தன்னைக் கடத்தியதைப் பற்றி எதுவுமே சொல்லாமல் பிரச்சனையை பூசி மொழுகியிருக்கிறான் என்று புரிந்து கொண்ட இந்துவுக்கு அவனை முறைக்க மட்டுமே முடிந்தது. அதிக நேரம் அவன் முன்னிலையில் இருக்க பிடிக்காமல் “அஞ்சலியைக் கூப்பிடுங்களேன் மா”, என்றாள் இந்து.
“அம்மா இல்லை, அக்தைன்னு சொல்லணும் சரியா?”, என்று அம்பிகா சொன்னதும் “சரி அத்தை”, என்றாள் இந்து.
“அஞ்சலி இங்க வா மா”, என்று அம்பிகா அழைத்ததும் அடக்க ஒடுக்கமாக வந்து நின்றாள் அஞ்சலி. இரண்டு நாள் முன்பு தங்களின் வீட்டுக்கு கெத்தாக வந்து நின்றவளா இவள் என்று எண்ணி தனக்குள் புன்னகைத்துக் கொண்டாள் இந்து. அனைவருக்கும் வணக்கம் சொன்ன அஞ்சலியை தன்னருகே அமர வைத்துக் கொண்டாள் இந்து.
அதில் சீனிவாசன் மற்றும் அம்பிகா முகம் மலர்ந்தது. தங்கள் மகளுக்கு நல்ல நாத்தனார் தான் கிடைத்திருக்கிறாள் என்று எண்ணி சந்தோஷப் பட்டுக் கொண்டார்கள். கூடவே கிரியையும் அவர்களுக்கு பிடித்திருந்தது. தாங்களாக பார்த்திருந்தால் கூட தங்கள் மகளுக்கு இப்படி ஒருவனைப் பார்த்திருக்க மாட்டோம் என்று எண்ணிக் கொண்டார்கள்.
கிரியோ அஞ்சலியையே பார்த்துக் கொண்டிருந்தான். முதல் முறை சேலை கட்டி அழகு பதுமை போல கண் முன் நின்ற அவளிடம் இருந்து அவனால் விழியைத் திருப்ப முடியவில்லை. அவனை நிமிர்ந்து பார்த்த அஞ்சலிக்கோ அவன் கண்களில் தெரிந்த காதல் வேட்கையில் உள்ளம் தித்திப்படைந்தது. “இவ்வளவு காதலை வச்சிக்கிட்டு ஏன் என்னை வேண்டாம்னு சொன்னான்?”, என்று எண்ணிய அஞ்சலிக்கு விடை சொல்வார் யாரும் இல்லை.
“எங்க எல்லாருக்குமே அஞ்சலியை ரொம்ப புடிச்சிருக்கு. எங்களுக்கு இந்த கல்யாணத்துல பரிபூரண சம்மதம். ஆனா சில விஷயங்கள் பேசணும்”, என்று ஆரம்பித்தாள் இந்து.
“எதையாவது உளறி வைக்கப் போறாளா?”, என்ற பயத்துடன் பார்த்தான் இன்பன்.
“உங்களை மாதிரி நாங்க வசதியானவங்க கிடையாது. எங்களுக்கு அம்மா அப்பா எல்லாமே எங்க தாத்தா தான். அவர் தான் எங்களை படிக்க வச்சார். இப்ப ரெண்டு பேருமே நல்ல வேலைல இருக்கோம்னா அதுக்கு அவர் தான் காரணம். என் தம்பி உங்க பொண்ணை சந்தோஷமா வச்சிக்கிற அளவுக்கு சம்பாதிக்கிறான். ஆனா நீங்கல்லாம் எதிர்பாக்குற அளவுக்கு எங்க கிட்ட கார் பங்களா சொத்துன்னு எதுவும் இல்லை. ஏன்னா உங்க வீடே பிரம்மாண்டமா இருக்கு. ஆனா நாங்க வாடகை வீட்ல தான் இருக்கோம்”, என்று சொல்லிக் கொண்டே இன்பனைப் பார்த்தாள். அவனோ அவள் பார்வையை உணர்ந்து கொள்ளாமல் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்.
