அவன் திரும்பி அவரை தயக்கமாக ஏறிட்டுப் பார்க்க “உன் வாழ்க்கை எப்படி வந்து நிக்குதுன்னு பாரு. இதை சரி செய்யனுமா இல்லை உங்க அம்மா சொன்னதை செய்யனுமான்னு நீயே முடிவு பண்ணிக்கோ. ஏன்னா கல்யாணம் வேண்டாம்னு சொன்ன உன்னை கட்டாயப் படுத்தி செஞ்சு வச்சவங்க நாங்க தான். அதனால இப்ப நான் எதுவும் சொல்ல முடியாது. அப்புறம் இப்ப நீ கடைக்கு வர வேண்டாம். நானும் பரணியும் பாத்துக்குறோம்”, என்று சொல் விட்டுச் சென்றார். இனி மகன் பார்த்துக் கொள்வான் என்ற நம்பிக்கை வந்தது அவருக்கு.
புவி அமைதியாக அறைக்குச் சென்றான். அவளோ கட்டிலில் படுத்து கதறி அழுது கொண்டிருந்தாள். அவளை எப்படி சமாதானப் படுத்த என்று கூட அவனுக்கு தெரிய வில்லை. “முன்ன பின்ன செத்தா தானே சுடுகாடு தெரியும்?”, என்பது போல இருந்தது அவன் நிலை.
அவனும் கட்டிலில் மறு ஓரத்தில் அமர்ந்து அவளையே தான் பார்த்தான். இப்போது கூட தன்னை சமாதானம் செய்யாத கணவனை எண்ணி மனதுக்குள் இறுகிப் போனாள் சுஜி. அவனுக்கு முதுகு கட்டிப் படுத்தவள் அழுத படியே தூங்கி விட்டாள்.
இரவு உணவை சமைக்க கூட சுஜி வெளியே வரவில்லை. புவிக்கும் அதைப் பற்றிய எண்ணமே இல்லை.
ஆனால் மணி எட்டு அடித்ததும் வயிறு பசிக்க ஆரம்பித்ததால் “ஏய் வெண்ணிலா, அவ எங்க டி? நைட் சாப்பாடு யார் செய்வா?”, என்று மகளிடம் கேட்டாள் வெண்ணிலா.
“வேணும்னா நீயே போய் எழுப்பு”, என்று சொன்ன வெண்ணிலா அன்னையிடம் வேறு எதுவும் பேச வில்லை.
வேறு வழியில்லாமல் புவியின் அறைக் கதவைத் தட்டினாள் மல்லிகா. புவி தான் கதவை திறந்தான். “என்ன மா?”, என்று சிறு எரிச்சலுடன் தான் கேட்டான்.
“அவ எங்க டா?“
“தூங்குறா”
“தூங்குறாளா? விளக்கு வைக்கிற நேரத்துல என்ன தூக்கம்? நைட்டுக்கு சமைக்கணும். எனக்கு பசிக்குது. அவளை எழுப்பு”
“அதன் தூங்குறான்னு சொல்றேன்ல. வேணும்னா நீ செஞ்சு சாப்பிடு போ”, என்று எரிந்து விழுந்து கதவைப் பூட்டிக் கொண்டான். இந்த புவி அவளுக்கு புதியதாக தெரிந்தான். ஏனென்றால் புவி இது வரை மல்லிகாவிடம் கோப முகம் காட்டியது கிடையாது.
இதை எல்லாம் கவனித்த படி நின்ற வெண்ணிலா அம்மாவைக் கண்டு நமட்டுச் சிரிப்பு சிரிக்க “என்ன டி உங்க அண்ணன் இப்படி பண்ணிட்டான்?”, என்று கேட்டாள் மல்லிகா.
‘நீ தானே சும்மா இருந்த சிங்கத்தை சொறிஞ்சு விட்ட? வாங்கிக் கட்டு”
“இப்ப சமைக்க என்ன செய்ய? இன்னைக்கு ஒரு நாள் நீ செய்றியா வெண்ணிலா?”
