“சாரி டி, இப்ப என்ன? உன் கிட்ட பேசணும் அவ்வளவு தானே? நாம பேசலாம் டி”, என்று சொன்ன வெண்ணிலாவுக்கு சத்தியமாக அந்த நேரம் என்ன பேச என்று தெரிய வில்லை.
“நாம எங்கயாவது வெளிய போகலாமா? சாயங்காலம் வரைக்கும். சாயங்காலம் வீட்டுக்கு போனா போதும்”, என்று தயக்கத்துடன் சுஜி சொல்ல “சூப்பர் ஐடியா டி”, சந்தோஷமாக இருவரும் அவளை அணைத்துக் கொண்டார்கள்.
அதன் பின் மூவரும் கல்லூரியில் இருந்து வெளியே கிளம்பிச் செல்ல அப்போது வெண்ணிலாவை அழைக்க கல்லூரிக்கு வந்து கொண்டிருந்தான் புவி. வெண்ணிலா அவனை மதியமே வரச் சொல்ல வில்லை தான். ஆனால் அவளுடைய தோழிகளுடன் இருக்கும் ஒற்றுதல் அவனுக்கு தெரியாததால் “பரீட்சை முடிஞ்சு அவ எதுக்கு வேஸ்ட்டா வெயிட் பண்ணனும்?”, என்று எண்ணி அழைக்க வந்தான்.
பெண்கள் மூவரும் என்ன தான் வெளியே செல்லலாம் என்று கிளம்பி விட்டாலும் எங்கே செல்ல என்று அவர்களுக்கு தெரிய வில்லை. மூவரும் சினிமா, பார்க் என்று சுத்துபவர்கள் கிடையாது என்பதால் அவர்களுக்கு எங்கே செல்ல என்று தெரிய வில்லை.
அந்நேரம் கோவில் இருக்காது, படத்துக்கு போனால் இவர்களால் பேச முடியாது, மதிய வெயிலில் பீச்சுக்கும் செல்ல முடியாது. வெகு நேரம் யோசித்து அவர்கள் தேர்ந்தெடுத்த இடம் தான் ஒரு ஹோட்டல். ஆம் கதை பேசவே ரூம் எடுத்து தங்கச் சென்றார்கள்.
அந்த ஹோட்டலுக்குள் சென்று “ஒரு மூணு மணி நேரத்துக்கு ரூம் வேணும்”, என்று வெண்ணிலா கேட்க ரிசப்ஷனில் இருந்தவன் அவர்களை திகைப்பாக பார்த்துக் கொண்டே சாவியைக் கொடுத்தான்.
சாவியை வாங்கிக் கொண்டே அறைக்குச் சென்றவர்கள் பையைப் போட்டு விட்டு கட்டிலில் அக்கடா என்று அமர்ந்தார்கள். “அவன் என்ன டி சாவி கேட்டா அந்த முழி முழிக்கிறான்?”, என்று கேட்டாள் சுஜி.
“வேற என்ன? நம்மளை தப்பா நினைச்சிருப்பான்”, என்று மைதிலி சொல்ல “அப்படின்னா?”, என்று கேட்டாள் சுஜி.
“அப்படின்னா?”, என்று ஆரம்பித்து வெண்ணிலா அதற்கு விளக்கம் சொல்ல “சீ”, என்றாள் சுஜி.
“என்ன சீ? அதெல்லாம் இப்ப எல்லாம் நார்மல் தான்…..”, என்று ஆரம்பித்து அவர்கள் பேச்சு தாம்பத்யம், திருமணம், திருமணத்தில் ஒரே போல உடை அணிவது, திருமணத்திற்கு பின்னரும் நட்பு தொடருமா என்ற பேச்சு வரை தொடர்ந்தது.
மூன்று பெண்கள் சேர்ந்திருக்கும் போது பேச்சுக்கு பஞ்சமா வரப் போகிறது. அவர்கள் பேச்சில் நான்கு மணி நேரம் உருகி வழியும் ஐஸ்கிரீமாய் கரைய புவியோ தங்கையை சுற்றி வளைத்து தேடிக் கொண்டிருந்தான். அவன் மட்டும் அல்ல. பரணியும் தான்.
