“ஏன்…. ஏன் இப்படி எங்க நிம்மதியைக் கெடுக்குற? நாங்க உனக்கு என்ன பாவம் செஞ்சோம்?”, என்று குரல் நடுங்க கேட்டாள்.
“ஏன்னா என் தங்கைக்காக நான் என்ன வேணும்னாலும் செய்வேன். யாரை வேணும்னாலும் தூக்குவேன், சாதாரண இடத்தையே உன் கிட்ட இருந்து வாங்க நான் என்னல்லாம் பண்ணினேன்னு உனக்கு தெரியும் தானே? அப்படிப் பட்ட நான் என் தங்கைக்காக என்னல்லாம் செய்வேனு நல்லா யோசிச்சிக்கோ”
அவன் சொன்னது உண்மை என்று தெரியுமாதலால் “இப்ப நான் என்ன செய்யணும்?”, என்று கேட்டாள்.
“குட் பரவால்லயே உடனே புரிஞ்சிக்கிட்டியே. இப்ப முதல்ல கார்ல ஏறு”, என்று சொன்னதும் வேண்டா வெறுப்பாக அவன் காரில் ஏறினாள். அவனும் காரை எடுத்தான். சிறிது தூரம் சென்றதும் காரை நிறுத்தினான்.
அவள் அவனை கேள்வியாக நிமிர்ந்து பார்க்க “உன்னை ஏதாவது பொது இடத்துக்கு கூட்டிட்டு போனா என் இமேஜ் என்ன ஆகுறது? அதனால இப்படி கார் குள்ள இருந்தே பேசலாம்”, என்று நக்கலாக அவன் சொல்ல அவனைத் தீயாக முறைத்தவள் “என்ன பேசனுமோ சீக்கிரம் பேசு. எனக்கு வேலைக்கு போகணும்”, என்றாள்.
“வேற என்ன பேச போறேன்? கிரி அஞ்சலி கல்யாணம் நடக்கணும். அதை நீ தான் நடத்தி வைக்கணும். நீ சொன்னா தான் உன் பாச மலர் கேக்குமே?”
“என்னால கிரி கிட்ட சொல்ல முடியாது. அது அவன் விருப்பம். உன் தங்கையை அவனுக்கு பிடிக்காம கூட இருக்கலாம்”
“அவனுக்கு அஞ்சலியைப் பிடிக்கும்னு உனக்கும் தெரியும் எனக்கும் தெரியும். ஏன் அஞ்சலிகே கூட தெரியும். அதனால அவனை சம்மதிக்க வைக்கணும். அது உன் பொறுப்பு தான். அவன் உன்னால தான் இந்த கல்யாணம் வேண்டாம்னு சொல்றான்”
“அவன் என்னால வேண்டாம்னு சொல்லலை. உன்னால தான் வேண்டாம்னு சொல்றான்”
“சரி நம்ம ரெண்டு பேராலன்னு வச்சிக்கலாம். இப்ப உன் முடிவை சொல்லு. கிரி கிட்ட சம்மதம் வாங்கிருவியா?”
“என்னால முடியாது”
“திருப்பி திருப்பி வில்லன் மாதிரி என்னை மிரட்ட வைக்காத”
“அது என்ன வில்லன் மாதிரின்னு சொல்ற? நீ வில்லனே தான். பின்ன என்ன உனக்கு ஹீரோன்னு நினைப்பா?”
“ஓஹோ உங்க ஊர்ல வில்லன் தான் ஒரு வயசு பொண்ணைக் கடத்தி வச்சு நைட் முழுக்க ஒண்ணும் பண்ணாம அடுத்த நாள் பொண்ணே பூவேன்னு அனுப்புவானா?”, என்று அவன் கேட்டதும் அதிர்ந்து அவனைப் பார்த்தாள் இந்து. பழைய விஷயங்கள் எல்லாம் படமாக கண் முன் ஓட அவள் தளிர் உடல் நடுங்கியது.
