பிடித்தம் 27
அடுத்த நாள் காலையில் தோட்டத்தில் தனது மெது ஓட்டத்தை முடித்துக் கொண்டு புகழ்வேந்தன் வந்த போது மித்ராணி கூடத்தில் அமர்ந்து செய்தித்தாள் படித்துக் கொண்டிருந்தாள்.
‘நாம ஜாக்கிங் போகும் போது கூட தூங்கிட்டு தானே இருந்தா! அதுக்குள்ளே கிளம்பி ஊட்டி ரோஸ் மாதிரி பிரெஷ்ஷா இருக்காளே!’ என்று மனதினுள் நினைத்தவன் தன்னவளின் அழகை ரசித்தபடி வீட்டின் உள்ளே வந்தான்.
ஓரவிழிப் பார்வையால் புகழ்வேந்தனின் பார்வையை உணர்ந்தவள் மனதினுள், ‘இன்னும் ரெண்டே நிமிஷத்தில் உன்னை அலற விடுறேன் டா’ என்று கூறிக் கொண்டாள்.
புகழ்வேந்தன் உற்சாகக் குரலில், “ஹாப்பி மார்னிங் பொண்டாட்டி” என்றபடி அவளை உரசிக் கொண்டு அமர்ந்தான்.
மித்ராணி அவனை திரும்பிக் கூட பார்க்காமல் எழுந்து சென்று எதிரில் இருந்த ஒற்றை சோபாவில் அமர்ந்து செய்தித்தாள் படிப்பதை தொடர்ந்தாள்.
‘என்னடா இது! ரியாக்சனையே காணும்?’ என்று மனதினுள் நினைத்த புகழ்வேந்தன் மித்ராணியை பார்த்து, “உன் முறைப்பை காண ஆசையாக ஓடோடி வந்த என்னை ஏமாற்றிவிடாதே அல்லிராணி!” என்று ஏற்ற இறக்கத்துடன் ராகத்துடன் கூற,
அதை கேட்டு மனதினுள் லேசாக சிரித்த மித்ராணி முகத்தை செய்தித்தாள் கொண்டு மறைத்துக் கொண்டாள்.
அவள், “ரத்னாமா” என்று குரல் கொடுத்தாள்.
புகழ்வேந்தன் மனதினுள், ‘என்னவோ சரி இல்லையே.. ஒருவேளை நம்மளை கண்டுக்காம இருந்து, நம்ம கூட பேசக் கூடாது னு முடிவெடுத்து இருக்களோ!’ என்ற யோசனையில் இருந்ததால் ரத்னா முகத்தில் இருந்த தயக்கத்தையும் சிறு பயத்தையும் கவனிக்கத் தவறினான்.
புகழ்வேந்தனின் கணிப்பு சரியே. இரவு மித்ராணி இரண்டு முடிவுகளை எடுத்து இருந்தாள். அதில் ஒன்று புகழ்வேந்தன் கணித்தது தான்..
‘அவனிடம் பேசினால் தானே கோபமும் எரிச்சலும் வருது! கூடவே அவனது காதல் வசனத்தை வேறு கேட்க வேண்டியது இருக்குது.. பேசி பேசியே என் மனதை வசியம் செய்யப் பார்க்கிறான்.. இனி அவனிடம் பேச வேண்டாம்’ என்பது தான் அது.
மற்றொன்று கலைவாணியிடம் கிருபாகரன் செய்ததை பற்றி கேட்க வேண்டும் என்று நினைத்தாள். தன் மனதை ஆராய்ந்துக் கொண்டிருந்தவள் சிறிது நேரம் கழித்தே ‘நான்கு உயிர்களை காவு வாங்கி குடும்பத்தின் சிதைவுக்குக் காரணமான கிருபாகரனின் தங்கை மகள் னு தெரிந்தும் என் பகையை மீறி ஏன் இந்த பிடித்தம்?’ என்று அவன் கூறியதை நினைத்துப் பார்த்தாள். அந்த வார்த்தைகளை அவளால் எளிதாக கடக்க முடியவில்லை. புகழ்வேந்தன் எப்படியும் உடனே அதை பற்றிக் கூற மாட்டான் என்பதை அறிந்தே கலைவாணியிடம் கேட்க வேண்டும் என்ற முடிவிற்கு வந்தாள். அதே நேரத்தில் இன்னொன்றும் அவள் மனதைத் தாக்கியது.
‘இத்தனை இழப்பையும் பழிவெறியையும் மீறி தன்னை அவன் காதலிக்கிறான் என்றால்!’ என்று நினைத்தபோது அவனது காதல் அவளது நெஞ்சை பிசைந்தது.
