“உன் கல்யாணத்துக்கு இன்னும் ஐம்பது நாள் இருக்கு. அஞ்சலிக்கும் மாப்பிள்ளை ரெடியா இருக்கார். உங்க ரெண்டு பேருக்கும் ஒரே நாள்ல ஒரே மேடைல கல்யாணம் நடந்தா கூட உனக்கு ஓகே தானே? அப்படின்னா இன்னும் ஒரு மாசத்துல அந்த பொண்ணுக்கு நல்ல மாப்பிள்ளையா பாத்தா அவ கல்யாணம் முதல்ல முடிஞ்சிரும்ல? அப்படி இந்துவுக்கு கல்யாணம் முடிஞ்சிட்டுன்னா உன் ஆசையும் நடக்கும்”, என்றார் சீனிவாசன்.
கண்கள் மின்ன “சூப்பர் ஐடியா பா. ஒரு மாசம் என்ன? இன்னும் பத்து நாள்ல அந்த பொண்ணுக்கு நான் மாப்பிள்ளை பாத்து பேசி முடிக்கிறேன்”, என்றான்.
“டேய் அது என்ன அவ்வளவு சின்ன விஷயமா? எடுத்தோம் கவிழ்த்தோம்னு செய்யக் கூடாது”, என்றாள் அம்பிகா.
“அதெல்லாம் பாத்துக்கலாம் அம்பிகா. அந்த பொண்ணுக்கு நல்ல பையனா கிடைச்சா எல்லாருக்கும் நல்லது தானே? நாம அந்த பொண்ணுக்கு மாப்பிள்ளை பாப்போம். நீயும் பாரு டா”, என்று சொல்லி விட்டு சென்றார் சீனிவாசன்.
அதன் பின் வந்த ஒவ்வொரு நொடியும் அவன் நாடி நரம்பு ரத்தம் நினைப்பு அனைத்திலும் இந்துவுக்கு மாப்பிள்ளை பார்ப்பதைப் பற்றி தான் இருந்தது.
தங்களின் அலுவலகத்தில் உள்ள யாரை அவளுக்கு மாப்பிள்ளையாக பார்க்கலாம் என்று மனக் கணக்கு போட்டு யோசித்தான்.
அவன் நினைத்த ஆட்களுக்கு ஏற்கனவே திருமணம் ஆகியிருந்தது. அப்படி இல்லை என்றால் அவர்கள் இந்துவுக்கு பொருத்தம் இல்லை என்று எண்ணி அவன் மனமே எண்ணியது.
அடுத்த நாள் முழுவதும் அப்படியே கடக்க அவளுக்கென்று எந்த மாப்பிள்ளையையும் கண்டு பிடிக்க முடியாததால் அன்று இரவு அவனுக்கு தூக்கமே வர வில்லை.
“அவளுக்கு எப்படியாவது மாப்பிள்ளை பாத்தே தீரணும். அவ மட்டும் இடைஞ்சலா இல்லாம போய்ட்டான்னா என் கல்யாணத்துக்கு முன்னாடி அஞ்சலி கல்யாணத்தை முடிச்சிருவேன்”, என்று எண்ணிக் கொண்டவன் அடுத்த நொடி இந்துவை போனில் அழைத்தான்.
இந்நேரம் அவன் அழைக்கவும் அதைக் கண்டு எரிச்சலுற்ற படியே அதை எடுத்த இந்து “என்ன?”, என்று திமிராக கேட்டாள்.
“என்ன டி திமிரா?”
“ஆமா ஆமா நீ உழைச்சு போட்ட சோத்தை தின்ன திமிர் தான். எதுக்கு கால் பண்ணின? அதைச் சீக்கிரம் சொல்லிட்டு போனை வை”
“என்ன பட்டாலும் நீ அடங்கவே மாட்ட”
“ஆஃவ்”, என்று கொட்டாவி விட்டவள் “உனக்கு எல்லாம் வேற வேலையே இல்லையா? நேரம் போகலைன்னா உனக்கு நிச்சயம் பண்ணிருக்க அந்த பாவப் பட்ட பொண்ணு கிட்ட பேச வேண்டியது தானே? என்னை எதுக்கு உயிரை வாங்குற?”, என்று கேட்டாள்.
“உன் கிட்ட பேசணும்னு எனக்கு ரொம்ப ரொம்ப ஆசை. அதான் கால் பண்னினேன் போதுமா?”
