“கோடியே கொடுத்தாலும் அவளுக்கு வேண்டாமாம் சார். உங்களால என்ன செய்ய முடியுமோ செஞ்சிக்கோன்னு சொல்லிருச்சு. எனக்கு என்னமோ இதை இப்படியே விட்டுறலாம்னு தோணுது”
“அப்படியா? அப்ப செஞ்சிற வேண்டியது தான்”
“சார்”
“தோல்வி அப்படிங்குறது என்னோட அகராதிலே இல்லை மூர்த்தி. அப்படி ஒரு இடத்தை விட்டுக் கொடுத்தா நாம தொழில் பண்ண முடியாது. அவளுக்கு பொறுமையா எல்லாம் சொன்னா புரியாது. கொஞ்ச இடத்தைக் கேட்டதுக்கு தானே கொடுக்க மாட்டேன்னு சொன்னா. அவங்களோட மொத்த இடத்தையே நான் என் பேர்ல வாங்கிக் காட்டுறேன். அப்ப அவ என்ன செய்வான்னு பாப்போம்”, என்று இன்பன் சொன்னதும் மூர்த்திக்கே இந்துவை நினைத்து பாவமாக இருந்தது.
ஏனென்றால் இன்பன் அப்படிப் பட்டவன் தான். பாரினில் எம். பி. ஏ முடித்து விட்டு தந்தையின் தொழிலில் இறங்கியவனுக்கு இது வரை கிடைத்தது வெற்றி மட்டுமே. இப்போது காற்றாலை புராஜெக்ட் அவனுக்கு என்று அளாட் ஆகியிருக்க அதற்காக தான் ஒவ்வொருவரிடமும் இருந்து நிலங்களை சேகரித்துக் கொண்டிருந்தான்.
எதிலும் விட்டுக் கொடுக்காதவன். எப்பாடு பட்டாவது என்ன செஞ்சாவது நினைத்தை முடிக்காமல் விட மாட்டான். “தேவையில்லாம அந்த பொன்னை இவன் கூட கோத்து விட்டுட்டோமோ? ஐயோ இனி என்ன ஆனாலும் அந்த பாவத்துல எனக்கும் பங்கு இருக்குமே?”, என்று எண்ணிய மூர்த்தி “அவங்க குடும்பம் கொஞ்சம் கஷ்டப் பட்டவங்க சார். அந்த இடத்துல விவசாயம் செஞ்சு தான் அவங்க புழைப்பு ஓடுது. அதனால தான் நிலத்தை தரமாட்டேன்னு சொல்றாங்க. இதுக்கு மேல நாம எதுக்கு அவங்களை கஷ்டப் படுத்தணும்?”, என்று கேட்டான்.
“அடுத்தவங்களுக்கு பாவம் பாத்தா அடுத்த நிமிஷம் இந்த புராஜெக்ட் நம்ம கை விட்டு போயிரும் மூர்த்தி. பிஸ்னஸ்ல இறங்கிட்ட நோ சென்டிமெண்ட். இதை எப்படி முடிக்கணும்னு நான் பாத்துக்குறேன். நீ அடுத்த வொர்க் என்னன்னு பாரு”, என்று சொல்லி விட்டான்.
அவன் தீவிரமாக சொல்லிய விதத்திலே மூர்த்திக்கு பக்கென்று இருந்தது. அந்த சின்னப் பொண்ணுக்கோ அவளது குடும்பத்துக்கோ எதுவும் இன்பனால் ஆகி விடக் கூடாது என்ற நல்ல எண்ணத்தில் அடுத்த நாளே இந்துவின் வீட்டுக்கு மீண்டும் சென்றான் மூர்த்தி.
அவனைக் கண்டதும் முறைத்த இந்து “உங்களுக்கு ஒரு தடவை சொன்னா புரியாதா? தினம் தினம் வந்து எதுக்கு உயிரை வாங்குறீங்க?”, என்று கத்தினாள்.
“அதானே, எதுக்கு தினமும் வந்து எங்களை தொந்தரவு பண்ணுறீங்க?”, என்று கேட்டார் குணசேகரன். அவர்கள் பேசுவதை வியப்பாய் பார்த்துக் கொண்டிருந்தான் கிரி. அன்று பள்ளி விடுமுறை என்பதால் அனைவரும் வீட்டில் தான் இருந்தார்கள். அவனுக்கு இது வரை நிலம் விஷயம் சொல்லப் பட வில்லை. அதனால் இவன் யார், எதற்கு தாத்தாவும் அக்காவும் இவனைக் கண்டு கோபப் படுகிறார்கள் என்று எண்ணி அவர்கள் பேசுவதைக் கவனித்தான்.
