பிடித்தம் 35
“யாருக்கு வேணும் இந்த பதவியும் சொத்தும்” என்று பிரசாத் விரக்தியுடன் கூற,
“இதை கோர்ட்டில் சொல்லு” என்ற வெற்றிவேல், “இதை விட முக்கியமான காரணம் சொல்லவா! புகழ்வேந்தன் ஜெயிலுக்கு போயாச்சுனா மித்ராணியை கல்யாணம் பண்ணி உன் காதலை நிறைவேத்திக்கலாமே! மனோஜ் இறந்ததால் பதவியும் சொத்ததும், புகழ்வேந்தன் ஜெயிலுக்கு போவதால் மித்ராணி.. இதான் ஒரே கல்லில் மூணு மாங்கா”
“வாய் இருக்குது னு எதை வேணாலும் சொல்லுவியா?” என்று பிரசாத் கோபத்துடன் எகிற,
வெற்றிவேல் நிதானமாக, “நான் சொன்னதில் என்ன தப்பு?”
“எல்லாமே தப்பு தான்.. அதுவும் மித்ரா பத்தி சொன்னது! அவளைப் பத்தி உனக்கு என்ன தெரியும்?”
“நான் மித்ராணி பத்தி எதுவும் சொல்லலையே! உன் திட்டத்தைப் பத்தி தான் சொன்னேன்”
“அதைத் தான் சொல்றேன்.. புகழ் இல்லைனா வேறு ஒருவன் னு நினைக்க மாட்டா.. நீ சொன்னபடி நடந்தா போராடி புகழை வெளியே கொண்டு வருவா, முடியலையா என்னை கொன்னு புதைச்சிருவா.. மித்ரா பாரதி கண்ட புதுமை பெண் மாதிரி அக்னிப் பறவை”
மித்ராணி மீது பிரசாத் கொண்ட காதலை கண்டு ஒரு நொடி பிரம்மித்த வெற்றிவேல் அதை சிறிதும் வெளியே காட்டிக் கொள்ளாமல், “மித்ராணி பற்றிய சொற்பொழிவை கேட்க நான் இங்கில்லை.. மனோஜ் இறந்தன்னைக்கு மூணு மணியில் இருந்து நீ எங்க இருந்த?”
பிரசாத் அலட்சியத்துடன் பார்க்க வெற்றிவேல் குரலை சற்று உயர்த்தி, “பதிலைச் சொல்லு” என்றான்.
பிரசாத், “நான் சொன்னா நீ நம்பிடப் போறியா?”
“நம்புறதும் நம்பாததும் வேற.. முதல்ல பதிலைச் சொல்லு”
“ஆபீஸ்ஸில் இருந்து மூணு மணிக்கு கிளம்பி ஸ்டீல் இண்டஸ்ட்ரி போயிட்டு ஆறு மணிக்கு ராம்லால் சேட்டை பார்க்க xxx ஹோட்டல் போனேன்.. அப்பறம் வீட்டுக்குப் போயிட்டேன்”
“மனோஜ் வீட்டுக்கு வரலைனதும் ஏன் அவரைத் தேடலை?”
“நான் தேடலை னு யாரு சொன்னா?”
“உடனே தேடலையே!”
“முதல்ல அப்பா தான் மனோஜை கடத்தி வச்சிருக்கிறதா நினைச்சு அசால்ட்டா விட்டுட்டேன்.. அப்பறம் நேத்து தான் தேட ஆரம்பிச்சேன்.. அதுக்குள்ள…..” என்று குரல் கமற பேச்சை நிறுத்தினான்.
“இந்த நடிப்பெல்லாம் நிறைய படத்தில் பார்த்துட்டேன்.. மனோஜை எங்கெல்லாம் தேடின னு சொல்லு”
பிரசாத் முறைப்புடன் அமைதியாகிவிட, வெற்றிவேல் முறைத்துவிட்டு வெளியே சென்றான்.
ஒரு மணி நேரம் கழித்து……….
