“என்ன சொன்ன…? உங்கம்மா சொன்னாங்களா..?ஹோ.. இது வேற நடந்திருக்கா..? அப்போ எல்லாத்தையும் பேசி வச்சுட்டு வந்து தான் இங்க என்கிட்டே கத்திட்டு இருக்கியா..? இனி ஒரு தடவை உங்க அம்மாவைப் பத்தி இந்த வீட்ல நீ பேசவே கூடாது. மீறி பேசுன, என்னை மனுஷனா பார்க்க மாட்ட..” என்ற அர்ஜூனின் கோபத்தில் சட்டென்று அடங்கினாள் வராஹினி. அவன் கொஞ்சம் பொறுமையாக இருக்கும் வரை கத்திக் கொண்டிருந்தவள், அவனின் இந்த திடீர் பரிணாமத்தைப் பார்த்து வாயடைத்து நின்றுவிட்டாள்.
அவளின் முகத்தையும் அதில் தெரிந்த பயத்தையும் பார்த்தவன், தன் கோபத்தை குறைக்கப் பார்த்தான். ஆனாலும் கல்பனாவின் முகமும், அவர் பேசிய பேச்சுக்களும் மீண்டும் கண் முன் வர, அவனால் தன்னையும், தன் கோபத்தையும் அடக்க முடியாமல் போனது.
சில நிமிடங்கள் அந்த அறையில் அப்படி ஒரு அமைதி. கோபத்தில் கண்கள் சிவந்து போய் இருந்தவன், ஒரு முடிவுடன் எழுந்து அவள் அருகில் வந்தான்.
“இப்ப உனக்கு என்ன தெரியனும்..? பதில் தானே..? நல்லா கேட்டுக்கோ, உன்னை போனில் மிரட்டுனது நான் தான். உன்னை பாலோ பண்ணினது நான்தான். ரஞ்சனுக்குப் பார்த்த பொண்ணாதான் உன்னை எனக்குத் தெரியும். அதுக்கு முன்ன நான் உன்னை பார்த்தது இல்லை. நான் எல்லாத்தையும் தெரிஞ்சே தான் பண்ணேன்.
அந்த ரஞ்சன் என்னைப் பார்த்து சவால் விட்டான். அவனுக்கு இந்த அர்ஜூன் யாருன்னு புரிய வைக்க வேண்டாம். அதான், உன்னை பிளாக்மெயில் பண்ணி, அந்த கல்யாணத்தை நிறுத்தினேன். நான் நிறுத்தாம இருந்தாலும் கண்டிப்பா நீயே இந்த கல்யாணத்தை நிறுத்தியிருப்ப தானே. அப்படி பார்த்தா அந்த வகையிலும் நான் உனக்கு உதவி தான் பண்ணியிருக்கேன். கல்யாணத்தை நிறுத்துறது தான் பிளான். மத்தபடி உன்னை கல்யாணம் பண்ணனும்ன்னு நான் நினைக்கவே இல்லை. அது அப்போதைக்கு நடந்த ஒரு ஆக்சிடன்ட், அவ்வளவு தான்..இந்த விளக்கம் போதுமா..? இல்லை இன்னமும் ஏதும் கேட்கணுமா..?” என்றான். அவன் முகம் இன்னும் அப்படியே தான் இறுகிப் போயிருந்தது.
“ரஞ்சனைப் பழிவாங்க… எதுக்காக என் வாழ்க்கையை கெடுத்திங்க சார்..?” என்றாள் கண்ணீருடன்.
“இப்ப நீ என்ன சொல்ல வர்ற…? அந்த அதி யோக்கியனோட நடக்க இருந்த கல்யாணம் நின்று போனதுல உனக்கு கஷ்ட்டமா..? இல்லை, என்னை கல்யாணம் பண்ணிகிட்டதுல உனக்கு கஷ்ட்டமா..?” என்றான்.