எழுந்து சென்று உறக்கத்தில் இருந்த அவனது முகத்தை பார்த்து, ‘அப்படி என்னடா காதல் என் மேல் உனக்கு? அப்படி என்ன நான் செய்தேன்?’ என்று மெல்லிய குரலில் கேட்டவள், ‘ஆனாலும் நீ செய்தது தப்பு தான்.. ஒருவேளை நான் மனோஜை விரும்பி இருந்தால் என் நிலைமை!!! அவனை நான் விரும்பலை என்றாலும் என் சம்மதம் இல்லாமல் எப்படி நீ என்னை கல்யாணம் செய்யலாம்? நான் எதை யோசித்தாலும்.. என் மனம் எங்கெங்கோ சுத்தினாலும் கடைசியில் இதில் வந்து தான் நிக்குது.. என்ன பண்ண! ஹ்ம்ம்.. நீ செஞ்சதுக்கு நிச்சயம் தண்டனை உண்டு’ என்றும் கூறிக் கொண்டாள்.
அதன் பிறகு மீண்டும் சோபாவில் அமர்ந்தவள் வெகு நேரம் யோசித்தபின் எடுத்த முடிவு தான் அவனிடம் பேசாமல் இருப்பதும், அவனை பார்த்து முறைக்கக் கூட கூடாது என்பதும். அது ஒருவகையில் அவனுக்கு தண்டனையும் கூட என்று நினைத்தாள்.
அவள் நினைத்தது சரியே..
‘என்னை விட்டு விலகி இருக்க நினைக்கிறாளா என் ராணி!!’ என்று நினைத்தப் பொழுதே புகழ்வேந்தன் நெஞ்சில் சிறு வலி பிறந்தது.
அதே யோசனையுடன் ரத்னா கொண்டு வந்த சத்துமாவு கஞ்சியை வாங்கி குடித்தவன் இரண்டு வாய் அருந்திய பிறகே அதன் சுவையை உணர்ந்து, “அம்மா” என்று கத்தினான்.
ரத்னா பதற்றத்துடன், “அம்மா இல்லை தம்பி.. பாப்பா.. தான்..” என்று தயக்கத்துடன் நிறுத்த,
புகழ்வேந்தன், “ஓ!!!” என்று இழுத்தபடி தன்னவளை நோக்க, அவளோ புன்னகையை இதழோரம் அடக்கியபடி அமர்ந்திருந்தாள்.
இவன் கத்தியதில் அறையை விட்டு வெளியே வந்த கலைவாணி, “என்ன புகழ்? எதுக்கு கத்தின?”
மித்ராணி, “அது ஒண்ணுமில்லை.. உப்பு காபிக்கு ஒரு பிலாஸபி(Philosophy) சொன்னான்.. அது எனக்கு பிடிக்கலை.. அதான்.. கஞ்சியில் புளி கரைச்ச தண்ணி சேர்த்தேன்.. அரை டம்ளர் கஞ்சிக்கு கொஞ்சமே கொஞ்சம் னு ஒரு டம்ளர் தான் புளி கரைச்ச தண்ணி சேர்த்தேன்.. அதுக்கு போய் உங்க பையன் இப்படி அலறுறான்” என்றவள் புகழ்வேந்தனை பார்த்தபடி, “உங்க பையன் கிட்ட சொல்லுங்க.. இந்த வீட்டில் இனி அல்லிராணி ராஜ்ஜியம் தான் நடக்கும்.. நான் கொடுக்கும் தண்டனைகளை உங்க மகன் ஏத்துகிட்டு தான் ஆகணும்” என்று கட்டளையாக கூறினாள்.
அடுத்த நொடி தன்னவள் அமர்ந்திருந்த தோரணையை ரசித்தபடி ஒரே மூச்சில் கஷாயத்தை குடிப்பது போல் கஞ்சியை குடித்து முடித்தவன் குவளையை ரத்னாவிடம் கொடுத்தான்.
ரத்னா வாய் திறந்தபடி அதிர்ச்சியுடன் நிற்க, கலைவாணி மகனின் உடல்நிலையை நினைத்து சிறு கவலையுடன் நிற்க,
எழுந்து நின்று ஆங்கிலேயர் பாணியில் ஒற்றை கையை இடைக்கு குறுக்காக வைத்து குனிந்து தலை வணங்கி நிமிர்ந்த புகழ்வேந்தன் புன்னகையுடன், “அம் ஆல் யுவர்ஸ் மை டியர் அல்லிராணி.. அண்ட் அம் வெயிட்ங் பார் யுவர் பனிஷ்மென்ட்ஸ்” என்றான்.
மனதினுள், ‘வசியகாரா’ என்று முணுமுணுத்தவள் வெளியே இவனை கண்டுக்கொள்ளாமல், “ரத்னாமா வாங்க சமைக்க போகலாம்” என்றுவிட்டு சமையலறை நோக்கி செல்ல,
ரத்னா, “பாப்பா” என்று அலறியபடி அவள் பின்னால் ஓடினார்.
அன்னையை பார்த்து மென்னகையுடன், “உங்க மகனுக்கு எதையும் தாங்கும் இதயம் மட்டுமில்லை மா உடம்பும் எதையும் தாங்கும்.. ஸோ கவலைப் படாதீங்க” என்றவன் அவனது அறை நோக்கி சென்றான்.