ACP வெற்றிவேல் அறை:
வெற்றிவேல் தனது மடிக்கணினியில் கிடைத்த தகவல்களையும் தனது குறிப்புகளையும் மீண்டும் ஒரு முறை பார்த்துக் கொண்டிருந்தான்.
மீண்டும் மறைகாணி(CCTV) பதிவுகளை உன்னிப்பாக பார்த்த வெற்றிவேல் மனதினுள் யார் கொலையாளி என்ற யூகம் வலுபெற்றது. அவன் மடிக்கணினியை மூடிய போது அனுமதி பெற்றுக்கொண்டு சந்தோஷும் அர்ஜுனும் உள்ளே வந்தனர்.
சந்தோஷ், “சார் பிரசாத் சொன்னது சரி தான்.. மனோஜ் கொலை நடந்த அன்னைக்கு அந்த நேரத்தில் பிரசாத் xxx ஹோட்டலில் சேட் ராம்லால் கிட்ட பேசிட்டு இருந்திருக்கான்.. சேட் கிட்டயும் கேட்டேன் அண்ட் ஹோட்டல் சிசிடிவி புட்டேஜ் செக் பண்ணிட்டேன்..”
அர்ஜுன், “மெயின் ஆபீஸ்ஸில் இருந்து மூணு மணிக்கு கிளம்பி ஸ்டீல் இண்டஸ்ட்ரி போயிட்டு தான் அந்த ஹோட்டல் போயிருக்கான்”
“ஹ்ம்ம்” என்ற வெற்றிவேலின் முகபாவனை ‘இதை எதிர் பார்த்தேன்’ என்று சொல்லாமல் சொல்லியது.
அர்ஜுன், “கொலைகாரன் யாரு னு மண்டை காயுது சார்.. எனக்கு என்னவோ தர்மராஜ் கொலை செஞ்சது போல் தெரியலை சார்”
வெற்றிவேல், “ஹ்ம்ம்.. அவன் உன்னிடம் பேசியதை பார்த்தேன்.. அவன் இல்லை”
“அவனை அனுப்பிடலாமா சார்?”
“மனோஜை அவன் கொலை செய்யலை ஆனா கொலை முயற்சி செய்து இருக்கிறான்.. ஸோ இன்னைக்கு பயத்துலேயே இங்கே இருக்கட்டும்.. அப்பனா தான் இனி அடங்கி இருப்பான்”
“ஓகே சார்.. ஆனா பிரசாத் மேல கொஞ்சம் டவுட் இருக்கத் தான் செய்யுது”
சந்தோஷ், “ஆமா சார்.. நீங்க சொன்ன மூணு காரணமும் சரியாத் தான் இருக்குது”
வெற்றிவேல், “ஆனா அவன் இல்லை”
“சார்!!” என்று இருவரும் ஒரே நேரத்தில் கூற,
வெற்றிவேல், “மித்ராணி பத்தி சரியா கணிச்சு வச்சிருக்கான்.. ஸோ அந்த ரீசன் இல்லை.. மித்ராணி மேல உண்மையான காதல் இருப்பதை பார்த்தால் அவ நல்லா இருக்கணும் னு தான் நினைப்பான் ஸோ புகழ்வேந்தனை மாட்டி விட சான்ஸ் ரொம்ப கம்மி.. சொத்தை காரணமா சொன்னதும் சரி வராது.. ஏன்னா அவங்க நிலைமையே இப்போ சரிஞ்சு தான் இருக்குது.. சேட்-டை போய் பார்த்ததே பண உதவிக்காகத் தான் இருக்கும்.. மீதம் இருக்கிறது பதவி.. அது கூட இவன் அழுத்திச் சொன்னா மனோஜ் கேட்டுகிற டைப்பா தான் தெரியுது.. ஸோ பிரசாத் கொலை செய்திருக்க வாய்ப்பு ரொம்ப ரொம்ப கம்மி தான்”
‘அடுத்து என்ன!’ என்பது போல் அர்ஜுனும் சந்தோஷும் பார்க்க,
வெற்றிவேல், “நாம ஒன்னு மிஸ் பண்ணிட்டோம்” என்றான்.
