அன்றைய இரவு அர்ஜூனுக்கும்,வராஹினிக்கும் தூங்கா இரவாகிப் போனதில் ஆச்சர்யம் ஒன்றுமில்லை. இரவெல்லாம் யோசித்ததில் கொஞ்சம் தெளிந்திருந்தான் அர்ஜூன். சுவரில் குத்தியதில் அவன் கை கொஞ்சம் காயம் கண்டிருக்க, அந்த காயம் கூட இப்போது அவனுக்குப் பெரிதாக தோன்றவில்லை. மனதில் இருக்கும் காயத்தை விட, வெளியில் இருக்கும் அந்த காயம் அவனுக்கு அதிக வலியைத் தரவில்லை போலும்.
உடன் இருக்கும் போது உணராத அவளின் அருகாமையை ஏனோ அவள் இல்லாத பொழுது மனம் உணர்வது தான் விந்தையிலும் விந்தை. அது மஞ்சள் கயிறு செய்த மாயமா..? இல்லை வராஹினி செய்த மாயமா என்று தெரியவில்லை. என்னதான் அவளை பிடிக்காததைப் போல் நடித்தாலும், அவனின் மனதில் அழிக்கவே முடியாத இடத்தில் அவள் நினைவும், பிரிக்கவே முடியாத இடத்தில் அவளும் இருந்தாள்.
அவளில்லாத அந்த வீடு அவனுக்கு வெறுமையாய் இருந்தது. இத்தனை வருடம் அவள் இல்லாமல் இருந்த அந்த வீடு தான். இப்போது, எதுவுமே இல்லாததைப் போல் தோன்றியது. தனிமை எவ்வளவு இனிமையோ அவ்வளவு கொடுமையும் கூட. அதிலும் காதல் கொண்ட மனதிற்கும், அதை உணராத புத்திக்கும் சொல்லவா வேண்டும்..?
எதுவும் தேவையில்லை.. யாரும் தேவையில்லை என்று தனிமையை பழக்கிக் கொண்டு வாழ்ந்து கொண்டிருந்தவனுக்கு, இன்று அந்த தனிமையையே எதிரியாக்கி விட்டு சென்றிருந்தாள் வராஹினி.
பேருந்தில் அவன் தோளில் அவள் முகம் புதைத்த நினைவும், அவள் இதழில் அவன் கவி படைத்த நினைவும் கண்முன்னே வந்து, அவனுக்கு மனவலியை தந்து கொண்டிருந்தது. காரில் செல்லும் போது அவனையே பார்த்துக் கொண்டு செல்லும் வராஹினி, அவனறியாமல் அவள் பார்க்கும் கள்ளப் பார்வைகள், அவன் மீதான காதல் பார்வைகள் என்று அவள் எத்தனை விந்தைகள் காட்டினாலும், அதைத் தெரியாததைப் போல் நடித்ததற்கான வலியை இன்று உணர்ந்து கொண்டிருக்கிறான்.
வயது வித்யாசம் பார்த்தவன், இன்று தன் வயது மறந்து குழந்தையாய் குமைந்து கொண்டிருந்தான். உணர்வுகளை வெளியே கொட்டிவிட்டால் ஆண் வர்க்கம் அவனை அதில் சேர்க்காது என்ற எண்ணத்தில் உறுதியாய் இருந்தானோ என்னவோ..? அனைத்தையும் தனக்குள்ளேயே புதைத்துக் கொண்டான்.
உணர்வுகளின் பிடியில் இருந்தவனுக்கு… அனைத்தையும் கொடுத்து, அவளை தன்னிடம் கொண்டு வந்தால் என்ன? என்ற எண்ணம் கூட தோன்றி மறைந்தது. எல்லாம் சில நிமிடங்கள் மட்டுமே. தன்னையும் மீறி தலைதூக்கும் நேர்மையான திமிரும், கொஞ்சம் பிடிவாதமும் அவனிடத்திலும் தோன்றியதோ என்னவோ..? அனைத்தையும் அப்படியே மனதிற்குள் வைத்து பூட்டிப் புதைத்தான் அர்ஜூன்.
காலையில் எப்போதும் போல் சாதாரணமாகக் கிளம்பிக் கொண்டிருந்தவனுக்கு, கார்த்திகேயனின் வரவு ஒன்றும் ஆச்சர்யத்தை அளிக்கவில்லை.
