அதன் பின் சிறிது நேரம் தூங்கி விட்டு குளிக்க சென்றாள் அஞ்சலி. குளித்து விட்டு உடனே வெளியே வந்து விட்டாள். அவளுக்கு அவனைப் பார்க்கவே கூச்சமாக இருந்தது.
அதன் பின் அவனுக்கு டீ எடுத்துக் கொண்டு உள்ளே வர அவளை இறுக அனைத்துக் கொண்டான் கிரி. அவன் கைகள் சேலை மறைக்காத அவளுடைய வெற்றிடையில் பயணம் போக அங்கிருந்த டேபிளில் டீயை வைத்து விட்டு அவனைக் கட்டிக் கொண்டாள் அஞ்சலி. அதன் பின் அவள் அவளுடைய கட்டுப்பாட்டிலே இல்லை. அவளை மொத்தமாக ஆக்ரமிக்க ஆரம்பித்தான்.
அடுத்த நாளே இருவரும் ஹனிமூன் செல்ல முடிவு எடுத்தார்கள். “அண்ணன் அண்ணியையும் கூட்டிட்டு போவோமா? அவங்களுக்கும் நம்ம கூட தானே கல்யாணம் ஆச்சு?”, என்று அஞ்சலி கேட்க கிரி சந்தோஷமாக சரி என்றான்.
குணசேகரனிடம் அவர்கள் அதைப் பற்றிச் சொல்ல உணவை தான் பார்த்துக் கொள்வதாகவும் அவர்கள் சந்தோஷமாக போய் விட்டு வரும் படியும் சொன்னார் அவர்.
அதைச் சொல்வதற்காக இன்பன் வீட்டுக்குச் சென்றார்கள் கிரியும் அஞ்சலியும். மகளையும் மருமகனையும் சந்தோஷமாக வரவேற்றார்கள் அம்பிகாவும் சீனிவாசனும். அப்போது அங்கே வந்த இன்பன் “வாங்க”, என்று மட்டும் கிரியைப் பார்த்து சொன்னான். கிரியும் அவனைக் கண்டு சிறு புன்னகையுடன் தலை அசைத்தான். அதன் பின் மச்சானும் மச்சானும் வேறு எதுவும் பேசிக் கொள்ள வில்லை. அப்போது அங்கே வந்த இந்து சந்தோஷமாக அவர்களை வரவேற்றாள்.
தன்னுடைய அக்கா முகத்தில் இருந்த சந்தோஷம் கிரிக்கு நிம்மதியைத் தந்தது. அப்போது தான் அவர்கள் ஹனிமூன் போகும் பிளானைச் சொல்ல இந்துவுக்கோ சங்கடமாக இருந்தது.
இன்னும் அவர்கள் வாழவே ஆரம்பிக்க வில்லை. இதில் ஹனிமூன் ஒன்று தான் குறைச்சலா என்று இருவருக்கும் தோன்றியது. அவர்கள் வாழாததற்கு காரணம் இந்து மட்டும் தான். ஏனென்றால் பல முறை இன்பனின் ஆசைப் பார்வை அவளை தழுவுவதை அவள் கண்டிருக்கிறாள். அதைக் கண்டு உடனே விலகிப் போய் விடுவாள்.
இன்பனும் என்ன தான் அவளை தோழியாக பார்க்க வேண்டும் என்று எண்ணினாலும் சில நேரம் கணவனாக அவளை ரசிக்க தான் செய்வான். அது அவனே அறியாமல் நடக்கும் செயல். அவளை நெருங்க ஆசை இருந்தாலும் அவளுக்கு செய்து கொடுத்த சத்தியத்துக்காகவும் அவள் மீண்டும் தன்னை தவறாக நினைக்க கூடாது என்பதற்காகவும் அவளை விட்டு விலகியே இருந்தான்.
அதனால் இப்போது அஞ்சலி ஹனிமூன் பற்றி பேசியதும் இன்பனின் பார்வை அவளை ஆசையாக வருட இந்துவுக்கோ முள் மேல் நிற்கும் உணர்வு தான் வந்தது. அவனைத் திரும்பிப் பார்த்தாள். எதிர்பார்ப்புடன் அவள் மேல் படிந்த அவன் பார்வையைக் கண்டதும் அவளால் ஒரு நொடிக்கு மேல் அவனை நேர் கொண்டு பார்க்க முடியவில்லை.
இன்பன் இந்துவைப் பார்க்க மற்ற அனைவரின் பார்வையும் அவள் பதிலுக்காக அவள் மேல் பதிந்தது. “அவங்க ஆசையா கூப்பிடுறாங்கல்ல இந்து மா? நீயும் இன்பனும் போயிட்டு வாங்களேன். அவங்களுக்கு துணைக்கு ஆள் இருந்த மாதிரி இருக்கும்”, என்று அன்பாகச் சொன்னாள் அம்பிகா.
