எங்கெங்கோ பயணம் செய்த மனதை அடக்கிய இந்து அவன் அருகே சென்று “என்ன?”, என்று கேட்டாள்.
“போன் பண்ணினா எடுக்க மாட்டியா?”
“ஆஃபிஸ்ல போன் யூஸ் பண்ணக் கூடாது. என்ன விஷயம் சொல்லு”
“கார்ல ஏறு”
“அது எதுக்கு உனக்கு கஷ்டம்? நீ தேவையில்லாம எனக்கு டிரைவர் வேலை பாக்கவா?”
“படுத்தாத டி. ஏறு”, என்று அவன் சொன்னாலும் அவள் அப்படியே நிற்கவும் கார் கதவை திறந்தவன் அவள் தோளைப் பிடித்து உள்ளே தள்ளி கதவை அடைத்துக் காரை எடுத்தான்.
அவனை முறைத்த படி அமர்ந்திருந்த இந்து “இப்ப எதுக்கு என்னை கூட்டிட்டு போற?”, என்று கேட்டாள்.
ஒரு மரத்தடியில் வண்டியை நிறுத்தியவன் “இரு சொல்றேன்”, என்று ஆரம்பித்து ஒவ்வொரு வரனாக அவளுக்கு விளக்கினான்.
“இப்ப உனக்கு இருக்கு டா. என்னை என்ன டார்ச்சல் பண்ணின? இப்ப பாரு நான் என்ன செய்றேன்னு?”, என்று மனதில் எண்ணிக் கொண்டவள் அமைதியாக அவன் சொல்வதை எல்லாம் கேட்டிருந்தாள்.
அவன் பத்து பேர் பற்றிய விவரங்களைச் சொல்லி முடித்ததும் அனைத்தையும் கேட்டு விட்டு “நீ இப்படி மொத்தமா சொன்னா எனக்கு எப்படி புரியும்? ஒவ்வொரு ஆளா பத்தி சொல்லு”, என்றாள்.
“என்னது? மறுபடியும் முதல்ல இருந்து சொல்லனுமா?”, என்று அதிர்ந்தான் இன்பன்.
“சொல்ல இஷ்டம் இல்லைன்னா சொல்ல வேண்டாம். நான் கிளம்புறேன்”, என்று அவள் சொல்ல “இரு இரு சொல்றேன்”, என்று எரிச்சலுடன் சொன்னவன் மீண்டும் ஒவ்வொரு ஆளாகச் சொல்ல ஆரம்பித்தான். அவளும் ஒவ்வொருவரையும் ஒவ்வொரு காரணம் சொல்லி ஒவ்வொன்றையும் மறுத்தாள்.
“இவன் பாரின்ல வேலை பாக்குறான். என்னால தாத்தாவை விட்டுட்டுப் போக முடியாதுப்பா…… அப்புறம் இவனுக்கு அம்மா அப்பா இல்லை. ஆனா எனக்கு மாமனார் மாமியார் வேணும். எனக்கு தான் அம்மா அப்பா இல்லை. வரப் போறவனுக்கும் அம்மா அப்பா இல்லைன்னா நல்லா இருக்காதுள்ள….. அப்புறம் இவன் வேலை எல்லாம் நல்லா தான் இருக்கு. ஆனா ஆள் ரொம்ப கருப்பா அசிங்கமா இருக்கான். அட்லீஸ்ட் உங்க கலரா இருந்தா கூட நல்லா இருக்கும்…. அப்புறம் இவன் மிலிட்டரி. இவன் எனக்கு வேண்டாம். எனக்கு வரப் போறவன் காலைல வேலைக்கு போயிட்டு சாயங்காலம் வீட்டுக்கு வரவனா இருக்கணும். இப்படி அவன் அங்கயும் நான் இங்கயும்னு பிரிஞ்சு எல்லாம் இருக்க முடியாது…. அப்புறம் இவன் கிராமத்துல இருக்கான். கிராமம் எல்லாம் எனக்கு செட் ஆகாது….”, என்று ஒவ்வொன்றாக அவன் கொண்டு வந்த பத்து வரனையும் மறுத்த இந்து “அடுத்து யாரு?”, என்று கேட்டாள்.
