“கால் மணி நேரத்துல வந்துருவேன்னு தாத்தா சொன்னாங்களே? மணி ஒண்ணு ஆகுது. இன்னும் காணும்”, என்று எண்ணினாள் இந்து.
நேரம் ஆனதால் கொஞ்சம் பதட்டம் கூட ஆரம்பித்தது. உடனே வீட்டைப் பூட்டி விட்டு வயலுக்கு கிளம்பி விட்டாள். உச்சி வெயில் சுட்டெரிக்க ஆரம்பிக்க தாவணியை தலையில் முக்காடாகப் போட்டு விட்டு நடையை வேகப் படுத்தினாள். அவள் வயலுக்கு சென்ற போது அங்கே ஒரு ஆறு பேர் குணசேகருடன் பேசிக் கொண்டிருந்தனர். குணசேகரனைக் கண்டதும் தான் அவள் முகத்தில் நிம்மதியே வந்தது. ஆனால் குணசேகரன் முகம் கோபத்தில் மிளிர்ந்ததைக் கண்டு குழப்பம் வந்தது அவளுக்கு.
“என்ன ஆச்சோ?”, என்ற பதட்டத்தில் விரைவாக அவர்களை நெருங்கிய இந்து “என்ன ஆச்சு தாத்தா? ஏதாவது பிரச்சனையா?”, என்று கேட்டாள்.
குணசேகரன் எதுவோ சொல்ல வர “நீங்க இருங்க தாத்தா. உங்களுக்கு ஒண்ணும் தெரியாது. நான் உங்க பேத்திக்கு புரியுற மாதிரி சொல்றேன்”, என்று சொன்ன ஒருவன் “இங்க பாரு மா உன்னைப் பாத்தா படிச்சவ மாதிரி இருக்கு. நாங்க ஒரு பெரிய காத்தாடி கம்பெனில இருந்து வரோம்”, என்று ஆரம்பித்தான். அவன் பெயர் மூர்த்தி. இன்பன் இண்டஸ்ட்ரியில் மேனேஜராக பணிபுரிகிறான்.
“உங்களையா நான் கேட்டேன்? நீங்க கொஞ்சம் அமைதியா இருக்கீங்களா? எங்க தாத்தாவுக்கு தெரியாதது எதுவுமே இல்லை. எனக்கு புரியுற மாதிரி அவரால சொல்ல முடியும்”, என்று அவனைப் பார்த்து முறைத்த படி சொன்ன இந்து “நீங்க சொல்லுங்க தாத்தா. இவங்க எல்லாம் எதுக்கு நம்ம வயல்ல நின்னு பேசிட்டு இருக்காங்க?”, என்று கேட்டாள்.
“சரியான திமிர் புடிச்ச பொண்ணா இருக்கும் போல? தாத்தாவை தான் கரெக்ட் பண்ண முடியலைன்னு பாத்தா பேத்தியையும் சரி கட்ட முடியாது போல? இவங்க நிலத்தை மட்டும் வாங்காம போனா முதலாளி என்னை தொலைச்சிருவாரே? இவங்களுக்கு எப்படி பேசிப் புரிய வைக்கப் போறேனோ?”, என்று எண்ணிக் கொண்டான் மூர்த்தி.
“வீட்டுக்கு கிளம்பிட்டு இருக்கும் போது இவங்க வந்தாங்க இந்து மா. இங்க வந்து நின்னுக்கிட்டு நம்ம இடத்துல காத்தாடி போட கேக்குறாங்க. சுத்தி இருக்குற எல்லாரும் இடம் கொடுத்துட்டாங்களாம். அதனால நாமளும் கொடுக்கணுமாம். நாம இடத்தைக் கொடுத்தா அதுக்கு வாடகை போட்டு மாசம் இவ்வளவுன்னு பணம் தருவாங்களாம். நான் முடியாதுன்னு சொல்லியும் பேசிட்டே இருக்காங்க. அதான் எரிச்சல்ல நிக்குறேன்”, என்றார் குணசேகரன்.
அடுத்த நொடி மூர்த்தியை முறைத்துப் பார்த்த இந்து “என்ன விளையாடுறீங்களா? இது என்ன உன் அப்பன் வீட்டு இடமா? பரம்பரை பரம்பரையா விவசாயம் செய்யுற இடம். இதை உன் கிட்ட கொடுத்தா எங்க விவசாயம் என்ன ஆகுறது?”, என்று கேட்டாள்.
அவள் ஒருமையாக பேசியது கோபத்தைக் கொடுத்தாலும் “இல்லை மா முழுக் காட்டையும் நாங்க எடுத்துக்க மாட்டோம். கொஞ்ச இடம் மட்டும் தான் எங்களுக்கு தேவை”, என்று பொறுமையாக சொன்னான் மூர்த்தி.
