்லலைன்னா நான் இப்படி ஒரு கோணத்துல யோசிச்சிருக்கவே மாட்டேன். சரி அவ உண்டாகிருக்காளாம். நாளைக்கு பாக்க போகலாமா?”, என்று கேட்டாள் சுஜி.
“நானே கேக்கணும்னு நினைச்சேன். நாளைக்கு போகலாம் டி”
“சரி, உனக்கு டீ கொண்டு வரவா?”
“எனக்கு வேண்டாம். என்னமோ உன் கிட்ட சொன்ன பிறகு எல்லாம் நீயே பாத்துக்குவன்னு நம்பிக்கை வந்துருக்கு. மனசுக்கு சந்தோஸமா இருக்கு அண்ணியாரே”
“உன் நம்பிக்கையை கண்டிப்பா காப்பாத்துவேன் டி. ஆனா எனக்கு ஒரு சந்தேகம்”
“என்ன சுஜி?”
“அன்னைக்கு நடந்ததுல ஒரு வேளை பேபி ஃபார்ம் ஆகிருந்தா என்ன டி பண்ணிருப்ப?”, என்று கேட்க வெண்ணிலா முகம் சிவந்தது.
“உன் வாழ்க்கைல மாதிரியே என் வாழ்க்கைலயும் நடக்குமா என்ன? ஒரு நாளுக்கு பரிசு தானே பவித்ரா?”, என்று கேட்க “சி போ”, என்று ஓடி விட்டாள் சுஜி.
ஓடி வந்தவள் அங்கே நின்று கொண்டிருந்த புவி மீது மோத அவளை தாங்கிப் பிடித்துக் கொண்டான். வெட்கத்துடன் அவள் அவனை நிமிர்ந்து பார்க்க அவன் முகத்தில் இருந்த வேதனை அவன் தாங்கள் பேசிய அனைத்தையும் கேட்டு விட்டான் என்று அவளுக்கு புரிய வைத்தது.
அவள் எதுவோ சொல்ல வர “எல்லாம் நைட் பேசிக்கலாம். எனக்கு தெரியும்னு வெண்ணிலாவுக்கு தெரிய வேண்டாம். இப்ப டீ எடுத்துட்டு வா”, என்று சொல்லி விட்டுச் சென்றான்.
தங்கையின் மனதில் இப்படி ஒரு ஆழமான காதல் இருந்ததை அறியாமல் போனோம் என்று வேதனையாக இருந்தது.
டீயை அவனிடம் கொடுத்தவள் “நடந்து முடிஞ்சதைப் பத்தி யோசிக்க வேண்டாம். அடுத்து என்னன்னு பேசுங்க. முதல்ல பரணி அண்ணா கிட்ட. அப்புறம் அத்தை மாமா கிட்ட”, என்று சொல்ல சரி என்று சொன்னவன் அந்த டீயை அருந்தினான்.
பரணியை தனியே சந்தித்து “மாமா உன் கிட்ட கொஞ்சம் பேசணும்”, என்றான் புவி.
“என்ன மாப்பிள்ளை?”
“வெண்ணிலா பத்தி பேசணும்”, என்று அவன் சொன்னதும் திக்கென்று இருந்தாலும் “என்ன மாப்பிள்ளை?”, என்று கேட்டான்.
“எந்த மாப்பிள்ளையை கை காட்டினாலும் வேண்டாம்னு சொல்றா. ஆனா அவளை அப்படியே விட முடியாது. பேசாம நீ அவளைக் கட்டிக்கிறியா?”, என்றதும் திகைத்து போனான்.
அவன் முகத்தில் ஒரு சந்தோஷம் வந்ததை புவி குறித்துக் கொண்டான். மனதில் எழுந்த உவகையை மறைத்து “நான் எப்படி வெண்ணிலாவை….”, என்று கேட்டான்.
“ஏன் மாமா? காலம் முழுக்க அவளுக்கு நீ துணையா இருக்க மாட்டியா? கல்யாணம் பண்ணி உன்னைக் குடும்பம் நடத்தச் சொல்லலை. ஆனா அவளுக்கு காவலா இருக்கலாம்ல? உனக்கும் அவ துணையா இருப்பா”, என்றான் புவி.
“அக்காவும் மாமாவும் என்ன சொல்வாங்க?”
“அவங்க கிட்ட பேச வேண்டியது என் பொறுப்பு. உன் மனசுல என்ன இருக்குன்னு சொல்லு”
“எனக்கு சம்மதம். அப்புறம் என்னை மன்னிச்சிரு மாப்பிள்ளை. சில விஷயம் வெளிய சொல்ல முடியாது. ஆனா நானும் நிறைய தப்பு பண்ணிருக்கேன். தப்புன்னு சொல்றதை விட அதை துரோகம்னு சொல்லலாம்”, என்று பரணி சொல்ல அவன் சொல்ல வருவது புரிந்தாலும் புரியாத மாதிரி “போ மாமா, என் கிட்ட போய் மன்னிப்பு கேட்டுட்டு“, என்று சொல்லி விட்டு நகர்ந்து விட்டான். வெண்ணிலாவின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுத்து அவர்களுக்கு இடையில் நடந்ததை தெரியாத மாதிரியே காட்டிக் கொண்டான்.
அன்று இரவு பரணியிடம் பேசியதைப் பற்றி சுஜியிடம் பேசிக் கொண்டிருந்தான் புவி. பரணி சம்மதித்தது அவளுக்குமே சந்தோஷம் தான்.
அடுத்த நாள் பரணி கடைக்கு கிளம்பிச் செல்ல இன்று மைதிலியைப் பார்க்கச் செல்வதால் புவி வீட்டில் இருந்தான். காலை உணவை முடித்தவன் வெண்ணிலா மற்றும் சுஜியைக் கிளம்பச் சொல்லி விட்டு தாய் தந்தையைத் தேடி வந்தான்.
“வாப்பா”, என்று பாரி சொல்ல மல்லிகாவும் மகனைப் பார்த்தாள்.
“உங்க ரெண்டு பேர் கிட்டயும் கொஞ்சம் பேசணும்”, என்று சொல்லி அவர்கள் அருகில் அமர்ந்தான்.
“நான் உன் பொண்டாட்டியை எதுவுமே சொல்றது இல்லைப்பா”, என்று மல்லிகா அவசரமாக சொல்ல புவி சிரித்து விட்டான். அவன் சிரிப்பை பெற்றவர்கள் கனிவாக பார்த்தார்கள். மல்லிகாவுக்கு தன்னுடைய தவறு எல்லாம் புரிந்தது.