“அர்ஜூன் என்னாச்சு..? வராஹினி கிளம்பிப் போற அளவுக்கு என்ன பிரச்சனை..?” என்றார் கார்த்திகேயன்.
“எல்லாம் தெரிஞ்சு தானே வந்திருப்பிங்க..? அப்பறம் என்ன..? தெரியாத மாதிரி கேட்குறிங்க..?” என்றான் கிளம்பி கொண்டே.
“வாராஹினி சின்ன பொண்ணு அர்ஜூன். இன்னும் பக்குவம் வரலை. நீதான் கொஞ்சம் அனுசரணையா போகணும்..” என்றார் கார்த்திகேயன்.
“அனுசரணையா இருக்கணும்ன்னா பரவாயில்லை. அதுக்காக சூடு சொரணை இல்லாமல் இருக்க முடியாது. எல்லா பிரச்சனையும் தெரிஞ்சு தான நீங்க கல்யாணத்தை ஏற்பாடு பண்ணிங்க..? அம்மாதான் முக்கியம்ன்னா அங்கயே இருக்கட்டும். இந்த அர்ஜூன் யார்கிட்டயும் வழிய போக மாட்டான்…” என்றான்.
“நீ தப்பா நினைச்சுட்டு இருக்க அர்ஜூன்..! கல்பனா பேசின எல்லா விஷயமும் வராஹினிக்கு தெரிஞ்சு போய்டுச்சு. மோகன் போன் பண்ணி விஷயத்தை சொன்னார். இனியும் உனக்கு கஷ்ட்டம் குடுக்கக் கூடாதுன்னு சொல்லி, இன்னைக்கு ஹாஸ்ட்டல்ல சேர்த்து விட சொல்லியிருக்கு அந்த பொண்ணு…” என்றவர், அங்கு நடந்ததை, மோகன் அவரிடம் சொன்னதை எல்லாம் சொல்லி முடித்தார். அதையெல்லாம் கேட்ட பிறகும் கூட அர்ஜூன் ஒரு ரியாக்ஷனும் குடுக்காமல் இருந்தான்.
“நான் இவ்வளவு சொல்லிட்டு இருக்கேன். நீ அமைதியா இருந்தா என்ன அர்த்தம் அர்ஜூன்..?” என்றார் கார்த்திகேயன்.
“இப்ப நான் என்ன செய்யனும்ன்னு சொல்றிங்க..?” என்றான் சலிப்பாய்.
“நீதான் வராஹினியைப் போய் கூட்டிட்டு வரணும்..” என்றார்.
“நல்ல காமெடிப்பா..! வேணும்ன்னா கொஞ்சம் சிரிச்சுக்கவா..?ஏன் போனவளுக்கு வரத் தெரியாதா..? எனக்கு கஷ்ட்டம் குடுக்கக் கூடாதுன்னு அவ நினைச்சா, அவளுக்கு என்ன தோணுதோ அதையே செய்யட்டும். நானெல்லாம் போய் கூட்டிட்டு வர முடியாது..” என்றார் அர்ஜூன் உறுதியாக.
“வாழ்க்கையில யாராவது ஒருத்தர் விட்டுக் குடுத்து போறது தப்பில்லை அர்ஜூன். வராஹினி உன்னோட மனைவி. அவ தப்பே செஞ்சிருந்தாலும், அதை எடுத்து சொல்லி, அவளை கடைசி வரைக்கும் கூட வச்சு வாழ வேண்டியது உன்னோட பொறுப்பு. இப்படி போனா போகட்டும்ன்னு விட்டா, நாட்ல பாதி ஆமபளைங்க தனியாத் தான் இருக்கணும்… அந்த பொண்ணு தெரிஞ்சே போகலை. எதுவுமே தெரியாத நிலையில, யாரா இருந்தாலும் அதைத் தான் பண்ணியிருப்பாங்க. அவங்க அம்மா மேல தப்புன்னு தெரிஞ்ச பிறகு சும்மா ஒன்னுமில்லையே. இதுல இருந்தே தெரிய வேண்டாமா..?” என்றார் கார்த்திகேயன்.
“அப்பா பிளீஸ்..! இந்த விஷயத்துல என்னை கட்டாயப் படுத்தாதிங்க. அவளா போனா.. அவளே வருவா. எனக்கு டைம் ஆச்சு..” என்றான்.