“கொஞ்ச இடம்னு சொல்லி அதை பிடுங்கி நீங்க என்னவெல்லாம் செய்வீங்கன்னு எங்களுக்கு தெரியாதுன்னு நினைச்சீங்களா? நீங்க கரண்ட் எடுக்க, அந்த காத்தாடி மிசினை ஓட விட, எங்க நிலத்துல இருந்து தான் நிலத்தடி நீரை உறிஞ்சு எடுப்பீங்க? அப்ப மத்த இடத்துல இருக்குற பயிர் எல்லாம் என்ன ஆகும்? எப்படி விளையும்?”
“அதெல்லாம் ஒண்ணும் ஆகாது மா. நாங்க இந்த புராஜெக்ட்டை பெரிய அளவுல பண்ணுறதுக்கு கவர்ன்மெண்ட்டே அனுமதி கொடுத்துருக்கு மா. நீங்க சொல்ற மாதிரி எல்லாம் இருந்தா அரசாங்கம் அனுமதி கொடுக்குமா?”
“நீங்க தான் அரசாங்கம், அரசாங்கம் தான் நீங்க. இது தெரியாத அளவுக்கு நான் ஒண்ணும் சின்னக் குழந்தை இல்லை. பெரிய புராஜெக்ட்டோ சின்ன புராஜெக்ட்டோ. நீங்க என்னமும் செஞ்சிட்டுப் போங்க. எங்களுக்கு இதுல கொஞ்சம் கூட உடன்பாடு இல்லை. மத்தவங்க தான் நீங்க கொடுக்குற காசுக்கு விஷயம் புரியாம நிலத்தைக் கொடுத்தாங்கன்னா எல்லாம் தெரிஞ்ச நாங்க எப்படி கொடுப்போம்? வேற ஆளைப் பாருங்க. இப்ப நீங்க கிளம்பலாம்”, என்று அவள் தெளிவாக சொல்ல அவனுக்கு எரிச்சல் வந்தது.
“இங்க பாரு மா. உங்க இடத்தைச் சுத்தி உள்ள அத்தனை இடத்துக்காரங்க கிட்டயும் அக்ரீமன்ட் போட்டுட்டோம். உங்க இடம் மட்டும் தான் பாக்கி. அது மட்டுமில்லாம உங்க இடத்து மூலமா தான் நாங்க உள்ள உள்ள இடத்துக்கு போகவே முடியும். அதனால பணம் கூட வேணும்னா அதிகமா தறோம். ஆனா உங்க இடத்தை நீங்க கொடுத்தே ஆகணும்”
“பாரு டா சார் மிரட்டுறதை”, என்று சிரித்தாள் இந்து.
“என்ன மா நக்கலா?”
“இல்லை இல்லை விக்கல். கேக்குறது பிச்சை. இதுல தெனாவெட்டு வேற. உங்க பாச்சா எல்லாம் எங்க கிட்ட நடக்காது. ஒழுங்கு மரியாதையா இங்க இருந்து கிளம்புங்க”
“உனக்கு நிலைமையோட தீவிரம் இன்னும் சரியா புரியலைன்னு நினைக்கிறேன். எங்க பாஸ் நினைச்சா இதை வாங்காம விட மாட்டார் மா. என்ன செஞ்சினாலும் இந்த இடத்தை உங்க கிட்ட இருந்து வாங்கியே தீருவார்”
“பாசோ கீசோ எந்த கொம்பனா இருந்தாலும் எங்க கிட்ட வாலாட்ட முடியாது. போங்க போங்க காத்து வரட்டும். அறிவில்லாம பயிரை மிதிச்சிக்கிட்டு நிக்குறீங்க? இன்னொரு தடவை வயல்ல காலை வச்சீங்க வெட்டிருவேன் பாத்துக்கோங்க. இது உங்க மொட்டை பாசுக்கும் சேத்து தான். போங்க இங்க இருந்து”, என்று இந்து சொன்னதும் அவளை முறைத்த படியே அனைவரும் கிளம்பிச் சென்றார்கள்.
“நீங்க வாங்க தாத்தா போகலாம்”, என்று சொல்லி குணசேகரனை வீட்டுக்கு அழைத்து சென்றாள் இந்து. வீட்டுக்கு சென்றதும் இருவரும் சிறிது நேரம் அதைப் பற்றி பேசிக் கொண்டிருந்து விட்டு மதியம் அவள் சமைத்ததை சாப்பிட்டு விட்டு படுத்தார்கள்.
அதே நேரம் அவள் பேசியதை அனைத்தையும் இந்து சொன்ன மொட்டை பாஸிடம் ஒப்பித்துக் கொண்டிருந்தான் மூர்த்தி. இந்து பேசியதை மூர்த்தி சொல்லிக் கொண்டிருக்க இன்பன் முகம் கோபத்தில் ரத்த சிவப்பு நிறத்தை பூசியது.