“எனக்கு ரெண்டுமே கஷ்ட்டம் தான்… காதலே இல்லாம ஒரு கல்யாணம் எப்படி சாத்தியம்..?” என்றாள் கோபமாக.
“நீயென்ன லூசா..? நான் உன்னை காதலிக்கிறேன்னு பொய் சொல்லியோ, இல்லை உன்னைக் கடத்திட்டு போயோ கல்யாணம் பண்ணலை. இரண்டு முறையுமே உன்னைக் கேட்டு, உன் சம்மதத்தோட தான் தாலி கட்டினேன். இதுல எங்க இருந்து குறையை கண்ட. இதோ இப்ப வரைக்கும் உன்னை எந்த வகையிலும் நான் தொந்தரவு பண்ணலை. இல்லை அப்படி தொந்தரவு பண்ணனும்ன்னு எதிர்பார்க்குறியா..?” என்றான் அர்ஜூன், அவளை ஒரு மார்க்கமாய் பார்த்தபடி.
“அப்படி பார்த்தா, நீ கூடத்தான் என்னை யாருன்னே தெரியாத மாதிரி நடிச்ச..? எல்லாம் தெரிஞ்சும் நான் அமைதியா தான இருந்தேன்..அதுலயும் அன்னைக்கு பஸ்ல ஏறின உடனே நீ குடுத்த பாரு ஒரு ஆக்டிங்.. அதெல்லாம் இப்ப நினைச்சாலும் அப்படியே புல்லரிக்குது..” என்றான் அர்ஜூன்.
“நீங்களும் எனக்கு குறைஞ்சு ஒன்னும் நடிக்கலை..” என்றாள் எரிச்சலுடன்.
“ஒத்துக்கிறேன்..! அப்போ கூட நிஜமாவே உன்னைப் பத்தி எனக்குத் தெரியாது…” என்றான் அர்ஜூன்.
“காலேஜ்ல உங்களை ரெண்டு மூணு தடவை பார்த்திருக்கேன். அவ்வளவு தான். இதுல எங்க இருந்து நடிப்பைக் கண்டிங்க..?” என்றாள்.
“நீங்க என்ன சொன்னாலும், என்னால அதை ஏத்துக்க முடியாது. இன்னைக்கு ரஞ்சனைப் பழிவாங்க இப்படி பண்ணின நீங்க, நாளைக்கு இதே காரணத்துக்காக என்ன வேணும்ன்னாலும் செய்ய மாட்டிங்கன்னு என்ன நிச்சயம்..?” என்றாள்.
“இப்ப என்ன சொல்ல வர்ற..? என்னைய பார்த்தா பக்கா கிரிமினல் மாதிரி இருக்கா..? அந்த ரஞ்சன் கிட்ட இருந்து உன்னோட வாழ்க்கையை காப்பாத்தின எனக்கு நீ நன்றி தான் சொல்லணும். என்னமோ என்னை தீவிரவாதி ரேஞ்சுக்கு விசாரணை பண்ணிட்டு இருக்க. உனக்கு உங்க அம்மா, அந்த ரஞ்சன் சொன்னதுல தான் நம்பிக்கைன்னா, நீ தாராளமா அவங்க சொல்ற மாதிரியே நடந்துக்கலாம். யாரும் உன்னை இங்க கையைப் பிடிச்சு வைக்கவும் இல்லை, கட்டி வைக்கவும் இல்லை. இன்னொரு தடவை இந்த பேச்சை எடுத்துகிட்டு என் முன்னாடி வராத… போய்டு..” என்றான் அர்ஜூன்.
“எனக்கும் இங்க இருக்கனும்ன்னு ஆசையெல்லாம் கிடையாது…” என்று வெடுக்கென்று சொன்னவள், அவன் அறையிலிருந்து வெளியேறி, தன்னுடைய அறைக்குள் நுழைந்து கொண்டாள். சரியாக அவள் அறைக்குள் நுழைந்த நேரம் அவளின் போன் ஒலி எழுப்ப, கல்பனா தான் அழைத்துக் கொண்டிருந்தார். முதலில் எடுக்க மனமில்லை என்றாலும், பின் வேண்டா வெறுப்பாய் போனை எடுத்து காதில் வைத்தாள்.
