Skip to content
Post Views: 5,854
அத்தியாயம் – 8
“அம்மா சாரி மா.”
“என்ன நந்தா இதெல்லாம்? என்னால யார் கேட்கிற கேள்விக்கும் பதில் சொல்ல முடியலை.”
“ப்ளீஸ் மா புரிஞ்சிக்கோங்க.”
Advertisement
“உன் கல்யாணத்தைப் பத்தி நான் ஏகப்பட்ட கனவு வச்சிருந்தேன்.”
“அதையெல்லாம் பரணி கல்யாணத்துல நிறைவேத்திடலாம் மா.” நந்தா சாதாரணமாகச் சொல்ல.
Advertisement
“யாரு அவனா? வீட்டுக்கு அடங்கின நீயே… இப்படி அவசரமா கல்யாணம் பண்ற. அவன் கல்யாணம் பண்ணிட்டுதான் சொல்வான்.”
Advertisement
“அப்படியா டா?” தாரணி பரணியிடம் கேட்க, அவன் ஆமாம் இல்லை என்று இரண்டுவிதமாகவும் தலையசைக்க, அதைப் பார்த்த மற்ற மூவருக்குமே சிரிப்பு வந்தது.
“அண்ணா நாங்க எப்ப அண்ணியைப் பார்க்கிறது?” பரணி கேட்க,
Advertisement
“நீங்க எல்லாம் கிளம்பிட்டு கீழ இருக்க ஹோட்டல்ல டிபன் சாப்பிட்டு முடிங்க. அதுக்குள்ள நானும் வருணும் போய்த் தாலி வாங்கிட்டு வந்திடுறோம். வந்ததும் கோவிலுக்குப் போகலாம்.” என்றான்.
அவன் சொல்லிக் கொண்டிருந்த போதே வருண் அங்கே வந்தான்.
“நீ ரெடியா வா… நாம கிளம்பலாம்.” என அவனோடு நந்தா வெளியே சென்றான்.
அப்போது ராதிகாவின் அம்மா எதிரே வந்தவர், “என்ன வேலை டா பண்ணி இருக்க நீ.” எனக் கோபமாக ஆரம்பிக்க,
“அத்தை, வந்து பேசுறேன். இப்ப கொஞ்சம் அவசரமா போகணும்.” என்றபடி நந்தா வாயிலுக்கு விரைய, அவன் பின்னே வருணும் ஓடினான்.
வெளியே வந்த பின் “ஹப்பா தப்பிச்சோம் டா…” நந்தா சொல்ல,
“நீ தாலி கட்டுற வரை இவங்க கண்ணுல படாம இரு. வேன்ல உங்க அம்மாகிட்ட என்ன சண்டை தெரியுமா? சமாளிக்கிறதுகுள்ள நாக்கு தள்ளிடுச்சு.” என்றான் வருண்.
அத்தை மிகவும் மோசமாகப் பேசி இருப்பார் என்று தெரியும். தன்னால் தானே அம்மாவுக்கு இவ்வளவு கஷ்ட்டம் என நந்தாவுக்கு மிகவும் வருத்தமாக இருந்தது.
அவனைக் கவனித்த வருண், “நாம இப்ப கவலைப்பட்டுட்டு இருக்க நேரம் இல்லை. வேலையைப் பார்ப்போமா?” என்றதும், இருவரும் டீ குடித்து விட்டு, நகை கடைக்குச் சென்றனர்.
முன்பே தகவல் கொடுத்து இருந்ததால்… அந்தக் காலை நேரத்தில் நகை கடை திறந்து வைக்கபட்டு இருந்தது. தங்க சங்கிலியில் கோர்த்த தாலியும், வெள்ளியில் மெட்டியும் வாங்கிக்கொண்டு, இருவரும் வெளியே வந்தனர்.
நகைக்கடைக்கு எதிரே இருந்த துணிக்கடைக்குச் சென்று, நந்தாவுக்குப் பட்டு வேஷ்ட்டியும், ரெடிமேட் சட்டையும் வாங்கிக் கொண்டனர்.