இன்பன் சீனிவாசன் அம்பிகா தம்பதியின் செல்ல மகன். வயது இருபத்தி நாலு. அந்த வயதுக்கே உரிய அழகும் திமிரும் நிறைந்தவன். உடற்பயிற்சி செய்து உடலைக் கட்டுக் கோப்பாக வைத்திருந்ததால் ஆணழகனாக இருந்தான். தொழில் என்று வந்து விட்டால் புலி தான்.
அவனிடம் இருக்கும் ஒரே கெட்ட விஷயம் அவன் ஒன்று நினைத்து விட்டால் அதை முடித்தே தீருவான். நல்லது கெட்டது பற்றி எல்லாம் அவன் கவலைப் பட மாட்டான்.
மூர்த்தி சொன்னதை அனைத்தையும் கேட்ட இன்பன் “அப்படியா சொன்னா அவ?”, என்று கேட்டான்.
“ஆமா சார். அந்த பொண்ணு சரியான திமிர் பிடிச்சவ போல? அவங்க இடம் நமக்கு வேண்டாம் சார்”, என்றான் மூர்த்தி.
“என்னது வேண்டாமா? மத்த நேரமா இருந்திருந்தா ஒனர்க்கு பிடிக்கலைன்னு சொல்லி நாம அதை விட்டுட்டு வேற இடம் பாக்கலாம் மூர்த்தி. ஆனா அந்த பொண்ணு என்னைப் பத்தி பேசி என் ஈகோவை டச் பண்ணிருக்கா. அதனால அந்த இடத்தை அவ கிட்ட இருந்து வாங்கினா…. இல்லை இல்லை பிடுங்கினா தான் எனக்கு நிம்மதி”, என்றான் இன்பன். அவன் கண்கள் கோபத்தில் ஜொலித்தது.
அவன் முகத்தில் இருந்த கோபத்தைக் கண்ட மூர்த்தி “எதுக்கும் ஒரு தடவை அவங்க வீட்ல போய் பொறுமையா பேசி பாக்குறேன் சார்”, என்றான்.
“ஓகே செய். ஆனா ரொம்ப இறங்கிப் போகாத. அதுக்கு நமக்கு அவசியமும் இல்லை. திருப்பியும் முடியாதுன்னு சொன்னா பாக்க வேண்டிய விதத்துல பாத்துக்கலாம். இப்பவே தந்தா அவங்களுக்கு லாபம். வேற ஏதாவது தகராறு பண்ணினா நஷ்டம் அவங்களுக்கு தான். நமக்கு இல்லை. புரிஞ்சதா?”
“புரிஞ்சது சார்”, என்று சொல்லி விட்டு சென்ற மூர்த்தி நேராக இந்து வீட்டைக் கண்டு பிடித்து அங்கே சென்றான்.
அவனைக் கண்டதும் அவள் முறைத்த படியே “என்ன?”, என்று கேட்க “நாம கொஞ்சம் பொறுமையா பேசலாம் மா. நிலைமை கொஞ்சம் பெருசு. உனக்கு விவரம் இன்னும் தெளிவா புரியலைன்னு நினைக்கிறேன். உங்க தாத்தாவையும் கூப்பிடு. பொறுமையா பேசலாம்”, என்றான்.
“ஒரு தடவை சொன்னா உனக்கு புரியாதா? தேவையில்லைன்னு சொன்னதுக்கு அப்புறம் எதுக்கு திருப்பி திருப்பி வந்து தொல்லைக் கொடுக்குறீங்க? போங்க இங்க இருந்து”, என்று சொல்லி விட்டு கதவை அறைந்து சாற்றினாள் இந்து.
“யார் மா வந்தா?”, என்று குணசேகரன் கேட்க கத்து கத்து என்று கத்தி தீர்த்து விட்டாள் இந்து. அவள் உள்ளே திட்டுவது மூர்த்திக்கு வெளியே கேட்டது. அனைத்தையும் கேட்டு விட்டு “இந்த பொண்ணுக்கு பட்டா தான் தெரியும்”, என்று எண்ணிக் கொண்டு வந்து விட்டான் மூர்த்தி.
முகத்தை தொங்கப் போட்டுக் கொண்டு தான் ஆஃபிஸ்க்கு திரும்பி வந்தான் மூர்த்தி. “என்ன மூர்த்தி அந்த பொண்ணு ஒத்துகிச்சா? அதிகமா பணம் எதிர்பார்த்தா கூட கொடுத்துறலாம். என்ன சொல்றா அந்த திமிர் பிடிச்சவ?”, என்று கேட்டான் இன்பன்.