விஷாலி தேவியின் கழுத்தை நெறிக்கத் தொடங்கியதும் வண்டிக்குள் குழப்பம் வெடித்தது.
தேவி அவளைத் தள்ளிவிட முயன்றாள். விக்ரமும் தேவியின் கழுத்தில் இருந்து விஷாலியின் கைகளைப் பிரிக்க முயன்றான்.
“ஹே… என்ன பண்ற!”
“ஏய்… விஷி…” அருண்.
“மேடம்… மேடம்…”
பின்னால் அமர்ந்திருந்த தேவராசுவும் சத்தீசும் விஷாலியின் தோள்களைப் பிடித்து அழுத்தி அவளை அமைதியாக்க முயன்றனர்.
அருண் சட்டென்று ஏற்பட்ட சலசலப்பில் இலேசாய் வண்டியின் பிடியை விட்டுப் பின் சமாளித்துக்கொண்டு வண்டியைச் சாலையின் ஓரத்தில் நிறுத்தினான்.
அவன் சட்டென்று வண்டியை நிறுத்தியதில் ஏற்பட்ட குலுக்கலில் விஷாலி தேவியின் கழுத்தில் இருந்த பிடியை விட்டாள், சத்தீசும் தேவராசும் அவளை ஒரே அமுக்காக இருக்கையோடு அமுக்கினர்.
”உனக்கு ஒன்னுமில்லல?”
விக்ரம் வாஞ்சையுடன் தேவியின் முதுகில் தடவிக்கொடுத்தான்.
தேவி தன் தொண்டையைப் பிடித்துக்கொண்டிருந்தாள். பேசச் சிரமப்பட்டாள்.
“எ- ஹுக்கும்… எனக்கு ஒன்னுமில்ல, விக்ரம்… ஐம் ஆல் ரைட்!”
கழுத்தைத் தடவிக்கொண்டபடியே திக்கித் திணறிச் சொன்னாள்.
இதற்குள் அருண் வண்டியை விட்டு இறங்கி விஷாலி இருந்த கதவு பக்கமாக வந்து கதவைத் திறந்தான்,
“ஏய் விஷி… என்ன ஆச்சு உனக்கு? ஏன் இப்படிப் பண்ண?”
விஷாலி ஆய்வாளர்கள் இருவரின் பிடியில் திமிறிக்கொண்டிருந்தாள்.
“என்னை விடுங்க… நான் என்ன பண்ணேன்? ஏன் என்னை இப்படி எல்லோருமா படுத்துறீங்க?”
அவள் கண்களில் இலேசாகக் கண்ணீர் திரண்டது.
அருண் கைகாட்ட சத்தீசும் தேவராசும் அவளை விட்டனர். அவர்களும் வண்டியின் பின்பக்கமாக இறங்கி அருணின் அருகில் வந்து நின்று கொண்டனர்.
அனைவரின் பார்வையும் விஷாலி மீதே இருந்தன.
“என்ன ஆச்சு தேவ்ஸ்? ஏன் ஒரு மாதிரி இருக்க?”
என்று அப்பாவியாக தேவியைப் பார்த்துக் கேட்டாள் விஷாலி.
தேவியின் முகத்தில் குழப்பமும் வியப்பும் கலந்து பரவின. சற்று நேரத்துக்கு முன் தன்னை அசுரபலத்தோடு நெறித்தவளா இவள்?
“ஒ- ஒன்னுமில்ல விஷி…”
தேவி விக்ரமைப் பார்த்தாள்.
அவன் ஏதோ ஆழ்ந்த சிந்தனையில் இருந்தான். தேவி தன்னைப் பார்ப்பதை உணர்ந்ததும் நிமிர்ந்து அவளைப் பார்த்தான், பின் விஷாலியைச் சற்று நேரம் உற்றுப் பார்த்தான்.
“அ- அது… தேவிக்குப் புரை ஏறிடிச்சு… வேறொன்னுமில்ல… சரி வாங்க, வீட்டுக்குப் போவோம்…”
சொல்லிவிட்டு விக்ரம் மீண்டும் வண்டிக்குள் ஏறி அமர்ந்துகொள்ள, மற்றவர்களும் ஒரு சில நொடிகள் தயங்கிவிட்டுப் பின் வண்டிக்குள் ஏறிக்கொண்டனர்.