“அப்போ சரி..என்னோட மருமகளை நானே போய் கூட்டிட்டு வரேன். உன்னால என்ன செய்ய முடியும்..?” என்றார்.
“அது உங்க விருப்பம். என்னை தொந்தரவு பன்னாதிங்கன்னு தான் சொல்றேன்..!” என்றவன் கிளம்பிவிட்டான்.
கார்த்திகேயனுக்கு தான் விழி பிதுங்கியது. அர்ஜூன் பொறுப்பானவன், பார்த்துக் கொள்வான் என்று நினைத்தார். ஆனால் அவனும் கொஞ்சம் பிடிவாதமாய் இருப்பதைப் போல் தோன்றியது அவருக்கு. வேறு வழியில்லாமல் அவர் தான் சென்றார் வராஹினியின் வீட்டிற்கு.
இவருக்காகவே காத்திருந்தவரைப் போல் இருந்தார் மோகன் குமார்.
“நான் பேசிக்கிறேன்..!” என்று சொல்லும் போதே, அறையிலிருந்து வெளியே வந்தாள் வராஹினி.
“வாங்க மாமா..!” என்றவளுக்கு அவரின் முகத்தைப் பார்த்து பேச முடியவில்லை.
“நடந்தது ஒரு பெரிய விஷயமில்லை வராஹினி. நீ முதல்ல கிளம்புமா..!” என்றார் கார்த்திகேயன்.
கல்பனா எதுவும் பேசாமல் அமைதியாக இருக்க, அவரை ஒரு ஆளாகவே அங்கு யாரும் மதிக்கவில்லை.
“இருக்கட்டும் மாமா..! இன்னைக்கு என்னை வச்சு உங்க கிட்ட டிமான்ட் பண்றவங்க, எப்பவும் திருந்த மாட்டாங்க. இது கடைசி வரைக்கும் முடியாத பிரச்சனை தான். என்னால அர்ஜூன் சாருக்கு தான் கஷ்ட்டம். நடந்தது தெரியாம நான் வேற பெரிய இவ மாதிரி பேசிட்டேன். இனியாவது அவர் நிம்மதியா இருக்கட்டும் மாமா. நான் அங்க வந்துட்டா, இதோ இவங்க ஜெயிச்ச மாதிரி ஆகிடும் மாமா. அர்ஜூன் சார் எப்பவும் இவங்க கிட்ட கெத்தாவே இருக்கணும். அதுக்காகத் தான் சொல்றேன்..” என்றாள்.
“மத்தவங்களுக்காகப் பார்த்தா, நீங்க வாழ்க்கையில தோத்துப் போயிருவிங்கம்மா. அர்ஜூனுக்கு வேலையிருக்கிறதால, அவன் தான் என்னை அனுப்பிச்சு வச்சான்..” என்றார்.
“பொய் சொல்லாதிங்க மாமா..! எனக்கு அவரைப் பத்தி நல்லா தெரியும். தன்னோட நிலையிலிருந்து அவர் எப்பவுமே இறங்கி வர மாட்டார்..” என்றாள் தெளிவாய்.
“அதான் அவனைப் பத்தி தெளிவா புரிஞ்சு வச்சிருக்கியேம்மா. அவனுக்கு குடும்பம் தான் சரியில்லை.கட்டிகிட்ட பொண்ணு நீயாவது அவனை சரியா பார்த்துப்பன்னு நினைச்சேன் வராஹினி. ஆனா, எல்லாமே இப்படி ஆகும்ன்னு நினைக்கலை. கடைசி வரைக்கும் அவன் தனியாளா தான் இருக்கனும்ன்னு விதி இருந்தா அதை யாரால மாத்த முடியும்..” என்றார்.
“மாமா..!” என்றாள்.
“அந்த வார்த்தையை நீ உன்னோட மனசுல இருந்து சொன்னா, நீ கிளம்பி என் கூட வாம்மா..! இல்ல, அர்ஜூன் எல்லார்கிட்டயும் அசிங்கப்படனும்ன்னு நீ நினைச்சா உன்னோட இஷ்ட்டம்..” என்றார்.
“நான் எந்த முகத்தை வச்சுகிட்டு அங்க வருவேன் மாமா. இவங்க பண்ணி வச்ச வேலை தெரியாம, நானும் கொஞ்சம் பேசிட்டேன்..” என்றாள்.