நேரமாகி விட்டதால் அவர்கள் இருவரும் அரக்க பறக்க ஓடிவர, மற்றவர்கள் கிளம்பி தயாராக இருந்தனர்.
நந்தா சென்று உடை மாற்றி வந்ததும், மற்றவர்கள் சென்று வேன்னில் ஏற, நந்தாவும் அவன் குடும்பமும் மட்டும் தனிக்காரில் சென்றனர்.
இவர்கள் கோவிலுக்குச் சென்று சேர்ந்த போதே, முஹுர்த்த நேரம் தொடங்கிவிட்டது. அன்பரசுவும், பத்மாவும் வாயிலில் நின்று வந்தவர்களை வரவேற்றனர்.
“கயல்விழி எங்க அத்தை?” நந்தா பத்மாவிடம் கேட்க, “உள்ளே சாமி கும்பிட்டுகிட்டு இருக்கா.” என்றார் பத்மா.
அவள் பத்திரமாக வந்து சேர்ந்துவிட்டாள் என்ற பிறகே, நந்தாவுக்கு நிம்மதியாக இருந்தது. அவன் தன் குடும்பத்தை அன்பரசுவுக்கும், பத்மாவுக்கும் அறிமுகம் செய்து வைத்தான்.
“பரவயில்லையே, இந்த நேரத்துக்குள்ள இவ்வளவு பேர் வந்துட்டாங்களே.” என இருவரும் வியந்து போய்ப் பார்த்தனர்.
இந்தப் பக்கமும் அப்படித்தான். முக்கியமான உறவினர்களுக்குக் காலையில்தான் போன் செய்து அன்பரசு அழைத்திருந்தார். அவர்களும் குடும்பத்துடன் வந்திருந்தனர்.
“என்னடா உன் மாமனார் டெரர் பீஸ்ன்னு பார்த்தா… இப்படிப் பக்தி பழமா இருக்கார்.” வருண் நந்தாவின் காதை கடிக்க, அவன் நக்கலாகச் சிரித்தான்.
கோவில் முன்புறம் இருந்த மண்டபத்தில் மலர்களால் மனமேடை அமைத்து இருந்தனர். மல்லியும் கனகாம்பரமும் சேர்த்து அதோடு முல்லைப் பூவை தோரணமாகத் தொங்க விட்டு இருந்தனர். பார்க்கவே அவ்வளவு அழகாக இருந்தது.
நந்தா வியந்து போய்ப் பார்ப்பதை கவனித்த பூசாரி, அவன் அருகில் வந்து, “நல்லா இருக்கா? நான்தான் இப்படி அலங்காரம் பண்ண சொன்னேன்.” என்றார்.
“எதோ பொண்ணு வீட்ல ஒத்துக்கலைன்னு சொன்னாங்க. இங்க பார்த்தா அப்படி ஒன்னும் தெரியலையே…” என ராதிகாவின் அம்மா ஆரம்பிக்க.
அதைக் கேட்ட நந்தா “சீக்கிரம் கல்யாணத்தை முடிக்கலாம்.” எனப் பூசாரியிடம் சொல்ல, அவரும் புரிந்து கொண்டு சரி என்று சென்றார்.
“சாமி கும்பிட வாங்க.” என நந்தா சொல்லிவிட்டு கோவிலுக்குள் செல்ல, அவனோட அவன் வீட்டினரும் சென்றனர்.
எல்லோரையும் தள்ளிவிட்டு முன்னே வந்த ராதிகா, “அத்தான், ரொம்ப ஸ்மார்ட்டா ப்ளே பன்றோம்னு நினைப்பா? எனக்கு என்ன பதில் சொல்லப் போறீங்க?” எனக் கேட்க,
“உனக்கு நான் எதுக்குப் பதில் சொல்லணும்?” என நந்தா அசராமல் பதில் கேள்வி கேட்டான்.