இப்படி கஷ்டப் படுகிறவர்களைத் தான் நீ வயிற்றில் அடித்திருக்கிறாய் என்று சொல்லாமல் சொன்னது அவள் பார்வை.
“அப்படின்னா உங்க தங்கச்சியை நீங்களே வச்சிக்கோங்க”, என்று சொன்னது வேறு யாரும் இல்லை கிரியே தான்.
இன்பன் அவனை முறைத்துப் பார்க்க “இங்க பாரு அஞ்சலி இப்ப சொல்றேன் கேட்டுக்கோ. உங்க அண்ணன் சொன்ன மாதிரி கார் பங்களான்னு நீ எதிர் பாத்தா நாம இப்பவே இந்த பேச்சை முடிச்சிக்கலாம். எனக்கு இந்த மாமனார் வீட்ல உக்காந்து திங்குறது பிடிக்காது. அதுவும் அடுத்தவங்க சொத்தை அபகரிக்க நினைக்கிறது சுத்தமா பிடிக்காது”, என்று இன்பனைப் பார்த்துக் கொண்டே சொன்னான்.
அவர்கள் சொத்தைப் பிடுங்கியதற்காக அவன் தன்னைத் தான் குத்திக் காட்டுகிறான் என்று புரிந்து கொண்ட இன்பன் அஞ்சலிக்காக அமைதியாக இருந்தான்.
பின் அஞ்சலி புறம் திரும்பிய கிரி “என் சம்பாத்தியத்துல உன்னை நான் நல்லா பாத்துக்குவேன்னு உனக்கு நம்பிக்கை இருந்தா மட்டும் தான் இந்த கல்யாணம் நடக்கும். நல்லா யோசிச்சு முடிவு பண்ணு’, என்றான்.
“எனக்கு நீங்க தான் முக்கியம். காரோ பங்களாவோ இல்லை. அண்ணன் என் மேல உள்ள பாசத்துல பேசுது. நான் எதுவும் எதிர் பாக்க மாட்டேன்”, என்றாள் அஞ்சலி.
“அப்புறம் என்ன அஞ்சலியே சொல்லிட்டா. எங்களுக்கும் அவ விருப்பமும் சந்தோஷமும் தான் முக்கியம். எப்ப கல்யாணத்தை வச்சிக்கலாம்”, என்று கேட்டார் சீனிவாசன்.
“பொறுங்க நான் இன்னும் பேசி முடிக்கலை. எங்களுக்கு கல்யாணம் இப்ப உடனே வேண்டாம்”, என்று கிரி சொன்னதும் அவன் சொன்னதைக் கேட்டு அனைவரும் அதிர்ந்தார்கள்.
“ஏன் அப்படிச் சொல்றீங்க தம்பி?”, என்று கேட்டார் சீனிவாசன். “முதல்ல என் அக்காவுக்கு கல்யாணம் நடக்கணும். அதுக்கு அப்புறம் தான் எனக்கு. கல்யாண வயசுல பொண்ணை வீட்ல வச்சிட்டு நான் கல்யாணம் பண்ணிக்கிட்டா என் மனசாட்சியே என்னைக் கொன்னுரும். என் அக்காவுக்கு கல்யாணம் முடியுற வரைக்கும் எங்க கல்யாணம் நடக்க வேண்டாம். நிச்சயதார்த்தத்துக்கு மட்டும் நாள் குறிங்க”, என்று கிரி சொன்னதும் அவனை பெருமையாக பார்த்தார் குணசேகரன். அஞ்சலியும் அவன் கூற்றை மனதார ஒத்துக் கொண்டாள்.