“நான் இப்ப கம்பெனிக்காக பேச வரலை மா. உனக்கு ஒரு அண்ணன் இருந்தா எப்படி பேசுவானோ அப்படி நினைச்சு தான் பேச வந்தேன் மா”, என்றான் மூர்த்தி.
அந்த அண்ணன் என்ற வார்த்தை கொஞ்சம் இந்துவுக்கு இளக்கம் கொடுத்தாலும் “இது என்ன புது டிராமா? அடி பணிஞ்சு போக மாட்டேன்னு அன்பால மிரட்ட வந்தீங்களா?”, என்று நக்கலாக கேட்டாள்.
“நீ என்ன வேணும்னாலும் நினைச்சிக்கோ மா. ஆனா இந்த பிரச்சனைக்கு அடித்தளம் போட்டது நான் தான். அதனால தான் நானே உன்னைப் பாத்து எச்சரிக்கை பண்ண வந்தேன்”
“என்னது எச்சரிக்கை பண்ண வந்தீங்களா? என்ன எச்சரிக்கை?”
“எங்க பாஸ் லேசு பட்டவர் இல்லை மா”
“அவர் புகழைப் பாட தான் வந்தீங்களா?”
“இல்லை மா நிஜமாவே அவர் குணத்தைச் சொல்லி உன்னை எச்சரிக்க தான் வந்தேன். அவர் ரொம்ப பிடிவாத குணம் உள்ளவர் மா”
“அவர் எப்படி இருந்தா எனக்கு என்னங்க? எங்களுக்கும் அவருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை”
“இல்லை மா, அவர் பிடிவாத குணம் அதிகம் உள்ளவர். நினைச்சதை அடைஞ்சே தீருவார். இதுல நீ பெருசா பாதிக்க பட்டுறக் கூடாதுன்னு அக்கரைல தான் வந்தேன். அவர் என்ன செஞ்சாவது உங்க நிலத்தை வாங்கணும்னு சொல்லிட்டார். இடத்தைக் கொடுக்குறதும் கொடுக்காததும் உங்க விருப்பம். ஆனா கொஞ்சம் நீங்க எச்சரிக்கையா இருங்க. அதைச் சொல்லத் தான் வந்தேன். சொல்றதை சொல்லிட்டேன். அப்புறம் உங்க இஷ்டம். நான் வரேன்”, என்று சொல்லி விட்டு சென்று விட்டான் மூர்த்தி. இதற்கு மேல் அந்த கடவுள் தான் அவர்களைக் காப்பாற்ற வேண்டும் என்று எண்ணிக் கொண்டான் மூர்த்தி.
அவன் அங்கிருந்து சென்றதும் “எனக்கும் கொஞ்சம் பயமா இருக்கு டா மா. அந்த தம்பி திருப்பி திருப்பி சொல்றதைப் பாத்தா பயமா தான் இருக்கு”, என்றார் குணசேகரன்.
“பயப்படாதீங்க தாத்தா. இது நம்ம நிலம். யாராலயும் எதுவும் செய்ய முடியாது. அப்படி என்ன தான் பண்ணுறாங்கன்னு பாப்போம்?”, என்றாள் இந்து.
“ஐயோ எனக்கு ஒண்ணுமே புரியலை. நானும் பெரிய பையன் தானே? எனக்கும் விஷயத்தை சொல்லலாம்ல?”, என்று கேட்டான் கிரி.
“நல்ல விஷயம் தானே? எங்க ஸ்கூல்க்கு பின்னாடி நிறைய அப்படி போட்டுருக்காங்க. அதுல இருந்து தான் கரண்ட் எடுக்காங்களாமே?”, என்று ஆர்வமாக சொன்னான் கிரி.
“நீ சொல்றது சரி தான் கிரி”, என்று ஆரம்பித்த இந்து அதன் பக்க விளைவுகளை தம்பிக்கு புரியும் படி எடுத்துச் சொன்னாள். அனைத்தையும் கேட்ட கிரிக்கு திகைப்பாக இருந்தது. அதுவும் இப்போது அவர்கள் நிலம் கேட்டு மிரட்டுவதைக் கேள்வி பட்டு அந்த முகம் தெரியாத பாசின் மேல் கோபமாக வந்தது.
“பயப்படாதீங்க தாத்தா. நாம மூணு பேர் சேந்து அவனை ஒரு கை பாக்கலாம். யார் இடத்தை யார் வந்து கேக்குறது?”, என்று சொல்லி சிரித்தான் கிரி.
அவனைக் கண்டு மற்ற இருவரும் சிரித்தார்கள். இவர்களின் சிரிப்பு இன்பனால் என்ன ஆகுமோ என்று எண்ணி பயந்தது விதி.
