மகள் வாழப் போகும் வீடு என்பதால் சுந்தரியும் அவர்களை “வாங்க”, என்றாள். ரகுவும் அவர்களை வரவேற்றான்.
ஆனால் அவர்களின் வரவேற்பை ஏற்ற சந்தோஷம் புவி வீட்டில் யாருக்குமே இல்லை. ஏனென்றால் சுஜியின் வீடு சிரியதாக இருந்தது. மல்லிகாவுக்கு அவர்கள் குடும்ப நிலைமை தங்களை விட கீழ் என்று புரிந்ததால் அவள் முகம் திருப்தியாக இல்லை.
சுந்தரி அவர்களுக்கு காபி பலகாரம் கொடுத்து உபசரிக்க பாரி வெண்ணிலாவைத் தவிர மற்ற யாரும் அதை எடுக்க கூட இல்லை. வெண்ணிலா பரணியை முறைக்க அவன் எடுத்து சாப்பிட்டான்.
உபசரிப்பு முடிந்ததும் பெண்ணைப் பார்க்க வந்திருக்கிறோம் என்பதைக் கூட மறந்து “இது என்ன சொந்த வீடா? வாடகை வீடா?”, என்று இளக்காரமாக கேட்டாள் மல்லிகா. அதைக் கேட்டு சுஜி வீட்டினர் முகம் மேலும் சுருங்கிப் போனது.
“பாத்தியா”, என்ற பார்வையை மதனை நோக்கி வீசினார்கள் தணிகாச்சலமும் சுந்தரியும்.
“அத்தை சொந்த வீடா இருந்தா என்ன? வாடகை வீடா இருந்தா என்ன? நம்ம புவி அத்தான் இங்கயா வந்து தங்கப் போறாங்க? நம்ம வீட்டு பூஜை ரூம் அளவுக்கு தான் இவங்க வீட்டு ஹால் இருக்கு”, என்று சொன்னாள் ரேணுகா.
“ஆமா”, என்று மல்லிகா சொல்ல “அம்மா எனக்கு நூறு பவுன் போட்டு கட்டிக் கொடுத்தீங்க. ரேணுகாவும் நூறு பவுன் போட்டு வந்தா. நாளைக்கு நம்ம வெண்ணிலவுக்கும் நூறு பவுன் போட்டு கட்டிக் கொடுப்போம். ஆனா இங்க அவ்வளவு தேராது போல”, என்று கேட்டாள் ரோஹினி.
பரணிக்கும் புவிக்கும் என பேச என்று தெரிய வில்லை. பெரியவர்கள் இருக்க தான் பேசக் கூடாது என்று பரணி அமைதியாக இருக்க “இதுக்கு தான் இந்த கல்யாணமே வேண்டாம்னு சொன்னேன்”, என்று எண்ணி அமைதியாக இருந்தான் புவி.
மகேஷோ வேண்டா வெறுப்பாக நின்றிருந்தான். அவனுக்கு புவியின் திருமணம் சந்தோஷம் தான். ஆனால் சுஜி வீட்டினரைப் பிடிக்க வில்லை.
சுஜி வீட்டினரோ முகத்தில் முல்லைக் கட்டிக் கொண்டு நின்றனர். “அப்பா பாருங்க பா, எல்லாரும் எப்படி பேசுறாங்கன்னு”, என்று பாரியிடம் சொன்னாள் வெண்ணிலா.
“அவர்களை இன்னும் கொஞ்ச நேரம் இங்கே இருத்தி வைத்தால் மகனின் திருமணம் கேள்விக் குறியாகி விடும்”, என்று பாரிக்கு புரிந்தது.
“வெட்டிக் கதை பேசவா வந்தோம்? முதல்ல பொண்ணைப் பாக்கலாம். பொண்ணைக் கூட்டிட்டு வாங்க”, என்று பாரி சொன்னதும் அனைவரும் வாயை மூடிக் கொண்டார்கள்.
“நான் போய் கூட்டிட்டு வரேன்”, என்று எழுந்து சென்ற வெண்ணிலா அங்கே மிதமான அலங்காரத்தில் இருந்த சுஜியைக் கட்டிக் கொண்டாள்.