“நீ யாரை பேசுன..? உன்னோட புருஷனைத் தான பேசின..? அதெல்லாம் அவன் மனசுல வச்சுக்க மாட்டான். நீ கிளம்புமா முதல்ல..” என்றார்.
“எனக்கு கொஞ்சம் டைம் வேணும் மாமா…! எனக்கு கொஞ்சம் யோசிக்கணும்..” என்றாள்.
“நான் சொல்றதை சொல்லிட்டேன் வராஹினி. நல்ல முடிவா எடுப்பன்னு நம்புறேன்மா..” என்றவர் கிளம்பிவிட்டார்.
அவர் கிளம்பிய நிமிடத்தில்,
“நல்ல முடிவு வராஹி. இப்படியே இரு. ஏன் அவன் வர மாட்டானா..?” என்றார் கல்பனா.
“டாடி..!!!” என்று கத்தினாள் வராஹினி.
மோகன்,கல்பனாவை முறைக்க,
“இதுக்குமேல என்னோட விஷயத்துல இவங்க தலையிட்டாங்க, பெத்த அம்மான்னு கூட பார்க்க மாட்டேன். நான் தான் இவங்களை என் முகத்துலையே முழிக்கக் கூடாதுன்னு சொல்லியிருக்கேன்ல. என்னோட புருஷனை பத்தி பேச இவங்களுக்கு என்ன தகுதி இருக்கு..? நிஜமாவே இவங்க தான் என்னை பெத்தாங்களான்னு எனக்கு சந்தேகமா இருக்கு. என் விஷயத்துல தலையிடுறது இது தான் முதலும், கடைசியுமா இருக்கணும்..” என்றாள் ஆங்காரமாய்.
அவள் பேசிக் கொண்டிருக்கும் போதே, டீபாய் மேல் இருந்த கல்பனாவின் போன் ஒலித்தது. திரையில் ரஞ்சன் என்று வர, அதை கோபமாய் பார்த்தவள், வேகமாய் அதை எடுத்து ஸ்பீக்கரில் போட்டாள்.
“சூப்பர் ஆன்ட்டி…! வராஹியை கூட்டிட்டு போயிட்டிங்களாமே..? விஷயத்தை கேள்விப் பட்ட எனக்கு எவ்வளவு சந்தோசம் தெரியுமா..? அந்த அர்ஜுன் முகத்தை எங்க கொண்டு போய் வைப்பான். ரொம்ப நாளைக்கு அப்பறம் நேத்து தான் நான் நிம்மதியா தூங்கினேன் ஆன்ட்டி. இதுக்கெல்லாம் காரணம் நீங்க தான். நீங்க பண்ணின விஷயம் தான். வராஹினியை எக்காரணம் கொண்டும் அவன் கூட அனுப்பிடாதிங்க. இனி அவன் தலை நிமிரவே கூடாது. எவ்வளவு ஆட்டம் ஆடினான், எல்லாத்துக்கும் மொத்தமா சேர்த்து வச்சிங்க பாருங்க ஆப்பு… ஐ ஆம் சோ ஹேப்பி ஆன்ட்டி.. தேங்க் யு ஆன்ட்டி…” என்று சந்தோஷத்தில் யாருடன் பேசிக் கொண்டிருக்கிறோம் என்பது தெரியாமல் பேசிக் கொண்டிருந்தான் ரஞ்சன்.
எதிர்முனையின் அவன் பேச பேச, வராஹினிக்கு சக்தியிருந்தால் கல்பனாவை அதே இடத்தில் எரித்திருப்பாள்.
“ரொம்ப சந்தோஷமா இருக்க போல..?” என்ற வராஹினியின் குரலில், ரஞ்சன் பேச்சு அப்படியே நின்றது.
“ஏன்..? நீ யாரை எதிர்பார்த்த..? நீயெல்லாம் பேசி சிரிக்கிற அளவுக்கு அர்ஜூன் சார் இல்லை. அதை நீ முதல்ல தெளிவா தெரிஞ்சுக்கணும். ரொம்ப ஆடாத.. இப்படி ஆடினவங்க எல்லாம் இருக்குற இடம் தெரியாம இப்ப இருக்காங்க..” என்றாள் கல்பனாவை பார்த்துக் கொண்டே.
“வராஹினி…” என்றான் ரஞ்சன்.
