பிடித்தம் 18
அய்யர் ‘கெட்டி மேளம்! கெட்டி மேளம்’ என்று சத்தமாக குரல் கொடுக்கவும், நாதஸ்வர குழுவினர் கெட்டிமேளம் இசை வாசிக்க ஆரம்பிக்க, வெளியே வான வேடிக்கையும் வெடியும் வரிசையாக வெடிக்க, “மாங்கல்யம் தந்துனானே……..” என்ற மங்கள மந்திரத்தை அய்யர் உச்சரிக்க……..
புகழ்வேந்தன் மித்ராணி கழுத்தில் தாலியை அணிவித்து மூன்று முடிச்சிட்டான்.
பத்து நிமிடங்களுக்கு முன்……………………..
மனோஜ் என்னும் ஒருவன் அறையினுள் இருப்பதை கண்டுக்கொள்ளாமல் மித்ராணியும் புகழ்வேந்தனும் சவாலிட்டு நின்றபோது அறைக் கதவு தட்டப்பட்டது..
கதவை திறந்த புகழ்வேந்தன், அங்கே கமலா நிற்கவும், “நான் உங்களுடன் கொஞ்சம் தனியா பேசணும்” என்றான்.
அவனை வெறுப்புடனும் கோபத்துடனும் பார்த்தவர், “உன்னுடன் பேச எனக்கு எதுவும் இல்லை”
“உங்க அண்ணன் உயிர் உங்களுக்கு முக்கியம் இல்லையா?”
கோபத்தையும் வெறுப்பையும் மீறி சிறு தவிப்புடன் அவர் பார்க்க, புகழ்வேந்தன், “என் கூட வாங்க” என்றுபடி மணமகள் அறை அருகே இருந்த படிகளில் ஏறி முதல் மாடியில் இருந்த ஒரு அறைக்கு அவரை அழைத்துச் சென்றான்.
புகழ்வேந்தனுடன் வேண்டா வெறுப்புடன் சென்ற கமலாவிடம் அவன் என்ன சொன்னானோ! அடுத்த ஐந்தாவது நிமிடம் மித்ராணியை மணமகள் அறையில் தனிமையில் சந்தித்த கமலா, “நீ இப்போவே புகழ் தம்பியை கல்யாணம் செய்ற” என்றார்.
மித்ராணி அதிர்ச்சியுடனும் ஆச்சரியத்துடனும் அன்னையை பார்க்க, அவர், “அம்மா உன் நல்லதிற்கு தான் பண்ணுவேன்……………….”
“அம்மா நீ என்ன சொன்னாலும் என்னால் அவனை கல்யாணம் செய்ய முடியாது”
“சரி.. நான் மனோ கிட்ட பேசுறேன்.. அவனையே கல்யாணம்………….”
கடும் கோபத்துடன், “அம்மா!” என்றவள் மனதினுள், ‘மனோஜுக்கு அவனே மேல்! அவன் செய்றது தப்பு தான் என்றாலும் அதை பூசி முழுகாம ஒத்துக்கிறான்.. அவன் வெளிப்படையா இருக்கிறான் ஆனா இந்த மனோ கோழை மட்டுமில்லை சுயநலவாதி.. என்னை நம்ப வச்சு கழுத்தறுக்கும் துரோகி’ என்று நினைத்துக் கொண்டாள்.
கமலா, “அப்போ பிரசாத்தை……………”
“அம்மா! நீ கேட்கிறது உனக்கே அபத்தமா தெரியலையா?” என்றவள் இரண்டு நொடிகள் இடைவெளி விட்டு, “தப்பு செய்தவன் தண்டனை அனுபவிக்கனும்.. உடனே உன் அண்ணன் தப்பு செஞ்சிருக்க மாட்டார் னு ஆரம்பிக்காத.. நான் கேள்வி பட்டவரை அந்த வேந்தன் நேர்வழியில் செல்பவன் தான் ஸோ நிச்சயம் தப்பு உன் அண்ணன் கிட்ட தான் இருக்கணும்.. உன் அண்ணன் செய்த தப்புக்கு தண்டனை அனுபவிக்கட்டும்.. நான் ஏன் பலியாகனும்?”
