பத்து நாள்கள் கழித்து அன்பரசு வருவதாய் சொன்னதால், ஆவலாக கணவன் வரவை எதிர்பார்த்திருந்தாள் முல்லை. வழக்கம்போல் இரவு வரவான் என எதிர்பார்த்திருக்க, மதியமே வந்திருந்தான் அன்பரசு.
“அப்புறம் கேட்கறேன், இப்படி வா” என கட்டிலில் சரிந்து முல்லையையும் படுக்க வைக்க, “இருங்க வரேன்” என லேப்டாப்பை எடுத்து வைத்து கணவனருகே வந்தவள், “மாமாவை பார்த்துட்டு வரலாம்” என்றாள்.
“மாமா விசயம் அப்புறம் பேசலாம். நம்ம பாப்பா என்ன சொல்றா?” என்றான் ஆர்வமாக.
“சமத்தா இருக்கா, காலைல மட்டும் கொஞ்சம் டையர்டா இருக்கும். மத்தபடி ஓகேதான்”
கால்மணி நேரம் வரை கேள்விகளை கேட்டுக்கொண்டிருக்க, “சாப்பிட்டிங்களா?” என்றாள்.
“இல்ல, இங்க வந்து சாப்பிட்டுக்கலாம்னு வந்துட்டேன், வெளி சாப்பாடு சாப்பிட்டு நாக்கு செத்துடுச்சு. அண்ணிம்மா சமையல்ல ஒரு புடி புடிக்கனும்” என்றான்.
“அதெல்லாம் இனி நடக்காது” என தீவிரமாய் சொல்வதுபோல் சொன்னாலும் முல்லை முகம் உள்ளடக்கிய புன்னகையை சிந்த, அப்பொழுதும் இப்படி என யோசிக்கவில்லை அன்பரசு.
“என் அண்ணிம்மா யார் தடுத்தாலும் எனக்காக சமைக்கிறதை நிறுத்தாது” என்றான் பெருமையாக.
“அப்படியா? வாங்க… வந்து சொல்லுங்க, சமைக்கிறாங்களா பார்ப்போம்” என முல்லை வெளியேற, பின்னோடு அன்பரசும் வந்தான்.
“மாமா” என முல்லை அழைக்க, “உள்ள வாம்மா” என சத்யன் சொல்ல, இருவரும் உள்ளே சென்றனர்.
“அன்பு” என சத்யன் முகம் ஜொலிப்பை காட்ட, சுகந்தி முகம் மிகவும் சோர்ந்திருக்க, “அண்ணிம்மாக்கு என்னாச்சு?” என்று அன்பரசு சுகந்தி நெற்றியை தொட்டான்.
சத்யன் கண்ணிமைத்து சிரிக்க, கட்டிலில் அமர்ந்தவன் “அண்ணிம்மா” என தோளோடு அணைத்துக்கொண்டான் அன்போடு.
தன்மீதான அன்பரசின் பாசம் சுகந்திக்கு என்றும் பெருமைதான். ஆனாலும் இப்படியெல்லாம் வெளிப்படுத்தமாட்டான். சிறுவயதிலிருந்தே கிண்டல் செய்துதான் பழக்கம். தனது முதல் திருமணத்திற்கு பிறகு கிண்டல் செய்வதும் காணாமல் போயிருக்க, தற்போது கிண்டல் செய்வான் என்று எதிர்பார்த்திருந்தாள்.
ஆனால் சுகந்தி நினைப்பிற்கு மாறாக அன்பரசு அன்பை பொழிய, அன்பரசின் இந்த பரிணாமமும் பிடித்துதான் இருந்தது. ஆனாலும் “எப்போவும் என்னை கிண்டல்தான செய்வ? இப்போ உன் வாரிசு வரவும் ஐஸ் வைக்கிறியா? ஒன்னும் வேணாம் போடா” என்றாள் கோபமாக.
“அச்சோ அண்ணிம்மா” என இன்பமாய் சலித்து, “இந்த குழந்தை எப்படிடா இன்னொரு குழந்தையை வளர்த்த போகுது?” என கிண்டலடித்தான் அண்ணனிடம்.
அன்பரசு பலமாய் சிரிக்க, இவர்களின் கலாட்டாக்களை பார்த்திருந்த முல்லைக்கு அதிசயமாகவும், ஆச்சர்யமாகவும் அதேநேரம் மனமெல்லாம் இன்ப உணர்வும் பூக்க பெருமையோடு பார்த்திருந்தாள் தனது குடும்பத்தை.