ஆம் விதி பயந்தது போல தான் நடந்தது. அடுத்த நாள் மதியம் சமைத்து முடித்த இந்து கிரிக்கு உணவு எடுத்துக் கொண்டு அவனது பள்ளிக்குச் சென்றாள். அவனிடம் உணவைக் கொடுத்து விட்டு திரும்பி வீட்டுக்கு நடந்து சென்றாள். அந்த ஒற்றையடிப் பாதை வழியாக வீட்டுக்கு போய்க் கொண்டிருந்தவள் ஏதோ சத்தம் கேட்கவும் அப்படியே நின்றாள். சத்தம் எங்கிருந்து வருகிறது என்று தலையை திருப்பி திருப்பி பார்த்தாள்.
எதுவுமே கண்ணில் மாட்டாததால் மீண்டும் நடக்க ஆரம்பித்தாள். உள்ளுக்குள் ஏதோ பயம் இருந்ததாளோ என்னவோ? நடையை முன்பை விட துரிதப் படுத்தினாள்.
மீண்டும் அதே சத்தம் கேட்க பயத்துடன் தலையை திருப்பினாள். “கடவுளே உச்சி மத்தியானம் காட்டுக்குள்ள பேய் வரும்னு சொல்லுவாங்களே? ஒரு வேளை மோஹினி பேய் தான் என்னை பயமுறுத்துதா? கடவுளே என்னைக் காப்பாத்து”, என்று அவள் மனதுக்குள் வேண்ட அடுத்த நொடி முக மூடி போட்ட நான்கு பேர் அவள் முன்பு வந்து நின்றனர். அவள் அதிர்ந்து கலவரத்துடன் அவர்களை பார்த்துக் கொண்டிருக்கையிலே நால்வரும் அவளை சுற்றி நின்று கொண்டனர். .
“நீங்கல்லாம் யாரு? இங்க என்ன பண்ணுறீங்க? எனக்கு வழியை விடுங்க”, என்று பயத்துடன் சொன்னாள் இந்து.
“உன்னை விடுறதுக்கா ஊரும் நீயும் அசந்த நேரம் உன்னைத் தூக்க ஸ்கெட்ச் போட்டுருக்கோம்?”, என்று கேட்டான் ஒருவன்.
“ஐயோ நீங்க ஸ்கெட்ச் போட்டுத் தூக்குற அளவுக்கு நான் பெரிய ஆள் எல்லாம் இல்லை. என்னை விட்டுருங்க. தாத்தா தேடுவாங்க. என்னை விடலைன்னா நான் கத்துவேன்”
“என்ன டா அவளை பேச விட்டு வேடிக்கை பாத்துட்டு இருக்கீங்க? தூக்குங்க டா”, என்று மற்றொருவன் சொல்ல மூவரும் அவளை நெருங்கினார்கள். அவள் பயந்த்துடன் அங்கிருந்து ஓடப் பார்க்க அவளால் முடியவில்லை. மூவரும் சேர்ந்து அவளை பிடித்துக் கொண்டனர். ஒருவன் அவள் வாயையும் பொத்தியதால் அவளால் கத்த கூட முடியவில்லை. சிறிது நேரம் அவளை இழுத்துச் சென்று அங்கு நின்ற காருக்குள் அவளை அடைத்தனர்.
“டேய் யாரு டா நீங்க? என்னை விடுங்க டா”, என்று அவள் கத்த அவள் வாயில் துணியைக் கொண்டு அடைத்தான் ஒருவன்.
“என்னை எங்க டா தூக்கிட்டுப் போறீங்க? நீங்கல்லாம் யாரு டா? என்னை என்ன டா செய்யப் போறீங்க?”, என்ற அவளின் வார்த்தைகள் எல்லாம் அவள் வாய் மூடப் பட்டிருந்ததால் வாய்க்குள்ளே மீண்டும் சென்று அவளது தொண்டைக்குள்ளே அடங்கியது.
வாயை மூடியதால் அவள் கைக் காலை அங்கே இங்கே உதைத்த படி அருகில் இருந்தவனை இம்சை செய்த படி வர “அண்ணா, இந்த பொண்ணு ஒரு இடத்துல அடங்கி உக்கார மாட்டிக்குது. ஏதாவது பண்ணனும்”, என்று சொன்னான் அவளின் கைகளைப் பற்றியிருந்தவன்.
“இந்தா இந்த கர்ச்சிப்பை அவ மூக்குல வை. உன் மூக்குல வச்சிராத டா”, என்று சொல்லி ஒரு துணியைக் கொடுத்தான் மற்றொருவன்.
அடுத்த நொடி அந்த கர்ச்சிப்பை அவள் மூக்கில் வைத்து அழுத்தினான் அவன். அவள் அது என்னவென்று யோசிக்கும் போதே அவளுக்கு கண்கள் சொருகி மயக்கம் வந்தது. உடனேயே மயங்கிப் போனாள் இந்து.