“நீயே புகழ் தம்பி…………”
“இது என்ன புதுசா தம்பி தொம்பி னு உறவு கொண்டாடுற?”
“இப்போ இது ரொம்ப முக்கியம்!” என்று முறைத்தவர், “நீயே புகழ் தம்பி நல்லவர் னு தானே சொல்ற! அப்பறம் கல்யாணம் பண்றதுக்கென்ன?”
“என்ன மா பேசுற? அவன் பிஸ்னெஸ் நேர்வழியில் செய்தாலும் இப்போ ப்ளாக்-மெயில் பண்ணி என்னை கட்டாய கல்யாணம் செய்ய நினைக்கிறது நேர்வழி இல்லையே! சட்டு சட்டு னு மாப்பிள்ளையை மாத்தி கல்யாணம் செய்றதுக்கு இது என்ன பொம்மை கல்யாணமா? அதுவும் இப்படி மிரட்டி கல்யாணம் செய்ய நினைப்பவன் எனக்கு வேண்டாம்”
மகளை தீர்க்கமாக பார்த்த கமலா தீவிரக் குரலில், “அப்போ என்ன பண்றதா இருக்கிற?”
[the_ad id=”6605″]
“ஏன் கல்யாணம் ஒன்னு தான் வாழ்க்கையா? வாழ்க்கையில் சாதிக்க எவ்வளவோ இருக்குது”
‘அந்த தம்பி சரியா தான் சொல்லி இருக்குது.. இப்போ விட்டால் இவ கல்யாணமே வேண்டாம் னு தான் சொல்லுவா’ என்று மனதினுள் நினைத்தவர் மகளிடம், “இன்னும் அஞ்சு நிமிஷத்தில் உனக்கும் புகழ் தம்பிக்கும் கல்யாணம்.. இது என் மீதும் உன் அப்பா மீதும் ஆணை..” என்றார் தீர்க்கமான குரலில்.
“அம்மா” என்று மித்ராணி பெரும் அதிர்ச்சியுடன் அழைக்க, அவரோ அசைவதாக இல்லை.
அவள் வலியுடன், “என் வாழ்க்கையை விட உன் அண்ணன் தான் உனக்கு முக்கியமா போயிட்டாரா மா?”
ஒரு நொடி கண்களை மூடித் திறந்து, “ஆமா” என்றவர் மனதினுள், ‘எனக்கு நீ தானே எல்லாம்! உன்னை விட உன் வாழ்க்கையை விட சுயநலவாதியான என் அண்ணனை பெருசா நினைப்பேனா! ஆனா இப்போ நான் இப்படி சொல்லலைனா கல்யாணம் முடிந்ததும் என்னுடன் நீ வந்திடுவ.. இப்போ என் மேல் உள்ள கோபத்தில் அங்கே தானே போவ! ஒரு நாள் இந்த அம்மாவை புரிஞ்சுக்குவ’ என்று கூறிக் கொண்டார்.
தனது வலியையும் வேதனையையும் மனதினுள் புதைத்து நிமிர்ந்து நின்ற மித்ராணி, “இந்த நிமிஷயம் நீங்க யாருமே எனக்கு வேணாம் னு தூக்கி போட்டுட்டு போக என்னால் முடியும்” என்று கூறி ஒரு நொடி நிறுத்த கமலாவின் இதயம் வேகமாக துடித்தது. மித்ராணி தொடர்ந்தாள், “ஆனா.. நீ உன் மேலயும் அப்பா மேலயும் ஆணை னு சொன்ன ஒரே காரணத்துக்காக அந்த வேந்தனை கல்யாணம் செய்ய சம்மதிக்கிறேன்.. ஆனா இன்னையோட எனக்கும் உங்களுக்குமான உறவு முடிஞ்சு போச்சு”
மகளின் கூற்றில் கமலா அதிர்ந்தார். அவள் தன் மேல் கோபம் கொள்வாள் என்று எதிர்பார்த்தார் தான் ஆனால் இப்படி உறவே முடிந்தது என்று சொல்லுவாள் என்று அவர் எதிர்பார்க்கவில்லை.