முதலில் புவி காலேஜ் சென்ற போது தங்கை அங்கே இல்லை என்றதும் வாட்ச்மேனிடம் விசாரிக்க வெண்ணிலா அவளுடைய தோழிகளுடன் கிளம்பி விட்டதாக சொன்னான் அவன். அதற்கு பின் எங்கே சென்றார்கள் என்ன ஆனார்கள் என்று அவனுக்கு தெரிய வில்லை.
மூவரும் காலேஜ்க்கு போன் கொண்டு வரவில்லை என்பதால் அவர்களை புவியால் தொடர்பு கொள்ள முடியவில்லை.
“பக்கத்துல எங்கயாவது தேடு மாப்பிள்ளை. நான் வீட்டுக்கு வந்துட்டாளான்னு ஒரு எட்டு பாத்துட்டு வரேன். சாயங்காலம் காலேஜ் முடியுற டைம் வரைக்கும் யாருக்கும் இந்த விஷயம் தெரிய வேண்டாம். நம்ம வீட்டு ஆளுங்களுக்கும் தெரிய வேண்டாம். சும்மா பிரண்ட்ஸ் கூட தான் போயிருப்பா”
“இங்க காலேஜ்லயும் அதை தான் மாமா சொல்றாங்க”
“என்னன்னு?”
“இன்னைக்கு கடைசி எக்ஸாம் முடிஞ்சிருக்கு. அதனால பிரண்ட்ஸ் எல்லாம் படத்துக்கு போயிருப்பாங்க. சாயங்காலம் வீட்டுக்கு வந்துருவாங்க. அதுக்கும் மேல வரலைன்னா போலீஸ்ல கம்ப்லைண்ட் கொடுங்கன்னு சொல்றாங்க”
“சரி மாப்பிள்ளை பொறுமையா இருப்போம். எதுக்கும் நாம எப்பவும் போற தியேட்டர்ல போய் நில்லு. படம் முடியும் போது வெளிய வாறாளான்னு பாரு. நானும் எனக்கு தெரிஞ்ச இடத்துல பாக்குறேன்”
“சரி மாமா”, என்று சொல்லி போனை வைத்தவன் அங்கிருந்த சில பேரிடம் விசாரித்து விட்டு தியேட்டர் வாசலில் காத்துக் கிடந்தான்.
பரணியோ அவள் வீட்டுக்கு வரவில்லை என்று தெரிந்து அவனுக்கு தெரிந்த இடங்களில் தேடினான். அப்போது ஒரு ஹோட்டலில் இருந்து வெளியே வரும் வெண்ணிலா பரணியின் கண்ணில் பட்டாள்.
தோழிகள் மூவரும் கதை பேசி விட்டு, கட்டிப் பிடித்து அழுது, கண்ணீர் விட்டு வெளியே வரும் போது மாலை ஐந்து ஆகி இருந்தது. அவளைக் கண்டதும் ஒரு நிம்மதி அலை அவன் மனதில் எழுந்தது.
அடுத்த நொடி அவர்களை நெருங்கினான் பரணி. அவனைக் கண்டதும் “மாமா”, என்று அவள் உதடுகள் முணுமுணுக்க அவன் யார் என்று தெரிந்த சுஜியும் மைதிலியும் வெலவெலத்துப் போனார்கள். வெண்ணிலாவை முறைத்துப் பார்த்த பரணி அது என்ன இடம், சுற்றி யார் இருக்கிறார்கள் என்றெல்லாம் கவலைப் படாமல் அவள் கன்னத்தில் ஓங்கி ஒன்று வைத்தான்.
வெண்ணிலா கன்னத்தைப் பிடித்த படி அசையாமல் நிற்க “என்ன டி இந்த அண்ணன் இப்படி அடிச்சிருச்சு?”, என்று மைதிலியின் காதைக் கடித்தாள் சுஜி.
“கவலைப்படாதே சுஜி. பரணி அண்ணன் அடிச்சதுக்கு நம்ம ஆளு சந்தோஷம் தான் படுவா”, என்று மைதிலி சொல்ல இருந்த டென்சனில் சுஜி அதை பெரியதாக எடுக்க வில்லை.