ராதிகா அவனை முறைக்க…. அவனும் பதிலுக்கு அவளை முறைத்தான். ராதிகா பார்த்துக் கொண்டிருந்த போதே, நந்தாவின் பார்வை மாறியது.
ராதிகா திரும்பி பார்க்க, அங்கே கயல்விழி மணமகள் அலங்காரத்தில் கோவிலுக்குள் நின்று சாமி கும்பிட்டுக் கொண்டிருந்தாள். அவளோடு பாவடை தாவணியில் மாலாவும், சீதாவும் நின்று கொண்டிருந்தனர்.
குங்கும நிற புடவைக்கு ஏற்ப… வெள்ளையும் சிகப்பும் கலந்த கற்கள் பதித்த நகைகளை அணிந்து இருந்தாள். நெற்றியில் வைத்திருந்த சுட்டி கூடக் கல் வைத்ததுதான்.
பார்லரில் செய்த அலங்காரம் போல் இல்லாமல்… வீட்டிலேயே செய்த எளிமையான அலங்காரம் எனப் பார்த்ததும் தெரிந்தது. அதிலேயே பார்க்க ரதி போல் இருந்தாள்.
அவளின் குழந்தைத்தனம் மாறாத முகத்தைப் பார்த்த தாரணி, அருகில் இருந்த பரணியிடம் “டேய் ! அண்ணி நம்மை விடச் சின்னவங்களா இருப்பாங்க போலிருக்கு டா…” என்றதற்கு, அவனும் ஆமோதிப்பாகத் தலையசைத்தான்.
நந்தா சென்று கயல்விழி அருகில் நிற்கவும், அவள் கண்களைத் திறந்தாள். அவளது பெரிய விழிகள் கலங்கி இருக்க… அதைப் பார்த்த நந்தா, அவளைக் குற்றம் சாட்டும் பார்வை பார்க்க… கயல்விழி உடனே விழிகளைச் சிமிட்டி சமாளித்தாள்.
சாமி கும்பிடுவது போல் அவளுக்குச் சிறிது நேரம் கொடுத்த நந்தா, பிறகே அவளைத் தன் வீட்டினருக்கு அறிமுகம் செய்தான்.
அவள் எல்லோரையும் பார்த்து இருகரம் கூப்பி வணங்கினாள். அமைதியான பெண் எனப் பார்த்ததும் தெரிந்தது. நந்தாவின் பார்வையில் இருந்து அவனுக்கு அவளை மிகவும் பிடித்திருகிறது என்றும் தெரிந்தது.
“முஹுர்ததுக்கு நேரம் ஆகுது.” பூசாரி குரல் கொடுக்க… மணமேடைக்கு இருபுறமும் ரத்தின கம்பளம் விரித்து இருக்க… அதில் சென்று உறவினர்கள் அமர்ந்தனர்.
“இந்த மாலையைப் போட்டு நீதான் கயலை மணமேடைக்குக் கூடிட்டு வரணும்.” எனத் தாரணியிடம் சொல்லிவிட்டுப் பத்மா சென்றார்.
“மாப்பிள்ளை சார் வாங்க.” பூசாரி அழைக்க, நந்தா சென்றான்.
நந்தாவின் தாய்மாமா அவனுக்கு மாலை அணிவிக்க, அவன் மணமேடையில் அமர்ந்தான்.
மேடையின் இருபுறமும் இரண்டு பெரிய குத்து விளக்குகள் இருந்தது. நடுவில் தேங்காய் பழம் வைத்திருந்த தட்டில் திருமாங்கல்யம் இருந்தது.
மணப்பெண்ணை அழைத்து வரும்படி குரல் கொடுக்க… தாரணி கயல்விழியின் கைபிடித்து அழைத்து வந்தாள். அவர்களது இருபுறமும் மாலாவும், சீதாவும் வந்தனர்.