கண்ணகளில் கண்ணீருடன் கமலா, “மித்ரா.. அம்மா உன் நல்லதுக்கு தான் டா………..”
கையை உயர்த்தி அவரது பேச்சை நிறுத்தியவள் அங்கிருந்த மாலையை கழுத்தில் போட்டு வெளியேறி மணமேடையில் அமர்ந்தாள்.
மித்ராணியை பார்த்தபடியே மணமகள் அறை பக்கம் இருந்த படிகளில் இறங்கி வந்த புகழ்வேந்தன் இப்பொழுது பட்டு வெட்டி சட்டையில் இருந்தான்.
மணமேடையை சுற்றிப் பார்த்த புகழ்வேந்தன் தன் அருகில் இருந்த சதீஷிடம், “அந்தாளு குடும்பத்தை அழைச்சிட்டு வா” என்றான்.
சதீஷ் நகரவும் மணமேடை அருகே நின்றிருந்த அன்னையிடம் மித்ராணி அருகே கலங்கிப் போய் நின்றிருந்த கமலாவை சுட்டிக் காட்டினான்.
கலைவாணி கமலாவின் கையை பற்றி, “கவலைப் படாதீங்க.. மித்ராவை என்னோட மக மாதிரி நான் பார்த்துக்கிறேன்” என்று ஆறுதலாக கூற, கமலா அவரது கையை இறுக்கமாக பற்றிக் கொண்டு வார்த்தைகள் இன்றி மௌனமாக கண்ணீர் சிந்தினார்.
கலைவாணியின் குரலில் திரும்பி பார்த்த மித்ராணி மனதினுள், ‘ஓ! இவங்க தான் ராஜமாதாவா!’ என்று கூறிக் கொண்டு அவரிடம், “என்னை நானே பார்த்துப்பேன்.. முடிஞ்சா உங்க மகனை என் கிட்ட இருந்து காப்பாத்துங்க” என்றாள்.
அவளது பேச்சை கேட்டு கலைவாணி சிறு அதிர்ச்சியுடன் ‘ஞே’ என்று விழிக்க, கமலா கலவரத்துடன் பார்க்க, புகழ்வேந்தன் சிரிப்புடன் அவள் அருகில் அமர்ந்தான்.
அப்பொழுது சதீஷ் கிருபாகரன் மற்றும் மல்லிகாவுடன் வர, புகழ்வேந்தன் பார்த்த பார்வையில் சதீஷ், “மனோஜ் வர முடியாது னு சொல்றான்.. பிரசாத் மண்டபத்திலேயே இல்லை” என்றான்.
ஒரு நொடி யோசித்த புகழ்வேந்தன், “சரி விடு” என்றான்.
பிறகு அதிர்ச்சியுடன் முழித்துக் கொண்டிருந்த அய்யரை பார்த்து, “தாலி எடுத்து கொடுத்து மந்திரத்தை சொல்லுங்க” என்றான்.
அய்யர் கிருபாகரனையும் புகழ்வேந்தனையும் மாற்றி மாற்றிப் பார்க்க, புகழ்வேந்தன், “அங்க என்ன பார்வை?” என்று கோபத்துடன் மிரட்டவும்,
அய்யர் ‘நமக்கெதுக்கு வம்பு’ என்ற நினைப்புடன், “கெட்டி மேளம்! கெட்டி மேளம்” என்று குரல் கொடுத்தபடி தாலியை புகழ்வேந்தன் கையில் கொடுத்தார்.