படிகளில் நிதானமாக ஏறியவன் அன்னையின் பார்வையில் இருந்து மறைந்ததும் வேகமாக அறையினுள் ஓடினான். ஏனெனில் அதற்குள் அவன் குடித்த கஞ்சி வேலையை காட்ட துவங்கியிருந்தது. வேகமாக ஓடியவன் குளியலறையினுள் புகுந்து குடித்ததை மொத்தமாக வாந்தி எடுத்தான்.
வாந்தி எடுத்து முடித்து களைப்புடன் முகத்தை துண்டால் துடைத்தபடி வெளியே வந்தவன், “கல்யாணம் ஆனதும் புருஷனால் பொண்டாட்டி வாந்தி எடுப்பா.. இங்கே என் பொண்டாட்டி என்னை வாந்தி எடுக்க வைக்கிறா” என்று வாய்விட்டு கூறியபடி மெத்தையில் அமர்ந்தான்.
அங்கே அவனை பார்த்தபடி கைகளை கட்டிக் கொண்டு எதிர் சுவற்றில் சாய்ந்தபடி மித்ராணி நின்றிருந்தாள்.
அவன் வாந்தி எடுத்த சத்தத்தை கேட்ட போது மித்ராணிக்கு கஷ்டமாக தான் இருந்தது ஆனால் அடுத்து அவன் கூறியதை கேட்டு மெல்லிய புன்னகை பூத்தது. கூடவே இனி அவனது உடல் நிலை கெடும் அளவிற்கு உணவில் எதையும் கலக்கக் கூடாது என்ற முடிவிற்கு வந்திருந்தாள்.
மித்ராணியை பார்த்ததும் அவன் கண்ணில் சிறு ஒளியுடன் ஏதோ ஒரு பாடலை முணுமுணுத்தான்.
‘என்ன பாட்டை பாடுறான்?’ என்ற கேள்வி மனதினுள் எழுந்தாலும் அவனிடம் பார்வையில் கூட அதை வெளிகாட்டவில்லை அவள்.
ஆனால் புகழ்வேந்தன், “என்ன பாட்டு னு தெரியனுமா?” என்று கேட்டான்.
அப்பொழுதும் அவள் அமைதியாக இருக்க, அவன், “சரி நானே பாடி காட்டுறேன்” என்று கூறிவிட்டு,
[the_ad id=”6605″]
“மித்ராணியே என்ன அசத்துற ரதியே!
ராட்சசியோ தேவதையோ! ரெண்டும் சேர்ந்த பெண்ணோ………..
எடுத்த உறுதிமொழியை மீறி அவள் அவனை முறைக்க, விரிந்த புன்னகையுடன்,
அடை மழையோ அனல் வெயிலோ! ரெண்டும் சேர்ந்த கண்ணோ….. என்று பாடியவன் அவளை நெருங்கி சுவற்றில் இருபுறம் கைகளை வைத்து அவளை சிறை செய்தபடி,
“தொட்டவுடன் ஓடுறியே தொட்டாச்சிணுங்கி பெண்தானோ
ஏ தொட்டாச்சிணுங்கி பெண்தானோ
அழகினாலே அடிமையாக்கும் ராஜ ராஜ ராணி” என்று கண்ணில் மையலுடன் பாடினான்.
அவனது பார்வை மற்றும் குரலிலும், பாடல் வரிகளிலும் அவளுள் சில பல மாற்றங்கள் ஏற்பட்டது தான் இருப்பினும் கஷ்டப்பட்டு தன்னை கட்டுபடுத்திக் கொண்டு இயல்பான முகபாவத்துடன் அவனை நோக்கியவள் அவன் பாடி முடித்ததும் அவனை தொடாமல் குனித்து வெளியேறினாள்.
பின் இண்டர்காமை எடுத்து, “ரத்னாமா கொண்டு வாங்க” என்று கூறி தொலைபேசியை வைத்தாள்.
அவள் விலகி சென்றதும், ‘வேந்தா உன்னை மாதிரியே உணர்வுகளை கட்டுபடுத்த ட்ரேனிங் எடுத்திருப்பா போலவே! நீ ரொம்ப கஷ்டப்படனும் டா!!!’ என்று மனதினுள் கூறியவன் அவள் தொலைபேசியில் பேசியதை கேட்டு, ‘கொஞ்சமாச்சும் கேப் விடேன்டி’ என்று மனதினுள் அவளிடம் கூறினாலும் வெளியே இயல்பான முகபாவத்துடன் நின்றிருந்தான்.
அவள் தொலைபேசியை வைத்த அடுத்த நிமிஷம் ரத்னா கதவை தட்டினார்.
கதவை திறந்து அவர் கொண்டுவந்ததை வாங்கி அவரை அனுப்பியவள் கதவை மூடிவிட்டு வந்து அதை அவனிடம் நீட்டினாள்.
‘பாட்டு பாடி சும்மா இருந்தவளை கிளப்பி விட்டுட்டியே டா’ என்று மனதினுள் தனக்கு தானே கூறிக் கொண்டவன் அவள் கொடுத்த குவளையை வாங்கி அதில் இருந்ததை அருந்தினான்.
அதை அருந்தி முடித்ததும் அவன், “மைல்டா சால்டியா லெமன் ஜூஸ் நல்லா இருந்துது” என்றான்.