ஓட்டுநர் இருக்கையில் ஏறிய அருண் விக்ரமைப் பார்த்து ‘என்ன டா?’ என்பதைப் போலப் புருவத்தை உயர்த்த, ‘இப்போது எதுவும் பேச வேண்டாம்’ என்பதைப் போல விக்ரம் மெல்லத் தலையை அசைத்தான்.
[the_ad id=”6605″]
அருண் தோள்களைக் குலுக்கிவிட்டு வண்டியைக் கிளப்பினான்.
“ஒரு புரை ஏறினதுக்கா இவ்ளோ அமர்க்களம்? ஆமா, இவங்க ரெண்டு பேரும் ஏன் என்னைப் பிடிச்சுக்கிட்டு இருந்தாங்க?”
விஷாலி தேவியையும் சத்தீசையும் மாறி மாறிப் பார்த்தபடி கேட்டாள்.
“அதெல்லாம் ஒன்னுமில்ல… அருண் டக்குனு பிரேக் போட்டதுல நீ விழுந்துடக்கூடாதுனு பிடிச்சாங்க…”
தேவி என்ன சொல்வது என்று தெரியாமல் ஏதோ சொல்லிவைத்தாள். அவளுக்கு விஷாலி மீது ஒரு எச்சரிக்கை உணர்வு ஏற்பட்டிருந்தது.
“பொறந்ததுலேர்ந்து கார்ல போறேன், பிரேக் போட்டா கீழ விழுந்துடுவேனா? என்ன மா இது சின்னப் புள்ளத்தனமா இருக்கு!”
விஷாலி பெரிதாக நகைத்தாள்.
மற்ற யாரும் அவளோடு சேர்ந்து சிரிக்காததைக் கண்டு சட்டெனத் தன் சிரிப்பை நிறுத்திக்கொண்டவள் அவர்களை ஏதோ சிந்தனையுடன் பார்த்தாள்.
“ஹே… ஏன்பா எல்லாரும் இப்படிப் பேய் அறைஞ்சா மாதிரி இருக்கீங்க? வில்லன்கிட்ட மாட்டித் தப்பிச்சு வந்த நானே ஜாலியா இருக்கேன்… நீங்களாம்… ச்ச, இதுக்குத்தான் செழியன் இருக்கனுங்கறது… அவர் இருந்திருந்தா ஜாலியா இருந்திருக்கும்… ஆமா, அவர் எங்க போனாரு? நம்ம கூடத்தான வந்துட்டு இருந்தாரு?”
விஷாலி காருக்குள் சுற்றும் முற்றும் பார்த்தபடி கேட்டாள்.
உண்மைதான், பட்டி கூட இருந்திருக்கலாந்தான் என்று விக்ரமும் எண்ணினான்.
“ஆங்… உனக்குக் குருவிமிட்டாயும் குச்சிரொட்டியும் வாங்கிட்டு வரப் போயிருக்காரு!”
என்று அருண் கிண்டலாகச் சொன்னான். உம்மென்று வண்டியோட்டுவதில் அவனுக்கும் விருப்பமில்லை.
“ஒழுங்கா ரோட்டைப் பார்த்து வண்டி ஓட்டுடா சின்னப் பையா… மறுபடி சடன் பிரேக் போட்டு தேவிக்குப் புரை ஏறவெச்சுடாத!”
என்று விஷாலி அருணுக்குப் பதிலளித்தபடியே வாஞ்சையுடன் தேவியின் தோளில் கைபோட எத்தனித்தாள்.
விஷாலி கையைத் தூக்குவதைக் கவனித்ததும் தேவி அனிச்சையாக உடம்பை அவள் புறமாகத் திருப்பிக்கொண்டு கைகளை தற்காப்பு நிலையில் வைத்தாள்.
அதைப் பார்த்ததும் தன் கையை அப்படியே நிறுத்திக்கொண்டாள் விஷாலி.