தோழியைக் கண்டதும் சுஜியின் முகத்தில் அப்போது தான் சிறு நிம்மதி வந்தது. “கடவுள் நம்மளை எப்படி ஒண்ணு சேக்குறார் பாத்தியா? சரி சரி வா. எல்லாரும் உன்னைப் பாக்க தான் வந்துருக்காங்க”, என்று சொல்லி அவளை அழைத்தாள்.
“எனக்கு பயமா இருக்கு டி”
“எல்லாம் நம்ம வீட்டு ஆட்கள் தானே? என்ன பயம்? வா”, என்று சொல்லி அவளை அழைத்துக் கொண்டு வெளியே வந்தாள். அனைவரும் அவளையே பார்க்க அவளோ தலை குனிந்து நின்றிருந்தாள். புவியை நிமிர்ந்து பார்க்க ஆசை தான். ஆனால் அதற்கான தைரியம் அவளிடம் இல்லை.
சுஜியை பார்த்த உடனேயே பாரிக்கு அவளை மிகவும் பிடித்து விட்டது. அவள் தான் மகனுக்கு பொருத்தமாக இருப்பாள் என்று எண்ணியவர் அவள் தான் தங்கள் வீட்டின் மூத்த மருமகள் என்று முடிவு எடுத்து விட்டார்.
அப்போது மல்லிகா எதையோ கேக்க வர “தேவையில்லாதது பேச வேண்டாம் மல்லி”, என்று மனைவியை அரட்டி அமைதி படுத்தினார் பாரி.
பின் தணிகாச்சலம் புறம் திரும்பி “சம்பந்தி எங்களுக்கு பொண்ணை ரொம்ப பிடிச்சிருக்கு. இவ்வளவு போடுங்க, அவ்வளவு போடுங்கன்னு நாங்க கேக்கப் போறது இல்லை. எவ்வளவு நகை போட்டு வந்தாலும் அவ தான் எங்க மருமக. உங்களுக்கு சம்மதம்னா தகவல் சொல்லுங்க. நாங்க இப்ப கிளம்புறோம்”, என்றார்.
“எங்களுக்கும் சம்மதம் தான். நீங்க நாள் குறிச்சிட்டு தகவல் சொல்லுங்க”, என்று சொன்ன தணிகாச்சலம் முகத்தில் மருந்துக்கு கூட சிரிப்பில்லை.
அனைவரும் எழுந்து செல்ல பெண்ணைப் பார்க்காமலே எழுந்து சென்று விட்டான் புவி. “சாரி டி அவங்க பேசினதுக்கு. அதையெல்லாம் பெருசா எடுத்துக்காத”, என்று சுஜியிடம் சொல்லி விட்டுச் சென்று விட்டாள் வெண்ணிலா.
அவன் தன்னைப் பார்த்தானா? அவனுக்கு தன்னைப் பிடித்திருக்கிறதா? போகும் போது போயிட்டு வரேன் என்னும் விதமாய் ஒரு தலையையாவது அசைத்திருக்கலாமே என்று எண்ணி எண்ணி சோர்ந்து போனாள் சுஜி.
“குடும்பமா இது? ஒவ்வொன்னும் ஒவ்வொரு விதமா இருக்கு? பாத்தாலே தெரியுது மொத்த குடும்பத்துக்கும் இவ தான் வேலைக்காரியா போகப் போறான்னு”, என்று புலம்பிக் கொண்டிருந்தாள் சுந்தரி. அவர்களுக்கு புவியின் அழகு பிடித்திருந்தது. அவன் படிக்க வில்லை என்ற குறை கூட பின்னுக்கு போனது. ஆனால் அவர்கள் பேச்சு தான் இப்போது குறையாக தெரிந்தது.
“விடு சுந்தரி”, என்று மனைவியை அமைதிப் படுத்த முயன்றார் தணிகாச்சலம்.
“எப்படிங்க விட முடியும்? எப்படி செல்லமா வளத்தோம்? மாப்பிள்ளையைப் பாக்க அமைதியா நல்ல பையனா தான் தெரியுது. ஆனா மத்தவங்க பேச்சு சரியில்லைங்களே. நம்ம பொண்ணுக்கு நாம நூறு பவுனுக்கு மேலேயே போடுவோமே? பிள்ளைங்க படிப்புக்கு வசதியா இருக்கோம்னு தானே இந்த வீட்ல இருக்கோம். நம்ம ஊர்ல இருக்குற பூர்வீக வீட்டைப் பாத்தா இப்படிச் சொல்வாங்களா? இப்பவே இப்படி பேசுறவங்க பின்னாடி எப்படி பேசுவாங்க?”
