படிப்பைத் தவிர அவனிடம் வேறு எந்த குறையும் அவனுக்கு தெரிய வில்லை. ஆனால் தாய் தந்தை என்ன சொல்வார்களோ என்று கொஞ்சம் பயமாக தான் இருந்தது. அதே குழப்பத்துடனே அலுவலகம் சென்று வேலையைப் பார்த்தான்.
மைதிலி வீட்டுக்கு சென்ற போது கேசவன் அன்று வெளியே எங்கேயும் செல்லாமல் அவளுக்காகவே வாசலில் காத்திருந்தார். அவரைக் கண்டு சற்று ஜெர்க் ஆனாலும் அமைதியாகவே உள்ளே செல்லப் போனாள்.
“நில்லு டி”, என்று அவர் கத்த அவளுக்கு சுள்ளென்று கோபம் வந்தது. ஆனாலும் அவளால் கோபத்தை எல்லாம் காட்டி விட முடியாதே. அதனால் அமைதியாக நின்றாள்.
“எவனை போய் பாத்துட்டு வர? யாரு டி அவன்? என்னைப் பத்தி தெரிஞ்சும் ஒரு பையனை நீ பாக்க போயிருக்கேனா உனக்கு எவ்வளவு தைரியம் இருக்கணும்? என்ன குளிர் விட்டுப் போச்சா?”, என்று கேசவன் கேட்க “கடவுளே இவர் வேற மதனை வேவு பாத்துட்டாரா? நம்மளால அவருக்கு எதுவும் பிரச்சனை வரக் கூடாதே?”, என்று மனதுக்குள் பயந்தாள் மைதிலி.
“உன்னை தான் கேக்குறேன், அவன் யாரு?”, என்று கேசவன் கேட்க “அவர் என் ஃபிரண்ட் சுஜியோட அண்ணன்”, என்றாள் மைதிலி.
“அவன் கூட நீ எதுக்கு பேசணும்? அவனை எதுக்கு நீ பாக்க போன?”
“ஏதாவது வேலை கிடைக்குமான்னு கேக்க போனேன்? வீட்லயே இருக்க என்னவோ போல இருக்கு. வேலைக்கு போகணும்னு சொன்னேன். நீங்க பதிலே சொல்லலை. அதனால தான். நாள் முழுக்க என்னால இந்த வீட்டுக்குள்ள மூச்சு முட்டிப் போய் இருக்க முடியாது”
“அவன் கிட்ட வேலையா கேக்கப் போன?”, என்று கேட்ட கேசவன் அவளை நம்பாத பார்வை பார்க்க “ஆமா, வேலை தான் கேக்க போனேன். வீட்ல இருந்தா மூச்சு முட்டுற மாதிரி இருக்கு. வெளிய சும்மா போய் சுத்த முடியாது. வேலைக்கு போனா நல்லா இருக்கும், அதான்”, என்றாள்.
“இப்ப என்ன உனக்கு வேலை தானே வேணும்? அதை நான் ஏற்பாடு பண்ணுறேன். இனி தேவையில்லாம எவனையும் பாக்கப் போகக் கூடாது”
“சரி”, என்று உடனடியாக ஒத்துக் கொள்ள அரை மனதாக மகளை நம்பினார் கேசவன்.
பின் அவள் முன்னிலையிலே தன்னுடைய போனை எடுத்து யாரையோ அழைத்தார். அவனை ஏதாவது செய்யச் சொல்வாரோ என்று பயந்து போனாள் மைதிலி. அவனுக்கு எதுவும் ஆகி விடக் கூடாது என்று எண்ணும் போது தான் அவனை தனக்கு எந்த அளவுக்கு பிடித்திருக்கிறது என்பதே அவளுக்கு புரிந்தது.
அவனை சட்டென்று பிடித்து விட காரணம் படிக்கும் போது சுஜி அண்ணன் பெருமைகளை அளந்து விட அவனைப் போல தனக்கும் யாராவது இருந்திருக்க கூடாதா என்ற அடி மனதில் அவளுக்கு ஏக்கம் எழும். அந்த ஏக்கம் தான் அவளை அவன் மீது மையல் கொள்ள வைத்திருக்கிறது என்று புரிந்தது.
அவள் அவனைப் பற்றிய யோசனையில் இருக்க “நான் கேசவன் பேசுறேன்”, என்ற சத்தம் கேட்டுத் தான் நடப்புக்கு வந்தாள்.
