“என் கிட்ட பெர்ஸ்னலா பேச என்ன இருக்கு? சரி கொஞ்ச நேரம் இரு. நான் ஆபீஸ்ல இன்பார்ம் பண்ணிட்டு வந்துறேன்”, என்று சொல்லி விட்டு உள்ளே சென்றவன் சிறிது நேரத்தில் வெளியே வந்து அருகில் இருந்த காபி ஷாப்க்கு அவளை அழைத்துச் சென்றான். இருவரும் அங்கே சென்று ஒரு டேபிளில் எதிர் எதிரே அமர அவர்களை புகைப்படம் எடுத்து கேசவனுக்கு அனுப்பி வைத்தான் செல்வா.
மதனை மைதிலியின் காதலன் என்று எண்ணிக் கொண்ட கேசவனின் முகம் கோபத்தில் சிவந்தது. தன்னுடைய ஆட்களிடம் மதனைப் பற்றி விசாரிக்கச் சொன்னார்.
அதே நேரம் “என்ன விஷயம்? சொல்லு மைதிலி”, என்றான் மதன்.
அவன் நீங்க வாங்க என்றெல்லாம் பேசாமல் இயல்பாக பேசுவது அவளுக்கு பிடித்தது. “ஏய் அவனை சைட் அடிக்காம விசயத்துக்கு வாடி”, என்று மனசாட்சி எச்சரிக்க “சுஜி கல்யாண விஷயம் பேசணும்”, என்று ஆரம்பித்தாள்.
“அவ இப்ப தானே படிச்சு முடிச்சிருக்கா. அதுக்குள்ள எதுக்கு கல்யாணம்? அவளை கவர்ன்மெண்ட் ஜாப்க்கு டிரை பண்ணச் சொல்லிட்டு இருக்கேன். நீ என்னன்னா கல்யாணம் பத்தி பேசுற?”
“அவ கவர்ன்மெண்ட் ஜாப்க்கு டிரை பண்ணட்டும். ஆனா இப்ப அவளுக்கு ஒரு வரன் வந்திருக்கு. இப்ப இதை விட்டுட்டா பின்னாடி கஷ்டம்?”
“இந்த மாப்பிள்ளை இல்லைன்னா வேற மாப்பிள்ளை. இதெல்லாம் பெரிய விஷயமா?”
“வேற மாப்பிள்ளையை உங்க தங்கச்சி ஏத்துக்கணுமே?”, என்று மைதிலி சொல்ல “என்ன சொல்ற மைதிலி? கொஞ்சம் வெளிப்படையா பேசுறியா?”, என்று கேட்டான்.
“நான் சொல்ற மாப்பிள்ளையைத் தான் சுஜிக்கு பிடிக்கும். நீங்க அதுக்கப்புறம் எப்பேற்பட்ட மாப்பிள்ளையை கொண்டு வந்து அவ முன்னாடி நிறுத்தினாலும் அவளுக்கு பிடிக்காது. வேற ஒரு ஆளைக் கல்யாணம் பண்ணுற மாதிரி ஒரு நிலை வந்தா ஒண்ணு அவ உயிரை விடுவா. இல்லைன்னா உயிர் இருந்தும் நடை பிணமா உங்களுக்காக அவன் கூட வாழ்வா”
“சுஜி லவ் பண்ணுறாளா?”
“அது லவ்வான்னு எனக்கு தெரியலை. சொல்லப் போனா அவளுக்குமே தெரியாது. ஆனா புவி அண்ணனை அவளுக்கு ரொம்ப பிடிக்கும். அவங்களை மிஸ் பண்ணிட்டா சுஜி நிஜமாவே நல்லா இருக்க மாட்டா. அப்புறம் இப்ப புவி அண்ணாவுக்கு கல்யாணம் பேசுறாங்க. அதான் உங்களைப் பாக்க வந்தேன்”
“சரி காபி வந்துருச்சு. காபி குடிச்சிட்டே உங்க புவி அண்ணா பத்தி சொல்லு கேப்போம்”, என்று அவன் சொல்ல அவனுடைய அலட்டல் இல்லாத தன்மை அவளை வெகுவாக கவர்ந்தது.
