இத்தனை வருட ஏக்கங்களை புவி முதன் முறையாக வெளிப்படுத்த அவன் வேகத்தில் கொஞ்சம் மிரண்டு தான் போனாள். அவன் கைகளின் வேகமும் இதழ்களின் செய்கையும் அவளையும் கொஞ்சம் கொஞ்சமாக அவனுடைய ஆளுகைக்குள் கொண்டு வந்தது.
அவளுக்குள் தொலைந்து காணாமல் போய்க் கொண்டிருந்தவன் அன்று இரவு முழுவதும் மீண்டும் மீண்டும் அவளை நாட “இத்தனை நாள் எப்படி விலகி இருந்தீங்க?”, என்று கேட்டே விட்டாள்.
“முதல் நாள் உன் கூட வாழுற வரைக்கும் எதுவும் பெருசா தெரியலை டி. ஆனா அன்னைல இருந்து உன்னோட பாரா முகம் எனக்கு எப்படி இருந்துச்சுன்னு எனக்கு தான் தெரியும். பசி உயிர் போகுற நிலைமைல கண் முன்ன சாப்பாடை பரிமாறி சாப்பிடக் கூடாதுன்னு சொல்லுவாங்களே அப்படி ஒரு நிலைமை தான். ஒவ்வொரு ஏகாந்த இரவையும், மனசு முழுக்க காதலையும் வச்சிக்கிட்டு நீ கிட்ட இருந்தும் விலகி இருக்குற கொடுமை இருக்கே? ஒவ்வொரு இரவையும் கடக்குறதுக்குள்ள நான் பட்ட பாடு வார்த்தையால சொல்ல முடியாது டி”, என்றான்.
“நானா உங்களை விலகி இருக்க சொன்னேன்?’”
“உனக்கு பிடிக்கலைன்னு நினைச்சேன் டி”
“பிடிக்காம இல்லை. ஆனா நீங்க அவங்க எல்லாம் பேசினதுக்கு அப்படி பண்ணினீங்கன்னு அவமானமா இருந்துச்சு”
“அதுக்கு முன்னாடியும் ஆசை இருந்துச்சு டி. ஆனா தயக்கம். அதான் கிட்ட வரலை”
“ம்ம்”
“சாரி சுஜி, உன்னோட உண்மையான அன்பு புரியாம உன்னைக் கஸ்டப் படுத்திட்டேன். காலேஜ்லயே உனக்கு என்னைப் பிடிக்குமாமே? ஏன்?”
“ஹீரோ மாதிரி இருந்தா யாருக்கு தான் பிடிக்காதாம்?”, என்று அவள் சிணுங்க அவனோ அவள் பதிலில் மயங்கிப் போனான்.
மீண்டும் அவன் மன்னிப்பு கேட்க “ஐயோ விடுங்க, நீங்க என்ன தப்பு பண்ணினீங்க மன்னிப்பு கேக்க? தயக்கத்துல தானே விலகி இருந்தீங்க? நான் தான் என்னை பிடிக்காம விலகி இருக்கீங்களோன்னு நினைச்சேன். இப்ப தான் எல்லாம் சரியா போயிருச்சே?”, என்று அவனைத் தேற்றினாள்.
“நீ என்ன தான் சொன்னாலும் என் பக்கம் மட்டும் தான் நிறைய தப்பிருக்கு. நான் உன் கிட்ட மனசு விட்டு பேசிருக்கணும். உன்னை நெருங்கிருக்கணும், மத்தவங்க உன்னைப் பேசினப்ப நான் உனக்காக பேசிருக்கணும்”
“ஐயோ அப்படின்னா நீங்க எனக்காக செஞ்சதை நான் என்னன்னு சொல்ல?”
“நான் என்ன செஞ்சேன்?”
“என்னை உங்க வீட்ல உள்ளவங்க கவுரவப் படுத்த நீங்களே பணம் கொடுத்தது”
“ஆனா நீங்க அப்ப என் முகத்தைக் கூட பாக்கலை தானே?”, என்று மனத்தாங்களுடன் கேட்டாள்.