“நான் சுஜிக்கு ஹெல்ப் பண்ண தான் சமையல் ரூமுக்கு போனேன்? மத்த படி நான் மட்டும் செய்யணும்னு எனக்கு என்ன தலையெழுத்தா. வேணும்னா நீயும் உன் மருமகளும் செய்ங்க. இல்லைன்னா கடையில் வாங்கித் தின்னுங்க”, என்று சொல்லி விட்டு அறைக்குள் சென்று விட்டாள்.
வேறு வழியில்லாமல் மகேஷிடம் பணத்தைக் கொடுத்து கடையில் தான் இரவு உணவை வாங்கச் சொன்னாள் மல்லிகா. மகேஷ் தான் வாங்கிக் கொண்டு வந்தான். மணி ஒன்பது ஆகி விட்டதால் புவியை சாப்பிட அழைப்பதற்க்காக மீண்டும் புவியின் அறைக் கதவை தட்டினாள் மல்லிகா.
கதவைத் திறந்த புவி “இப்ப உனக்கு என்ன மா பிரச்சனை?”, என்று சுள்ளென்று கேட்டான்.
“சாப்பிட வா டா. அதைச் சொல்ல தான் கூப்பிட்டேன்”
“எனக்கு வேண்டாம். தயவு செஞ்சு இங்க இருந்து போறியா?”
“கோபத்தை சாப்பாடு மேல காட்டக் கூடாது டா”
“இப்ப விருந்து சாப்பாடு சாப்பிடுற மாதிரி தானே மனசு இருக்கு”
“ஏன் டா அம்மா கிட்ட இப்படி எல்லாம் பேசுற?”
“வேற உன் கிட்ட எப்படி பேசச் சொல்ற?”
“நான் என்ன டா பண்னினேன்?”
“என்ன பண்ணுனியா? நான் எப்ப குழந்தை பெத்துக் கிட்டா உனக்கு என்ன? அது எங்க விருப்பம்? அதுல நீ எதுக்கு தலையிடுற? அப்புறம் என்ன சொன்ன? எனக்கு என் பொண்டாட்டியை பிடிக்கலைன்னு சொல்ற? நான் சொன்னேனா அவளை எனக்கு பிடிக்கலைன்னு. என் பெர்சனல் விஷயத்தில் தலையிடுறது இது தான் கடைசியா இருக்கணும்”, என்று கத்தி விட்டு உள்ளே செல்ல மிரண்டு போய் நின்றாள் மல்லிகா.
அறைக்குள் வந்த புவி தூங்கும் மனைவியைப் பார்த்தான். அவன் மனம் முழுவதும் அவளை வீட்டை விட்டு அனுப்ப கூடாது என்ற எண்ணம் மட்டும் தான் இருந்தது. அவளை நெருங்க அவனுக்கு தயக்கம் மட்டும் தான். மற்ற படி அவளை தான் அவனுக்கு மிகவும் பிடிக்குமே? அவளுடைய பிறந்த வீட்டுக்கு செல்லட்டும் என்று நினைத்தற்கு கூட அவன் தயக்கம் தான் காரணம். அவளையே பார்த்தான். அவள் கன்னத்தில் கண்ணீர்த் தடங்கள். அவன் மனம் அவளுக்காக உருகியது.
“யாரை வீட்டை விட்டு அனுப்பணும்னு சொல்றாங்க? அப்படி வெட்டி விடுற பந்தமா இது? இவ என்னோட பொண்டாட்டி. அவ்வளவு ஈஸியா இவளை என்னை விட்டு அனுப்ப முடியுமா? என்னால இவளை அப்படி எல்லாம் விட்டுக் கொடுக்க முடியாது”, என்று அவன் மனது வெறி பிடித்தவன் போல புலம்பிக் கொண்டிருந்தது. அவளை எப்படியாவது தக்க வைத்துக் கொள்ள வேண்டும். அவளை யாரும் இனி ஒரு வார்த்தை கூட சொல்லக் கூடாது. வீட்டினரின் வாயை அடைக்க வேண்டும் என்று எண்ணியவனுக்கு அதற்கு என்ன செய்ய என்று யோசனையாக இருந்தது.