“என்னது?”, என்று அவள் அதிர “ஏய் லூசு ஒரு முக்கியமான விஷயம் பேச தான் டி கால் பண்னினேன்”, என்றான்.
“என்ன விஷயம்? அதை சொல்றதுக்கு முன்னாடி நான் ஒரு விஷயம் சொல்லணும். தயவு செஞ்சு இந்த டி ன்னு சொல்றதை இன்னையோட விட்டுரு. எனக்கு எரிச்சலா இருக்கு”
“அது உன்னை அப்படி கூப்பிட்டே பழகிட்டு. திடீர்னு விட முடியாது. சரி நான் எதுக்கு கால் பண்ணேன்னு சொல்லிறேன்”
“சொல்லித் தொலை”
“உனக்கு எப்படிப் பட்ட மாப்பிள்ளை வேணும்?”, என்று அவன் கேட்டதும் திகைத்துப் போனாள் இந்து. “இவன் என்ன திடீர்னு இப்படி கேக்குறான்? ஒரு வேளை ஓவரா யோசிச்சு லூசாகிட்டானா?”, என்று எண்ணினாள்.
“ஹலோ லைன்ல இருக்கியா இல்லையா டி?”
“இருக்கேன் இருக்கேன்”
“அப்படின்னா கேட்டதுக்கு பதில் சொல்லு. உனக்கு வரப் போற மாப்பிள்ளை எப்படி இருக்கணும்?”
“அதை ஏன் நீ கேக்குற? எனக்கு மாப்பிள்ளை பாக்க போறியா?”
“ஆமா. ஏற்கனவே பாக்க ஆரம்பிச்சிட்டேன். இன்னைக்கு முழுக்க உனக்கு மாப்பிள்ளை பாக்குற வேலை தான் நடந்துச்சு”
“என்னது? … என்ன சொல்ற நீ?”, என்று அதிர்ச்சியாக கேட்டாள் இந்து.
“உண்மைலே தான் டி சொல்றேன். இன்னைக்கு முழுக்க உனக்கு எவன் செட் ஆவான்னு யோசிச்சு யோசிச்சு எனக்கு மூளையே சூடாகிருச்சு. யாருமே உனக்கு பொருத்தமா தெரியலை. நீ வேற ஆள் சும்மா கும்முனு இருக்கியா? ஆனா என் கிட்ட வேலை செய்றவனுங்க எல்லாம் வத்தலும் தொத்தலுமா இருக்கானுங்க”
அவன் சொன்னதைக் கேட்டு முகம் சிவந்தாலும் “லூசா நீ? எனக்கு எதுக்கு நீ மாப்பிள்ளை பாக்கணும்? உன் கிட்ட நான் கேட்டேனா?”, என்று கேட்டாள்.
“நீ கேக்கலைன்னாலும் உனக்கு மாப்பிளை பாக்க வேண்டியது என்னோட கடமை இந்து”
“கடமையா? உனக்கு என்ன கடமை? இப்ப நீ தண்ணி எதுவும் அடிச்சிட்டு உளறுறியோ?”
“அடச்சி. எனக்கு தம், தண்ணி, பொண்ணுங்க இப்படி எந்த கெட்டப் பழக்கமும் இல்லை. நான் டீ டோட்லர் மா”
“நடுராத்திரில உன் பெருமையை சொல்லத் தான் கால் பண்ணுனியா?”
“மணி பத்து தான் ஆகுது. இது உனக்கு நடுராத்திரியா?”
“ஐயோ ரம்பம் போடாம விஷயத்தைச் சொல்லு”
“இன்னும் பத்து நாள்ல உனக்கு கண்டிப்பா மாப்பிள்ளை பாத்துருவேன்”
“என்ன இன்னைக்கு சம்பந்தமே இல்லாம உளறிட்டு இருக்க? நீ எதுக்கு எனக்கு மாப்பிள்ளை பாக்கணும்?”
“உனக்கு கல்யாணம் நடந்தா தானே உன் தம்பி கல்யாணம் பண்ணிப்பான்”
“அதுக்கு?”