சதீஷின் ஏற்பாட்டில் வெளியே வான வேடிக்கையும் வெடியும் வரிசையாக வெடிக்கத் தொடங்கியது. அய்யர் ‘மாங்கல்யம் தந்துனானே………..’ என்று மந்திரத்தை கூற ஆரம்பித்தார்.
“மித்ராணி” என்று புகழ்வேந்தன் அழைக்க, அவள் கடுப்பு கோபம் எரிச்சல் வெறுப்பு கலந்த முறைப்புடன் அவனை பார்த்தாள். மனதினுள், ‘அம்(am) சாரி ராணி’ என்று கூறிக் கொண்டவன் வெளியே மென்னகையுடன், “மை டியர் அல்லிராணி வெல்கம் டு அவர் லைப்” என்று கண்சிம்மிட்டியபடி அவள் கழுத்தில் தாலியை அணிவித்து மூன்று முடிச்சிட்டான். அவள் அதிகரித்த கோபத்துடன் முகத்தை திருப்பிக் கொண்டாள்.
அய்யர் குங்குமத்தை அவள் நெற்றியில் வைக்க சொல்லவும், கையை அவள் கழுத்தை சுற்றிக் கொண்டு சென்றவன் பிறர் அறியாமல் அவளது கன்னத்தில் அழுத்தம் கொடுத்து தன்னை நோக்கி அவளை திரும்ப செய்தவன் அவளது கோப விழிகளை பார்த்தபடி நெற்றியிலும் உச்சி வகுட்டிலும் குங்குமத்தை வைத்தான். அந்த நொடி அவனுள் ஏதோ ஒரு சொல்லத் தெரியாத உணர்வு ஆட்கொள்ள அவனையும் அறியாமல் காதலுடன் அவளை பார்த்தான் ஆனால் அதை அவள் உணரவில்லை. அவன் வகுட்டில் வைத்த குங்குமம் அவளது மூக்கின் மீது சிதற அவன் அவளை சற்று நெருங்கி மென்மையாக ஊதி சிதறிய குங்குமத்தை அகற்றினான். இந்த அனுபவம் அவனுக்கு புதுமையாக இருந்ததோடு ஆச்சரியத்தையும் கொடுத்தது. பெண்களிடம் மனதால் கூட தள்ளி நிற்கும் தான் எப்படி இவளது அண்மையை ரசிக்கிறோம்! இப்ப தானே தாலியே கட்டினேன் அதற்குள் ‘இவள் என்னவள்’ என்ற உணர்வு எப்படி என்னுள் வருது? என்று தன்னை நினைத்தே ஆச்சரியம் கொண்டான். அவளோ அவனது நெருகத்தை பல்லை கடித்துக் கொண்டு பொறுத்திருந்தாள்.
[the_ad id=”6605″]
“கன்க்ராட்ஸ் பாஸ்” என்ற சதீஷின் குரலில் தனது சுய ஆராய்ச்சியில் இருந்து வெளியே வந்தான்.
அவளைக் கவனித்தவன் இப்பொழுது, “என்ன! இப்போ உனக்கு பல் வலியா?” என்றான்.
அவள் முறைக்க, அதை பொருட்படுத்தாமல் அய்யரிடம், “மாலையை மாத்த சொல்ல மாட்டீங்களா?” என்று கூற,
மித்ராணி, “டேய் இம்சை அரசா! என் பொறுமையை சோதிக்காத.. அப்பறம் மலர் மாலையை மலர்வளையமா மாத்திடுவேன்” என்று மிரட்டினாள்.
‘அபப்டியா!’ என்பது போல் பார்த்தவன் உல்லாசமாக சிரித்தபடி, “இந்த வேந்தனுக்கு ஏத்த ராணி நீ தான்.. அதே மாதிரி இந்த அல்லிராணி சண்டிராணிக்கு ஏத்த வேந்தன் நான் தான்” என்று கூறி கண்சிமிட்டினான்.