அவளை கொலை வெறியோடு முறைத்தவன் “இனி நான் தான் இருக்கேன். என்னை வேணும்னா கட்டிக்கிறியா?”, என்று நக்கலாக கேட்டான்.
“உன்னை மாதிரி வேற ஆள் இருந்தா கட்டிக்கிறேன். ஆனா நீ எனக்கு வேண்டாம். சரி சரி நான் வீட்டுக்கு போகணும். காரை கிளப்பு. இன்னைக்கு முழுக்க அலசி பத்து வரன் கொண்டு வந்த. அதுவும் தேறலை. இப்படி மந்தமா எனக்கு மாப்பிள்ளை பாத்தா என் கல்யாணம் எப்ப நடக்கும்? உன் தங்கச்சி கல்யாணம் தான் எப்ப நடக்கும்?”, என்று கேட்க அவனோ அவள் அனைவரையும் மறுத்ததில் உச்ச கட்ட வெறுப்பில் அவளிடம் பேசாமல் காரை ஓட்டிக் கொண்டிருந்தான்.
அவன் முகத்தில் இருந்த டென்சனைக் கண்ட இந்துவுக்கு அவ்வளவு உற்சாகமாக இருந்தது. அவனை மிகப் பெரிய அளவில் அவளால் ஒன்றும் செய்ய முடியாமல் போனாலும் இப்படி அவன் நிம்மதியையாவது கெடுக்க முடிக்கிறதே என்று நிம்மதி அடைந்தாள்.
அவள் வீடு இருக்கும் தெரு முனையில் காரை நிறுத்தியவன் “நாளைக்கு வேற லிஸ்ட் கொண்டு வரேன்”, என்றான்.
“அதாவது எனக்கு பிடிச்ச மாதிரி கொண்டு வா”, என்று திமிராக சொல்லி விட்டு இறங்கினாள் இந்து.
போகும் அவளையே பார்த்துக் கொண்டிருந்த இன்பனுக்கு “எல்லாம் என் நேரம் டி, கடவுளே இவளுக்கு எப்படி மாப்பிள்ளை பாக்க போறேன்?”, என்று எண்ணி மலைப்பாக இருந்தது.
அடுத்த நாள் உண்ணாமல் உறங்காமல் இருபது ஜாதகம் தேர்ந்தெடுத்துக் கொண்டு அவளைக் காண வந்தான். இன்றும் அவன் வந்திருப்பதால் திலகா இந்துவை “தம்பியோட லவ்வரோட அண்ணன்னு சொன்ன? ஆனா தினமும் உன்னைப் பாக்க வரார். நீங்க ரெண்டு பேரும் லவ் பண்ணுறீங்க தானே?”, என்று கிண்டல் அடித்து விட்டுச் சென்றாள்.
அதில் கடுப்பான இந்து “இப்படி தினமும் வந்தா எல்லாரும் என்ன நினைப்பாங்க?”, என்று அவனிடம் கத்தினாள்.
“ஏன் இப்ப என்ன பிரச்சனை? யார் என்ன சொன்னா?”
“அந்த அக்கா நாம லவ்வர்சான்னு கேட்டுட்டு போறாங்க”
“நாம லவ்வர்சா? அதுக்கு சான்ஸே இல்லை”, என்று அவன் சொல்ல “நானும் அவங்க கிட்ட அப்படித் தான் சொன்னேன்”, என்று அவனுக்கு பல்ப் கொடுத்தாள் இந்து.
அதன் பின் அவள் காரில் ஏறியதும் சற்று தூரம் சென்று காரை நிறுத்தி விட்டு ஒவ்வொரு வரன் பற்றி சொன்னான். அவளும் அதே போல மறுப்பு சொல்லிக் கொண்டிருந்தாள்.