“விடு சுந்தரி. எல்லாம் தலை விதிப் படி தான் நடக்கும். நாம ஒண்ணும் பண்ண முடியாது”, என்று சொன்னார் தணிகாச்சலம். அன்று நடந்ததை மதன் அப்படியே மைதிலியிடம் தெரிவித்தான். தங்கை வாழ்வு எப்படி இருக்குமோ என்று அவன் புலம்ப அவள் தான் அவனைத் தேற்றினாள்.
வீட்டுக்கு சென்றதும் பரணியும் புவியும் கடைக்குச் செல்ல மற்றவர்கள் மட்டும் இருந்தார்கள். “பொண்ணு பாக்க போன இடத்துல அவங்க வீட்டைப் பத்தி அப்படி தான் பேசுவீங்களா?”, என்று தன்னுடைய அம்மாவிடம் சண்டைக்கு நின்றாள் வெண்ணிலா.
“நாங்க இல்லாததையா சொன்னோம்?”, என்று கேட்டாள் ரோஹினி.
“அக்கா உன் வேலையைப் பாரு. நானே கஷ்டப் பட்டு அண்ணாவை இந்த கல்யாணத்துக்கு சம்மதிக்க வச்சிருக்கேன். தேவையில்லாம ஏதாவது பேசி குட்டையைக் கிளப்பின நான் என்ன செய்வேன்னு எனக்கே தெரியாது”, என்று கத்தினாள் வெண்ணிலா.
“உன் பிரண்டுன்னு ரொம்ப சப்போர்ட் பண்ணாத வெண்ணிலா. ஒண்ணும் இல்லாத வீட்ல இருந்து இங்க வரவ எல்லாத்தையும் வாரிச் சுருட்டிட்டு உன்னையே இங்க இருந்து விரட்டிருவா”, என்றாள் ரேணுகா.
“எல்லாரும் உன்னை மாதிரியே இருக்க மாட்டாங்க ரேணு”, என்று வெண்ணிலா நக்கலாக கேட்க “அத்தான் பாத்தீங்களா, வெண்ணிலா எப்படி பேசுறான்னு?”, என்று மகேஷிடம் சொன்னாள் ரேணுகா.
மகேஷ் என்ன சொல்ல என்று தெரியாமல் அமைதியாக இருக்க “அவ சொல்றதுல என்ன தப்பு இருக்கு? மல்லிகா இதுக்கெல்லாம் காரணம் நீ தான். ஒழுங்கா பெரிய மனுஷி மாதிரி நடந்துக்கோ. ரேணுகாவையும் ரோஹினியையும் கண்டிக்க வேண்டிய நீயே இப்படி நடந்துக்கிட்டா நீ வேற பாரியைப் பாப்ப. என் மகன் கல்யாணம் எந்த பிரச்சனையும் இல்லாம நடக்கணும். இதுல ஏதாவது குழப்பம் பண்ணுனீங்க, பொண்டாட்டி பிள்ளைன்னு கூட பாக்க மாட்டேன்”, என்று சொன்னார் பாரி.
“சரி விடுங்க. எங்க ஆதங்கத்தை கொஞ்சம் சொல்லிட்டோம். இதுக்கு இப்படி பேசுவீங்களா?”, என்று கணவனை சமாதானம் செய்தாள் மல்லிகா.
கடைக்குச் சென்ற புவி வேலையைப் பார்த்தாலும் இத்தனை நாள் போல இல்லாமல் இன்று வெகு அமைதியாக இருந்தான்.
“என்ன மாப்பிள்ளை அமைதியா இருக்க?”, என்று கேட்டான் பரணி.
“ஒண்ணும் இல்லை மாமா சும்மா தான்”
“உனக்கு பாத்துருக்குற பொண்ணு ரொம்ப அழகு டா. உனக்கு பிடிச்சிருக்கா?”
“நான் தான் பாக்கவே இல்லையே?”
“என்ன மாப்பிள்ளை சொல்ற?”
“கொஞ்சம் கூச்சமா இருந்துச்சு. அது மட்டுமில்லாம எல்லாரும் பேசினதைக் கேட்டீங்க தானே? இந்த கல்யாணம் தேவையா மாமா? அவ என்னைக் கல்யாணம் பண்ணினாலும் நல்லா இருக்க மாட்டா மாமா”