அர்ஜுனும் சந்தோஷும் ‘என்ன?’ என்பது போல் பார்க்க,
வெற்றிவேல், “நேத்து டிராபிக் சிக்னல் புட்டேஜ்ஜஸ் மட்டும் தான் பார்த்தோம்” என்று நிறுத்தி இருவரையும் பார்க்க,
சந்தோஷ், “புகழ்வேந்தன் டவுன்ஷிப் போற வழியில் இருக்கும் கேமரா புட்டேஜ் எல்லாத்தையும் செக் பண்ணலை.. வழியில் இருக்கிற வீடு கடையில் கூட சிசிடிவி கேமரா இருக்கும்”
“எஸ்.. எதையும் மிஸ் பண்ணாம செக் பண்ணா, நிச்சயம் ஏதாவது க்ளு கிடைக்கும் சார்” என்று அர்ஜுன் பிரகாசித்த முகத்துடன் கூற,
“கம்மான் லெட்ஸ் மூவ்” என்றபடி வெற்றிவேல் எழுந்தான்.
அருஜுன், “சார் பிரசாத்?”
“வந்து பார்த்துக்கலாம்” என்றபடி அவன் கிளம்ப, சந்தோஷும் அர்ஜுனும் அவனுடன் கிளம்பினர்.
வெற்றிவேல் அர்ஜுனைப் பார்த்து, “நீ உன்னோட பைக்கில் வா.. தேவைப்பட்டால் ஸ்ப்ளிட்-அப் ஆக வசதியா இருக்கும்”
“ஓகே சார் பட் எங்க இருந்து ஸ்டார்ட் பண்ண?”
“SK இண்டஸ்ட்ரீஸ் மெயின் ஆபீஸ்ஸில் இருந்து ஸ்டார்ட் பண்ணலாம்”
“ஓகே சார்” என்று கூறி அர்ஜுன் அவனது இருசக்கர வண்டியில் கிளம்ப, வெற்றிவேலும் சந்தோஷும் வெற்றிவேலின் நான்கு சக்கர வண்டியில் கிளம்பினர். சந்தோஷ் வண்டி ஓட்ட, வெற்றிவேல் அவன் அருகில் அமர்ந்து இருந்தான். மூவரும் சாதாரண உடையில் தான் இருந்தனர்.
வண்டியில் சென்றுக் கொண்டிருந்த போது சந்தோஷ், “எதுக்கு சார் மெயின் ஆபீஸ்ஸில் இருந்து பார்க்கணும் னு சொல்றீங்க?”
“காரணமா தான்”
“கொலைகாரனை கண்டு பிடிச்சிட்டீங்க தானே சார்?”
“சந்தேகம் தான் இருக்குது பட் அது தப்பாகாது”
“யாரு சார்?”
“ஆதாரத்தைத் தேடி தான் இப்போ போயிட்டு இருக்கோம்.. கிடைத்ததும் சொல்றேன்” என்றபோது வெற்றிவேலின் கைபேசி சிணுங்கியது. அழைத்தது அவனது அன்னை.
அழைப்பை எடுத்தவன், “அம்மா.. வீட்டுக்கு வந்து பேசுறேன்” என்றுவிட்டு அழைப்பை துண்டிக்கப் போக,
மாலதி, “நேத்தும் இதை தான் டா சொன்ன.. இதோ வீட்டுக்கு வந்துட்டே இருக்கிற”
“ப்ச்.. அம்மா முக்கியமான கேஸ்.. குற்றவாளியை நெருங்கிட்டோம்.. டிஸ்டர்ப் பண்ணாதீங்க.. நான் இன்னைக்கு கண்டிப்பா வீட்டுக்கு வருவேன்”
மாலதி ஏதோ சொல்லப் போக அவரிடமிருந்து கைபேசியை பிடுங்கிய சுந்தர்ராஜன், “வெற்றி வேலையை முடிச்சிட்டு வா” என்றுவிட்டு அழைப்பை துண்டித்தார்.