அவளோ அவனை கண்டுக்கொள்ளாமல் தனது கணினியை எடுத்துக் கொண்டு அமர்ந்தாள்.
அவன், “ராணி” என்று அழைத்தான்.
அப்பொழுதும் அவள் அவனை கண்டுக்கொள்ளவில்லை.
மீண்டும் அழைத்தவன் அவள் நிமிர்வது போல் இல்லை என்றதும் ‘அல்லிராணி பேசாம கொல்றாளே!!’ என்று மனதினுள் கூறிக் கொண்டு பெருமூச்சை வெளியிட்டபடி குளிக்க சென்றான்.
அடுத்து காலை உணவிற்காக உணவு மேஜையில் அமர்கையில் அவனது முகம் இயல்பாக இருந்தாலும் மனதினுள், ‘எதில் என்னத்தை கலக்கி வச்சிருக்கா னு தெரியலையே!’ என்று மெலிதாக அலறினான்.
அவனது எண்ணம் புரிந்தது போல் அவள், “ரத்னாமா உங்க தொம்பிய தைரியமா சாப்பிட சொல்லுங்க.. இன்றைய கோட்டா முடிந்தது.. ஆனா தினமும் எப்போ எதில் எதை கலப்பேன் னு தெரியாது” என்றாள்.
‘தப்பிச்ச டா’ என்று மனதினுள் கூறிக் கொண்டவன் அவளை பார்த்து கண்ணடித்துவிட்டே உண்ண ஆரம்பித்தான்.
அவள் கலைவாணியை பார்த்து, “உங்க மகனை கண் டாக்டர் கிட்ட போக சொல்லுங்க.. அடிக்கடி வலது கண் துடிச்சிட்டே இருக்குது” என்றாள்.
புகழ்வேந்தன், “காலையில் தான் ஐ டாக்டர் கிட்ட பேசினேன்.. என் கண்ணில் பிரச்சனை இல்லையாம், காதல் நோய் தாக்கியதன் பாதிப்பு தான் இது.. இதுக்கு லைப் லாங் தீர்வே இல்லை னு சொல்லிட்டார்” என்றவன் மாய கண்ணனின் வசீகர புன்னகையுடன் மீண்டும் கண்ணடித்தான்.
ரத்னா, ‘தம்பி இப்படியெல்லாம் கூட பேசுமா!’ என்று மனதினுள் நினைத்தபடி உணவை பரிமாற, கலைவாணி மகனின் பேச்சை ரசித்தாலும் மித்ராணிக்காக சிரிக்காமல் அமர்ந்திந்தார்.
மித்ராணியின் மனமோ அவளையும் மீறி அந்த வசியக்காரனை ரசிக்க, சில நொடிகளில் தன்னை மீட்டவள் மனதினுள், ‘தேவையா உனக்கு? என்னத்துக்கு அவன் முகத்தை பார்க்கிற! பார்த்தா தானே இதெல்லாம்’ என்று தன்னைத் தானே திட்டிக் கொண்டு அடுத்து அவனை கண்டுக்கொள்ளாமல் அமைதியாக உண்டாள்.
கலைவாணி, “புகழ் இன்னைக்கே ஆபீஸ் போகனுமா?”
“ஆமா மா” என்றவன், “முக்கியமான வேலைகள் இருக்குது” என்ற போது அவனது குரலும் முகமும் இறுகி இருந்தது.
அவனது குரலின் மாற்றத்தை கண்டுகொண்ட மித்ராணி அவனை யோசனையுடன் பார்க்க, அவளது யோசனையை கலைப்பது போல் கலைவாணி, “மித்ரா நீ என்ன செய்ய போற?” என்று கேட்டார்.
“நானும் இன்னையில் இருந்தே ஆபீஸ் போக போறேன் ஆனா இன்னைக்கு மட்டும் மதியத்திற்கு மேல் வரேன் னு சொல்லி இருக்கிறேன்”
புகழ்வேந்தன், “நீ மினிமம் ஒன் வீக் லீவ் எடுக்கிறதா தானே இருந்திருப்ப?” என்று கேள்வியாக நிறுத்த, அவளோ அதை கண்டுக்கொள்ளவில்லை.
கலைவாணி, “எப்படியும் வேலை வேலை னு ஓடத் தான் போற.. ஒரு வாரம் ரெஸ்ட் எடுக்கலாமே!” என்று கூற,
“எனக்கு சில முக்கியமான வேலைகள் இருக்குது” என்றதோடு பேச்சை முடித்துக் கொண்டாள்.
[the_ad id=”6605″]
அலுவலகம் கிளம்பும் முன் அறையில் வைத்து மித்ராணியை இடையோடு அணைத்து பிடித்தவன் அவளது திமிறலை பொருட்படுத்தாமல் அவளது கண்களை நோக்கியபடி, “நான் பேசி பேசியே உன் மனதை கொள்ளை கொள்றேன் னு நீ பேசாம இருந்து என்னை கொல்ற..” என்றான்.