அவள் கோபத்துடன், “இன்னொரு முறை கண் சிமிட்டின! கண்ணை நோண்டிருவேன்” என்று மிரட்ட,
அவனோ ரசனையுடன் கூடிய உதட்டோர புன்னகையுடன், “நா(ன்) சதீஷ் கிட்ட சொன்னது சரி தான்.. நம்ம லைப் ஹாட் அண்ட் ஸ்பைசியா இன்ட்ரெஸ்ட்டிங்கா இருக்கும்” என்றான்.
கோபத்தையும் மீறி அவள் முகத்தில் சிறு யோசனை தெரியவும் அவன், “உன்னோட பிரெண்ட் நிவேதா ஹஸ்பண்ட் சதீஷ் என்னோட பி.ஏ.. நம்பகமான ரைட் ஹன்ட் னு கூட சொல்லலாம்” என்றான்.
அப்பொழுது தான் சதீஷை கவனித்தவள் அவனை கடுமையாக முறைக்கவும் சதீஷ் மனதினுள், ‘ஆத்தி! பாஸ் என்ன சொன்னார் னு தெரியலையே! சுனாமி நம்ம பக்கம் திரும்புதே!’ என்று அலறியவன், “பாஸ் நான் வந்தவங்களை கவனிக்கிறேன்” என்றுவிட்டு கீழே ஓடினான்.
அவன் கீழே வரவும் அவன் முன் வந்து நின்ற நிவேதா அவனை கடுமையாக முறைக்க, அவன் மனதினுள், ‘சுனாமி கிட்ட இருந்து தப்பிச்சு பத்ரகாளி கிட்ட மாட்டிக்கிட்டேனே! தாலி கட்டினவரை விட்டுபுட்டு நம்மள ரவுண்டு கட்டுதுங்களே!’ என்று மீண்டும் அலறியபடி வெளியே மனைவியை பார்த்து சிரித்தான்.
நிவேதா, “உனக்கு முன்னாடியே தெரிந்தும் எதுவும் சொல்லலை.. மித்ரா என் பிரெண்ட் னு தெரிந்தும் அமைதியா அவளுக்கு எதிரா எல்லா வேலையும் செஞ்சிருக்க!”
அவன் மீண்டும் மனதினுள், ‘இதை நாம யோசிக்கலையே! இதுக்கு தான் சுனாமி நம்மை தாக்க வந்துச்சா!’ என்று நினைத்தவன் நிவேதாவை பார்த்து, “ஹீ ஹீ” என்று பல்லைக் காட்டி சிரித்தான்.
“இளிக்காத டா.. எனக்கு பத்திகிட்டு வருது.. உன்னை என்ன செய்யலாம்” என்றவள் அவனை அடிக்க பொருளை தேட,
‘நான் வேணா பையர் சர்விஸ்க்கு கூப்பிடவா?’ என்று மனதினுள் நினைத்தவன் வெளியே, “நிவிமா நாம வீட்டுக்கு போய் பேசிக்கலாம்.. பப்ளிக்கில் மாமா இமேஜ் டேமேஜ் பண்ணிடாத டா” என்று கொஞ்சியபடி கெஞ்சினான்.
அப்பொழுது மணமேடையில் எழுந்து நின்ற புகழ்வேந்தன் அனைவரையும் புன்னகையுடன் பார்த்து, “உங்க எல்லோருக்கும் குழப்பமா இருக்கும்.. என்னடா திடீர்னு மாப்பிள்ளை மாறிடுச்சே னு.. ஆனா உண்மையில் திடீர்னு எதுவும் மாறலை.. எல்லாமே முன்னாடியே பிளான் பண்ணி பண்ணது தான்.. நானும் மித்ராணியும் ஒருத்தரை ஒருத்தர் விரும்புறோம்……………….”