அவள் கண்களில் பயத்தைக் கண்டவன் “என் தேவைக்காக கூட உன்னை தொடுற அளவுக்கு என் டேஸ்ட் ஒண்ணும் மட்டம் இல்லை”, என்று இன்பன் சொன்னதும் தன்னுடைய நினைவுகளில் இருந்து வெளியே வந்தவள் அவனை வெட்டவா குத்தவா என்பது போல பார்த்தாள்.
“இந்த கல்யாணம் நடந்தே தீரும். என்னைக்கு உங்க வீட்ல இருந்து எங்க வீட்டுக்கு பொண்ணு பாக்க வரீங்க? அதை மட்டும் சொல்லு. சும்மா முடியாதுன்னு பாட்டுப் பாடிட்டு இருந்தா உன் குடும்பத்தையே உரு தெரியாம அழிச்சிருவேன்”, என்றான் இன்பன்.
“என் தம்பிக்கு உன்னால ஏதாவது ஆனா உன் தங்கையே உயிரோட இருக்க மாட்டா தெரியுமா?”
“அவளை எப்படி காப்பாத்தன்னு எனக்கு தெரியும். நீ உன் தம்பிக்கு நல்ல வாழ்க்கை அமைச்சு கொடுக்க போறியா? இல்லை உன் தம்பி உயிரைக் குடிக்க போறியா? அதை மட்டும் முடிவு பண்ணிக்கோ”
“எனக்கு அஞ்சலி மேல எல்லாம் எந்த வெறுப்போ கோபமோ இல்லை. ஆனா நான் கேவலமா வெறுக்குற ஒரே ஆள் நீ மட்டும் தான். அவங்க கல்யாணம் முடிஞ்சா உன்னை அடிக்கடி பாக்க வேண்டியது வரும். அதுக்கு தான் வேண்டாம்னு சொல்றேன்”, என்று மனதிலிருக்கும் உண்மையை தயங்காமல் அப்படியே சொன்னாள்.
“ஏன் நான் அவ்வளவு கேவலமாவா இருக்கேன். என்னைப் பாத்தா உன் கண்ணு ஒண்ணும் அவிஞ்சிராது”
“ஆள் அழகா இருந்து என்ன பண்ண? உன் மனசு அழுக்கா, அசிங்கமா இருக்கே”
“தேங்க்ஸ் என்னை அழகா இருக்கேன்னு சொன்னதுக்கு”, என்று சிரித்தான் இன்பன்.
நே என்று விழித்தவள் “நான் எப்ப அப்படிச் சொன்னேன்?”, என்று கேட்டாள்.
முதல் முறையாக அந்த முட்டைக் கண்களை ரசித்துப் பார்த்தான் இன்பன். அவளுடைய கண்களுக்குள் ஏதோ ஒரு சுழல் இருப்பது போல அவனுக்கு தோன்றி வைத்தது.
“இப்ப தான சொன்ன. சரி அதை விடு. நீ என்னை ரசிக்கிறதை எல்லாம் நான் மன்னிச்சு விட்டுறேன். இப்ப கல்யாண விசயத்துக்கு வருவோம். நாளான்னைக்கு உன் குடும்பத்தோட எங்க வீட்டுக்கு நீ வரணும். இதை நீயே கிரி கிட்ட சொல்லி அவனை சம்மதிக்க வைக்கணும். அப்புறம் நீங்க வரப் போறதை கிரியை விட்டு அஞ்சலி கிட்ட சொன்னாலும் சரி நீயே அஞ்சலி கிட்ட சொன்னாலும் சரி. நீங்களா வர மாதிரி வரணும். நான் வந்து உன்னைப் பாத்து பேசினது யாருக்கும் தெரியக் கூடாது”
“என்னது நீ என் கிட்ட பேசுனியா? இதுக்கு பேர் பேச்சா? நீ என்னை மிரட்டிட்டு இருக்க?”