“நம்ம பாப்பாவுக்கு ஒரு வேலை வேணும். பணம் எவ்வளவு கட்ட சொன்னாலும் பரவாயில்லை, நான் கட்டிறேன்”
……
“கட்டிட்டா போகுது. எனக்குன்னு ஒரு சீட் ஒதுக்குங்க. நான் தலைவர் கிட்ட பேசிக்கிறேன்”, என்று சொல்லி விட்டு போனை வைத்தார்.
“பேசினதை கேட்ட தானே? கவர்ன்மெண்ட் வேலையே ரெடி பண்ணிட்டேன். இனி எவனையும் நீ பாக்கப் போகத் தேவை இல்லை”
“எங்க? என்ன வேலை?”, என்று சற்று ஆர்வமாகவே கேட்டாள் மைதிலி.
“அறநிலையத் துறைலயாம். உனக்கு சம்மதம் தானே?”
“சில பேரோட பாவங்களை தீர்க்குறதுக்கு காலம் முழுக்க நான் கோவில்ல வேலை பாத்தா கூட எனக்கு சந்தோஷம் தான்”, என்று தனக்கு தானே பேசிக் கொள்பவள் போல சொல்லி விட்டு அறைக்குள் சென்று விட்டாள். போன அவளையே பார்த்துக் கொண்டிருந்தார் கேசவன்.
பின் தலையை சிலுப்பிக் கொண்டு “செல்வா, அந்த பையனை பத்தி விசாரிச்சியா?”, என்று கேட்டார் கேசவன்.
“நம்ம கோபால் கிட்ட சொல்லி விசாரிச்சேன் ஐயா. பேர் மதன். எல். ஐ. சில வேலை பாக்குறான். உண்மைலே அவனோட தங்கையும் நம்ம பாப்பாவும் பிரண்ட்ஸ் தான். அவங்களுக்குள்ள வேற எதுவும் இல்லை”, என்று சொன்ன செல்வா மதன் மைதிலியின் போனை வாங்கி ஏதோ செய்ததும், அவன் உரிமையாக அவளிடம் பேசியதையும், அதற்கு மைதிலி வெட்க புன்னகை பூத்ததையும் அவரிடம் மூச்சு விட வில்லை.
இந்த வீட்டில் மைதிலி படும் துயரங்களைப் பார்த்தவனுக்கு மைதிலி ஏதாவது ஒரு நல்ல குடும்பத்துக்கு சென்று விட்டால் போதும் என்று தான் தோன்றியது. அதனால் தான் உண்மையை மறைத்தான்.
“சரி செல்வா, எதுக்கும் பாப்பா மேல ஒரு கண்ணு வச்சிக்கோ. இவ வீட்டை விட்டு வெளிய போனா எனக்கு உடனே தகவல் சொல்லு”, என்று சொல்லி மகளுக்கு காவலை அதிகப் படுத்தினார். மைதிலியும் வெளியே செல்ல நினைக்க வில்லை.
அன்று மாலை வீட்டுக்கு வந்த மதனுக்கு எப்படி சுஜியின் திருமண விஷயம் பற்றி தாய் தந்தையிடம் பேச என்று யோசனையாக இருந்தது. கூடவே மைதிலி சொன்ன விஷயம் எந்த அளவுக்கு உண்மையாக இருக்கும் என்றும் யோசனையாகவும் இருந்தது.
அதனால் அதை உறுதிப் படுத்திக் கொள்ள மொட்டை மாடிக்குச் சென்று மைதிலியை அழைத்தான். அவளிடம் பேச ஒரு வாய்ப்பை அவன் தேடினா என்பது அவன் மனசாட்சிக்கு மட்டுமே தெரிந்த ரகசியம். கதவைப் பூட்டி விட்டு அறைக்குள் இருந்தாலும் மைதிலி போனை சைலேன்ட்டில் தான் எப்போதும் போட்டிருப்பாள்.
இப்போதும் அப்படியே போட்டிருக்க மதன் அழைத்ததை அவள் கவனிக்க வில்லை. மதன் இரண்டாவது முறை அழைக்கவும் தான் போனைப் பார்த்தாள்.