“தாலி கட்டும் போது பாத்தேன் டி. அவ்வளவு அழகா இருந்த. அதை சொல்லிருந்தா இவ்வளவு பிரச்சனை வந்துருக்காது. உன்னை ரொம்ப கஷ்டப் படுத்தினேன் தானே? சாரி டி”
“அப்படி எல்லாம் இல்லை. பவி குட்டி வயித்துல இருந்தப்ப எனக்கே தெரியாம நீங்க என்னை நல்லா தான் பாத்துக்கிட்டீங்க. எங்க அப்பா கிட்டயும் எனக்காக பேசிருக்கீங்க. நான் இங்க இருந்தா நிறைய வேலை செய்யச் சொல்லுவாங்கன்னு என்னை என்னோட வீட்டுக்கு அனுப்பி வச்சீங்க. எல்லாம் எனக்கு தெரியும்”
“அது பெரிய விஷயமா? உனக்கு ஒண்ணுமே வாங்கித் தரலையே?”
“இப்ப என்ன இனி வாங்கித் தாங்க. நைட்டி எல்லாம் பழசா போகிருச்சு. அது போக பாவாடை, பாப்பாக்கு டிரஸ் எல்லாம் வாங்கணும். வாங்கித் தாங்க. இவ்வளவு நாள் வாங்காததுக்கு சேத்து வச்சி வாங்கிக்கிறேன்”
“கண்டிப்பா டி, நீங்க ரெண்டு பேரும் தான் என்னோட உயிர். உங்களுக்கு வாங்காம யாருக்கு வாங்கப் போறேனாம்? உனக்கு நைட்டி பாவாடை மட்டும் போதுமா? வேற எதுவும் வேண்டாமா?”, என்று கேட்டவனின் கைகள் அவன் சொன்னது எதுவென்று உணர்த்த “சீ”, என்று சொன்னவள் அவன் மார்பில் சாய்ந்து கொண்டாள்.
“சேலையைச் சொன்னேன் டி. நீ என்ன நினைச்ச?”, என்று அவளை சீண்டினான் புவி.
சிறிது நேரம் கழித்து அவன் மீண்டும் மன்னிப்பை வேண்ட “பிளீஸ்ங்க, நீங்க என் கிட்ட கூட மன்னிப்பு கேக்க கூடாது. என்னால கூட உங்க கம்பீரம் குறையவே கூடாது”, என்று அவளுடைய காதலை மெய்பித்தாள்.
“என்னை நீ வெறுக்கலை தானே சுஜி?”
“உங்களை எப்படி என்னால வெறுக்க முடியும்? உங்களோட பலவீனம் தயக்கம் தான். அதையே நீங்க உதறி எல்லார்க் கிட்டயும் எனக்காக பேசின பிறகு எனக்கு வேற என்ன வேணுமாம்? அது மட்டுமில்லாம எனக்கு பவியையே கொடுத்துருக்கீங்க?”
“அதை வெளிய சொல்லாத வெக்கக்கேடு. ஏதோ கடவுள் பாவப் பட்டு கொடுத்துருக்கார்”
“நீங்க பேசினா பேசிட்டே இருப்பீங்க?”, என்று சொன்னவள் அவனுடைய உதடுகளை தண்டிக்க அவள் செய்கையில் அவள் காதலில் கர்வமாக உணர்ந்தான் புவி. அவள் முத்தத்தில் இன்னும் இன்னும் அவள் மேல் பித்தாகி போனான்.
அவள் வெட்கம் கண்டவன் ஆயிரம் முத்தங்களால் அவளை அர்ச்சித்தான். தன்னுடைய காதலை, நெகிழ்வை அவன் மீண்டும் அவளிடம் வெளிபடுத்த “தூங்க வேண்டாமா?”, என்று கேட்டாள் சுஜி.
“தூங்கலாமே? ஆனா நாளைக்கு”, என்று சொல்ல அவள் கரங்களும் அவனை இழுத்து அணைத்துக் கொண்டது. அவன் காதல் அவளுக்கு கசக்குமா என்ன?
