அருகே வந்ததும் “ஏன் டி லேட்? பொண்ணுக்கு அண்ணி இப்படியா லேட்டா வரது?”, என்று அவன் உரிமையாக கோபப் பட அவனின் அந்த வார்த்தைகளைக் கேட்டு சொந்தத்துடன் அவனைப் பார்த்தாள்.
இது போதும் என்று அவளுக்கு தோன்றியது. “இந்த சேலைல சும்மா நச்சின்னு இருக்க டி. இன்னைக்கு நைட் வீடியோ கால் பேசுற வரைக்கும் இந்த சேலையை நீ கழட்ட கூடாது”, என்று அவன் கட்டளையிட “எதுக்காம்?”, என்று முணுமுணுத்தாள்.
“நீ தப்பா நினைக்கிற மாதிரி எல்லாம் இல்லை டி. இப்ப அவசரத்துல உன்னை ரசிக்க முடியாதுல்ல? அதான் பொறுமையா ரசிக்கணும்னு அப்படிச் சொன்னேன்”
“நான் தப்பா நினைக்கிறேன்னு யார் சொன்னா?”, என்று கேட்டு அவள் அவனைச் சீண்ட “என்னை நம்ம கல்யாணம் வரைக்கும் நல்ல பையனா இருக்க விடு டி”, என்று தவிப்புடன் சொல்ல சிறு சிரிப்புடன் தலையசைத்தாள்.
“கொஞ்சம் அந்த குடும்பத்தை நினைச்சு பயமா தான் இருக்கு மயூ. சுஜி நல்லா இருப்பாளா?”, என்று தன்னுடைய மன குழப்பங்களை அவளிடம் பகிர்ந்து கொண்டான் மதன்.
அவன் குழப்பம் புரிய “நான் ஒண்ணு கேக்குறேன். அதுக்கு பதில் சொல்வீங்களா?”, என்று கேட்டாள் மைதிலி.
“கண்டிப்பா டி”
“என் அப்பா தப்பானவர் தான். என் குடும்பம் தப்பான குடும்பம்னு சொல்லி நீங்க என்னை விட்டுருவீங்களா? என்னைக் கல்யாணம் பண்ணிக்க மாட்டீங்களா?”
“லூசா மயூ நீ? நமக்கு கல்யாணம் முடியலைன்னாலும் நீ என் பொண்டாட்டி டி. அது எப்படி உன்னை என்னால விட முடியும்? உங்க அப்பா எப்படி பட்டவரா இருந்தாலும் எனக்கு நீ மட்டும் தானே முக்கியம்?”
“அது மாதிரி சுஜிக்கு புவி அண்ணன் தானே முக்கியம். அவ குடும்பம் எப்படி இருந்தா என்ன? அவ எல்லாம் சமாளிச்சிப்பா”
“மயூ, இப்ப கொஞ்சம் தைரியமா இருக்கு டி. இதுக்கு தான் பொண்டாட்டி வேணும்ங்குறது”
“ஐயோ இப்படியே சொல்லாதீங்க. எனக்கு அந்த வார்த்தை கேட்டதும் என்னவோ போல இருக்கு”
“என்ன மாதிரி இருக்காம்?”, என்று அவன் சரசமாக கேட்க “எனக்கு உங்களை கட்டிக்கணும் போல இருக்கு போதுமா?, என்று வெட்கத்துடன் சொன்னாள்.
“கட்டிக்கிட்டாலும் கல்யாணத்துக்கு முன்னாடி ஒண்ணும் செய்ய முடியாது டி. அது வரைக்கும் பொறுமையா தான் இருக்கும்”, என்று அவன் ஏக்கமாக சொல்ல “நம்ம ரெண்டு பேருக்கும் தனிமை கிடைக்கிற மாதிரி சந்தர்பம் வரவே கூடாது”, என்றாள் மைதிலி.
“ஏன் டி, என் கூட தனியா இருக்கணும்னு உனக்கு தோணாதா?”
“அது தோணாம இருக்குமா? அப்படி தனிமை கிடைச்சா உங்களுக்கு இருக்குற பொறுமை எனக்கு இருக்குமான்னு தெரியலை. எனக்கு இந்த நிமிஷம் உங்க கூட வாழனும் போல இருக்கு. அடுத்த நிமிஷம் செத்தா கூட சந்தோஷம் தான்”, என்று அவள் வெட்கத்தை விட்டு அவள் ஆசையைச் சொல்ல அவள் மனது அவனுக்கு தெளிவாக புரிந்தது.
