“அந்த பையனைப் பாக்க தான் காலைல கிளம்பி போனியா டி? அப்புறம் எதுக்கு டி பேஷியல் எல்லாம் பண்ணிட்டு வந்த?”, என்று கேட்டாள் அம்பிகா.
“அவன் வீட்ல உள்ளவங்க கிட்ட பேச போனேன் மா. திரும்பி வரும் போது நீ ஏன் பேஷியல் பண்ணலைன்னு நீ என்னைக் கேட்டா என்ன சொல்ல? அதான் பண்ணிட்டு வந்தேன்”, என்று சொல்லி சிரிக்க மகளை முறைத்துப் பார்த்தாள் அம்பிகா.
“இடைல அந்த எலி மருந்தையும் வாங்கிருக்க அப்படித் தானே டா?”, என்று இன்பன் கேட்டதும் பதில் சொல்ல முடியாமல் தலை குனிந்த அஞ்சலி “சாரிண்ணா”, என்றாள்.
“சரி இனி இப்படி கோழை மாதிரி நீ செய்ய மாட்டேன்னு நம்புறோம். அப்புறம் அவங்க வீட்ல உள்ளவங்க கிட்ட பேசினியா? நீ கிரியை விரும்புறதை அவங்க கிட்ட சொன்னியா? அவங்க எல்லாரும் என்ன சொன்னாங்க? நீ பேசினப்ப கிரி அங்க இருந்தானா?”, என்று கேட்டான் இன்பன்.
“போனேன் அண்ணா. கிரியும் அங்க தான் இருந்தான். எதுக்கு வீட்டுக்கு வந்தேனு கேட்டான். நான் உன்னைப் பாக்க வரலைன்னு சொன்னேன். அப்புறம் அவங்க அக்கா வந்து என்னை உள்ளே கூட்டிட்டு போனாங்க. அந்த அக்காவும் தாத்தாவும் என் கிட்ட நல்லா தான் பேசினாங்க. நான் கிரியை விரும்புறேன்னு சொன்னதும் அவங்களும் என்னை அந்த வீட்டுக்கு மருமகளா வர சம்மதம்னு சொன்னாங்க”
“பரவால்லயே. அப்புறம் என்ன? அவங்க சரின்னு சொன்னதுக்கு அப்புறம் அந்த கிரி உன்னை வேண்டாம்னு சொன்னானா? அதான் நீ சாகத் துணிஞ்சியா அஞ்சலி?”
“இல்லைன்னா அந்த அக்காவும் அந்த தாத்தாவும் நான் உன்னோட தங்கைன்னு சொன்னதுக்கு அப்புறமா வீட்டை விட்டு வெளியே போ ன்னு சொல்லிட்டாங்க. இந்த கல்யாணம் நடக்காதுன்னு சொல்லிட்டாங்க. எங்க நிம்மதியை கெடுக்கணும்னு தான் எல்லாரும் நினைப்பீங்களான்னு அந்த தாத்தா கேட்டார். நீ அவங்களை என்னண்ணா பண்ணின? அவங்க ஏன் உன் பேரைக் கேட்டாலே வெறுக்குறாங்க?”, என்று அஞ்சலி கேட்க இன்பனுக்கும் திகைப்பு தான்.
“எனக்கு நிஜமாவே அவங்க யாருனே தெரியலையே அஞ்சலி. அவங்க யார்? என்னை எப்படி அவங்களுக்கு தெரியும்?”
“நான் பல தடவை கிரி கிட்ட கேட்டதுக்கு அவன் உன் கிட்ட கேக்கச் சொன்னான். நீ தான் சொல்லணும்”
“என் கிட்டயா? சரி அவங்க தாத்தா பேர் என்ன? கிரியோட அக்கா பேர் என்ன?”
“அவங்க தாத்தா பேர் தெரியாது. ஆனா அந்த அக்கா பேர் இந்து. இந்துமதின்னு நினைக்கிறேன்”, என்று அஞ்சலி சொன்னதும் திகைத்துப் போனான் இன்பன். அடுத்த நொடி அவர்கள் யார் என்று அவனுக்கு தெளிவாக புரிந்து போனது.