ஆனால் இன்பனுக்கு மட்டும் எரிச்சலாக வந்தது. அவன் எதுவோ சொல்ல வர அதற்கு முன் “மாப்பிள்ளை சொன்னது சரி தான். எங்க மகன் தங்கச்சியை வச்சிக்கிட்டே அவளுக்கு முடிச்ச அப்புறம் தான் நான் பண்ணிக்குவேன்னு சொன்னான். அப்படி இருக்க மாப்பிள்ளை எப்படி இந்து இருக்கும் போது கல்யாணம் பண்ணிக்குவார். நாங்க நிச்சயதார்த்தத்துக்கு மட்டும் நாள் குறிக்கிறோம். இந்துவுக்கு நல்ல வரனா பாத்து கல்யாணம் பண்ணின அப்புறம் இவங்க கல்யாணம் நடக்கட்டும். பேசாம நம்ம இன்பன் கல்யாணத்தன்னைக்கே இவங்க நிச்சயதார்த்தத்தை வச்சிக்கலாம்”, என்றார் சீனிவாசன்.
“இவனுக்கு கல்யாணமா? பாவம் அந்த பொண்ணு”, என்று எண்ணிக் கொண்டாள் இந்து.
குணசேகரன் குழப்பமாக பார்க்க “அடுத்த மாசம் இருபத்தி நாலாம் தேதி எங்க மகனுக்கும் பெரியசாமி அப்படிங்குறவரோட பொண்ணுக்கும் கல்யாணம்”, என்றார் சீனிவாசன்.
தங்கச்சி கல்யாணம் தன்னுடைய திருமணத்திற்கு முன் நடக்க வேண்டும் என்று எண்ணிய இன்பன் அதற்கு இடைஞ்சலாக இந்து இருக்கவும் அவளைக் கண்டு பல்லைக் கடித்தான்.
கூடவே அவனுக்கு இவர்கள் நாட்களைக் கடத்தினால் எதுவும் குளறுபடி செய்து கிரி அஞ்சலி கல்யாணத்தை நடத்த விட மாட்டார்களோ என்ற பயம் வந்தது. ஆனால் அவனால் எதுவும் செய்ய முடியவில்லை. ஏனென்றால் அஞ்சலியும் பெற்றவர்களும் சரி என்று சொன்ன பிறகு அவன் மட்டும் என்ன செய்வானாம்?
அப்போது “சரிங்க நாங்க கிளம்புறோம்”, என்றார் குணசேகரன்.
“என்ன உடனே கிளம்புறீங்க? ஏதாவது சாப்பிட்டு போகலாம்”, என்றார் சீனிவாசன்.
“இல்லை நிச்சயம் முடியாம நாங்க கை நனைக்கிறது இல்லை”, என்று பட்டென்று சொல்லி விட்டார் குணசேகரன். “நல்லதா போச்சு தாத்தா கிளம்பிட்டார்”, என்று எண்ணிக் கொண்டு அவருடன் சந்தோஷமாக அங்கிருந்து கிளம்பினார்கள் இந்துவும் கிரியும்.
அவர்கள் சென்ற பின் “எதுக்குப்பா இப்படி செஞ்சீங்க? அஞ்சலிக்கு கல்யாணம் பண்ணாம எனக்கு கல்யாணம் பண்ணுறதுல விருப்பமே இல்லை. என் கல்யாணத்துக்கு முன்னாடி அஞ்சலி கிரி கல்யாணம் நடக்கணும்னு நான் ஆசைப் பட்டேன்”, என்றான் இன்பன்.
“உன் ஆசையை தப்பு சொல்ல முடியாது இன்பன். ஆனா நாம கிரி மாப்பிள்ளை பக்கமும் யோசிக்கணும். இந்து கிரிக்கு அக்கா. அவளுக்கு முடியாம கிரி அஞ்சலி கல்யாணம் எப்படி நடக்கும்?”, என்று கேட்டார் சீனிவாசன்.
“ஏன் நடக்காது? கிரியோட அக்காவுக்கு கல்யாணம் முடிஞ்சா நமக்கு என்ன? முடியலைன்னா நமக்கு என்ன?”
“நீ எப்ப இப்படி சுயநலமா மாறின இன்பா? இனிமே இந்துவும் நம்ம வீட்டுப் பொண்ணு தான். இன்னொரு தடவை இப்படி பேசாதே”, என்று கண்டிப்புடன் சொன்னாள் அம்பிகா. அதனால் இன்பன் அமைதியாக இருக்க “உன் ஆசை நிறைவேறவும் வாய்ப்பு இருக்கு இன்பா”, என்றார் சீனிவாசன்.