“நாம பேரன் பேத்தி எல்லாம் பாப்போம் டி. அப்படி எந்த அங்கீகாரத்தையும் உனக்கு தராம நான் உன் கூட வாழ்ந்தேன்னு வை என்னால உங்க அப்பா முன்னாடி நிமிர்ந்து நிக்க முடியாது. அவரைக் கேள்வி கேக்குற உரிமையை நான் இழந்துருவேன். அதனால நீ என்னைக் கட்டிப் பிடிச்சிட்டு நின்னா கூட நான் உன்னை எடுத்துக்க மாட்டேன். சரி உள்ள போ. சாவைப் பத்தி பேசினதுக்கு உனக்கு நைட் தண்டனை இருக்கு”
போனில் அவன் தரும் முத்தங்கள் தான் அந்த தண்டனை என்று அவளுக்கு தெரியாதா என்ன? சிறு சிரிப்புடன் தோழிகளைப் பார்க்கச் சென்றாள்.
அவளைக் கண்டதும் “தேங்க்ஸ் டி, உன்னால தான் இந்த கல்யாணமே நடக்குது”, என்று வெண்ணிலா சொல்ல “அமைதியா இரு, சுஜிக்கு எதுவும் தெரிய வேண்டாம்”, என்றாள் மைதிலி. சுஜியும் மைதிலியை அணைத்துக் கொண்டாள்.
தோழிகள் இருவரும் சுஜியை ரசித்துப் பார்த்தார்கள். அலங்காரம் முடிந்திருந்தது. ஐந்தரை அடி உயரம், செதுக்கி வைத்தது போல இருந்த அவள் தேகம், ஒள்ளியும் இல்லாமல் குண்டும் இல்லாமல் இருந்த உடல் வாகு, வட்டவடிவமான முகம், பளபளக்கும் கன்னங்கள், பிறை போல நெற்றி, மீன் போல இருந்த அழகான கருவிழிகள், தேன் சொட்டும் இதழ்கள் லிப்ஸ்டிக்கில் இன்னும் ஊறியிருந்தது.
உதட்டுக்கு மேல் இருந்த அந்த சிறிய அழகான மச்சம், தனி அம்சமாக இருந்தது. பிரம்மன் இவளை செதுக்க தன்னுடைய வாழ் நாளையே செலவழித்திருப்பானோ என்று என்னும் அளவுக்கு அவ்வளவு அழகாக இருந்தாள். இருவரும் அவளை கிண்டல் அடித்துக் கொண்டிருக்க அவள் முகம் சிவந்தாள்.
அப்போது “பொண்ணை அழைச்சிட்டு வாங்கோ’, என்று ஐயர் குரல் கொடுக்க வெண்ணிலாவும் மைதிலியும் சுஜியை அழைத்துக் கொண்டு வந்தார்கள். அவளின் பின்னே மற்ற உறவு பெண்களும் அவளுடைய மற்ற தோழிகளும் வந்தார்கள்.
திருமணக் கோலத்தில் அழகு தேர் போல என நடந்து வந்தவளை மொத்த மண்டபமே ஆவேனப் பார்த்தது. ஆனால் அவளோ தலை குனிந்து வந்து புவி பக்கத்தில் அமர்ந்தாள். ஆனால் அவன் அவளை ஏறெடுத்தும் பார்க்க வில்லை. அவளுக்கு அவனைப் பார்க்க மலையளவு ஆசை இருக்கிறது தான். ஆனால் அவ்வளவு பேர் முன்னிலையில் அது முடியாமல் தலை குனிந்து அமர்ந்திருந்தாள். அதன் பின்னர் அவர்களுடைய நேரத்தை ஐயர் எடுத்துக் கொண்டார். இருவருமே அவர் ஆட்டுவிக்கும் பொம்மைகளாகினார்.
