“இந்த உருட்டல் மிரட்டல் எல்லாம் என் கிட்ட வச்சிக்காத. இப்ப உனக்கு என்ன வேணும்? அதைச் சொல்லிட்டு கிளம்பு. வீட்டுக்கு கிளம்புர நேரத்துல வந்து கழுத்தை அறுத்துகிட்டு? எங்க கிட்ட தான் இடம் இல்லைன்னு சொல்லிட்டேன்ல?”, என்று கேட்டான் கிரி.
“எனக்கு உன் இடமெல்லாம் வேண்டாம்”
“ஓ அப்ப எதுக்கு இப்ப இங்க வந்துருக்க? வேற என்ன வேணும்?”
“எனக்கு நீ தான் வேணும்”
“வாட், என்னைக் கொடுத்தா உனக்கு பெரிய ஆபர் ஏதும் வரும்னு சொல்லிருக்காங்களா? அந்த அளவுக்கு நான் எல்லாம் வொர்த் இல்லையே’, என்று நக்கலாக சொன்னான் கிரி. அந்த திமிரை அவனுடைய நக்கலை ரசித்தான் இன்பன். தன்னுடைய தங்கைக்கு ஏற்ற ஜோடி இவன் தான் என்று அவன் மனம் அடித்துச் சொல்லியது. கூடவே இப்படி ஒருவன் தான் தனக்கு மச்சானாகவும் இருக்க முடியும் என்று அவன் எண்ணிக் கொண்டான்.
அவர்கள் இடத்தை எழுதி வாங்கப் போன போது சின்ன பையன் போன்ற தோற்றத்தில் மீசை கூட முளைக்காத பால் வடியும் பிள்ளை போல நின்றவனா இந்த கிரி என்று பிரம்மிப்பாக இருந்தது.
அன்று அமைதியாக இருந்தது என்ன? இன்னைக்கு இப்படி பந்தாடுறது என்ன? யாரு இவன்? அந்த இந்துவோட தம்பியாச்சே? அவ காத்து இவனுக்கு மட்டும் வீசாமலா இருக்கும்? எப்படியோ இந்த அஞ்சலி லவ் பண்ணித் தொலைச்சாலும் நல்ல ஆளாத் தான் பிடிச்சிருக்கா என்று எண்ணிக் கொண்டான் இன்பன்.
அவன் அமைதியாக யோசித்த படி இருக்கவும் “ஹலோ சார், நீங்க தூங்குறதை பாக்க தான் என்னை வரச் சொன்னீங்களா?”, என்று சொடக்கிட்டு அழைத்து கேட்டான் கிரி.
“நான் இப்ப அஞ்சலிக்கு அண்ணனா பேச வந்துருக்கேன்”, என்று தணிந்து பேசினான் இன்பன்.
“ஓஹோ அவ காதல்னு சொல்லி பண்ணிக்கிட்டு இருக்குற பைத்தியக்காரத் தனத்தை உங்க வீட்ல சொல்லிட்டாளா? குட். சரி இப்ப அதுக்கு நான் என்ன பண்ணனும்?”
“நீ அவளைக் கல்யாணம் பண்ணனும்”
“சத்தியமா பண்ண முடியாது”
“ஏன்?”
“ஏன்னா என்ன சொல்ல? அதுக்கு நிறைய காரணம் இருக்கு. முதல்ல அவ உன்னோட தங்கை. ரெண்டாவது அவளை எனக்கு பிடிக்கலை”
“பொய்”
“எது பொய்?”
“அவளைப் பிடிக்கலைன்னு நீ சொல்றது பொய்”
“உனக்கு அதை புரிய வைக்கணும்னு எனக்கு எந்த அவசியமும் இல்லை ஓகே. சொல்ல வந்ததைச் சொல்லிட்டேன்னா கிளம்பிட்டே இரு”
“எப்ப கல்யாணத்தை வச்சிக்கலாம்?”
“அது உன் தங்கச்சிக் கிட்டயும் அவளைக் கல்யாணம் பண்ணிக்கப் போற மாப்பிள்ளைக் கிட்டயும் போய்க் கேளு. எதுக்கு என் கிட்ட கேக்குற?”
“நீ தானே அவளுக்கு மாப்பிள்ளை. அதான் உன் கிட்ட கேக்குறேன்”
“அவ உன் மேல உயிரையே வச்சிருக்கா கிரி. நீ இல்லைன்னா அவ செத்துருவா. என் மேல உள்ள கோபத்தில் அவளைப் பழி வாங்கிறாத. அவளுக்காக பாரு பிளீஸ்”
“நீ பாத்தியா? ஒரு பொண்ணுன்னு எங்க அக்காவுக்கு நீ பாவம் பாத்தியா? அவளைக் கடத்தி அவளை என்ன நிலைக்கு நீ ஆளாக்கின? உன் வீட்டுப் பொண்ணுன்னா பாவம். மத்தவங்கன்னா உனக்கு ஈனா வானாவா?”
“தப்பு தான். அதுக்கு நான் மன்னிப்பு கேக்குறேன்”
“வாரே வா. இந்தியா முழுக்க பிரபலமா இருக்குற இளம் தொழில் அதிபன் இன்பன் என் கிட்ட மன்னிப்பு கேக்காரா? அதுவும் தன்னோட தங்கைக்காக? உன் தங்கை மேல வச்சிருக்குற பாசத்தை காட்ட யாருக்கும் தலை வணங்காத நீ என் கிட்ட மன்னிப்பு கேக்குற? அதே பாசம் என் அக்கா மேல வச்சிருக்குற நான் அவளைக் காயப் படுத்தி அவ வாழ்க்கையை அழிச்ச உன்னை மன்னிச்சிறணுமா? வேடிக்கையா இல்லை?”