மித்ராணி வேகமாக எழ, அவளுக்கு மட்டும் கேட்கும் குரலில் புகழ்வேந்தன், “இப்போ நீ மறுத்து பேசினா உன்னோட கரெக்டர் தான் ஸ்பாயில் ஆகும்.. உன்னோட மாமனும் மாமன் மகனும் தங்களை காப்பாத்த எது வேணாலும் செய்வாங்க.. ஆனா எனக்கு உன்னோட பெயர் ரொம்ப முக்கியம்.. யாரும் உன்னை தப்பா பேச என்ன! நினைக்கக் கூட விட மாட்டேன்” என்று கூற,
“பார் டா! அவ்ளோ நல்லவனா நீ” என்று நக்கலாக கூறியவள், “என் பெயர் கெடக் கூடாதா இல்லை உன் பெயர் கெடக் கூடா?” என்றாள்.
அவன் தோள் குலுக்களை மட்டும் அவளுக்கு பதிலாக தந்து மீண்டும் வந்திருந்தவர்களை பார்த்து பேசினான்.
“எங்க காதலை மித்ராணி வீட்டில் ஏத்துக்கலை.. ஏத்துக்கலை னு சொல்றதை விட மிஸ்டர் கிருபாகரன் ஏத்துக்கவிடலை னு தான் சொல்லணும்.. மித்ராணி சொத்துக்கு ஆசைப்பட்டு மிஸ்டர் கிருபாகரன் அவசர அவசரமா அவரோட பையனுக்கும் மித்ராணிக்கும் கல்யாணம் ஏற்பாடு பண்ணிட்டார்.. சொத்தே வேண்டாம் எனக்கு என்னோட ராணி மட்டும் போதும் னு நான் சொன்னதை அவர் கேட்கவே இல்லை.. அதான் இப்படி கல்யாணம் செய்துக்க வேண்டியதா போச்சு.. எல்லோரும் எங்களை மனதார ஆசிர்வாதம் செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன்” என்று கைகூப்பி வணங்கினான்.
நிவேதா சதீஷை கடுமையாக முறைக்க, அவன், “நிவி இது நியாயமே இல்லை.. பாஸ்……………………..”
“எது டா நியாயம் இல்லை? நீயும் சேர்ந்து தானே பண்ண?”
“நிவி.. பாஸ் இப்படி செஞ்சதுக்கு ஏதாவது காரணம் இருக்கும்”
“பாஸ்ஸாம் பாஸ்.. எனக்கு வர கோபத்துக்கு உன் பாஸ் மண்டையை உடைக்க தோணுது”
“அதுக்கு தான் உன் பிரெண்ட் இருக்காளே.. ச.. இருக்காங்களே!”
அவனை முறைத்தவள், “ஏற்கனவே என் கூட பேச மாட்டிக்கிறா.. இதில் நீ பண்ணி வச்ச வேலைக்கு……….”
“அப்போ இதான் உன் கவலையா? உன் பிரெண்ட்டை பாஸ் கல்யாணம் பண்ணது இல்லையா?”
அவள் பல்லை கடித்தபடி, “டேய் என்னை கொலைகாரி ஆக்காம ஓடி போய்டு”
“நீ சொல்லி கேட்காம இருப்பேனா.. இதோ ஓடிட்டேன்” என்றவன் நிஜமாகவே ஓடிவிட்டான்.
புகழ்வேந்தன் பேசியதும் அவனை அறிந்த தொழிலதிபர்கள் வந்து வாழ்த்து கூறிச் செல்ல, மெல்ல உறவினர்களும் ஒவ்வருவராக இவர்களை வாழ்த்திவிட்டு உணவறைக்கு சென்றனர். செல்லும் முன் பலர் கிருபாகரனிடம் பேசிவிட்டே சென்றனர்.