தான் செய்த காரியம் இப்போது தன்னுடைய தங்கையின் வாழ்க்கையை திருப்பி அடிக்கும் என்று அவன் கனவில் கூட எண்ண வில்லை. இப்போது என்ன செய்வது என்று திகைத்த படி அமர்ந்து விட்டான்.
அவன் திகைத்த முகத்தையே அனைவரும் கேள்வியாகப் பார்க்க அவர்களுக்காக நொடியில் தன்னை சரி செய்து கொண்டவன் “இப்ப தான் எனக்கு நினைவு வருது அஞ்சலி. அவங்க ஊர்ல காத்தாடி பிளாண்ட் போடுறப்ப அவங்க நிலத்தை நான் கேட்டேன். அப்ப சின்னதா பிரச்சனை வந்துச்சு. அவங்க நிலத்தடி நீரை உறிஞ்சிறுவீங்கன்னு என் கிட்ட சத்தம் போட்டாங்க. அதனால நானும் அவங்க கிட்ட வாங்கலை. ஆனா மத்தவங்க கிட்ட கேட்டதுக்கும் அவங்க கொஞ்சம் சத்தம் போட்டாங்க. நம்ம மூர்த்தியும் அவங்களை கொஞ்சம் மிரட்டினான். அதனால தான் அவங்களுக்கு கோபமா இருக்கும். இது சின்ன விஷயம் தான் மா. அவங்க கிட்ட உனக்காக நான் மன்னிப்பு கேட்டுக்குறேன். நான் செஞ்சதும் தப்பு தானே? ஆனா அதெல்லாம் நான் அந்த கிரியைப் பத்தி விசாரிச்சதுக்கு அப்புறம் தான். ஏன்னா என் தங்கை வாழ்க்கை எனக்கு முக்கியம் மா. அதனால அந்த பையனைப் பத்தி, அவன் குடும்பத்தை பத்தி எல்லாம் விசாரிச்சீட்டு தான் உன் காதலுக்கு சம்மதம் சொல்வேன்”, என்று பாதி உண்மையும் பாதி பொய்யும் கூறி அவர்களைச் சமாளித்தான்.
“சரிண்ணா, ரொம்ப தேங்க்ஸ் அண்ணா. நீ கிரி பத்தி விசாரிச்சிக்கோ. கண்டிப்பா உனக்கு கிரியை பிடிக்கும். அவன் ரொம்ப நல்லவன். அப்புறம் நீ அவங்க கிட்ட சாரி எல்லாம் எனக்காக கேக்க வேண்டாம். கொஞ்சம் சமாதானமா பேசு போதும். எனக்கு கிரியை தவிர வேற யாரையும் பிடிக்காதுண்ணா. கிட்ட தட்ட நாலு வருஷ காதல். அதை என்னால மறக்க முடியாது. நீ தான் எங்களைச் சேத்து வைக்கணும்”, என்று சொல்லி அவன் நெஞ்சில் சாய்ந்து கொண்டாள் அஞ்சலி.
தங்கையை பாசமாக அனைத்துக் கொண்ட இன்பனுக்கு இந்த பிரச்சனையை எப்படித் தீர்க்க என்று குழப்பமாக இருந்தது. கண்டிப்பாக இது எளிதில் முடியக் கூடிய விஷயம் இல்லை என்று அவன் ஆறாம் அறிவு உறுதியாகச் சொல்லியது.
சாதாரண இடத்தைக் கேட்டதுக்கே அவர்கள் பிரச்சனை செய்ததைக் கண்டானே. அப்படி இருக்க இது வாழ்க்கை பிரச்சனை ஆயிற்றே. தன்னுடைய தங்கை என்பதற்காக மனதுக்கு பிடித்த பெண்ணையே வேண்டாம்னு சொன்ன அந்த கிரி எப்படி இதற்கு சம்மதிப்பான். அது மட்டுமில்லாம அந்த இந்துவை கடத்தி அவளுக்கு கெட்ட பெயர் எல்லாம் வாங்கிக் கொடுத்து இவ்வளவு செய்த என்னை அவர்கள் கட்டாயம் மன்னிக்க மாட்டார்கள். என்னை மன்னிக்க வில்லை என்றால் கட்டாயம் அஞ்சலியையும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.