அடச்சீ..வாயை மூடு…! எனக்கும் அர்ஜூன் சாருக்கும் என்றவள், கொஞ்சம் நிறுத்தி… “சாரி, எனக்கும் என் புருஷனுக்கும் ஒருசின்ன மனஸ்தாபம்,அவ்வளவு தான். நீயெல்லாம் சந்தோஷப்பட்டு சிரிக்கிற அளவுக்கு ஒன்னும் நடக்கலை. இந்த மனஸ்தாபம் நடந்ததுல தான் எவ்வளவு நன்மை. சிலரோட சுய ரூபமெல்லாம் இப்பத்தானே வெளிச்சத்துக்கு வந்திருக்கு. இது கூட நல்லதுக்குத் தான்..” என்றாள் வராஹினி.
“பரவாயில்லையே..! கீழ விழுந்தாலும் மீசையில மண் ஓட்டலைன்ற கதை தான் அவனோடது…” என்றான் ரஞ்சன்.
“அப்படி பார்த்தா நீ பட்ட அசிங்கத்தை விட, இது ஒன்னும் பெரிசில்லை. கண்ட கழிசடையெல்லாம் பேசுற அளவுக்கு ஆகிப் போச்சு..” என்றாள்.
“அப்படித்தாண்டா பேசுவேன்..! என்ன பண்ண முடியும் உன்னால..? ஒண்ணுக்கும் உதவாத உதவாக்கரை தானே நீ. உனக்கெல்லாம் என் புருஷன் பக்கத்துல நிக்கிற அருகதை கூட இல்லை. பேச வந்துட்டான். மனுஷனா பிறந்தா,தப்பு செஞ்சவனா இருந்தா, ஒரு கட்டத்துல திருந்திடனும். ஆனா, நீயெல்லாம் எப்பவுமே திருந்த மாட்ட. கொஞ்சமாவது உழைச்சு சாப்பிட்டா தானே கொழுப்பு குறையும். அப்பன் சொத்துல உட்கார்ந்து திங்கிற உனக்கெல்லாம், சுயமா இருக்கிற அர்ஜூன் சாரைப் பத்தி பேச அருகதை இல்லை..” என்றாள்.
அவள் அவ்வளவு பேசும் போதும் பிரஜேஷ் அமைதியாகத் தான் இருந்தான். இனியும் ரஞ்சனுக்கு சாதகமாக பேசுவதில் பலனில்லை என்று உணர்ந்து கொண்டான் போலும்.
கல்பனா முகத்தை எங்கு கொண்டு போய் வைப்பது என்ற ரீதியில் நின்றிருந்தார். எங்கே வாயைத் திறந்தால், தன்னையும் இதே ரீதியில் பேசி விடுவாள் என்ற பயம் அவருக்கு. மோகன் மட்டும் தான் வராஹினியின் பேச்சை மெச்சுவதைப் போல் பார்த்துக் கொண்டிருந்தார்.
கோபத்துடன் போனை வைத்த ரஞ்சன்,
“பெரிய இவ மாதிரி பேசுறா..?” என்றபடி திரும்ப, கைகளை கட்டியபடி அவனை முறைத்துக் கொண்டு நின்றிருந்தாள் ரூபிணி.
“நீயெல்லாம் எவ்வளவு பட்டாலும் திருந்த மாட்ட. அடுத்தவங்க விஷயத்துல தலையிடுறது உனக்கு அல்வா சாப்பிடுற மாதிரி..அப்படித்தான..?நீ இப்படி வெட்டிப் பேச்சு பேச மட்டும் தான் லாயக்கு. வேற ஒண்ணுக்கும் லாயக்கில்லை. உன்னை இன்னும் இங்க விட்டு வச்சிருக்கேன் பாரு, என்னை சொல்லணும்.கூடிய சீக்கிரம் இதுக்கு ஒரு முடிவு கட்டுறேன்..” என்றாள் ரூபிணி.
“என்ன செஞ்சுடுவடி..?” என்றான் திமிராய்.
“செஞ்சு காட்டுறேன்டா..! உழைச்சாதான் சோறுன்ற நிலைமைக்கு வந்தாதான், நீ அடங்குவ. வராஹினி சொன்ன மாதிரி அப்பன் காசுல உட்கார்ந்து திங்கற வரைக்கும் உன்னோட திமிர் அடங்காது. உனக்கெல்லாம் கல்யாணம் ஒரு கேடு. உங்கம்மா மாதிரி ஊருக்குள்ள நாலு பேர் இருந்துட்டா போதும்.. எல்லாம் தறுதலையா தான் அலைவானுங்க…” என்றாள் ரூபிணி.