பிறகு கண்ணில் சிறு வலியுடன், “இந்த இரண்டு மணி நேர மௌனத்தையே என்னால் தாங்க முடியலை.. தண்டனை காலத்தை குறைக்க முயற்சி பண்ணு ராணிமா” என்றான்.
அவனது குரலிலும் கண்களிலும் தெரிந்த வலி அவளைத் தாக்க முகத்தை சாதாரணமாக வைத்துக்கொள்ள பெரும்பாடு பட்டாள்.
பின் அவன் அவளது கன்னத்தில் அழுத்தமாக முத்தமிட்டு, “ஆபீஸ் போயிட்டு வரேன்.. சாயுங்காலம் பார்க்கலாம்” என்றுவிட்டு கிளம்பினான்.
அவன் கிளம்பி சென்ற சிறிது நேரம் கழித்தே அவன் இட்டு சென்ற தாக்கத்தில் இருந்து வெளி வந்தவள் சிறு பெருமூச்சை வெளியிட்டுவிட்டு கலைவாணியைத் தேடி அவரது அறைக்குச் சென்றாள்.
அலுவலகத்திற்கு சென்ற புகழ்வேந்தன் முதல் வேலையாக சதீஷை அழைத்து அவனது கையில் ஒரு கோப்பியத்தை கொடுத்து, “இதில் கிருபாகரனோட கன்ஸ்ட்ரக்ஷன் கம்பெனி வைத்திருக்கும் டை-அப்ஸ், க்ளையன்ட்ஸ் பத்திய டீட்டேல்ஸ்ஸும் அந்தந்த ப்ராஜெக்ட் பத்திய டீட்டேல்ஸ்ஸும் அந்தந்த ப்ராஜெக்ட்க்கு நியாயமான கோட்டும்(Quote) இருக்குது..
ஒவ்வொருத்தருக்கும் கிருபாகரன் செய்யும் மோசடி பற்றியும் அந்த கட்டடம் இடிந்த இன்சிடென்ட் எவிடன்ஸ் காப்பியும் மெயில் அனுப்பு.. அவனோட எல்லா கன்ஸ்ட்ரக்ஷன் இடத்திலும் நாம அவனுக்கு எதிரா ஸ்டே வாங்குவோம்னும், அதில் இருந்து அவங்க எஸ்கேப் ஆக நம்ம கிட்ட வரலாம், அண்ட் அவன் சொன்ன தேதிக்கு முன்னாடியே நாம நியாயமான கோட்டில் அதை முடிச்சு தருவோம் னும் சொல்லு.. முக்கியமான விஷயம் நாம கொடுக்கும் இந்த ஆஃப்பர் இன்னைக்கு ஈவனிங் ஆறு மணி வரைக்கும் தான்.. அதற்குள் அவங்க நம்மை காண்டக்ட் பண்ணலை பின்விழைவுகளைச் சந்திக்க அவங்க தயாரா இருக்கணும் னு சொல்லிடு.. இதை டீட்டேல்டா மெயில் அனுப்பிட்டு போன் பண்ணியும் சொல்லிடு”
புகழ்வேந்தனின் அதிரடியில் சதீஷ் மலைத்துப் போய் நிற்க, புகழ்வேந்தன், “கம்மான் குவிக்” என்றான்.
“எஸ் பாஸ்” என்ற சதீஷ் வேகமாக வெளியேறி புகழ்வேந்தன் சொன்னதை செய்யத் தொடங்கினான்.
அதே நேரத்தில் மித்ராணி கலைவாணியின் அறைக் கதவை தட்டிவிட்டு உள்ளே சென்றாள்.
கலைவாணி மென்னகையுடன், “வா மா” என்றார்.
“மிஸ்டர் கிருபாகரனுக்கும் உங்களுக்கும் என்ன பிரச்சனை? அவர் என்ன செய்தார்?” என்று நேரடியாக அவள் விஷயத்திற்கு வர, அவர் ஒரு நொடி திகைத்தார்.
“அது” என்று அவர் தயங்க,
“வேந்தன் எப்படியும் இப்போ சொல்ல மாட்டான்.. ஆனா எனக்கு இப்பவே தெரிந்தாகனும்.. எங்க கல்யாணத்துக்கு காரணம் வேந்தனோட காதல் தான் என்றாலும் அதுக்கு பிள்ளையார் சுழி போட்டது வேந்தனோட பழிவெறி தான் னு எனக்கு தெரியும்.. நேத்து பேச்சுவாக்கில் நாலு உயிர்களின் பலி னு சொன்னான்.. இதை பத்தி உங்க கிட்ட கேட்கிறதுக்காக தான் இன்னைக்கு காலையில் நான் ஆபீஸ் போகலை” என்ற அவளது நீண்ட விளக்கத்திற்கு பிறகு சொல்லாமல் இருக்க அவரால் முடியவில்லை.
அவர் மெல்லிய குரலில் சொல்ல ஆரம்பித்தார்.