மாலதி சுந்தர்ராஜனை முறைக்க, சுந்தர்ராஜன், “வேலைக்கு நடுவில் அவனை ஏன் தொந்தரவு செய்ற?”
“நாளைக்கு மாப்பிள்ளையோட அக்கா வந்து யாழினியை கூட்டிட்டு போய் நகை வாங்க போறதை சொல்ல வேணாமா? அப்பறம் இன்னைக்கும் வீட்டுக்கு வரமாட்டான்..”
“அவங்க யாழினியைத் தானே பார்க்க வராங்க.. வெற்றி எதுக்கு?”
“என்னங்க பேசுறீங்க? போன முறை சம்பந்தி வந்தப்பவும் அவன் இல்லை.. அதை அவங்க ஜாடையா சொன்னாங்க தானே!”
“கல்யாணம் னா சின்ன சின்னதா இப்படி இருக்கத் தான் செய்யும்.. இதையெல்லாம் அவனிடம் கொண்டு போகாத”
“கல்யாணம் கிட்டக்க நெருங்கிட்ட இந்த நேரத்தில் கூட அவன் இல்லைனா எப்படி?”
“அவன் வேலை அப்படி.. தெரிந்தும் ஏன் புலம்புற?”
“என்னவோ போங்க.. அவனோட கல்யாண சடங்கிலாவது கலந்துக்குவானா னு தெரியலை”
“அதெல்லாம் பார்த்துப்பான்”
“என்னத்தை பார்த்துப்பான்? கொள்ளைக்காரனையும் கொலைகாரனையும் தான் பார்த்துப்பான்”
“சரி சரி.. வா.. நாம வேலையைப் பார்ப்போம்”
ஒரு மணி நேரத் தேடலுக்கு பிறகு வெற்றிவேல் எதிர்பார்த்த துருப்புச் சீட்டு அவனுக்குக் கிடைத்தது.
கிருபாகரன் அலுவலகத்தில் இருந்து புகழ்வேந்தன் டவுன்ஷிப் நோக்கி பயணித்தவர்கள் எழுவது சதவித தூரத்தை கடந்த நிலையில் ஒரு வீட்டில் சற்று மறைவாக இருந்த மறைகாணி பதிவில் சிக்கினான் மனோஜ் வண்டியை ஓட்டிச் சென்றவன்.
வீடு, கடை என்று வழியில் தென்பட்ட ஒவ்வொரு மறைகாணி பதிவுகளையும் பார்த்துக் கொண்டே வந்தனர். முதல் இரண்டு பதிவுகளில் மனோஜ் வண்டி தென்படவே இல்லை.. மூன்றாவது பதிவில் இருந்து தான் மனோஜ் வண்டி செல்வது பதிவாகி இருந்தது. பெரிதாக துப்பு கிடைக்கவில்லை என்றாலும் ஒவ்வொரு பதிவிலும் மனோஜ் வண்டி சென்ற நேரத்தை குறித்துக் கொண்டே வந்தவர்கள், ஐந்தாவதாக பார்த்த பதிவில் மனோஜ் வண்டியின் ஓட்டுனர் பக்கம் இருக்கும் கண்ணாடி இறக்கப்பட ஓட்டுனர் முகம் ஒரு நொடி தெரிந்தது. சிகரெட் துண்டை வெளியே போட கண்ணாடியை இறக்கி இருந்தான். சரியாக அந்த இடத்தில் பதிவை நிறுத்தி ஓட்டுனரை பார்த்த வெற்றிவேலின் இதழோரம் வெற்றிப் புன்னகை அரும்பியது.
வெற்றிவேலின் புன்னகையை பார்த்த சந்தோஷ், “இவனை தெரியுமா சார்?”
“கஜா.. இவனோட பலம் எக்ஸ் எம்.எல்.ஏ XXX-யோட சப்போர்ட்”
“சார்! அன்னைக்கு நீங்க இவனை பத்தி தானே கேட்டீங்க?”