“என்ன டி நினைச்சிட்டு இருக்க உன் மனசுல? யாரைக் கேட்டு இங்க வந்த? எக்ஸாம் முடிஞ்சா நேரா வீட்டுக்கு வரணும்னு தெரியாது? இல்லை, உன் அண்ணா கூப்பிட வருவான்னு கூட உனக்கு தெரியாதா? எவ்வளவு நேரம் உன்னைக் காணும்னு தேடிட்டு இருக்கோம் தெரியுமா? உயிரே கையிலே இல்லை டி, லூசு”, என்று கத்திய பரணி பேச்சை நிறுத்தி விட்டு புவிக்கு அழைத்தான்.
அதை அவன் எடுத்ததும் “உன் தங்கச்சியை பாத்துட்டேன் டா. ஊர் சுத்த தான் போயிருக்கா. வீட்டுக்கு வா பேசிக்கலாம்”, என்று சொல்லி விட்டு வைத்தான்.
அவன் புவியிடம் பேசிக் கொண்டிருந்த இடைவெளியில் “சாரி வெண்ணிலா, எல்லாம் என்னால தான் டி. நான் தான் வெளிய போகணும்னு ஐடியா கொடுத்தேன்”, என்று சொன்னாள் சுஜி.
“ஏய் விடு டி. நானே எங்க மாம்ஸ் கோபப் பட்டு இன்னைக்கு பாத்துட்டேன்னு சந்தோசத்துல இருக்கேன். நீ வேற. இந்த வாய்ப்பு கொடுத்த உனக்கு கேக் தான் டி ஊட்டனும்”, என்று முணுமுணுத்தாள் வெண்ணிலா. அடி வாங்கிய வேதனை எதுவும் இல்லாமல் இப்படிப் பேசுபவளை நே என்று பார்த்தாள் சுஜி.
“என்ன பராக்கு பாத்துட்டு இருக்க? வா போகலாம்”, என்றான் பரணி.
“மாமா, இது என்னோட பிரண்ட்ஸ்….”, என்று வெண்ணிலா தோழிகளை அவனுக்கு அறிமுகப் படுத்த “நல்ல நேரத்துல அறிமுகப் படுத்துற டி. நான் கொலை வெறில இருக்கேன். ஒழுங்கா வந்துரு. ஆமா முதல்ல நீங்க எதுக்கு இங்க வந்தீங்க?”, என்று கேட்டான் பரணி.
“சும்மா பேசிட்டு இருக்க?”, என்று வெண்ணிலா முணுமுணுக்க “என்னது? ரூம் போட்டு பேசிட்டு இருந்தீங்களா?”, என்று அதிர்ச்சியாக கேட்டான் பரணி.
“ஏய் பேசாம அவர் கூட போயிரு டி வெண்ணிலா. மத்தது எல்லாம் இன்னொரு நாள் போன்ல பேசிக்கலாம். இப்போதைக்கு எதையாவது சொல்லி எங்க மானத்தை வாங்காத. அவர் எங்களைப் பாக்குற பார்வையே சரி இல்லை”, என்று மைதிலி வெண்ணிலா காதில் சொல்ல “சரி மாமா, இன்னொரு நாள் என் பிரண்ட்ஸை அறிமுகப் படுத்துறேன். இப்ப வா போகலாம்”, என்று சொல்லி அவன் பைக் இருக்கும் இடம் நடந்தாள்.
சுஜி மற்றும் மைதிலியை முறைத்த பரணி “அதோ அங்க இருக்குற ஆட்டோ ஸ்டாண்ட்க்கு வாங்க ரெண்டு பேரும்”, என்று சொல்லி விட்டு நடந்தான்.
அவர்களும் அவன் பின்னே செல்ல இரண்டு ஆட்டோ பிடித்தவன் அந்த ஆட்டோ டிரைவர்களின் நம்பரை வாங்கிக் கொண்டு இருவரையும் தனித் தனியே அனுப்பி வைத்தான். அவன் அக்கறையை ரசித்த படி நின்ற வெண்ணிலா அவன் பார்க்கவும் பார்வையை மாற்றிக் கொண்டாள்.