[the_ad id=”6605″]
‘என்ன கிருபாகரா இப்படி பண்ணிட்ட?’,
‘இருந்தாலும் இப்படி பண்ணியிருக்கக் கூடாது’,
‘பாரு இப்போ மனோவை வேற கஷ்டப்படுத்திட்ட’,
‘உன் சுயநலத்துக்காக இப்படி செய்யலாமா?’ என்று சிலர் கிருபாகரனிடம் நேரிடையாக கூற,
சிலர் ‘அவன் எப்பவுமே இப்படி தான்’,
‘இவனுக்கு இது தேவை தான்’,
‘இது தெரிந்தது தானே! அவருக்கு எப்போதுமே பணம் தானே முக்கியம்’,
‘அவன் எப்பவுமே சுயநலவாதி தான்.. ஏன்! அவனோட கல்யாணமே எப்படி நடந்தது?’
‘வினை விதைத்தவன் வினை அறுப்பான் னு சும்மாவா சொன்னாங்க! ஆனா என்ன! இவன் பண்ணதுக்கு இவனோட மகன் அனுபவிக்கிறான்’
‘பெத்தவங்க செய்த பாவம் பிள்ளைகளைத் தானே சேரும்’ என்று கிருபாகரன் காதுப்பட அவருக்கு பின்னால் பேசினார்கள். இன்னும் சிலர் கிருபாகரன் கல்யாணத்தை விமர்சனம் செய்ததோடு மனோஜிற்கு அடுத்து எப்படி கல்யாணம் நடக்க போகிறதோ என்றும் பேசினார்கள்.
கிருபாகரன் வெட்டவா குத்தவா என்பது போல் கோபத்துடன் புகழ்வேந்தனை பார்க்க, அவனோ மென்னகையுடன் அவரை நக்கலாக பார்த்தான்.
நிவேதாவை மித்ராணி எதேர்ச்சையாக பார்க்கவும் நிவேதா வேகமாக மேடை ஏறி மித்ராணி அருகே வந்தாள்.
அப்பொழுது கிருபாகரன் கோபத்துடன் கிளம்ப, அவர் முன் போய் நின்ற புகழ்வேந்தன், “என்ன அதுக்குள்ளே கிளம்பிட்டீங்க! சாப்பிட்டுட்டு போங்க” என்று உபசரிக்க,
கிருபாகரனுக்கு உடம்பெல்லாம் மிளகாய் அரைத்து தேய்த்தது போல் எரிந்தது.
நிவேதா மித்ராணியிடம், “மித்து எனக்கு இது எதுவுமே தெரியாது டி” என்று தவிப்புடன் கூற,
மித்ராணி மென்னகையுடன், “உன்னை எனக்கு தெரியாதா! நான் பார்த்துக்கிறேன்.. இதுக்காக சதீஷ் கிட்ட சண்டை போடாத.. ப்ரீயா விடு.. அவன் அம்பு மாதிரி தான்.. எய்தவனை நான் பார்த்துக்கிறேன்”
நிவேதா கலங்கிய விழிகளுடன், “தேங்க்ஸ் டி” என்று கூற,
“எதுக்கு? சதீஷை ஒன்னும் சொல்லாத னு சொன்னதுக்கா?”
“ச்.. போடி”
“அதுக்காக அவனை சும்மா விடுவேன் னு நினைக்காத” என்று மென்னகையுடன் மிரட்ட,
நிவேதாவும் மென்னகையுடன், “அது அவன் பாடு”
“இந்த குட்டி ஏஞ்சல் தான் உன் மகளா?” என்றபடி நிவேதா கையில் இருந்த குழந்தையை கொஞ்ச ஆரம்பித்து தோழியை சமாதானம் செய்தாள்.
தோழிகள் பேசிக் கொண்டிருந்த அதே நேரத்தில் சற்று தள்ளி இருந்த கிருபாகரன் மற்றும் மல்லிகாவுடன் புகழ்வேந்தன் பேசிக் கொண்டிருந்தான்.