கயல்விழி குனிந்த தலை நிமிராமல், பதுமை போல் நடந்து வந்து நந்தாவின் அருகில் அமர்ந்தாள். அவன் ஒருமுறை அவளைத் திரும்பி பார்த்துக் கொண்டான்.
ரொம்ப நேரம் எல்லாம் ஆகவே இல்லை. பூசாரி தாலி எடுத்து கொடுக்க… அதைக் கயல்விழியின் சங்கு கழுத்தில் அணிந்துவிட்டு. அவர் கொடுத்த குங்குமத்தையும், அவள் நெற்றியில் வைத்து இருந்தான். பிறகு இருவரும் மாலை மாற்றினர்.
வருண் நந்தாவின் கழுத்தில் இருந்த சின்ன மாலையைக் கழட்டி அவனிடம் கொடுக்க… அதையே தாரணி கயல்விழிக்கு செய்தாள்.
கயல்விழி அப்போதும் நிமிர்ந்து அவனைப் பார்க்கவில்லை. முதலில் நந்தா மாலை போட… அடுத்து கயல்விழி கையை உயர்த்த.. அவன் வேண்டுமென்றே குனியாமல் இருந்தான்.
அவன் குனிந்தால் தானே மாலை அணிவிக்க முடியும். அவள் பார்வையை உயர்த்தித் தன் கணவனைப் பார்க்க… அவன் புன்னகையுடன் அவளையே பார்த்துக் கொண்டு இருந்தான். அவன் விளையாட்டு புரிந்து மற்றவர்கள் சிரித்தனர்.
இருவரும் மூன்று முறை மாலை மாற்றிக் கொண்டனர். அதன்பிறகு நந்தா அவளுக்கு மெட்டி அணிவித்து விட்டான். அவ்வளவுதான் திருமணம் முடிந்து விட்டது.
மீண்டும் தம்பதிகள் கோவிலுக்குள் சென்று சாமி கும்பிட்டுவிட்டு வந்தனர். அப்போதே உணவு பந்தி ஆரம்பிக்க… உறவினர்கள் சாப்பிட சென்றனர்.
கீதாவின் பெற்றோர் அப்போதுதான் வந்தனர். அவர்களைப் பார்த்ததும் அதுவரை வெறுப்போடு எல்லாவற்றையும் கவனித்துக் கொண்டிருந்த கீதா, அவர்களை நோக்கி விரைந்து சென்றாள்.
“என்ன அப்பா இவ்வளவு லேட்டா வர்றீங்க? விக்னேஷ் உங்ககிட்ட வந்து சொன்னான்னா இல்லையா?”
“இல்லையே மா… காலையில உங்க மாமனார் போன் செஞ்சு சொன்னதும்தான் தெரியும்.”
“பார்த்தீங்களாப்பா நம்ம தம்பிக்கு செய்றேன்னு சொல்லிட்டு வெளியே செஞ்சிட்டாங்க. நீங்க வந்து என்னன்னு கேளுங்க.”
“உன் தம்பிக்கே இஷ்ட்டம் இல்லை. பிறகு அவரைக் கேட்டு என்னமா ஆகப்போகுது. அதுதான் கல்யாணம் முடிஞ்சிடுச்சே…”
“அப்ப அப்படியே விட்ருவீங்களா?”
“கல்யாணத்துக்கு முன்னாடியே தெரிஞ்சிருந்தா தடுத்து இருக்கலாம். அப்படி ஆகிட கூடாதுன்னு தானேமா லேட்டா தகவல் சொல்றாங்க.”
கீதாவுக்கு மனம் சமாதானம் ஆகவே இல்லை. சிலர் இப்படித்தான் எதாவது பிரச்சனை செய்து கொண்டே இருக்க வேண்டும்.
காலையிலேயும் சாப்பிடவில்லை என்று நந்தாவும் வருணும் முதல் பந்தியிலேயே சாப்பிட அமர்ந்து இருந்தனர். அவர்களோடு சேர்த்து அவர்கள் விட்டினரையும், நண்பர்களையும் சாப்பிட வைத்தனர்.