பார்த்தவள் அதில் தெரிந்த பெயரில் விதிர்த்துப் போனாள் என்று தான் சொல்ல வேண்டும். ‘மை ஹஸ்பண்ட்’ என்று டிஸ்பிலேயில் தெரிய அவளுக்கு உடல் எல்லாம் நடுங்கியது. அவள் இதயம் வேகமாக துடித்தது.
கட்டாயம் அது மதன் வேலை தான் என்று புரிந்தது. இதை எப்படி எடுத்துக் கொள்ள என்று அவளுக்கு தெரிய வில்லை. அவனுடைய உரிமையான பார்வை அவளுக்குள் சில பல சலனங்களை விதைத்திருந்தாலும் அவன் இந்த அளவுக்கு உரிமையாக பதிந்து வைத்திருப்பான் என்று நம்பக் கூட அவளால் முடியவில்லை. இந்த பெயர் அவளுக்குள் இருக்கும் ஹார்மோன்களை தூண்டி விட்டது.
சுடு மணலில் நடந்து கொண்டிருக்கும் போது நிழல் கிடைத்தால் எப்படி இருக்கும்? அப்படி ஒரு உணர்வு அவளுக்கு எழுந்தது. இது நடக்குமா? முதலில் இது உண்மையா? மதன் தன்னை மனைவி என்று நினைக்கிறானா? இல்லை விளையாட்டுக்கு இப்படி செய்தானா என்று பல கேள்விகள் அவளுக்குள் எழுந்தது.
அழைப்பு கட் ஆகப் போகும் நேரத்தில் நடுக்கத்துடன் அதை எடுத்து காதில் வைத்தாள். அவள் ஹலோ என்று சொல்வதற்குள் “போனை எடுக்க இவ்வளவு நேரமா உனக்கு?”, என்று அவன் கோபப் பட அந்த உரிமையான கோபம் மைதிலிக்கு பிடித்தது.
பாசம் காட்டவே ஆள் இல்லாத உலகத்தில் அவளிடம் உரிமையாக பேசுபவனிடம் அவள் மனம் செல்லாமல் போனால் தான் அதிசயம்.
“போன் சைலேண்ட்ல இருந்தது. அதான்”, என்று தடுமாற்றத்துடன் பதில் சொன்னாள்.
அவள் குரலில் இருந்த தடுமாற்றத்தை சரியாக உணர்ந்து கொண்டான் மதன். “மயூ”, என்று ஆழ்ந்த குரலில் அழைக்க அந்த குரலும் செல்லமான அழைப்பும் அவளுடைய அடி ஆழம் வரை தொட்டது. அவள் கண்கள் சந்தோசத்தில் கலங்கி விட்டது.
அவள் லேசாக விசும்ப ஆரம்பிக்க “ஏய் மயூ அழுறியா என்ன?”, என்று கேட்டவன் அவள் அழுவாள் என்று சத்தியமாக எதிர் பார்க்கவே இல்லை. கோபப் படுவாள், இல்லை என்றால் விருப்பம் இல்லை என்று சொல்வாள் என்று தான் எதிர் பார்த்தான்.
“நான்… நீங்க… ஏன் இப்படி? இது உண்மையா?”, என்று தவிப்புடன் வந்தது அவள் குரல்.
“எதுக்கு இப்படி அழுதுட்டு இருக்க? நான் வெளிப்படையாவே சொல்றேன். ஐ லவ் யு மயூ. உன்னை பாத்த உடனே எனக்கு பிடிச்சிருச்சு. என்னால உன்னை எதுக்காகவும் இழக்க முடியாது”, என்று சொல்ல ஏங்கி ஏங்கி அழ ஆரம்பித்து விட்டாள்.
“ஏய் ஏன் டி அழுற? உன் மனசுல என்ன இருக்கு மயூ? எனக்கு நீ கட்டாயம் பதில் சொல்லணும்”, என்று சொல்லி அவன் வற்புறுத்த “இது வேண்டாம் மதன். இது நடக்காது”, என்று விரக்தியாக சொன்னாள்.
“அது நம்ம கைல தான் இருக்கு மயூ. நாம நடத்திக் காட்டுவோம்”
“இல்லை. அது அவ்வளவு ஈஸி இல்லை. நான் உங்க கிட்ட இப்ப பேசுற விஷயம் தெரிஞ்சாலே எங்க அப்பா உங்களை… உங்களை….”
“கொன்னுருவார்ன்னு சொல்ல வரியா?”, என்று அவன் கேட்க “ஆமா”, என்றாள்.