ஆனால் அஞ்சலி அவன் தான் வேண்டும் என்கிறாள். என்ன செய்ய என்று எண்ணி அவன் மூளையை கசக்கிப் பிழிந்தான். பின் முதலில் கிரியை சந்தித்துப் பேச வேண்டும் என்று எண்ணிக் கொண்டு தங்கையை ஓய்வெடுக்கச் சொல்லி விட்டு வெளியே கிளம்பிப் போனான்.
தங்கை வேலை பார்க்கும் ஆஃபிஸ்க்கு சென்று கிரியைப் பார்க்க வேண்டும் என்று சொல்ல சிறிது நேரத்தில் அங்கு வந்தான் கிரி. கிரியைப் பார்த்ததும் இன்பனுக்கு திருப்தியாக இருந்தது. தங்கைக்கு ஏற்ற துணையாக கம்பீரத்துடன் அழகுடன் இருந்த அவனை திருப்தியாக பார்த்தான் இன்பன்.
“என்னைப் பாக்க இந்நேரம் அதுவும் ஆஃபிஸ்க்கு யார் வந்திருக்கா?”, என்று எண்ணிக் கொண்டு அங்கே வந்த கிரி சத்தியமாக அங்கே இருந்த இன்பனை எதிர் பார்க்க வில்லை. “நீயா? வந்துருக்குறது நீன்னு தெரிஞ்சா இங்க வந்துருக்கவே மாட்டேன்”, என்று வெறுப்புடன் சொல்லி விட்டு கிரி அங்கிருந்து திரும்பிச் செல்லப் பார்க்க “ஓஹோ, அப்ப போலீஸ் வந்து கூப்பிட்டா வருவியா?”, என்று கேட்டான் இன்பன்.
“போலீஸ்”, என்ற வார்த்தையில் அவனை திரும்பி பார்த்தான் கிரி.
“என்ன போலீஸ்? எதுக்கு போலீஸ்? நீ செஞ்ச படுபாவத்துக்கு நாங்க தான் போலீஸ்க்கு போகணும்”, என்று வெறுப்புடன் சொன்னான் கிரி.
“இவன் வேலைக்கு ஆக மாட்டான். இவனை இவன் வழில தான் அடக்கணும்”, என்று எண்ணிய இன்பன் “போயிருக்க வேண்டியது தானே? என் மேல கேஸ் கொடுத்துருக்க வேண்டியது தானே? நானா உங்களை வேண்டாம்னு சொன்னேன்”, என்று நக்கலாக கேட்டான்.
“இவ்வளவு பிராடு தனம் பண்ணுற நீ போலீசை விலைக்கு வாங்காம இருப்பியா? அப்புறம் எதுக்கு அங்க வேஸ்ட்டா அலைஞ்சிக்கிட்டு?”, என்று அதை விட நக்கலாக கிரி சொல்ல இன்பன் முகம் கருத்தது.
“தெரியுதுள்ள? உன்னால போலிஸ்க்கு போக முடியாது. ஆனா என்னால போலிஸ்க்கு போக முடியும்? நான் போகவா?”
“போ, யாரு உன்னை வேண்டாம்னு சொன்னா?”, என்று தெனாவெட்டாக கேட்டான் கிரி.
“உன் மேல தான் கேஸ் கொடுக்க போறேன். அப்படிக் கொடுத்தேன்னு வை உன் கேரியரே வீணாப் போயிரும்”
“அடுத்தவங்க வாழ்க்கையை அழிக்கிறது உனக்கு தான் கை வந்த கலையாச்சே. இப்ப எதுக்கு என்னை தேடி வந்துருக்க? எங்க கிட்ட சென்னைல எந்த இடமும் இல்லை நீ எழுதி வாங்க. வேணும்னா எங்க தாத்தாவோட நாலு கோமணம் தான் இருக்கு. வேணுமா?”, என்று கிரி சிறு சிரிப்புடன் கேட்டதும் “கிரி”, என்று கத்தினான்.