“புகழோட அப்பாவோட சொந்த ஊர் மதுரை பக்கம் சின்ன கிராமம்.. புகழோட தாத்தா தான் அந்த ஊரில் பெரிய ஆள்.. நல்லது கெட்டது சின்னதோ பெருசோ எதுனாலும் புகழ் தாத்தா கிட்ட தான் வருவாங்க.. மாமா ஊருக்காகவும் ஊர் மக்களுக்காகவும் நிறைய செஞ்சு இருக்காங்க.. அந்த கிரமத்தில் பாதிக்கு மேல எங்களோட நிலமா தான் இருந்தது..
புகழோட அப்பா பெயர் ராமன்.. அவங்களோட ஒட்டி பிறந்த சகோதரன் பெயர் லக்ஷ்மணன்.. இந்த காலத்தில் ஒட்டி பிறந்தவங்களை பிரிக்கிறது ஈஸியா இருக்கலாம் ஆனா அப்போ அதுவும் கிராமத்தில் எவ்ளோ பெரிய விஷயமா இருந்து இருக்கும்! அதனாலேயே அத்தை மாமாவுக்கு இவங்க மேல பாசம் அதிகம்.. மாமாவாது கண்டிப்புடன் இருப்பாங்க ஆனா அத்தைக்கு இவங்க ரெண்டு பேரும் உயிர்..
ஒட்டி பிறந்ததாலோ என்னவோ புகழோட அப்பாவும் சித்தப்பாவும் சின்ன வயசில் இருந்தே ரொம்ப ஒற்றுமையா இருப்பாங்களாம்.. வார்த்தைகள் இல்லாமலேயே ஒருத்தரோட உணர்வை இன்னொருத்தர் புரிந்துப்பாங்க..” என்றவர் கலங்கிய கண்களுடன், “அதனால் தான் எங்களை பத்தி யோசிக்காம தம்பி போனதும் படுத்த படுக்கையாகி கொஞ்ச வருஷத்தில் மொத்தமா போய்ட்டார்” என்றார்.
மித்ராணி ஆதரவாக அவரது கையை அழுத்தமாக பற்றிக் கொண்டாள்.
பெருமூச்சொன்றை வெளியிட்டவர் தொடர்ந்தார்.
“உன்னோட மாமாவுக்கும் அம்மாவுக்கும் பக்கத்து கிராமம் தான் சொந்த ஊர்.. புகழோட அப்பா, சித்தப்பா உன்னோட மாமா மூணு பேருமே ஒரே காலேஜில் தான் படிச்சு இருக்காங்க.. அப்போவே காலேஜில் உன்னோட மாமாவுக்கும் புகழோட சித்தப்பாவுக்கும் ஆகாதாம்.. உன் மாமாவுக்கு புகழோட அப்பா சித்தப்பா மேல நிறைய பொறாமை இருந்து இருக்குது.. இவங்களோட செல்வ நிலையும் மத்தவங்க கொடுக்கிற மரியாதையும் தான் அதுக்கு காரணம்.. படிப்பிலும் இவங்க ரெண்டு பேரும் கெட்டிக்காரங்க.. ஸோ எல்லாம் சேர்ந்து உன் மாமாவுக்கு இவங்களை பிடிக்கலை.. அதுவும் புகழோட சித்தப்பா மேல் தான் பகையோடு இருந்து இருக்கார்..
எங்களுக்கு கல்யாணம் நடந்தப்ப புகழோட சித்தப்பா ரெண்டு வருஷம் கழிச்சு கல்யாணம் பண்ணிக்கிறதா சொல்லிட்டாராம்.. அதுக்கு காரணம் உன்னோட அத்தை மல்லிகா.. புகழோட சித்தப்பா மல்லிகாவை விரும்பினார்.. ஆனா அவ அப்போ தான் காலேஜ் முதல் வருஷம் முடிச்சு இருந்ததால தன்னோட காதலை சொல்லலை, கல்யாணத்தையும் தள்ளி போட்டு இருக்கிறார்.. ஆனா மல்லிகாவும் புகழோட சித்தப்பாவை காதலித்து இருக்கா.. ரெண்டு பேரும் ஊர் திருவிழாவில் தான் பார்த்து இருக்காங்க.. பெருசா பேசிக்கலைனாலும் ரெண்டு பேரும் பார்வையால் பேசி விரும்பி இருக்காங்க ஆனா ஒருத்தரோட காதல் இன்னொருத்தருக்கு தெரியலை.. ரெண்டு வருஷம் கழிச்சு புகழோட அப்பா அவங்களாவே தம்பியோட காதல் தெரிந்து தரகர் மூலமா மல்லிகாவையே தம்பிக்கு பேசி முடிச்சிட்டாங்க..
[the_ad id=”6605″]
இதுக்கு நடுவில் உன் மாமா மல்லிகா கிட்ட காதலை சொல்ல, அவ புகழோட சித்தப்பாவை உயர்வா பேசி அவரை விரும்புறதா சொல்லி இருக்கா.. அப்போவே உன் மாமாவுக்கு புகழோட சித்தப்பா மேல வன்மம் வளர்ந்து இருக்கணும்..