(மாலினியின் பிறந்தநாள் அன்று, அதாவது பெண் பார்த்த அன்று வெற்றிவேல் ஒரு ரௌடி கூட்டத்துடன் சண்டையிட்டானே! அந்த ரௌடி கஜா தான் மனோஜ் வண்டியை ஓட்டிச் சென்றவன்.)
“அவனே தான்.. விசாரிக்கிற விதத்தில் விசாரித்தால் கொலைகாரன் யாருனும் எப்படி கொலை நடந்ததுனும் சொல்லிடுவான்” என்றவன் கைபேசியை எடுத்து அதை புகைப்படம் எடுத்துக் கொண்டான்.
பின் அர்ஜுனை பார்த்து, “இதை ஸ்க்ரீன்-ஷாட் எடுத்து பிரிண்ட் போடு.. இந்த புட்டேஜ் எடுத்துக்கோ.. தென் டவுன்ஷிப் வரை போய் வேற ஏதும் புட்டேஜ்ஜில் நமக்கு க்ளு கிடைக்குதா னு பார்த்து அப்டேட் பண்ணு.. நானும் சந்தோஷும் ஸ்டேஷன் போறோம்”
அர்ஜுன், “ஓகே சார்” என்றதும் வெற்றிவேலும் சந்தோஷும் கிளம்பத் தயாராக அந்த வீட்டு உரிமையாளர் தயங்கியபடி, “சார்” என்று அழைத்தார்.
வெற்றிவேல், “கவலைப் படாதீங்க.. உங்க வீட்டில் இருந்து தான் புட்டேஜ் எடுத்தோம் னு யாருக்கும் தெரியாது.. உங்களை இந்த கேஸ் உள்ளே இழுக்க மாட்டேன்.. இப்படி ஒரு விஷயம் நடந்ததை நீங்களும் யார் கிட்டயும் சொல்லாதீங்க”
“ஊருக்கு போயிருக்க என் வைப் கிட்ட கூட சொல்ல மாட்டேன் சார்”
மென்னகையுடன் அவர் கையைக் குலுக்கிய வெற்றிவேல், “தன்க் யூ சார்” என்று கூறி கிளம்பினான்.
சந்தோஷ் ஓட்டுனர் இருக்கையில் அமரப் போக, வெற்றிவேல், “நான் ஓட்டுறேன்” என்றான்.
“சார்?”
“உனக்கு போன் பேசுற வேலை இருக்குது”
“ஓகே சார்” என்றபடி அவன் மறு பக்கம் சென்று அமர வெற்றிவேல் ஓட்டுனர் இருக்கையில் அமர்ந்து வண்டியை கிளப்பினான்.
வண்டி கிளம்பியதும் சந்தோஷ், “நல்லவேளை இப்போ வந்தோம்.. அரை மணி நேரம் கழிச்சு வந்திருந்தா அவர் ஊருக்குக் கிளம்பி இருப்பார் நாம மிஸ் பண்ணியிருப்போம்”
“ஹ்ம்ம்”
“சார் கஜாவை அரெஸ்ட் பண்ணா அந்த எக்ஸ் எம்.எல்.ஏ பிரச்சனை பண்ண வாய்ப்பு இருக்குது”
“அரெஸ்ட் பண்ணா தானே!” என்று கூறி வெற்றிவேல் புன்னகைக்க, சந்தோஷ் வெற்றிவேலின் திட்டம் புரிந்து சிரித்தான்.
வெற்றிவேல், “விவேக்கு கஜா போட்டோ அண்ட் அட்ரெஸ் வாட்ஸ்அப் பண்ணு.. கிருபாகரன் ஆள் மாதிரி தனியா பேசி அவனை தனியா நம்ம இடத்துக்கு கூட்டிட்டு வரச் சொல்லு……….”
“சார் அப்போ கொலை செய்தது கிருபாகரன் தானா?”