“தேவ்ஸ்… என்ன மா, காருக்குள்ள கராத்தே போடப் போறியா? என்னைப் பார்த்து ஏம்மா பயப்படுற? மீ பாவம், சுமால் கேர்ள்!”
என்று அப்பாவியாகக் கூறினாள்.
தேவி தன் கைகளை இறக்கியபடியே அசடுவழிந்து சிரித்தாள்.
“நெவர்மைண்ட்! நான் வேற எதோ யோசனைல இருந்தேன்… நீ டக்குனு கையத் தூக்கினதும் தானா கார்டு (guard) எடுத்துட்டேன், ரீஃப்லெக்ஸ்!”
என்றுபடி விஷாலியின் தொடையில் கைவைத்து இலேசாய் அழுத்தினாள்.
சத்தீசு ‘ஹா ஹா’ என்று பெரிதாக நகைத்தார்.
தேவியும் விஷாலியும் அவரைத் திரும்பிப் பார்த்துவிட்டுத் தம் தோள்களைக் குலுக்கிக் கொண்டனர்.
அடுத்த ஒரு மணி நேரத்தில் அவர்களின் மகிழ்ந்து விக்ரம் விஷாலியின் அடையாறு வீட்டிற்குள் நுழைந்தது.
தேவராசும் உள்ளே வராமல் வாசலியேயே விடைபெற்றுக்கொண்டார். அவர் தன் வீட்டிற்குப் போய் சற்று ஓய்வெடுத்து வரச் சென்றார். அவர் வந்த பின் சத்தீசு சென்று வருவார் என்று அவர்களுக்குள்ளேயே ஏற்பாடு செய்து கொண்டார்கள். வீட்டில் வேறு காவலர்களும் தனியார் காவலர்களும் இருக்கிறார்களே. ஆனால் அவர்களுக்கு இவர்கள் சந்திக்கும் எதிரியைப் பற்றிய முழு விவரம் தெரியாது!
வீட்டிற்குள் வந்த சில நிமிடங்களில் அனைவருக்கும் குடிக்க வகைவகையான பானங்களைக் கொண்டு வந்து வைத்தனர்.
அதற்குள் விக்ரம் சத்தீசுக்கு ஒரு அறை ஒதுக்க ஏற்பாடு செய்து அவரை ஓய்வெடுத்துக்கொள்ளச் சொன்னான்.
“அருண், நீயும் ரெப்ரஷ் பண்ணிட்டு தஞ்சாவூர் போறதுக்கான ஏற்பாட்டைக் கவனி, நாம நாளைக்கு காலைலயே கிளம்புவோம்…”
”டிரெயினா? பிளைட்-”
“நாமனா? எல்லோருமே போகனுமா, விக்ரம்?”
அருண் முடிப்பதற்குள் தேவி இடைவெட்டினாள்.
விக்ரம் அவளுக்குப் பதில் சொல்லாமல் அருணைப் பார்த்தான்,
“பிளைட்டே புக் பண்ணு, சார்ட்டர்டு! காலைல ஒரு ஒம்போது மணிக்குக் கிளம்புறா மாதிரி!”
அருண் சரியென்று தலையாட்டிவிட்டு தேவியைப் பார்த்தான்.
“எல்லோருமே போறதுதான் சரின்னு தோனுது, தேவி… யாரை விட்டுட்டுப் போகனுங்குற?”
கேட்கும்போதே விக்ரமிற்கு விடை தெரிந்திருந்தது.
தேவி ஏதும் பதில் சொல்லாமல் மெல்ல விஷாலியின் பக்கமாகக் கண்காட்டினாள்.
விஷாலி அமைதியாக மெத்தை இருக்கையில் சுருண்டு அமர்ந்து தன் பழச்சாற்றை அருந்திக்கொண்டிருந்தாள்.