“உன்னை ஒருத்தன் கிட்ட சீக்கிரம் பிடிச்சு கொடுத்தா தான் என் தங்கச்சி கல்யாணம் சீக்கிரம் நடக்கும். ஒழுங்கா நான் பாக்குற மாப்பிள்ளையை கட்டிக்கிட்டு சீக்கிரம் உன் தம்பி கல்யாணத்தை நடத்த பாரு”
“அறிவு இருக்கா உனக்கு? அவங்க கல்யாணம் நடக்கணும்னு நான் கல்யாணம் பண்ணிக்க முடியுமா? எனக்கு எப்ப தோணுதோ அப்ப தான் செஞ்சுப்பேன்”
“நினைச்சேன் டி நீ இப்படி தான் பண்ணுவேன்னு. காலம் முழுக்க நீ கல்யாணம் பண்ணாம இருந்து என் தங்கச்சி கல்யாணத்தையும் நடத்த விட மாட்ட அப்படி தானே?”
“நான் எங்க அப்படிச் சொன்னேன்? எனக்கு பிடிச்ச மாப்பிள்ளை கிடைச்சா பண்ணிப்பேன்”
“அப்படின்னா அன்னைக்கு கிரி உன் கல்யாணம் முடிஞ்சா தான் கல்யாணம் பண்ணிப்பேன்னு சொன்னப்ப நான் அப்புறம் பண்ணிக்கிறேன். இப்ப உங்க கல்யாணம் நடக்கட்டும்னு நீ ஏன் டி சொல்லலை?”
“தோணலை சொல்லலை”
“இல்லை நீ என்னைப் பழி வாங்க தான் அஞ்சலி வாழ்க்கையைக் கெடுக்குற. எனக்கு நல்லா தெரியும்”
“லூசா நீ? அஞ்சலி வாழ்க்கையைக் கெடுத்தா என் தம்பி வாழ்க்கையும் தானே கெடும்?”
“அப்படின்னா நீ கல்யாணம் பண்ணிக்கோ”
“மாப்பிள்ளைக்கு எங்க போக?”
“அதை நான் பாத்துக்குறேன். அதான் உனக்கு எப்படி மாப்பிள்ளை வேணும்னு கேக்குறேன்”, என்று அவன் சொன்னதும் தான் அவளுக்கு அவன் மனது புரிந்தது. தன்னை எவனிடமாவது தள்ளி விட்டுவிட்டு அவனுடைய தங்கைக்கு உடனே திருமணம் செய்ய நினைக்கிறான் என்று எண்ணிய இந்து “எனக்கு மாப்பிள்ளை பாக்குற வேலையை என் தாத்தா பாத்துக்குவார் டா. ஆனா இது தான் சாக்குன்னு உன்னை அலைய விடலை நான் இந்து இல்லை”, என்று மனதுக்குள் முடிவு எடுத்தாள்.
“உன்னை நம்பி எப்படி இவ்வளவு பெரிய பொறுப்பை ஒப்படைக்க? நீ ஏதாவது சொதப்பிட்டேன்னா?”, என்று வந்த புன்னகையை அடக்கிய படியே கேட்டாள் இந்து.
“என்ன சொதப்புவேன்னு நீ நினைக்கிற?”
“உனக்கு என்னைப் பிடிக்காது. அதனால ஒரு கெட்டவன் கிட்ட என்னைக் கோத்து விட்டுட்டேன்னா என்ன செய்றது? என் வாழ்க்கை எனக்கு முக்கியம் பா”
“நான் மாப்பிள்ளையை காமிச்ச உடனே உன் தம்பியும் தாத்தாவும் உடனே சரின்னு சொல்லிருவாங்களா? அதெல்லாம் அவங்க நல்ல விசாரிப்பாங்க”
“அப்படின்னா சரி தான்”
“மாப்பிள்ளை எப்படி இருக்கணும்? என் கை வசம் நாலு பேர் இருக்காங்க. ஒருத்தன் எங்க ஆபீஸ் பிளம்பர். இன்னொருத்தன் காண்ட்ராக்டர், இன்னும் ரெண்டு சூப்பர் வைசர் இருக்காங்க. அந்த நாலு பேர்ல ஒருத்தனை உனக்கு பாக்கட்டுமா?”
“எப்படி எப்படி? உன் கிட்ட லோக்கல் வேலை செய்றவங்களா? உன் தங்கச்சிக்கு மட்டும் என் தம்பி மாதிரி இன்ஜினியர் மாப்பிள்ளை. எனக்கு மட்டும் இப்படி மாப்பிள்ளை பாப்பியா?”