“வராஹி..டிஸ்டர்ப் பண்ணிட்டேனாமா..?” என்றார் எடுத்த எடுப்பில்.
“அதெல்லாம் ஒண்ணுமில்லை மம்மி..” என்றாள். ஏற்கனவே அர்ஜூனுடன் சண்டை போட்டு அழுததில் குரல் கமறிப் போய் வந்தது.
“என்னாச்சு வராஹி..? ஏன் குரல் ஒரு மாதிரி இருக்கு..?” என்றார் கல்பனா.
ஆறுதலாய் ஒரு வார்த்தையைக் கேட்டவுடன், அவள் கண்களில் இருந்து கண்ணீர் அருவியாய் கொட்ட,
“நத்திங் மம்மி..” என்றாள்.
“பொய் சொல்லாத வராஹி..! உன்னோட குரலே சரியில்லை. அழுத மாதிரி இருக்கு… அந்த அர்ஜூன் என்ன பண்ணினான்..? அங்க என்ன நடந்தது..? இரு நான் உடனே கிளம்பி வர்றேன்..” என்று சொல்லிவிட்டு போனை கட் பண்ணிவிட்டார் கல்பனா. இதற்காகவே காத்திருந்தவரைப் போல.
“ஒண்ணுமில்ல மம்மி..! நீங்க இங்க வர வேண்டாம். ஒரு பிரச்சனையுமில்லை…” என்று வராஹி பேசிக் கொண்டிருந்தது, காற்றில் தான் கரைந்து கொண்டிருந்தது.
“இந்த அம்மா வேற..? நான் என்ன சொல்ல வரேன்னு காது குடுத்து கேட்கிறதே இல்லை..” என்று புலம்பியவள், மோகனுக்கு அழைக்க, அவர் செல் நாட் ரீச்சபிள் என்று வந்தது.
அடுத்த ஒரு மணி நேரத்தில் கல்பனா அவர்களின் வீட்டில் இருந்தார்.
“இந்த டைம்ல காலிங் பெல் அடிக்கிறது யாரு..?” என்ற யோசனையுடன் அர்ஜூன் வெளியே வர, வராஹினி படபடப்புடன் வந்தாள்.
இப்ப எதுக்கு இப்படி வேகவேகமா வர்றா..? என்று யோசித்துக் கொண்டே கதவைத் திறந்தான் அர்ஜூன். அந்த நேரத்தில் வெளியே நின்றிருந்த கல்பனாவை பார்த்தவனுக்கு எதுவோ புரிவதைப் போல் இருந்தது. வேகமாக திரும்பியவன், வராஹினியை முறைக்க, அவளோ என்ன செய்வதென்று தெரியாமல் முழித்துக் கொண்டு நின்றாள்.
“அவளை எதுக்காக முறைக்கணும்..? என் பொண்ணை என் கண்ணு முன்னாடியே இப்படி மிரட்டுற மாதிரி பார்த்தா, நாங்க இல்லாதப்ப என்ன கொடுமையெல்லாம் பண்ணுவிங்க..?” என்றார் கல்பனா.
“என் பொண்ணை என்ன பண்ணின..? அவ குரலே சரியில்லை, அழுதிருக்கா. இதுக்குத்தான் அவளை உங்களுக்குக் கட்டிக் குடுத்தோமா..?” என்றார் கல்பனா.