அவளை நெருங்கி வாழ்ந்து விட்டால் அவளை இனி யாரும் ஒன்றும் சொல்ல மாட்டார்கள் என்று எண்ணியவன் அவளை நெருங்க முடிவு எடுத்து விட்டான்.
ஆனால் அவனால் அதைச் செய்ய முடியவில்லை. அவன் கை கால் எல்லாம் நடுங்க ஆரம்பித்தது. இதயம் எல்லாம் வேகமாக துடித்து படபடப்பாக இருந்தது.
தனக்கு தான் பிரச்சனையோ? அதனால் தான் தான் இப்படி இருக்கிறோமோ? தனக்கு ஹார்மோன்ஸ் எல்லாம் சரியாக வேலை செய்ய வில்லையோ என்ற பயம் முதல் முறையாக வந்தது அவனுக்கு.
மனது பாரமாக அழுத்த அடுத்த நொடி சட்டையை எடுத்து மாட்டியவன் போனை எடுத்துக் கொண்டு வெளியே சென்று விட்டான். அவன் கடைக்கு தான் செல்கிறான் என்று மல்லிகா நினைத்தாள். ஆனால் அவனோ பிரின்ஸ் கிளினிக் முன்னால் வண்டியை நிறுத்தினான்.
உள்ளே செல்ல தயக்கமாக தான் இருந்தது. ஆனால் சுஜியின் முகம் கண் முன் வர தைரியத்தை வரவழைத்துக் கொண்டு உள்ளே சென்றான்.
அவன் நல்ல நேரம் அங்கே கூட்டம் இல்லாமல் இருக்க ஐந்து நிமிடத்தில் டாக்டரைப் பார்க்க அனுமதிக்கப் பட்டான். அவனைக் கண்டதும் எழுந்து நின்ற டாக்டர் ஜோசப் “சார் நீங்களா? வாங்க உக்காருங்க”, என்று வரவேற்றான்.
புவியிடம் வட்டிக்கு வாங்கி தான் ஜோசப் இந்த கிளினிக்கை கட்டினார். அதற்கான வட்டி மற்றும் அசலை சரியாக கொடுத்து விட்டார்.
எல்லாம் கொடுத்த பின்பும் புவி இங்கே வந்தது அவருக்கு சற்று பயத்தை தான் கொடுத்தது.
தன்னுடைய பிரச்சனையை எப்படிச் சொல்ல என்று புவி யோசனையில் இருக்க “சார் பணம் எல்லாம் செட்டில் பண்ணிட்டேன் தானே? எதுவும் பெண்டிங்க் இருக்கா?”, என்று கேட்டார் ஜோசப்.
“அந்த கணக்கு முடிஞ்சிருச்சு டாக்டர். நான் இப்ப கடன் கொடுத்தவனா உங்களைப் பாக்க வரலை. ஒரு நோயாளியா உங்களைப் பாக்க வந்துருக்கேன்”
“என்ன ஆச்சு உங்களுக்கு?”
“இல்ல எனக்கு சில குழப்பங்கள் இருக்கு, யார் கிட்ட கேக்குறதுன்னு தெரியலை. அப்ப தான் எனக்கு உங்க நினைவு வந்துச்சு. நீங்க குழந்தைகளுக்கான டாக்டர் தான். ஆனால் நான் வந்தது… எனக்கு….”, என்று இழுத்தான்.
“புரியுது, ஒரு நிமிஷம்”, என்று சொன்ன ஜோசப் தன்னுடைய போனை எடுத்து யாருக்கோ அழைத்தார். அந்த பக்கம் எடுத்ததும் “டேய் கிருபா நான் ஜோசப் பேசுறேன் டா”, என்றார்.