வெற்றிவேல் பார்த்த பார்வையில், “சாரி சார்” என்றவன் அமைதியாகிவிட வெற்றிவேல் தொடர்ந்தான்.
“அங்க ஏதும் பிரச்சனை ஆச்சுனா விவேக்கை வேற ஏதாவது காரணம் சொல்லி வெளியே வந்திரச் சொல்லு ஆனா நாம அரெஸ்ட் வாரென்ட்டுடன் அங்க போறவரை கஜாவை கண்காணிக்கச் சொல்லு.. நம்ம இடம் விவேக்கு தெரியுமா?”
“தெரியாது சார்”
“அட்ரெஸ் அண்ட் டோரோட நம்பர் லாக் டிடேல்ஸ் இப்போ சொல்லிடு அண்ட்………..”
“கான்பிடென்ஷியலா இருக்கும் சார்”
“கஜா அட்ரெஸ் நோட் பண்ணிக்கோ” என்றவன் முகவரியைக் கூற, சந்தோஷ் தனது கைபேசியில் குறித்துக் கொண்டான்.
வெற்றிவேல் தலை அசைக்கவும் சந்தோஷ் விவேக்கை அழைத்து வெற்றிவேல் சொன்னதைக் கூறினான்.
வெற்றிவேல், “இப்போ அர்ஜுனுக்கு போன் பண்ணி வேலை முடிஞ்சதும் நம்ம இடத்துக்கு வரச் சொல்லு”
அர்ஜுனுடன் பேசி முடித்ததும் சந்தோஷ், “சார்.. மெயின் ஆபீஸ்ஸில் இருந்து டோல் கேட் போறதுக்கு அரை மணி நேரம் தான் ஆகும்.. மனோஜ் 6.45க்கு கிளம்பி இருக்கார் ஆனா அவர் வண்டி டோல் கேட் கிராஸ் பண்ணப்ப 7.40 அண்ட் ஆபீஸ்ஸில் இருந்து வீட்டுக்கு போற மாதிரி ரைட் டுர்ன் பண்ணி தான் போனதா செக்குரிட்டி சொன்னான்.. ஆனா டவுன்ஷிப் லெப்ட் சைட் போகணும்”
“வீட்டுக்கு போற மாதிரி போய் மனோஜ் செல்லை ஒரு இடத்தில் ஸ்விட்ச் ஆப் பண்ணி போட்டுட்டு டிராபிக் சிக்னல் இல்லாத சந்து ரோடா பார்த்து போய் டவுன்ஷிப் போற மெயின் ரோட்டை பிடிச்சு இருக்கணும் அதான் பஸ்ட் ரெண்டு கேமராவில் மனோஜ் வண்டி இல்லை”
“அப்போ ஆபீஸ்ஸில் வச்சு தான் கொலை நடந்துது னு சொல்றீங்களா சார்? ஆனா எங்க? எப்படி நடந்து இருக்கும்? எதை வச்சு சார் கிருபாகரன் தான் கொலைகாரன் னு சொல்றீங்க?”
“விசாரிச்சவங்களில் விசாரணையின் போது இவர் கிட்ட தான் கம்மியான ஐ(eye) காண்டக்ட் அண்ட் அவரோட ஆபீஸ் சிசிடிவி புட்டேஜ்ஜஸ் வச்சு தான் சொல்றேன்.. கொலை செய்தது கிருபாகரன் தான்.. ஆனா கொலை எப்படி நடந்தது? எப்படி பாடியை டிஸ்போஸ் பண்ணாங்க னு கஜா தான் சொல்லணும்”
“அந்த புட்டேஜ்ஜஸ் எல்லாம் நானும் பார்த்தேன்.. எனக்கு எதுவும் அப்படி தெரியலையே சார்?”
வெற்றிவேல் மென்னகையுடன், “சாதாரணமா பார்த்தா எதுவும் வித்தியாசமா தெரியாது”
சந்தோஷ் அமைதியாக இருக்க வெற்றிவேல் தொடர்ந்தான்.