“காலையில கல்யாணம் முடிஞ்சிருக்கு. இப்ப வந்து என்ன பண்ணேன்னு கேட்குறிங்க..? ஏன் இந்த நேரத்துல என்ன பண்ணுவாங்கன்னு உங்களுக்குத் தெரியாதா..?” என்றான் கிண்டலாய். ஒரு மாமியாரிடத்தில் பேசக் கூடாத விஷயம் தான் என்றாலும், கல்பனாவை பேச விட்டு வேடிக்கைப் பார்ப்பதில் அவனுக்கு விருப்பமில்லை.
“என் பொண்ணை பார்த்தா சந்தோஷமா இருக்குற மாதிரி தெரியலை..” என்றார் வெடுக்கென்று.
“ஹோ…! அதான் நைட்டு ஒன்பது மணின்னு கூட பார்க்காம கிளம்பி வந்துட்டிங்க போல. நீங்களா வந்திங்களா..? இல்லை உங்க மக வர சொன்னாளா..?” என்றான்.
“சார்.. நான் ஒன்னும் சொல்லலை..” என்று வராஹினி வேகமாக சொல்ல வர,
“இப்ப எதுக்கு பயப்படுற வராஹி..அதான் நான் இருக்கேன்ல. தைரியமா சொல்லு, எதுக்காக அழுத..?அப்படி கஷ்ட்டப்பட்டு இவன்கூட வாழணும்ன்னு அவசியமில்லை… கிளம்பி வா போகலாம்..” என்றார் கல்பனா.
“அதெல்லாம் ஒரு பிரச்சனையுமில்லை மம்மி. நீங்களா எதையாவது கற்பனை பண்ணிட்டு பேசாதிங்க. நீங்க கிளம்புங்க முதல்ல..” என்றாள் வராஹினி.
“எப்படி போக சொல்ற..? நானும் மண்டபத்துல இருந்து பார்த்துட்டே இருக்கேன். எதுக்கெடுத்தாலும் உன்னை முறைச்சுகிட்டே இருக்கிறதும், எப்பப் பார்த்தாலும் திட்டிட்டே இருக்குறதும்.. இதெல்லாம் நல்லாவா இருக்கு. காலையில கல்யாணம் முடிஞ்ச சந்தோசம் கொஞ்சமாவது உன் முகத்தில் இருக்கா. எதையோ பறி கொடுத்தவ மாதிரி இருக்க.. கேட்க ஆளில்லைன்னு நினைச்சாங்களா..?” என்றார் கல்பனா.
“ஐயோ..! நீங்க இருக்கப்ப நான் எப்படி அப்படி நினைப்பேன். மதருக்கெல்லாம் மாணிக்கம் நீங்க. உங்க பொண்ணுக்கு ஒண்ணுன்னா, அப்படியே துடிச்சு போய்ட மாட்டிங்க. ஏன்னா, உங்க பொண்ணு மேல அப்படி ஒரு பாசம் உங்களுக்கு…” என்றான் நக்கலாய்.
“சொன்னாலும் சொல்லாட்டியும் பாசம் தான். பெத்தவளுக்குத் தானே தெரியும், அவளோட பிரச்சனை என்னன்னு..?” என்றார் கல்பனா.
“ரியலி..! ராஹினி… உங்க அம்மா சொல்றதைக் கேட்டியா..? கேட்க கொஞ்சம் காமெடியா இருந்தாலும் நல்லாத்தான் இருக்கு..” என்றான் நக்கல் சிரிப்புடன்.
“என்ன வராஹி இதெல்லாம்..?இவனைப் பேச விட்டுட்டு இருக்க” என்று கல்பனா மரியாதையில்லாமல் பேசியதில்..
“வெளிய போங்க முதல்ல..!” என்று இழுத்து வைத்த பொறுமையெல்லாம் காற்றில் பறக்க, கத்தி விட்டான் அர்ஜூன்.
“அர்ஜூன் சார்..! என்ன இருந்தாலும் அவங்க என்னோட அம்மா. வந்தவங்களை மரியாதைக்காகவாவது உள்ள வாங்கன்னு கூப்பிடனும். அதைத் தான் செய்யலை. ஆனா, ஏன் இப்படி முகத்துல அடிச்ச மாதிரி பேசுறிங்க..?” என்றாள்.