“வார்த்தையை அளந்து பேசு ரூபிணி…” என்றான்.
“அப்படித்தான் பேசுவேன்..! உன்கிட்ட ஒரு நல்ல குணம் இருக்கா..? இல்ல, ஒரு நல்ல பழக்கம் தான் இருக்கா..? அப்படி என்னடா உனக்கு விரோதம். அவங்க அப்பா உங்கம்மாவை கல்யாணம் பண்ணலைன்னா, நீ இல்லை. பார்க்க போனா, அர்ஜூன் தான் இப்படி வளர்ந்திருக்கணும், உங்க மேல கோபத்தை காட்டியிருக்கணும். ஆனா, இங்க எல்லாமே தலைகீழ். கார்த்திகேயன் அங்கிள் மாதிரி ஒரு ஆளுக்கு அர்ஜூன் மாதிரி ஒரு பிள்ளை… உன்னை மாதிரியும் ஒரு பிள்ளை…” என்றாள் வெறுப்புடன்.
“அப்படியே நீ பெரிய ஒழுங்கு. பேச வந்துட்டா..? கல்யாணத்துக்கு முன்னாடியே என்கூட சுத்துனவ தானடி நீ.. நீயெல்லாம் ஒழுக்கத்தை பேசாத..” என்றான்.
“அதென்ன சுத்துனவ..? நீயும் தானடா சுத்துன. இங்க நீ சரின்னா நானும் சரி. இப்போ நீ தப்புன்னா கூட நானும் சரிதான். ஏன்னா, உன்னை மாதிரி செய்றதை எல்லாம் செஞ்சுட்டு இல்லைன்னு சாதிக்கிற ஆள் நான் கிடையாது. தப்பை கூட, ஆமா.. செஞ்சேன்னு தைரியமா சொல்லுவேன். உன்னால முடியுமா..? சொல்லித்தான் பாரேன் உங்க அப்பாகிட்ட. சல்லிக் காசு பெற மாட்ட..! நான்தான் ஏற்கனவே சொன்னேன்ல… உனக்கு அவ்வளவு சீனெல்லாம் இல்லை.
என்கூட உருப்படியா வாழ்றதுன்னா வாழு… இல்லைன்னா, உன்னால குடும்பத்தையே உருவாக்க முடியாத படி, குடும்ப கட்டுப்பாடு பண்ணி விட்டுருவேன். எங்கப்பா கிட்ட ஒரு வார்த்தை சொன்னா போதும்.. உன்னை தூக்கிட்டு போய், சோலியை முடிச்சுடுவாரு. ஜாக்கிரதையா இருந்துக்க..” என்றாள்.
அவள் பேசிய பேச்சில் கொஞ்சம் மிரண்டு தான் போனான் ரஞ்சன். அவளின் அப்பாவைப் பற்றி தான் அவனுக்கு நன்றாகத் தெரியுமே. அதனால் தானே அவளை கல்யாணம் செய்து கொள்ள அவன் யோசித்தது. அடங்கிப் போவதைத் தவிர ரஞ்சனுக்கு வேறு வழியே இல்லை.
ஏனோ அர்ஜூனுக்கு அன்று வீடு செல்லவே மனமில்லை. என்னதான் வேலையாய் இருந்தாலும் மனம் மட்டும் ஏனோ வெறுமையாய் தான் இருந்தது. வராஹினியை ஒரு நாள் பார்க்காததே ஒரு யுகமாய் தெரிந்தது அவனுக்கு.
‘என்ன நான் இப்படி ஆகிட்டேன். இதுக்கும் அவ மேல பெருசா காதலெல்லாம் இல்லையே எனக்கு..?’ என்று நினைத்துக் கொள்ள,
“நீதான் அர்ஜூன் அப்படி நினைச்சுட்டு இருக்க. ஆனா சத்தமே இல்லாம அவ உனக்குள்ள வந்து ரொம்ப நாளாச்சு…” என்றது மனம்.
“இல்லவே இல்லை..!” என்றான் உறுதியாக.