“ஏதோ ஒண்ணு. நம்ம ரெண்டு பேருக்குள்ள இருக்குற அந்தரங்கம் வேற யாருக்கும் தெரியக் கூடாது. அவ்வளவு தான்”
“என்னது நம்ம ரெண்டு பேருக்குள்ள அந்தரங்கமா?”, என்று அதிர்ந்து போய் இந்து கேட்க அதிர்ச்சியில் பிளந்திருந்த அவள் இதழ்களில் அவன் கவனம் சென்றது. பலாச் சுளை போல இருந்த அவளுடைய இதழ்களை தொட்டுப் பார்க்க எண்ணம் எழ அந்த எண்ணத்தில் அதிர்ந்து போனான் இன்பன்.
“நான் ஏன் இன்னைக்கு இவ்வளவு தடுமாறிப் போறேன்?”, என்று எண்ணிக் கொண்டு “ஐயோ நமக்குள்ள இருக்குற இந்த சீக்ரட்டான பேச்சு வார்த்தையை தான் சுத்த தமிழ்ல சொன்னேன் மா. உன் கூட எனக்கு என்ன அந்தரங்கம் இருக்க போகுது? சரி சரி உன் போன் நம்பர் கொடு”, என்றான்.
“என் போன் நம்பரா? கண்டிப்பா தர மாட்டேன். உனக்கு அது எதுக்கு?”
“கண்டிப்பா உன் கூட கடலை போட இல்லை. உன் கிட்ட எல்லாம் மனுஷன் பேசுவானா?”
“நீ மனுசனே கிடையாதுன்னு எனக்கு எப்பவோ தெரியும். அப்புறம் கண்டவனுக்கு எல்லாம் என்னோட நம்பரை என்னால கொடுக்க முடியாது”
“சொல்ற பேச்சைக் கேக்க கூடாதுன்னு முடிவுல இருக்க அப்படித் தானே? அப்புறம் நான் ஒண்ணும் கண்டவன் இல்லை மேடம். இனி நாம ரெண்டு பேரும் உறவுக்காரங்க. யாருக்குத் தெரியும், உன் தம்பி கல்யாணம் முடிஞ்சதுக்கு அப்புறம் நீ என்னை ஆசையா மாமானு கூட சொல்ல வேண்டியது வரும்”
“மாமாவா? அதுவும் ஆசையா…. நினைப்பு தான். கண்டிப்பா அப்படிச் சொல்ல மாட்டேன். பொறுக்கின்னு வேணும்னா சொல்லுவேன்”, என்று அவள் சொல்ல கோபத்தில் அவளுடைய கைப்பையை பறித்து அவள் தடுக்க தடுக்க அவளுடைய போனை எடுத்து அதில் தன்னுடைய நம்பரை அழுத்தி கால் செய்தான். ரிங் வந்ததும் அதை அவளிடமே திருப்பிக் கொடுத்தான்.
அவனை ஒன்றும் செய்ய முடிய வில்லையே என்று எண்ணி அவனை முறைத்தாள் இந்து.
“சரி சரி பேச வேண்டியது எல்லாம் பேசியாச்சு. இறங்கு போ”, என்று அலட்சியமாக சொன்னான் இன்பன்.
“கார்ல ஏறச் சொல்லி கெஞ்சினது என்ன? இப்ப திமிரா இறங்க சொல்றது என்ன?”, என்று எண்ணிய இந்து “என்னது இங்கயா? எங்க ஆபீஸ் இங்க இருந்து ரொம்ப தூரம். இங்க எல்லாம் என்னால இறங்க முடியாது”, என்றாள்.
“அதுக்கு நான் என்ன செய்ய முடியும்? உன் ஆபிசையா இங்க தூக்கிட்டு வர முடியும்?”
“நீ ஒரு ஆணியும் புடுங்க வேண்டாம். மரியாதையா என்னை எங்க ஆஃபிஸ்ல விட்டுரு”
“நான் என்ன உனக்கு டிரைவரா?”
“இவ்வளவு நேரம் நீ அதைச் செய்ததா தான் எனக்கு ஞாபகம். கூட கொஞ்ச நேரம் எனக்கு டிரைவரா இருந்தா தப்பில்லை”, என்று அவள் சொன்னதும் இப்போது அவளை முறைத்த படியே காரை எடுத்தவன் “சரியான திமிர் பிடிச்சவ”, என்று எண்ணிக் கொண்டான்.