“உங்கம்மாவை சொன்னா உனக்கு கோபம் வருதா. அப்போ நல்லா கேட்டுக்கோ, அப்படித்தான் சொல்லுவேன். உனக்கு ஏற்கனவே சொன்னது தான்… இவங்களோட உறவு வச்சுக்கிறதா இருந்தா நீ தாராளமா இவங்க கூட போகலாம்..இவங்க இங்க வர்றதை நான் இப்பவும், எப்பவும் விரும்ப மாட்டேன்..” என்றான் அர்ஜூன் உறுதியாக.
“அப்படி அவங்க என்ன பண்ணிட்டாங்க உங்களை..! எதுக்கு அவங்களை விரோதியைப் பார்த்த மாதிரி பார்க்குறிங்க.. எனக்கு பிடிக்காத கல்யாணத்தை முடிவு பண்ணது ஒன்னு மட்டும் தான் அவங்க செஞ்ச பெரிய தப்பு. அதுவும் நடக்கலை. இன்னமும் ஏன் கோபத்தை பிடிச்சுட்டு தொங்கணும். அதுவும் நானே அமைதியா இருக்கேன், நீங்க ஏன் இவ்வளவு கோபப்படுறிங்கன்னு தான் தெரியலை… அப்படி பார்த்தா நீங்க கூட தான் என்னை பிளாக் மெயில் பண்ணிங்க.” என்று வராஹினியும் கொஞ்சம் கோபம் கலந்த குரலில் பேச, அதையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்த அர்ஜூனுக்கு பொறுமை கொஞ்சம் கொஞ்சமாக பறந்து கொண்டிருந்தது.
“இப்ப உனக்கு சந்தோஷமா..?உனக்கு உங்கம்மா முக்கியம்ன்னா அவங்க கூடவே கிளம்பலாம். தேவையில்லாதையெல்லாம் பேச வேண்டாம். இதை கொஞ்சம் பொறுமையாவே சொல்றேன் ராஹினி..” என்றான். பொறுமையாய் சொன்ன வார்த்தைகள் கூட பொருமிக் கொண்டு தான் வந்தது. எங்கே கோபத்தில் அவளின் அம்மாவைப் பற்றி சொல்லிவிடுவானோ என்ற எண்ணம் அவனுக்கு.
“நீ என்ன கிளம்புன்னு சொல்றது? நானே என் பொண்ணை அழைச்சுட்டு போறேன். இப்படி உன்கிட்ட இவ்வளவு பாடுபடனும்னு அவளுக்கு என்ன தலையெழுத்தா..? கிளம்பு வராஹினி..” என்றார் கல்பனா.
“இவ்வளவுக்கு பிறகும் நான் இன்னும் மரியாதையா தான் பேசிட்டு இருக்கேன்னு நினைக்கிறேன். உங்கம்மா இப்படி மரியாதை இல்லாம பேசுறது இதுவே கடைசி தடவையா இருக்கணும்..” என்றான்.
வராஹினிக்கு ஐயோ என்றிருந்தது. கல்பனாவின் பேச்சு அதிகப்படி என்றாலும், அதை அர்ஜூன் முன்னால் சொல்லவும் அவளுக்கு முடியவில்லை. அதே சமயம் அர்ஜூனையும் அவளால் விட்டுக் கொடுத்து பேச முடியவில்லை.
“நீங்க கிளம்புங்க மம்மி.. நான் பார்த்துக்கிறேன்..!” என்றாள்.
“நான் இவ்வளவு தூரம் சொல்றேன்..! இன்னும் நீ அதே பாட்டைத்தான் பாடிட்டு இருக்க..? பொண்ணுங்களுக்கு கொஞ்சமாவது சுயமரியாதை வேண்டாம்…” என்றார் கல்பனா.