புகழோட சித்தப்பாவுக்கும் மல்லிகாவுக்கும் கல்யாணம் முடிவாச்சு.. அப்போ புகழுக்கு ஒரு வயசு.. கல்யாணத்தன்னைக்கு காலையில் மல்லிகாவை கடத்திய உன் மாமா கட்டாய கல்யாணம் செஞ்சு மண்டபத்துக்கு வந்து அவங்க ரெண்டு பேரும் காதலிச்சு கல்யாணம் செஞ்சதா சொல்லிட்டார்.. அத்தோட விடாம அவரோட ஊரை சேர்ந்த அவர் நண்பர்கள் சிலரை வச்சு புகழோட சித்தப்பாவை பத்தி கேவலமா பேச வச்சிட்டார்..
உன் மாமாவை பழி வாங்க தான் புகழோட சித்தப்பா உன் மாமாவை விரும்பிய மல்லிகாவை மிரட்டி கல்யாணம் செய்யப் பார்த்தார், புகழோட சித்தப்பா ஒரு பொம்பளை பொறுக்கினும் மல்லிகா மேல் உள்ள இச்சைக்காக தான் கல்யாணம் செய்ய பார்த்தார் னு ஒரு பக்கம் பேச, புகழோட சித்தப்பா.. ஆம்பளையே இல்லை அதான் பொண்ணு ஓடி போய் கல்யாணம் செஞ்சுகிட்டா னு இன்னொரு பக்கம் பேச, புகழோட சித்தப்பா கூனி குறுகி நின்னார்.
அப்போ அவரோட உணர்வுகளை புரிந்து புகழோட அப்பாவும் புழுவா துடிச்சதை பார்த்தேன்.. எங்க ஊர் மக்கள் புகழோட சித்தப்பாவுக்கு ஆதரவா பேச, உன் மாமாவும் அவரோட நண்பர்களும் பதில் பேச னு வேணும்னே கலாட்டா பண்ணி ஊர் கலவரமா மாறிடுச்சு..
புகழோட அப்பா தம்பி கூடவே தான் இருந்தாங்க ஆனா இந்த மாதிரி பேச்சை கேட்டதும் அத்தை மயக்கமாகி விழ, அத்தையை பார்த்துக்கிட்ட மூணு நிமிஷ இடைவெளியில் புகழோட சித்தப்பா தூக்கு மாட்டி..” என்று மேல சொல்ல முடியாமல் சில நொடிகள் பேச்சை நிறுத்தியவர் பேச்சை தொடர்ந்தார்.
“புகழோட அப்பாவுக்கு உள்ளுணர்வு தம்பியோட முடிவை சொல்ல அத்தை கண் விழிக்காத அந்த நேரத்திலும் வேகமாக ஓடினார்.. ஆனா அவர் போய் பார்த்தது தம்பியோட கடைசி நொடிகளைத் தான்.. தம்பி துடிதுடிச்சு இறந்ததை பார்த்து அந்த கட்டிடமே அதிர ‘லஷ்மணா’ னு கத்தியது தான் அவர் பேசிய கடைசி வார்த்தை..” என்றவர் கண்களில் இருந்து கண்ணீர் வடியத் தொடங்கியது.
மித்ராணி அவருக்கு அருந்த தண்ணீர் கொடுத்தாள்.
அவர் நிதானத்திற்கு வந்ததும் அவள், “அத்தை எதுவும் பேசலையா? ஐ மீன் உண்மையை சொல்லலையா?”
“உன் மாமா அவளை மிரட்டி இருக்கார்.. புகழோட சித்தப்பாவை கொன்னுடுவேன் னு சொல்லி இருக்கார்.. அப்பறம் புகழோட சித்தப்பா இறந்ததும் அதிர்ச்சியில் அவ மயங்கிட்டா போல.. எல்லாம் முடிந்து சில வருஷம் கழிச்சு அவளை பார்த்தப்ப தான் இதையெல்லாம் சொல்லி அழுதா.. மல்லிகாவும் பாவம் தான்.. உன் மாமா சொன்னதை நம்பி அவளை அவ வீட்டு ஆட்கள் ஒதுக்கி வச்சிட்டாங்க.. உன் மாமாவால் மல்லிகா பிறந்த வீட்டை இழந்தா ஆனா இந்த குடும்பமே சிதைந்து போச்சு” என்றவர் மீண்டும் சில நொடிகள் மௌனித்தார்.
பிறகு தொடர்ந்தார்.