அவள் அவனையே பார்க்க அவள் பார்வையில் அவனுக்குள்ளும் சில பல மாற்றங்கள். மதன் அழகாக இருக்கும் பெண்களை சைட் அடித்திருக்கிறான் தான். ஆனால் அவனுக்கு காதல் வலை வீசிய பெண்களிடம் விழுந்ததில்லை. ஆனால் முதல் முறையாக அவள் பார்வையிலும் அவள் அழகிலும் அவனுக்குள்ளும் சலனம் வந்தது.
அவனும் தன்னையே பார்க்கவும் சிறு முகச் சிவப்புடன் பார்வையை விலக்கி கொண்டவள் “புவி அண்ணா வேற யாரும் இல்லை. எங்க ஃபிரண்ட் வெண்ணிலாவோட அண்ணன் தான். அவங்க பெருசா படிக்கலை. டிப்பார்ட்மெண்டல் ஸ்டோர்ஸ் வச்சு நடத்துறாங்க. நல்ல திறமை சாலி. அவங்க குடும்பமும் நல்ல குடும்பம் தான். பணக்கார குடும்பம் வேற”, என்றாள்.
அவள் முகச் சிவப்பை ரசிக்க தூண்டிய மனதை அடக்கியவன் தங்கை விஷயம் என்பதால் சீரியசாகவே பேசினான். “இன்ஜினியரிங் படிச்ச பொண்ணை படிக்காத ஒருத்தனுக்கு எப்படி எங்க வீட்ல கட்டி வைக்க சம்மதிப்பாங்க?”, என்று கேட்டான்.
“அவ மனசு முக்கியம் இல்லையா? அதே இன்ஜினியரிங் படிச்ச பையனை நீங்க கட்டி வச்சா சுஜி சந்தோஷமா இருப்பாளான்னு தெரியாதே. நான் சொல்றதை சொல்லிட்டேன். அப்புறம் உங்க இஷ்டம். இன்னும் நாலு நாள்ல அவங்க வீட்ல இருந்து உங்க தங்கச்சியை பெண் கேட்டு வருவாங்க. அதுக்கு முன்னாடி ஒரு கால் பண்ணுவாங்க. அப்ப உங்களுக்கு இந்த விசயத்துல சம்மதமா இல்லையான்னு நீங்களே அவங்க கிட்ட சொல்லிக் கோங்க. உங்களைப் பத்தி சுஜி நிறைய சொல்லிருக்கா. அதான் எனக்கு உங்க கிட்ட சொல்லணும்னு தோணுச்சு. சொல்லி முடிச்சிட்டேன். அப்புறம் காபிக்கு தேங்க்ஸ். நான் வரேன்”, என்று சொல்லி அவள் எழுந்து கொள்ள “உன்னோட நம்பர் வேணும்”, என்று பட்டென்று கேட்டான் மதன்.
அவள் அவனை வியப்பாக பார்க்க “சுஜி பத்தி பேச தான்”, என்றான்.
“அது.., அது வந்து…”, என்று தயங்கினாள் மைதிலி.
“என்ன நம்பர் கொடுத்தா பொம்பளைப் பொறுக்கி மாதிரி உனக்கு கால் பண்ணி மெஸ்ஸேஜ் பண்ணி டிஸ்டர்ப் பண்ணுவேன்னு பயப்படுறியா? அதான் நம்பர் கொடுக்க யோசிக்கிறியா?”, என்று அவன் வெளிப்படையாகவே கேட்க அவனைப் பார்த்துக் கொண்டே மீண்டும் அந்த இருக்கையில் அமர்ந்தவள் அவனை நேருக்கு நேராக பார்த்து “கண்டிப்பா அப்படி நினைக்க மாட்டேன். நீங்க சொன்ன மாதிரி நடந்தா நான் சந்தோஷம் தான் படுவேன்”, என்றாள்.
இப்போது அவன் அவளை வியப்பாக பார்த்துக் கொண்டே “நீ சொல்றது புரியலை”, என்றான்.
“ஏதோ ஒரு பொம்பளைப் பொறுக்கி எனக்கு கால் பண்ணி, என் கிட்ட பேசி, என்னை லவ் பண்ணி, எங்கயாவது கடத்திட்டு போய்க் கல்யாணம் பண்ணிக்க கூடாதான்னு இருக்கு. அப்படி நடந்தா எனக்கு அதை விட சந்தோஷம் வேற எதுவும் இல்லை”, என்று அவள் சொல்ல இப்போது அதிர்வது அவன் முறை.