கிருபாகரன் கோபத்துடன், “இதுக்கெல்லாம் நீ அனுபவிப்ப டா” என்று கூற,
வாய்விட்டு சிரித்த புகழ்வேந்தன், “உனக்கு இன்னும் இந்த கல்யாணம் எதுக்காக னு புரியலை இல்லையா?” என்று கேட்டு நிறுத்தியவன் கிருபாகரன் அருகே நின்றுக் கொண்டிருந்த மல்லிகாவை பார்த்து, “என்ன சித்தி உங்களுக்கும் என்னை யாரு னு தெரியலையா?” என்றான்.
மல்லிகா அவனை குழம்பிப் போய் பார்க்க,
புகழ்வேந்தன், “என்னோட அம்மாவை பார்த்தும் என்னை யாரு னு கண்டு பிடிக்க முடியலையா சித்தி?”
கிருபாகரன் எரிச்சலுடன், “யாருக்கு யார் சித்தி? மூடிட்டு போ டா”
புகழ்வேந்தன், “மித்ராணிக்கு அத்தை னா எனக்கு சித்தி தானே!” என்றவன் உதட்டோர புன்னகையுடன், “ஆனா நான் சித்தி னு சொன்னதுக்கு முக்கியமான காரணமே வேறு” என்றான்.
கலைவாணியை இப்பொழுது தான் சரியாக பார்த்த மல்லிகாவிற்கு சிறு சந்தேகம் எழ, ‘அப்படி இருந்துவிடக் கூடாதே!’ என்று உள்ளம் படபடக்க புகழ்வேந்தனை பார்த்தார்.
புகழ்வேந்தன் நெஞ்சை நிமிர்த்தி, “அம் புகழ்வேந்தன்.. சன் ஆஃப் ராமன்.. இன்னும் தெளிவா சொல்லணும் னா.. மை டாட் ராமன் இஸ் ப்ரதர் ஆஃப் லக்ஷ்மணன்” என்றதும் மல்லிகா நிற்க பலமின்றி தள்ளாடி கீழே விழப் போக மனோஜ் வந்து அவரை தாங்கினான்.
[the_ad id=”6605″]
அப்பொழுது தான் வீட்டிற்கு கிளம்புவதற்காக அன்னையை அழைக்க மணமகன் அறையை விட்டு வந்த மனோஜ் அன்னையின் முகத்தை பார்த்து அங்கே விரைந்தான். புகழ்வேந்தனின் அறிமுகத்தை கேட்டபடி வந்தவன் ‘யார் இவன்? அம்மா ஏன் ஷாக் ஆகுறாங்க? இவனுக்கு நம்முடன் என்ன பகை?’ என்று குழம்பிப் போய் அன்னையை தாங்கியபடி நின்றான்.
கிருபாகரன் அதிர்ச்சியையும் மீறி வெறியுடன் புகழ்வேந்தனை பார்த்தார். அவரது மனம் இப்பொழுதும் ‘போயும் போயும் இவன் கிட்ட நான் தோத்துப் போறதா?’ என்று தான் நினைத்ததே தவிர தன்னால் தான் தன் மகனான மனோஜிற்கு இன்று இந்த நிலை என்று சிறிதும் யோசிக்கவில்லை.
புகழ்வேந்தன் கண்ணில் ரௌத்திரத்துடன் கிருபாகரனை பார்த்து, “இது வெறும் ஆரம்பம் தான்.. என் குடும்பத்தை சிதைத்த உன்னை சிதைக்காம விட மாட்டேன்” என்றான். குரலை உயர்த்தாமலும் கர்ஜிக்க முடியும் என்பதை நிரூபித்தான் புகழ்வேந்தன். அவனது கண்ணிலும் குரலிலும் தெரிந்த ஜுவாலையில் கிருபாகரனே ஒரு நொடி ஆடிப் போனார் எனும் போது மனோஜ் மற்றும் மல்லிகாவின் நிலையை சொல்ல வேண்டுமா!
இதயம் இணைய காத்திருப்போம்♥ ♥ ♥ ♥ ♥ ♥