அதன் பின் ஐயர் தாலி எடுத்துக் கொடுக்க அனைவரின் ஆசீர்வாதத்தோடு சுஜி கழுத்தில் மங்கள நாணைக் கட்டினான் புவி. குங்குமம் எடுத்து அவள் தாலியிலும் அவள் நெற்றி வகிட்டிலும் வைத்தான். அப்போது தான் அவள் முகம் பார்த்தான். “எம்மாடி இந்த பொண்ணு என்ன இவ்வளவு அழகா இருக்கு? எதனால என்னைக் கட்டிக்கிட்டு கஷ்டப் படப் போகுது? இவளுக்கு வேற மாப்பிள்ளையே கிடைக்கலையா? எல்லாம் இந்த வெண்ணிலாவால தான்”, என்று எண்ணிக் கொண்டான்.
அதற்கு பிறகு அவன் முகம் இந்த திருமணத்தை ஏற்க முடியாமல் உர்ரென்று ஆனது. அதன் பின் அக்னியை வலம் வந்தார்கள்.
கழுத்தில் தொங்கிய தாலியைப் பார்த்த சுஜி கண்கள் சந்தோசத்தில் சிறிது கலங்கியது. யாருக்கும் தெரியாமல் அதை மறைத்துக் கொண்டாள். அனைவரும் மணமக்களை வாழ்த்த நேரம் றெக்கை கட்டிக் கொண்டு பறந்தது.
போட்டோ எடுக்கும் போது அவனை அவள் தோளைச் சுற்றி கையைப் போட சொல்ல “முடியாது, இப்படியே எடுங்க”, என்று மறுத்தான் புவி. அவன் அப்படிச் சொன்னதும் அவளுக்கு கஷ்டமாக இருந்தது.
இது வரை இருந்த உற்சாகம் குறைந்தது போலவே உணர்ந்தாள். ஆனாலும் அவள் அந்த நாளை அம்மா அப்பாவுக்காக சந்தோஷமாக கடந்தாக வேண்டுமே.
உணவு உண்ணும் போதும் அவளை அவனுக்கு ஊட்டச் சொல்ல அவள் வெட்கத்தில் மறுத்தாள். அவனை செய்யச் சொல்ல அவனோ “இதெல்லாம் செஞ்சே ஆகணுமா? விடுங்க”, என்று சொல்லி விட்டான்.
அவனைத் திரும்பிப் பார்த்தாள். அவன் முகம் இறுகிப் போய் இருந்தது. அவன் இதழ்கள் அழுத்தமாக மூடியிருப்பதைப் பார்த்தே அவனுடைய கோபத்தை புரிந்து கொண்டாள். ஆனால் அந்த கோபம் எதற்கு என்று அவளுக்கு புரியவில்லை.
அதன் பின் எல்லாம் முடிந்து அவர்கள் வெளியே வரும் போது மண்டப வாசலில் சிவப்பு மற்றும் வெள்ளை வண்ண ரோஜாக்களால் அலங்கரிக்கப் பட்டிருந்த கார் தயாராக இருந்தது. இருவரும் காரில் ஏறினார்கள். கார் புவி வீட்டை நோக்கி பறந்தது.
உயரமான கேட் போட்ட அந்த காம்பவுண்ட் வீட்டுக்குள் அந்த கார் சென்றது. அழகான மாளிகை போல இருந்த வீடும் அதைச் சுற்றி இருந்த தோட்டமும் அழகாக இருந்தது. அந்த வீட்டை வியந்து போய் பார்த்தாள் சுஜி.
ஆலம் சுற்றி மணமக்கள் உள்ளே அழைக்கப் பட்டனர். உறவுப் பெண்கள் அவளை விளக்கேற்றச் சொல்ல அவர்கள் சொன்னதை அப்படியே செய்தாள் சுஜி.
அதன் பின் இருவருக்கும் பால் பழம் கொடுக்கப் பட்டது. அனைத்தையும் ஒரு இயந்திர தன்மையிலே செய்து முடித்தான் புவி.
அதற்கு பின் மண்டபம் வந்து ரிசப்ஷனில் நின்றார்கள். புவி அமைதியாக நிற்க அவன் அமைதி அவளை அதிகம் பாதித்தது. இப்போது வரை அவன் ஒரு வார்த்தை கூட பேச வில்லை என்று அவள் கவலைப் பட “இதுக்கே கவலைப் பட்டா எப்படி? நீ இன்னும் பாக்க வேண்டியது நிறைய இருக்கு”, என்று சிரித்தது விதி.