“உங்கம்மா கூட போ ராஹினி. சுய மரியாதை நிறைய கிடைக்கும். யார் எதைப் பத்தி பேசுறதுன்னு ஒரு விவஸ்தை இல்லாம போய்டுச்சு..” என்றான் அர்ஜூன் கிண்டலாய்.
“தனியாவே வளர்ந்தா…இப்படித்தான் பேசத் தோணும். தாய் இருந்து வளர்த்திருந்தா தான யார்கிட்ட எப்படி பேசனும்ன்னு தெரியும்..?” என்றார் கல்பனாவும்.
“ம்மா..!” என்று வராஹினி சொல்ல, அர்ஜூனுக்கோ கண்மண் தெரியாத கோபம்.
“நான் வீட்டை விட்டு வெளிய தள்ளி கதவை சாத்துறதுக்குள்ள நீங்களாவே போய்டுங்க..அவ்வளவுதான் உங்களுக்கு மரியாதை…” என்றான்.
“சார்..!!” என்றாள் வராஹினி.
“என்னடி சாரு..மோரு..! இவங்க வாய்க்கு வந்ததையெல்லாம் பேசுவாங்க..! நான் கேட்டுட்டு நிற்கனுமா..? யார்கிட்ட பேசிட்டு இருக்காங்க… வளர்ப்பைப் பத்தி பேசுறதுக்கு உங்கம்மாவுக்கு என்ன அருகதை இருக்கு..? எந்த பிள்ளையை அவங்க ஒழுங்கா வளர்த்திருக்காங்க. பையன் ஒரு காரியக்காரன்.. பொண்ணு..” என்று அவன் ஏதோ சொல்ல வர,
“சார்..!!” என்று கத்தியே விட்டாள் வராஹினி. அப்போது தான் அவனுக்கும் கோபத்தில் வார்த்தையை விட்டது உரைத்தது.
“அவங்க பேசுனது சரின்னு நான் சொல்ல வரலை. ஆனா, நீங்க இப்படி பேசுவிங்கன்னு நான் எதிர்பார்க்கலை. உங்களுக்கு என்னால இனிமேலும் எந்த பிரச்சனையும் வேண்டாம். நான் கிளம்புறேன்..!” என்றாள்.
“நான் அந்த அர்த்ததுல சொல்லலை ராஹினி..!” என்றான் இறுக்கமான குரலுடன்.
“நீங்க எந்த அர்த்ததுல சொல்லியிருந்தாலும், என்னோட முடிவு இதுவாத்தான் இருந்திருக்கும். நீங்க ஏற்கனவே நிறைய சொல்லிட்டிங்க சார். நீங்கதான சொன்னிங்க, எனக்கு இந்த பந்தத்துல விருப்பம் இல்லைன்னா எப்ப வேணும்ன்னாலும் கிளம்பலாம்ன்னு. அதை இப்பவே செய்யுறேன். பின்னாடின்னா, அது ரொம்ப கஷ்ட்டம். உங்களுக்கும் அது வேதனையைத் தான் தரும்..” என்றாள்.
“இன்னும் என்ன பேச்சு வேண்டி கிடக்கு வராஹி. உன்னோட பொருளையெல்லாம் எடுத்துட்டு கிளம்பு நம்ம வீட்டுக்குப் போகலாம்..!” என்றார் கல்பனா.
“இங்க இருக்குற எல்லாமே அவர் வாங்கிக் கொடுத்தது தான்..!” என்றாள் விட்டேற்றியாய்.
கல்பனா, அர்ஜூனைப் பார்த்து ஒரு வெற்றி சிரிப்பை சிரிக்க, வராஹினி அதை கவனியாமல் போனது தான் அவளின் நேரம்.
“நான் போறேன் சார்..!” என்று அவனிடம் சொல்ல, அவனோ பட்டென்று அறைக்குள் சென்றுவிட்டான்.