“புகழோட அப்பாக்கு பேச்சு போய் ஒரு கையும் ஒரு காலும் விளங்காமல் போயிருச்சு.. கண் முழிச்ச அத்தை விஷயம் கேட்டு மாரடைப்பில் உயிரை விட்டுட்டாங்க.. அடுத்து கொஞ்ச நாளில் மாமாவும் இறந்துட்டாங்க.. அப்பறம் தான் நான் ரொம்ப கஷ்டப்பட்டேன்.. புகழோட அப்பா இருந்த நிலைக்கு வீடு கிட்டத்தட்ட ஆண் துணை இல்லாத வீடு மாதிரி தான் இருந்தது.. புகழும் சின்ன குழந்தை.. அங்காளி பங்காளியெல்லாம் தப்பான பார்வை பார்க்கிறதும் சொத்தை பிடுங்க முயற்சி பண்ணறதுமா இருந்தாங்களே தவிர யாரும் உதவ முன் வரலை.. உதவி என்ன! உபத்திரம் பண்ணாமலாவது இருந்து இருக்கலாம்.. எங்க கல்யாணதப்பவே எனக்கு அப்பா அம்மா இல்லை.. அண்ணன் மட்டும் தான்.. அண்ணிக்கு நான் பாரமா இருந்திருவேனோ னு பயம் அதனால் அண்ணனை என் கிட்ட அண்ட விடலை.. தினமும் கழுகுகளிடம் போராட முடியாமல் அந்த ஊரே வேணாம்ங்கிற முடிவுக்கு வந்துட்டேன்.. வீட்டை மட்டும் வச்சிட்டு நிலபுலன்களை வந்த விலைக்கு.. அடிமட்ட விலைக்கு பங்காளிங்க கிட்டயே வித்துட்டு சென்னைக்கு வந்துட்டேன்.. ரத்தினம் அண்ணாவும் ரத்னாவும் இல்லைனா நாங்க செத்த இடத்தில் இந்நேரம் மரம் வளர்ந்திருக்கும்..
இங்கே வந்ததுக்கு அப்பறம் தான் சில வருஷம் கழிச்சு மல்லிகாவை ஒரு நாள் பார்த்தேன்.. அவ சொன்னதை இவர் கிட்ட சொன்னது தான் தப்பா போச்சு.. அதை சொன்னதுக்கு அப்பறம் மனசளவில் ரொம்ப உடைஞ்சு போய்ட்டார்.. என்ன னு கேட்டப்ப ‘நான் தான் என் தம்பி முடிவிற்கு காரணம்.. அன்னைக்கு எல்லாரோட பேச்சும் அவனை பாதிச்சது தான் ஆனா அதை விட நிஜமாவே மல்லிகா கிருபாகரனை விரும்பி, பெரியவங்க கட்டாயத்துக்காக தான் கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டதா நினைச்சிட்டான்.. ஒருவேளை நான் கல்யாணம் பேசி முடிக்காம இருந்து இருந்தால் இவன் காதலை சொல்லி அவளோட காதலையும் புரிஞ்சு இருப்பான்.. அப்பறம் கல்யாணத்தன்னைக்கு மல்லிகாவோட மௌனத்தை உடைச்சு அவளை மீட்டு சந்தோஷமா வாழ்ந்து இருப்பான்.. எல்லாம் என்னால் தான்’ னு எழுதி காட்டினார்.
என்னோட சமாதானம் எதையுமே அவர் கேட்டுக்கலை.. ஒரு வாரத்திலேயே அவர் அவரோட தம்பி கிட்ட போய்ட்டார்..” என்றவர் அந்த நாள் நினைவில் இருந்து மீள முடியாமல் கண்ணீர் சிந்தினார்.
மித்ராணி மனதினுள், ‘வேந்தன் கிட்டயே கேட்டிருக்கணுமோ! அவசரப்பட்டுட்டோமோ!’ என்று வருந்தினாள்.
சில நொடிகள் அவரை அழ விட்டவள், “சாரி அத்தை.. உங்க ரணத்தை கிளறிவிட்டுட்டேன்” என்று வருந்திய குரலில் கூற,
கண்களில் கண்ணீருடனும் உதட்டில் மென்னகையுடனும் பார்த்த கலைவாணி அவளது கன்னத்தில் கையை வைத்து, “என்னை நீ அத்தை னு கூப்பிட்டுட்ட” என்றார் மகிழ்ச்சியுடன்.
அப்பொழுது தான் அதை உணர்ந்தவள் அவரது மகிழ்ச்சியை பார்த்தபடி, “உங்களுக்கு ஏன் என் மேல் இவ்வளவு பாசம்?” என்று வினவினாள்.
அவர் புன்னகையுடன், “என் மகனின் இதயராணியாச்சே!!”
அவள் செல்லக் கோபத்துடன் இடுப்பில் கைவைத்தபடி, “அப்போ எனக்கே எனக்காக இந்த பாசம் இல்லை.. உங்க மகனின் மனம் கவர்ந்தவள் னு தான் இந்த பாசம்.. ஹம்!!!” என்றாள்.
அவர் விரிந்த புன்னகையுடன், “உன்னை பார்க்கிறதுக்கு முன்னாடியே பாசம் வச்சதுக்கு அது காரணம் ஆனா உன் மேல் பாசம் அதிகரித்ததுக்கு நீ தான் காரணம்.. இந்த வீட்டுக்கு மகிழ்ச்சியை கொண்டு வந்த தேவைதை டா நீ” என்றார்.
அவள் ‘ஹச்.. ஹச்’ என்று வேண்டுமென்றே தும்மியபடி, “இன்னைக்கு எனக்கு பீவர் வந்திரும்” என்றாள்.
அவர் விரிந்த புன்னகையுடன், “போக்கிரி” என்றார்.
இதயம் இணைய காத்திருப்போம்♥ ♥ ♥ ♥ ♥ ♥