“ஆமா உங்களுக்கும் இப்ப தானே கல்யாணம் ஆச்சு. வீட்டுக்குள்ளே தானே அடைஞ்சு இருக்கீங்க? போயிட்டு வாங்க டா எல்லாரும்”, என்றார் சீனிவாசன்.
தன்னை பெற்ற மகள் போல் நடத்தும் அம்பிகா மற்றும் சீனிவாசனிடம் என்ன சொல்ல என்று ஒரு நொடி தடுமாறிய இந்து “அதெல்லாம் அப்புறம் பேசலாம். என் நாத்தனா வந்திருக்கா. இன்னும் டீ கூட கொடுக்கலைன்னா என் தம்பி கோச்சிப்பான். நான் போய் சாப்பிட ஏதாவது எடுத்துட்டு வரேன்”, என்று சொல்லி விட்டு சமையல் அறைக்குச் சென்று விட்டாள்.
மற்றவர்களுக்கு அவள் சென்றது சாதாரணமாக தெரிந்தாலும் இன்பனுக்கு இந்த பயணத்தை தடுக்க தான் அவள் சென்று விட்டாள் என்று புரிந்து அவனுக்கு வருத்தத்தைத் தந்தது.
“இவ என்னை புரிஞ்சிக்கவே மாட்டாளா? காலம் முழுக்க என்னை விலக்கி தான் வைப்பாளா? நானும் அவளை விட்டு ஒதுங்கி இருக்கணும்னு நினைச்சாலும் சில நேரம் முடியலையே”, என்று எண்ணி ஏங்கிப் போன இன்பன் “என் தப்புக்கு இந்த தண்டனை தேவை தான்”, என்றும் எண்ணிக் கொண்டான்.
சமையல் அறையில் டீ போட்டுக் கொண்டிருந்த இந்து அவர்களுக்கு ஏதாவது சாப்பிடக் கொடுக்கலாம் என்று எண்ணி பஜ்ஜி போட ஆரம்பித்தாள்.
வாழைக்காயை நறுக்கி மாவில் முக்கி எண்ணெய்ச் சட்டியில் போட்டு விட்டு அது வெந்து வருவதற்காக காத்திருந்தாள். இப்போது அவள் வெளியே சென்றதும் அஞ்சலி மீண்டும் ஹனிமூன் செல்வதைப் பற்றி பேசுவாள். அவளிடம் எப்படி தன்னுடைய மறுப்பைச் சொல்ல என்று அவளுக்கு யோசனையாக இருந்தது.
அனைவருமே அவளும் இன்பனும் மனமொத்து வாழ்க்கை நடத்துகிறார்கள் என்று எண்ணிக் கொண்டிருக்க இப்போது அவள் மறுத்தால் கண்டிப்பாக இருவரும் வாழவே இல்லை என்ற உண்மை அனைவருக்கும் தெரிந்து விடும்.
அதற்காக அங்கே செல்லவும் அவளுக்கு விருப்பம் இல்லை. அங்கே சென்று இன்பனுக்கு ஒரு ஏமாற்றத்தைக் கொடுக்க வேண்டுமா என்றும் தோன்றி வைத்தது.
இதை யோசித்த படியே இருக்க பஜ்ஜி நினைவில் வந்து அதை எடுக்க ஆரம்பித்தாள். கடைசி பஜ்ஜியை எடுக்கும் போது கரண்டி எண்ணெய்ச் சட்டியைத் தட்டி விட அவள் இரண்டு கையிலும் கொதித்துக் கொண்டிருந்த எண்ணெய் அப்படியே கொட்டிக் கவிழ்ந்தது.
“ஆ அம்மா”, என்று அலறி விட்டாள். அவள் அலறலில் உள்ளே இருந்து அனைவரும் வெளியே வந்து விட்டார்கள். அவள் இங்கே தீக்காயத்தால் துடித்துக் கொண்டிருக்க அனைவருமே அதிர்ந்து போனார்கள்.
“ஐயோ”, என்று அலறிய படியே வந்த இன்பன் அடுத்த நொடி அவளை கைகளில் அள்ளிக் கொண்டு காருக்கு விரைந்தான்.
மற்றவர்களும் அவர்களுடன் சென்றனர். மருத்துவமனைக்கு சென்றதும் அவளுக்கு சிகிச்சை நடக்க வலியில் அலறித் துடித்தாள் இந்து.
“ஹனிமூன் என் கூட போக கூடாதுன்னு இப்படி ஒரு காரியம் செஞ்சிட்டிட்டியே இந்து?”, என்று எண்ணிய இன்பன் உள்ளுக்குள் செத்துப் போனான்.
சிறிது நேரத்தில் குணசேகரனும் ஹாஸ்பிட்டலுக்கு வந்து விட்டார். பேத்தியின் வேதனையைக் கண்டு அவரும் கண்ணீர் வடித்தார். அனைவருக்குமே இந்துவுக்கு இப்படி நடந்தது வேதனையாக இருந்தது. உள்ளே அவள் அலறிக் கொண்டிருக்க வெளியே இன்பன் கண்ணீர் வடித்தான்.