“இல்லாமையா, அவமேல இவ்வளவு அக்கறை எடுத்துகிட்ட. அவளோட கௌரவம் கெடக் கூடாதுன்னு நினைச்ச. அவ கஷ்ட்டப் படுவான்னு தான, அவ அம்மாவைப் பத்தி கூட சொல்லாம இருந்த..இப்படி நீ செஞ்ச எல்லா விஷயத்திலும் காரணியா அவ மட்டும் தான் இருந்திருக்கா. நீ தான் ஒத்துக்க மறுக்குற..” என்றது மனம்.
“ஆமா..! இப்ப அதுக்கு என்னாங்குற..?” என்று மனதிடம் பேசிக் கொண்டே வீடு வந்து சேர்ந்தான் அர்ஜூன். அவன் வரும் போதே, நேரம் நள்ளிரவைத் தொட்டிருந்தது. வீடே இருளில் மூழ்கியிருக்க, நிதர்சனம் அவனை சுட்டது.
‘யாருமில்லாத வீடு அப்படித்தான் இருக்கும்..’ என்றது மனம்.
“இந்த மாலாக்கா லைட் கூட போட்டு விடாமா போயிருக்காங்க..” என்று புலம்பிக் கொண்டே, வீட்டிற்குள் சென்று லைட்டை போட்டவன், கதவை அடைத்துவிட்டு, மேலே அறைக்கு செல்ல முற்படும் போது தான் கவனித்தான் அவளை.
ஹாலில் இருந்த சோபாவில் நல்ல உறக்கத்தில் இருந்தாள் வராஹினி. முதல் நாள் முழுவதும் தூங்காமல் இருந்தது, மன உளைச்சல் இப்படி அனைத்தும் சேர்த்து அவளை அசதியில் தள்ளியிருந்தது.
அவள் எப்படியும் வந்து விடுவாள் என்று தெரியும். ஆனால் இவ்வளவு சீக்கிரம் வருவாள் என்று அவன் எதிர்பார்க்கவில்லை. கார்த்திகேயன் கூட அவள் வரவில்லை என்று தான் சொல்லியிருந்தார்.
அவளைப் பார்த்த பின்பு, ஒரு எட்டு கூட மேற்கொண்டு அவனால் வைக்க முடியவில்லை. மனதில் இருந்த வெறுமைகள் எல்லாம் இருந்த இடம் தெரியாமல் மறைந்திருந்தது.
அப்படியே அவள் முன் மண்டியிட்டு அமர்ந்தவன், அவளையே பார்த்துக் கொண்டிருந்தான். எப்போதும் அவள் தான் அவனைப் பார்ப்பாள். ஆனால் இன்று அவன் இமைக்காமல் அவளைப் பார்த்துக் கொண்டிருக்கிறான். ஆனால் அவளோ அதையறியாமல் தூங்கிக் கொண்டிருந்தாள்.
ஒருக்களித்து படுத்திருந்தவளின் கழுத்தில் அவன் கட்டிய புது மஞ்சள் கயிறு தாலி மினுமினுக்க, ஏற்கனவே அவன் அணிவித்த தங்கச் தாலிச் சரடும் அதனுடன் போட்டி போட்டுக் கொண்டு மினுமினுக்க, அந்த சோர்விலும் அவள் முகம் தனி சோபையுடன் முழுநிலவாய் ஜொலித்தது. அவள் முகத்தில் இருந்த முடிக் கற்றைகளை விலக்கியவன், முத்தமிட சொல்லிக் கெஞ்சிய மனதை அடக்க முடியாமல், அவளின் நெற்றியில் இதழ்களைப் பதித்தான். அவள் வேண்டும் என்று அடம் பிடித்த மனதை அடக்கியவன், அறைக்குள் சென்று குளித்து முடித்து வந்து, சோபாவிற்கு கீழேயே, தலையணையை போட்டு படுத்து விட்டான்.
அந்த நிமிடம் உணர்ந்து கொண்டான் அர்ஜூன்… இனி அவனே நினைத்தாலும் அவளைப் பிரிய முடியாது என்று. மற்ற மன குழப்பங்கள் எல்லாம் மறைந்து அவளை மனைவி என்ற கண்ணோட்டத்தில் மட்டும் பார்க்கத் தொடங்கினான் அர்ஜூன்.
அவன் வந்தது, தனக்கு அருகிலேயே இருப்பது எதையும் அறியாத வராஹினி உறக்கத்தின் பிடியில் இருந்தாள். அர்ஜூனோ கீழே படுத்துக் கொண்டு, தூங்காமல் அவளை ரசனையுடன் பார்த்துக் கொண்டிருந்தான்.