“என்ன சொல்ற நீ?”, என்று அதிர்ச்சியாக கேட்க “என்னைப் பத்தி சுஜி உங்க கிட்ட எதுவுமே சொன்னது இல்லையா?”, என்று கேட்டாள் மைதிலி.
“உன் ஃபேமிலி பத்தி சொன்னது இல்லை. காலேஜ்ல பண்ணுற சேட்டையைச் சொல்லிருக்கா. நீ சூப்பரா டேன்ஸ் ஆடுவேன்னு சொல்லிருக்கா. வேற எதுவும் தெரியாது”
“தெரிஞ்சிக்கணும்னு ஆசைப் படுறீங்களா?”, என்று அவள் பூடகமாக கேட்க “ஆமா”, என்று உறுதியுடன் சொன்னான் அவன். இருவருக்கும் இடையே ஒரு மாய வலை பின்னப் பட்டது போல அந்த நிமிடம் இருவருமே உணர்ந்தார்கள்.
“அப்பா பேர் கேசவன்”
“அரசியல்வாதி கேசவனா உங்க அப்பா?”
“ஆமா, அவர் கூட இருந்து சித்திரவதை அனுபவிக்கிறதுக்கு ஊர் பேர் தெரியாத எவனாவது என் கழுத்துல தாலின்னு ஒண்ணைக் கட்டினா எனக்கு சந்தோஷம் தான். எனக்கு அவன் எப்படி பட்டவனா இருக்கணும்னு எந்த எதிர் பார்ப்பும் இல்லை. எங்க அப்பாவை எதிர்க்கிற தைரியம் மட்டும் அவனுக்கு இருந்தா போதும். வேற எதுவும் தேவை இல்லை. சரி நான் வரேன்”
“நீ இன்னும் நம்பர் தரலையே”
“நான் நம்பர் கொடுத்தா வீணா உங்களுக்கு தான் பிரச்சனை”
“அந்த பிரச்சனையை எப்படி பேஸ் பண்ணன்னு எனக்கு தெரியும். நீ நம்பர் சொல்லு”, என்று பிடிவாதமாக கேட்க அவனுடைய அடாவடியான பேச்சை ரசித்தவள் தன்னுடைய எண்ணை சொன்னாள். அவனுடைய எண்ணையும் கேட்டுக் கொண்டவள் மனதுக்குள் அந்த எண்ணை பதிவு செய்து கொண்டாள்.
அவள் மனப்பாடம் செய்வதைப் பார்த்த மதன் “என் நம்பரை சேவ் பண்ணிக்கலையா?”, என்று கேட்டான்.
“என்னோட போன்ல ஒரு ஆம்பளை நம்பர் சேவ் பண்ணணும்னா அது என் புருஷன் நம்பரா தான் இருக்க முடியும். வேற யார் நம்பரை சேவ் பண்ணிருந்தாலும் அந்த நம்பருக்கு உரியவங்க உயிருக்கு உத்திரவாதம் இல்லை”, என்று அவள் சீரியசாக சொல்ல “சும்மா காமெடி பண்ணாத மைதிலி”, என்று சிரிப்புடன் சொன்ன மதன் அவள் கையில் இருந்து போனை வாங்கி அதில் அவளுடைய போனில் தன்னுடைய எண்ணை பதிந்து அவளிடம் போனைக் கொடுத்தான்.
அப்படிச் செய்தது மட்டுமில்லாமல் அவன் உரிமையாக அவளைப் பார்க்க அவன் பார்வையில் முதல் முறையாக படபடத்துப் போனாள். மெல்லிய நடுக்கம் அவளுக்குள் உருவானது.
மனதுக்குள் எழுந்த தடுமாற்றத்தில் எதிலிருந்தோ தப்புவது போல அங்கிருந்து ஓடிச் சென்றாள். அவன் என்ன பெயர் போட்டு அவனுடைய எண்ணைப் பதிந்திருக்கிறான் என்று கூட அவள் அறிய வில்லை. மதனோ சிரிப்புடன் போகும் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான். இனி அவளை தன்னால் விட முடியாது என்று அந்த நொடி அவனுக்கு புரிந்தது.
அப்போது அவள் சொன்ன விஷயங்கள் நினைவு வர உடனே அவன் செய்த வேலை அலுவலகத்தில் இரண்டு மணி நேரம் பெர்மிசன் வாங்கிக் கொண்டு புவியைப் பற்றி விசாரிக்கச் சென்றது தான்.