”ஹேய்… மறுபடி என்னைக் கழட்டிவிட்டுப் போக பிளான் பண்றீங்களா? நடக்கவே நடக்காது மக்களே… அந்த வேதாளப் பட்டனைப் பார்க்க நாந்தான் ரொம்ப ஆர்வமா இருக்கேன், என்னை விட்டுட்டுப் போனீங்கனா சொத்தைப் பிரிக்கச் சொல்லி வக்கீல் நோட்டீஸ் அனுப்புவேன்… ஜாக்ரதை விக்ரம்!”
தேவியின் சமிஞ்சையைப் புரிந்துகொண்டவளாக விஷாலி படபடவெனப் பொழிந்தாள். விக்ரமையும் தேவியையும் நோக்கித் தன் சுட்டுவிரலை ஒருமுறை ஆட்டிவிட்டுப் பின் மீண்டும் கையிலிருந்த பழச்சாற்றில் இலயித்தாள்.
விக்ரம் தேவியை நோக்கி ‘விட்டுப்பிடிப்போம்’ என்பதைப் போல கண்களை ஒரு மூடித் தலையை மெல்ல அசைத்துவிட்டுத் தன் கையிலிருந்த குளிர்ந்த காப்பியை ஒரு மடக்கு விழுங்கினான்.
”சரி, அப்ப நான் போய் ஃபிளைட் ஏற்பாடு பண்றேன்…”
[the_ad id=”6605″]
அருண் தன் தோள்களை ஒரு முறை குலுக்கிவிட்டு அங்கிருந்து சென்றான்.
விஷாலியும் சோர்வாக இருக்கிறது என்றபடி தன் அறையை நோக்கிச் சென்றாள்.
விக்ரமும் தேவியும் மட்டும் வரவேற்பறையில் இருந்தனர்.
தேவி தனக்காக வைக்கப்பட்டிருந்த சூடான பாலை எடுத்து ஒரு மிடறு விழுங்கியபடியே விக்ரமின் அருகில் சென்று அமர்ந்தாள்.
”நீ நினைக்குறது எனக்குப் புரியுது, தேவி…”
விக்ரம் அவள் தோளில் கைபோட்டுக்கொண்டபடிச் சொன்னான்.
”அதில்ல விக்ரம்… சம்திங் டீப்… அவ என் கழுத்த நெறிச்சபோது அவ கைல அப்படி ஒரு பலம் இருந்துச்சு… சாதாரணமா விஷாலி ரொம்ப சாஃப்ட், நான் தெரியாம அழுத்தித் தொட்டாக் கூட வலிக்குதுனுவா, ஆனா, இன்னிக்கு என்னாலயே அவ பிடிய விலக்க முடியல… இதுல-”
“கண்டிப்பா ஏதோ சூழ்ச்சி இருக்கு… வராகமிகிரர் வந்தார்னா என்னனு சொல்லிடுவாரு… ஆனா, அவர்தான் இப்போதைக்கு வரமாட்டேன்னு சொல்லிட்டுப் போயிருக்காரே! போதாக்கொறைக்குப் பட்டிய வேறக் கூட்டிட்டுப் போயிட்டாரு!”
விக்ரம் அவளை இடைவெட்டான். ஒரு மெல்லிய பெருமூச்சுடன் சொல்லிமுடித்தான்.
“பட்டி? யு மீன்… செழியன்?”
“ஹா ஹா… ஆமா! நீங்களாம் அவனை இன்னும் செழியன்னே கூப்டுட்டு இருக்கீங்களா?”
விக்ரம் சிரித்தபடியே கேட்டான்.
“ஆமா… எனக்கென்னவோ ‘பட்டி’னா அந்தப் படுபாவி மூச்சிதான் முதல்ல ஞாபகத்துக்கு வரது… அவன் மட்டும் என் கைல சிக்கினான்…”
தேவி தன் இடது உள்ளங்கையை வலது முஷ்டியால் குத்தியபடியே சொன்னாள்.
“ஹே ஹே… அவன் இங்க இருந்த அந்த அப்பாவி பட்டி இல்லமா… அவந்தான் நம்மோடு ஆர்ச் நெமிஸிஸ் இப்ப… அவ்ளோ ஈஸியா அவனைக் காலி பண்ணிடுவியா நீ?”