“பதினஞ்சு காட்டிட்டேன். இன்னும் உனக்கு பிடிக்கலையா? நீ வேணுக்குன்னு சொல்ற இந்து”, என்று கோபத்துடன் சொன்னான் இன்பன். அவனை நிமிர்ந்து பார்த்தாள் இந்து. அவன் கண்கள் சிவந்ததிலே அவன் இரவு முழுவதும் தூங்க வில்லை என்று அவளுக்கு புரிய வைத்தது.
“இவனுக்கு இது தேவை தான்”, என்று மனதில் எண்ணிக் கொண்ட இந்து “எனக்கு பிடிச்சிருந்தா தானே பிடிச்சிருக்குன்னு சொல்ல முடியும்? இவ்வளவு கஷ்டப் பட்டு நீ ஒண்ணும் எனக்கு வரன் பாக்கத் தேவையில்லை”, என்றாள்.
“நீ எல்லாம் வேண்டாம்னு சொல்றதுனால தான் அப்படிச் சொல்லிட்டேன். சரி மீதியையும் பாரு”, என்று மற்றவர்களைப் பற்றிச் சொன்னான். அனைத்தையும் மறுத்து விட்டாள் இந்து.
கடைசியாக ஒரு வரனைப் பற்றி அவன் சொல்ல அது கொஞ்சம் அவளுக்கே பிடித்த படி இருந்ததால் சந்தோஷமாக சரி என்று சொன்னாள் இந்து.
“ஏய் என்ன சொல்ற? நிஜமாவே இந்த பையனை உனக்கு பிடிச்சிருக்கா?”, என்று அவ்வளவு ஆர்வமாக கேட்டான் இன்பன்.
“ஆமா, புடிச்சிருக்கு. மேற்கொண்டு பேசுங்க”, என்று அவள் சொன்னதும் அவனும் அவளை வீட்டில் விட்டுவிட்டு அவனுடைய வீட்டுக்குச் சென்றான்.
அவள் சரி என்று சொன்ன வரனுக்கு அழைத்து பேசினான். அவர்களும் கூடிய விரைவில் பதில் சொல்கிறோம் என்று சொல்ல அவர்களிடம் இருந்து திருப்பி எப்போது போன் வரும் என்று காத்துக் கொண்டிருந்தான்.
இந்துவுக்கோ “எதுக்கு அந்த வரனுக்கு சரின்னு சொன்னோம்? கூடக் கொஞ்ச நாள் இந்த இன்பனை தவிக்க விட்டுருக்கணுமோ?”, என்ற எண்ணம் தான் வந்தது.
பின் அவளே “நம்ம கல்யாணம் முடிஞ்சா தான் கிரி அஞ்சலி கல்யாணம் நடக்கும். இவனை பழி வாங்க அவங்களை எதுக்கு கஷ்டப் படுத்தணும்?”, என்று எண்ணி மனதைத் தேற்றிக் கொண்டாள்.
அந்த வரன் வீட்டில் இருந்து எப்போது போன் வரும் என்று காத்திருந்த இன்பன் அங்கிருந்து போன் வரவும் சந்தோஷமாக அதை எடுத்தான்.
“சார் சொல்லுங்க சார். எங்க இந்துவை உங்களுக்கு பிடிச்சிருக்கா?”, என்று கேட்டான் இன்பன்.
“சார் எல்லாம் வேண்டாம். என் பேர் வினித். நீங்க வினித்னே கூப்பிடுங்க”, என்றான் அந்த பக்கம் பேசிய ஆள்.
“ஓகே வினித். உங்க வீட்ல என்ன சொன்னாங்க?”
“அதைச் சொல்லத் தான் கூப்பிட்டேன். எங்க வீட்ல எல்லாருக்கும் பொண்ணை ரொம்ப புடிச்சிருக்கு. நீங்க பொண்ணுக்கு யாரு? என் அம்மா அப்பா அவங்க வீட்ல உள்ளவங்க கிட்ட பேச ஆசைப் படுறாங்க”
“ரொம்ப சந்தோஷம். எனக்கு அவங்க சொந்தக்காரங்க தான். இந்துவுக்கு அம்மா அப்பா இல்லை. தாத்தாவும் தம்பியும் மட்டும் தான்”, என்றான் இன்பன்.