அடுத்த நாள் அனைவருக்கும் எப்போதும் போல விடிந்தது. காலையிலே எழுந்து சென்று கடை திறக்க வேண்டும் என்பதால் பரணி சீக்கிரம் எழுந்து கொண்டான். அருகில் உறங்கிக் கொண்டிருந்த வெண்ணிலாவைப் பார்த்தான்.
பின் பெருமூச்சுடன் குளிக்கச் சென்றான். அவன் குளித்து கிளம்பி வெளியே வந்த பிறகும் வெண்ணிலா தூங்கிக் கொண்டு தான் இருந்தாள்.
அவனைக் கண்ட புவி “உன் கடமை உணர்ச்சிக்கு அளவே இல்லையா மாமா? ஒரு நாலு நாள் அப்பா உன்னோட கடையை பாத்துக்குவாங்க. இப்ப நீ உள்ள போ”, என்றான்.
“இல்லை மாப்பிளை…”, என்று பரணி தயங்க “அப்பா அப்பவே கடை திறக்க போயிட்டாங்க மாமா. நீ போய் ரெஸ்ட் எடு”, என்று சொல்ல பரணி மீண்டும் அறைக்குள்ளே வந்தவன் மனைவியைப் பார்த்த படி அமர்ந்து விட்டான். அவளைப் பார்க்க பார்க்க அவனுக்கு தெவிட்ட வில்லை.
எட்டு மணி போல தான் வெண்ணிலா கண் விழித்தாள். தன்னையே பரணி பார்த்துக் கொண்டிருக்கவும் அவளுக்கு அந்த நாளே அழகாக இருப்பது போல ஒரு பிரம்மை. இப்படி ஒரு நிகழ்வுக்காக எத்தனை நாள் ஏங்கி இருப்பாள். ஆனால் சந்தோஷத்தை அவனிடம் காட்ட வில்லை. அவளை பாடாய்ப் படுத்தியவனை பழி வாங்கினாள்.
“நிலா”, என்று அவன் அழைக்க “என்ன மாமா?”, என்று கேட்டாள்.
“என்னை மன்னிச்சிரு”
“மன்னிப்பு எதுக்கு?”
“என் மேல உனக்கு கோபம் இல்லையா?”
“என்ன கோபம்?”, என்று கேட்டு விட்டு குளிக்கச் செல்ல அவனுக்கு மண்டையைப் பிய்த்துக் கொள்ளலாம் போல இருந்தது.
ஒரு பதினொரு மணி போல “மாமா கொஞ்சம் வெளிய போகணும் கிளம்பு”, என்றாள் வெண்ணிலா. எங்கே எதற்கு என்று கூட கேட்காமல் தயாராகி விட்டான். வீட்டில் இருப்பவர்களிடம் கூட சொல்லாமல் அவள் அவனை வெளியே அழைத்துச் செல்ல ஆவலுடன் சென்றான் பரணி. அவள் அழைத்துச் சென்றது ஒரு ரெஸ்டாரண்ட்க்கு தான்.
“இங்க எதுக்கு நிலா வந்துருக்கோம்? வீட்லயே இன்னிக்கு மட்டன் தான். எதுக்கு இங்க செலவு பண்ணனும்?”, என்று கேட்டான் பரணி.
“ஒரு முக்கியமான ஆளைப் பாக்கணும். வாங்க”, என்று சொல்லி அவள் ஒரு சீட்டில் அமர அவன் அவளுக்கு எதிரே அமரப் போனான். அவன் கையைப் பற்றி இழுத்து தன்னருகே அமர வைத்துக் கொண்டாள். அவன் அவளை ஆசையாக பார்க்க “அங்க கெஸ்ட் உக்காருவாங்க”, என்று சொன்னாள் வெண்ணிலா.
அதில் முகம் வாடிப் போய் இருந்தவன் எதிரே வந்து அமர்ந்தவர்களைக் கண்டு அதிர்ந்து விட்டான். அவன் முகம் கோபத்தில் சிவந்தது. எதிரே வந்து தயக்கத்துடன் அமர்ந்தது வெங்கட் மற்றும் அருணா தான்.