“இன்னும் என்ன வேடிக்கை…! வா போகலாம்..!” என்று அவளை இழுத்துக் கொண்டு போனார் கல்பனா. அவ்வளவு நேரம் இல்லாத ஒரு வேதனை அப்போது தான் அவள் மனதைப் போட்டு அழுத்தியது. அறைக்குள் சென்ற அர்ஜூனுக்கும் அப்படித்தான் இருந்திருக்க வேண்டும்.. காரணமே இல்லாமல் அவன் கண்கள் கலங்கிப் போனது.
‘எதுக்கு பீல் பண்ற அர்ஜூன்..! என்னைக்கா இருந்தாலும் அவளை அனுப்புறது தான..? இப்ப என்ன புதுசா..?” என்றது மனம்.
“அது முன்ன தான். இன்னைக்கு முழுமனசோட தான் அவளுக்கு தாலி கட்டினேன். அதுவும் இப்படி ஆகணும்ன்னு விதி இருக்கு போல..” என்று நொந்து கொண்டான்.
“ரொம்ப சிம்பிள்..! அவங்க அம்மா டீலுக்கு நீ ஓகே சொன்னா, அவங்க வராஹியை வந்து விட்டுட்டு போய்டுவாங்க. பிளான் பண்ணி தான கூட்டிட்டு போறாங்க..” என்றது மனம்.
‘அப்படி மட்டும் நான் பண்ணினா, அது அவளை விலை குடுத்து வாங்குற மாதிரி. இதுக்கு மேல ஒரு பொண்ணை வேற மாதிரி அசிங்கப்படுத்த முடியாது. அதை என்னைக்குமே செய்ய மாட்டான் இந்த அர்ஜூன்..!’ என்று உறுதியாய் சொல்லிக் கொண்டான்.
கல்பனாவுடன் சென்று கொண்டிருந்த வராஹினியின் நிலையும் அதே தான். அங்கு இருக்கும் வரை தெரியாத உணர்வு… அவனை விட்டு செல்லும் தூரம் அதிகரிக்க, அதிகரிக்க, நெஞ்சைப் பிசைவதைப் போல் இருந்தது.
‘என்ன இருந்தாலும் அம்மா பேசினது ஓவர்..? அவர் இடத்துல யார் இருந்திருந்தாலும் இப்படித்தான் ரியாக்ட் பண்ணியிருப்பாங்க..’ என்றது மனம்.
“அவருக்கு என்மேல கொஞ்சம் கூட காதலே இல்லை. ரஞ்சனைப் பழிவாங்க தான் என் மேரேஜ் பண்ணியிருக்கார். இப்போ அம்மா வந்து பேசின உடனே கிளம்புறதுன்னா கிளம்புன்னு சொல்றார். அப்போ அவருக்கு கொஞ்சம் கூட என்மேல அன்போ, காதலோ இல்லன்னு தான அர்த்தம்..?” என்றாள் மனதிடம்.
“ஆமா நீ ரொம்ப கண்ட..? எப்படியும் உங்கம்மா பேச்சைக் கேட்டா நீ உருப்பட போறதில்லை. இனி நான் சொல்லி மட்டும் என்ன ஆகப் போகுது. உன் தலை விதிப்படி தான் எல்லாம் நடக்கும்..” என்று அறிவுரையை முடித்துக் கொண்டது அவளின் மனம்.
உப்புமில்லா, புளியுமில்லா ஒரு பிரச்சனையை கல்பனா தனக்கு சாதகமாக்கிக் கொண்டு, இதோ வராஹினியை அவனிடமிருந்து அழைத்து வந்து விட்டார்.
வராஹினிக்கு நடந்த விஷயம் எதுவும் தெரியாததால், அவளுக்கு குழப்பம் தான் மிஞ்சியது. குழம்பிய குட்டையில் மீன் பிடிக்க எண்ணினார் கல்பனா. பாவம் அவருக்கு அர்ஜூனைப் பற்றி தெரிந்திருக்கவில்லை.