“இப்ப முடிவா என்ன தான் கிரி சொல்ல வர?”
“முடிவா? சொல்லலாமே. என் முடிவு என்னன்னா என் மூஞ்சுலே இனி முழிக்காத ஓகே. இது தான் என்னோட முடிவு”
“நீ இந்த கல்யாணத்துக்கு சம்மதிக்கலைன்னா நான் போலிஸ்க்கு போவேன் கிரி”
“வந்ததுல இருந்து போலீஸ் போலிஸ்ன்னு பூச்சாண்டி காட்டிட்டு இருக்க? சரி எதுக்கு போலிஸ்க்கு போவ? சொல்லு கேப்போம்”
“உன்னால தான் அவ விஷம் சாப்பிட்டுட்டா. உயிருக்கு போராடிட்டு இருந்தவளை கஷ்டப் பட்டு இப்ப தான் காப்பாத்திருக்கோம்”, என்று கசங்கிய முகத்துடன் சொன்னான் இன்பன்.
“வாட்? அஞ்சலி விஷம் சாப்பிட்டாளா”, என்று அதிர்ந்து போய்க் கேட்டான் கிரி. அவன் அதிர்வையும் தவிப்பையும் கண்டு கொண்டான் இன்பன். “இவனுக்கு என் தங்கை மேல அன்பிருக்கு. என்னால தான் அதை மறைக்குறான்”, என்று எண்ணிக் கொண்டான் இன்பன்.
“ஆமா, உங்க வீட்டுக்கு வந்து பேசிட்டு வந்தவ எலி மருந்தை வாங்கிட்டு வந்து சாப்பிட்டுட்டா. அதிகமா சாப்பிட்டதுனால ரத்ததுல கலந்துட்டு. ஆஸ்பத்திரில சீரியஸா இருந்தா”
“இப்ப அவளுக்கு எப்படி இருக்கு?”
“கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி தான் கண்ணு முழிச்சா. அவளை வீட்ல விட்டுட்டு என்ன காரணம்னு அவ கிட்ட கேட்டப்ப தான் அவ உன்னைப் பத்தி சொல்றா. அதான் உன்னைப் பாக்க வந்தேன். எனக்கு என் தங்கச்சி சந்தோஷம் முக்கியம். அதனால உங்க கல்யாணம் நடக்கணும்”, என்றான் இன்பன்.
கிரி ஏதோ யோசித்த படி இருக்கவும் “அப்படி நடக்கலைன்னா நீ தான் என் தங்கச்சியை காதலிச்சு ஏமாத்திட்டேன்னு போலிஸ்ல உன்னைப் பிடிச்சு கொடுப்பேன்”, என்றான் இன்பன்.
அஞ்சலிக்கு ஒன்றும் இல்லை என்று நிம்மதியான கிரி “ஹா ஹா சந்தோஷமா போலீஸ் கிட்ட சொல்லு. என்னை வந்து போலீஸ் பிடிச்சிட்டு போகட்டும்”, என்று தெனாவெட்டாய் சொன்னான்.
“உன் வாழ்க்கையே போயிரும் கிரி. எத்தனை வருஷம் ஆனாலும் உன்னை வெளிய வர விடாம பண்ணிருவேன்”
“என் வாழ்க்கையே உன்னால போனாலும் உன் தங்கையை மட்டும் ஒரு நாளும் கல்யாணம் பண்ண மாட்டேன். அதுக்கு எனக்கு ஜெயில் தண்டனையே மேல்”, என்று கிரி உறுதியுடன் சொன்னதும் அதிர்ந்து போனான் இன்பன்.
“நீ இந்த அளவுக்கு நிராகரிக்கிற அளவுக்கு என் தங்கச்சிக் கிட்ட என்ன குறை டா கண்ட?”
“அவ கிட்ட எந்த குறையும் இல்லை. அவ தேவதை. அவளை மாதிரி பொண்ணு இந்த உலகத்துலே இருக்க மாட்டா”, என்று பெருமையாக சொன்னான் கிரி.
அவனைக் குழப்பமாக பார்த்த இன்பன் “அப்புறம் ஏன் அவளை வேண்டாம்னு சொல்ற?”, என்று கேட்டான்.
“ஏன்னா அவ சாத்தான் குணம் படைச்ச உன்னோட தங்கை”
“கிரி”
“ஆமா அவ உன்னோட தங்கையா இல்லாம போயிருந்தா எப்பவோ அவளை நான் கல்யாணம் பண்ணிருப்பேன். போலீஸ்ல என் மேல கம்ப்லைண்ட் கொடுக்குறதா இருந்தா நீ தாராளமா கொடுக்கலாம். அது உன் இஷ்டம். சந்தோஷமா ஜெயிலுக்கு போறேன். இதுக்கு மேல உன் கிட்ட பேச எனக்கு விருப்பம் இல்லை”, என்று சொல்லி விட்டு அங்கிருந்து சென்று விட்டான் கிரி.
இத்தனை நாள் மற்றவர்களை தலையால் தண்ணீர் குடிக்க வைத்தவனை இன்று கிரி அதிர்வடையச் செய்து விட்டான். அடுத்து என்ன செய்ய என்று தெரியாமல் செயல் இழந்து நின்று விட்டான் இன்பன்.
அவன் செயல் இழந்து நின்றது ஒரு நொடி தான். அதன் பின் பழைய கம்பீரம் அவனிடத்தில் மீண்டிருந்தது. அவனுக்கு அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று ஒரு நொடியில் விளங்கி விட்டது. அவனுக்கு தான் இந்து என்ற அடிமை இருக்கிறதே. அவளை வைத்து கிரியை சம்மதிக்க வைக்க வேண்டும் என்று முடிவு எடுத்து விட்டான்.