அவர்களை பரணி முறைத்துப் பார்க்க அவர்கள் முகம் வாடியது. இதைக் கண்ட வெண்ணிலா பரணி காதருகே குனிந்து “என்ன மாமா என்னைக் கல்யாணம் பண்ணினது உனக்கு சந்தோஷமா இல்லையா?”, என்று கேட்டாள்.
“ஏன் இப்படி கேக்குற? கண்டிப்பா சந்தோஷம் தான்”
“அப்புறம் எதுக்கு அவங்களை முறைக்கிற? வெங்கட் என் வாழ்க்கைல இருந்து விலகிப் போனதுனால தானே நம்ம கல்யாணம் நடந்தது? அப்புறம் எதுக்கு அவங்க மேல கோபம்?”, என்று வெண்ணிலா கேட்டதும் கொஞ்சம் கோபம் குறைத்தான். ஆனால் எதுவும் பேச வில்லை.
“அவர் அப்படி தான். நீங்க கண்டுக்காதீங்க. அப்புறம் அருணா இது எத்தனையாவது மாசம்?”, என்று அவளுடைய மேடிட்ட வயிற்றைப் பார்த்துக் கேட்டாள் வெண்ணிலா.
“இப்ப ஏழு”, என்று அருணா வெட்கத்துடன் சொல்ல வெங்கட்டும் சிரித்தான். அடுத்து என்ன பேச என்று அனைவரும் அமைதியாக இருக்க “உன்னை இப்படி பாக்குறதுக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு வெண்ணிலா. உன்னை நினைச்சு நாங்க கவலைப் படாத நாளே இல்லை தெரியுமா?”, என்றான் வெங்கட்.
“இப்ப கவலை போயிருச்சு தானே? நான் சந்தோஷமா இருக்கேன், உங்களுக்கு எந்த கவலையும் வேண்டாம்னு சொல்லத் தான் இன்னைக்கு உங்களை இங்க வரச் சொன்னேன். சரி ஏதாவது சாப்பிடலாமா?”, என்று வெண்ணிலா புன்னகையுடன் கேட்க அவள் வெங்கட்டிடம் பேசுவதைக் கண்டு திகைத்து போய் அமர்ந்திருந்தான் பரணி.
“நீங்களே ஏதாவது சொல்லுங்க வெண்ணிலா”, என்றாள் அருணா.
“சரி”, என்று வெண்ணிலாவே அனைவருக்கும் ஆர்டர் செய்ய உணவும் வந்தது. அனைவரும் சாப்பிட்டார்கள். வெங்கட் பில் கட்ட போகும் போது “நோ வெங்கட். இது எங்க கல்யாண டிரீட்”, என்று சொன்ன வெண்ணிலா பரணியின் பாக்கெட்டில் இருந்து பணத்தை எடுத்துக் கொடுத்தாள். அவள் உரிமையாக செய்தது பரணிக்கு பிடித்திருந்தது.
அதற்கு பிறகு மீண்டும் அவர்களை வாழ்த்தி விட்டு சென்றார்கள் வெங்கட்டும் அருணாவும். அவர்கள் போன பிறகு “நாமளும் வீட்டுக்கு போவோமா மாமா?”, என்று கேட்டாள் வெண்ணிலா.
“ம்ம்”
“என்ன மாமா ஒரு மாதிரி இருக்குற?”
“அவன் மேல உனக்கு கோபமே இல்லையா நிலா? இவ்வளவு சந்தோஷமா அவங்க கிட்ட பேசுற?”
“அது நானே என்னை அடிச்சிக்கிட்டது? சூடும் நான் போட்டுக் கிட்டது தான்”
“என்ன சொல்ற நீ? அவன் காதலை சேத்து வைக்க அப்படி பண்ணுனியா டி?”
“இல்லை, உங்களை அடையணும்னு வெறில பண்ணினேன்?”, என்று சொல்ல அவள் காதலில் மிரண்டு போனான். அவள் நடந்த அனைத்தையும் அவனிடம் சொல்ல அவன் கண்கள் குற்ற உணர்வில் கலங்கி விட்டது.