அவன் கண்ணீரைக் கண்ட கிரி மற்றும் குணசேகரன் இருவரும் அந்த நிமிடம் அவனை முழுமையாக நம்பினார்கள்.
இந்து ஹாஸ்பிட்டலுக்கு வர இரண்டு நாட்கள் ஆனது. அது வரை இன்பன் அவள் முன்னே போய் நிற்க வில்லை. அனைவரும் அவளிடம் வந்து பேசினாலும் அவன் மட்டும் தன்னைக் காண வராதது அவளுக்கு கஷ்டமாக இருந்தது.
“அப்ப இன்பன் மாறவே இல்லையா? என் மேல அவனுக்கு அன்பே இல்லையா?”, என்று அவள் கவலைப் பட அவனோ அவளைக் கண்டால் ஏதாவது பேசி விடுவோமோ என்ற பயத்திலே அவளைக் காணாமல் இருந்தான் இன்பன்.
அம்பிகா மற்றும் அஞ்சலியிடம் இன்பனைக் கேட்டால் வெளியே இருக்கான் என்று முடித்து விடுவார்கள்.
இந்துவுக்கு அப்படி ஆனதால் ஹனிமூன் பிளானும் நின்று விட அதுவும் இந்துவுக்கு கஷ்டமாக இருந்தது.
இரண்டு நாட்கள் கழித்து அவளை வீட்டுக்கு அழைத்துச் சென்றார்கள். கார் ஓட்டிய இன்பன் அவளை பார்க்கவே இல்லை. அவன் தன்னைப் பார்க்க வேண்டும் என்று ஆசைப் பட்டாள் அந்த பாவை.
அவர்களின் அறையில் அவளை விட்டவர்கள் அவளை ரெஸ்ட் எடுக்க சொல்லி விட்டு கீழே வந்தனர். அறைக்குள் இன்பனும் இந்துவும் மட்டுமே இருந்தார்கள். இருவருக்குள்ளும் மௌனமே நிலவியது. அவனுக்கோ தன்னைப் பிடிக்காமல் அவளை புண்ணாக்கி கொண்டாளே என்ற கோபம். அவளுக்கோ அவன் தன்னிடம் காயத்தைப் பற்றி ஒரு வார்த்தை கூட விசாரிக்க வில்லையே என்ற கோபம்.
அந்த அமைதியைத் தாங்க முடியாமல் “ஏன் இப்படி பண்ணின இந்து?”, என்று கேட்டான் இன்பன்.
“நானா நான் என்ன பண்னினேன்?”, என்று கேட்ட இந்துவுக்கு சத்தியமாக அவன் கேள்வி புரியவே இல்லை.
“நான் உன் கிட்ட ஒரு ஃபிரண்ட் மாதிரி தானே பழகிட்டு இருக்கேன்? அப்படி இருக்கும் போது என் கூட உனக்கு ஹனிமூன் வரது பிடிக்கலைன்னா என் கிட்ட நேரா சொல்லிருக்கலாம்ல? நான் என்ன செஞ்சாவது அதை தடுத்திருப்பேனே? என் கூட வராம இருக்குறதுக்கு நீ உன்னையே இப்படி காயப் படுத்திக்குவேன்னு நினைக்கலை. இவ்வளவு நாளும் நீ என்னை கொஞ்சம் கொஞ்சமா ஏத்துக்குவேன்னு நம்புனேன். ஆனா உனக்கே நீ இவ்வளவு பெரிய வலியை உருவாக்கின அப்புறம் தான் தெரிஞ்சது. நீ எந்த காலத்துலயும் என்னை ஏத்துக்க மாட்டேன்னு. என் கூட நீ இனி எங்கயும் வர வேண்டாம். அப்படி சூழ்நிலை வந்தா என் உயிரைக் கொடுத்தாவது நான் அதை நிறுத்திருவேன். ஆனா உன்னைக் கெஞ்சிக் கேக்குறேன். தயவு செஞ்சு நீ உன்னையே இப்படி காயப் படுத்திக்காத. என்னால தாங்க முடியலை டி. உன் வெறுப்பைக் கூட தாங்கிக்குவேன். ஆனா நீ வலில துடிக்கிறதை என்னால தாங்க முடியலை. இனி இப்படி செய்யாத இந்து. ரெஸ்ட் எடு. ஏதாவது ஹெல்ப்னா உனக்கு கேக்கணும்னு தோணுச்சுன்னா என் கிட்ட கேளு. உனக்கு நான் இந்த ரூம்ல, இந்த வீட்ல, இந்த ஊர்ல இருக்குறது பிடிக்கலைன்னா சொல்லிரு இந்து. நான் பாரின் கிளம்பி போய்றேன். நான் இந்த உலகத்துல இருக்குறது பிடிக்கைலைன்னா கூட சொல்லிரு. அடுத்த நிமிசமே செத்துப் போய்றேன்”