விக்ரம் நகைத்தபடியே கேட்க தேவி அவனை ஒய்யாரமாகப் பார்த்தபடி முறைத்தாள்.
“நாக் நாக்! உள்ள வரலாமா?”
அருண் சற்றுத் தொலைவில் இருந்து குரலில் கிண்டல் தொனிக்கக் கேட்டபடியே அருகில் வந்தான்.
“வாங்க மிஸ்டர் கரடி, வேணாம்னா போயிடப் போறியா என்ன?”
தேவி போலியான அலுப்புடன் சொன்னபடி எழுந்துகொண்டாள்.
”எவ்ளோ பெரிய ரணகளம் வந்தாலும் உங்க குதுகலத்துக்குக் கொறைச்சலே இல்ல…”
அருண் விடாமல் கிண்டலாகச் சொல்லியபடி மெத்தை இருக்கையில் அமர்ந்தான்.
”டேய்… ஓவரா பேசத! நீ மட்டும் ரொம்ப ஒழுங்கா? விஷாலி ரூமுக்குப் போயிட்டுத்தானே இங்க வந்த? இல்லனு சொல்லு பார்ப்போம்?”
தேவி கேட்க அருண் தோளைக் குலுக்கினான்.
“இல்ல! எனக்குக் கடமைதான் முக்கியம்! இன் ஃபாக்ட், விஷாலி இப்ப தேவை…” என்றபடி விக்ரமின் பக்கம் திரும்பினான்,
“விக்ரம் விஷாலியோட ஆதார்ல ஏதோ எரர்னு காட்டுது, அவளை அவ ஆதார் கார்டை எடுத்துக்கிட்டு இங்க உடனே வரச்சொல்லேன்…”
“என்னாச்சு?”
[the_ad id=”6605″]
என்றபடி விக்ரம் அருகில் இருந்த தொலைபேசியை எடுத்து விஷாலியின் அறைக்கு அழைத்தான்.
நெடு நேரமாகியும் அவள் பதில் தரவில்லை.
“அவ எடுக்கல, குளிச்சிக்கிட்டு இருப்பா, இல்ல தூங்கிருப்பா… என்ன தப்பு காட்டுது?”
”பெரிசா ஒன்னுமில்ல, அட்ரஸ் சரியில்லனு வருது… சரி, நானே போய்ப் பார்த்துட்டு வரேன்…”
என்றபடி அருண் எழுந்தான்.
“அடேங்கப்பா, இதுக்கு நீ முன்னாலயே அவ ரூமுக்குப் போயிருக்கலாம் மிஸ்டர் கடமை! எதுக்கு இவ்ளோ சீனு?”
தேவி கிண்டலாகக் கேட்க, அருண் மறுபடி இருக்கையில் அமர்ந்துகொண்டான்.
“சரிம்மா, நான் போகல நீயே போய் அவளைக் கூட்டிட்டு வா… இல்ல யாராச்சு செர்வண்ட்ஸை அனுப்பி வை…”
என்றான் போலியான கடுப்புடன்.
”நோ நோ… உன் வயிற்றெரிச்சல் எனக்கு வேண்டாம்பா… நீயே போயிட்டு வா… நானும் போய் ரெஃப்ரஷ் பண்ணிட்டுக் கொஞ்ச நேரம் தூங்கப் போறேன்…”
தேவி அங்கிருந்து செல்லத் தொடங்கினாள்.
இவர்கள் பேசிக்கொண்டிருக்கும்போதே விக்ரம் விஷாலியை அழைத்துவர ஒரு வேலைக்காரப் பெண்ணை அனுப்பியிருந்தான்.
அந்தப் பெண் மாடியிலிருந்து அரக்கபரக்க இவர்களை நோக்கி ஓடி வந்தாள்,
“சார், விஷாலி மேடம் அவங்க ரூம்ல இல்ல… ரூம் முழுக்கத் தேடிட்டேன், மத்த இடத்துலயும் பார்த்தேன், எங்கயுமே அவங்க இல்ல!”
என்று மூச்சிரைக்கச் சொன்னாள் அவள்!
தொடரும்…