சாப்பிட்டு முடித்து வந்தவர்கள், அவர்கள் உறவினர்களை வேன்னில் ஏற்றி, உடனே அங்கிருந்து கிளப்பியும் விட்டனர். பரணி அவர்களோடு சென்றான்.
செல்லும் வழியில் ராமேஸ்வரம், திருச்செந்தூர் எல்லாம் சுற்றி காட்டி அழைத்துச் செல்லும்படி, அவனிடம் பணம் கொடுத்து அனுப்ப… உறவினர்களுக்கு மிகவும் மகிழ்ச்சி.
ராதிகாவுக்கும் அவள் அம்மாவுக்கும் கிளம்பி செல்ல துளியும் விருப்பம் இல்லை. ஆனால் அவர்களை இரு என்று யாரும் சொல்லாத போது, எப்படி இருப்பது?
“ஏன்டாப்பா… நீ வரணும்னா நாங்க வரணும்… போன்னு சொன்னா போயிடனுமா? இவ்வளவுதான் உன் கல்யாண விருந்தா?” என அவர் கேட்க,
“நான் இன்னைக்கே வேலைக்குப் போகணும் அத்தை. மெட்ராஸ்ல எங்க கல்யாண ரிஷப்ஷன் இருக்கும். அப்ப உங்களுக்குப் பெரிய விருந்தே கொடுத்திடுறேன்.” என நந்தா சமாளித்து அவரை அனுப்பி வைத்தான்.
ராதிகா அவனிடம் சொல்லிக்கொள்ளக் கூட இல்லை. முகத்தை உர்ரென்றே வைத்துக்கொண்டு இருந்தாள்.
நந்தாவும் அவளைக் கண்டுகொள்ளவில்லை. அவன் என்ன இவளை திருமணம் செய்து கொள்கிறேன் என்று சொல்லியா இருந்தான்.
அவளாக மனதிற்குள் ஆசையை வளர்த்துக்கொண்டாள், அதற்குத் தான் பொறுப்பு இல்லை என நினைத்தான்.
“அம்மா, நாமும் கிளம்பலாம், கயல் எங்கே?” நந்தா கேட்க, அப்போது அன்பரசுவும் பத்மாவும் ஒரு பெரிய தாம்பலத்தோடு வந்தனர். அதில் நிறைய நகைகளும், ரொக்கமாக நிறையப் பணமும் இருந்தது.
தாங்கள் பெண்ணுக்கு செய்யும் சீர் என்று சொல்லி, அதைக் குழலியிடம் அவர்கள் கொடுக்க.. அவர் நந்தாவை பார்த்தார்.
“உங்க பெண்ணை நான் அவளுக்காக மட்டுமேதான் கல்யாணம் பண்ணேன். நீங்க எனக்கு இவ்வளவு பணமும் நகையும் தருவீங்கன்னு இல்லை.”
“எனக்கு அவ மட்டுமே போதும். அவ போட்டிருக்க நகைகளைக் கூடக் கழட்ட சொல்லிடுவேன், ஆனா உங்க மனசு கஷ்ட்டப்படும்னு பார்கிறேன்.”
நந்தா பேசப் பேச அவனைத் தவிப்பாகப் பார்த்த பத்மா, எதோ சொல்ல வர… அவரைக் கைகாட்டி அன்பரசு தடுத்தார்.
“உங்க இஷ்ட்டம்.” என்றவர் திரும்பி சென்றார். இந்த ஒரு விஷயத்தில் மட்டும் கீதாவுக்கு மிகவும் சந்தோஷம்.
அன்பரசுவுக்குப் புரிந்து விட்டது. தன் மகளைத் திருமணம் செய்ததால் மட்டும் அவன் மாறப்போவது இல்லை. அவனுக்கு அவர் என்றுமே எதிரிதான்.
error: Content is protected !!