“நீ ஏன்ம்மா நின்னுட்டேயிருக்க? இப்படி வந்து உக்காரு” என்றான் சத்யன்.
“ஹம்” என அருகிலிருந்த சேரில் அமர்ந்தாள்.
“முல்லை செம பிரில்லியண்ட் அன்பு. எக்ஸ்பீரியன்ஸே இல்லைன்னாலும் சொல்றதை கற்பூரம் மாதிரி பிடிச்சுக்குது. வேலை செய்ய சளைக்கிறதேயில்ல, இரண்டாள் வேலையை ஒரு ஆளா சமாளிக்குது” என்றான் உண்மையாக.
“அப்படியா?” என்றான் இவனும் பெருமையாக.
“மாமாக்கு என்னை விட ஒர்க் ப்ரஸ்ஸர் அதிகம்ங்க, ஆனா எதையும் காட்டிக்கமாட்டார்” என்றாள் முல்லை.
இவர்கள் குரல் கேட்டு வந்த கல்பனா “எப்போ அன்பு வந்த?” என்றார்.
“இப்போதான்த்த”
“முன்னாடியே சொல்லலாமில்ல அன்பு. இரு எதாவது பண்றேன்” என கிச்சன் செல்ல முயல, “ஏதும் பண்ணவேணாம்த்த, இருக்குறதை கொடுங்க” என்றான்.
“நேத்து கறி வாங்கினதுக்கப்புறம் சத்யனும் வேணாம்னுட்டான், சுகந்தியும் வேணாம்னுட்டா. வேஸ்ட்டாகிடும்னு ஃப்ரிட்ஜ்ல வச்சிருக்கேன், அதை எத்தனை நாளைக்கு வைச்சிருக்கிறது? சித்த இரு சமைச்சிடறேன்” என்று கிச்சன் சென்றார்.
“சரி சரி… இரண்டு பேருக்கும் என்ன வேணும்? சொல்லுங்க சொல்லுங்க” என்றான் அன்பரசு.
“என் பொண்டாட்டிக்கு நான் பக்கத்துல இருந்தா போதும்” என சத்யன் சிரிக்க, தன் விசயங்களை வெளிக்காட்டுகிறானே என “அவன் என்னைத்தான கேட்டான்? நீ எதுக்குடா சொல்ற?” என இவள் சத்யனை முறைக்க, “புருசனு ஒரு மட்டு மரியாதை இருக்கா? ஒழுங்கா மாமானு கூப்பிடுடீ” என்றான் அதட்டலாக.
“வழக்கமா புருசனை விட பொண்டாட்டி சின்னவளா இருக்கிறதால அந்த காலத்துலயிருந்து இப்போவரைக்கும் அப்படி கூப்பிடுறாங்க. நான் எதுக்குடா உன்னை அப்படி கூப்பிடனும்? நீ என்னை விட இரண்டு வயசு பொடியன்தான? ஒழுங்கா என்னை வாங்க போங்க சொல்லு. இனி சுகந்தினு சொன்ன… அவ்வளோதான் பார்த்துக்க” என்றாள் உள்ளடக்கிய சிரிப்போடு.
நகைச்சுவைக்கு கூட சத்யனின் இப்படி பேச்சை சகிக்க முடியாமல் போக சிரிப்பை அடக்க பெரும்பாடு பட்டாள் சுகந்தி. அன்பரசு, “சிரிப்பு வந்தா சிரிச்சுடு அண்ணிம்மா” என்றான் சிரிப்போடு.
உன்னை அப்புறம் கவனிச்சுக்கிறேன் என்பதாய் சுகந்தியை பார்த்த சத்யன், “உனக்கு என்ன வேணும்னு சொல்லும்மா. நல்லா பெருசா சொல்லு” என முல்லையை ஊக்கினான்.
“என்ன வேணும்?” என அன்பரசு தீவிரமாய் கேட்க, “அம்மாக்கு ஹெல்ப்புக்கு ஆள் போடுங்க. இரண்டு நாளா சுகந்திக்காக்கும் முடியறதில்ல. எனக்கும் சமையல் செய்ய தெரியாது. ஒத்த ஆளா ரொம்ப கஷ்டப்படுறாங்க” என்றாள் அக்கறையாக.
“உண்மைதான்… அத்தைக்கு ரொம்பவே சிரமம்தான். ஆனா நிறைய வேலையை இழுத்துக்காதிங்கனு சொன்னாலும் கேட்கமாட்டாங்க. ஆள் போட அத்த ஒத்துக்கமாட்டாங்க, ஆனாலும் எப்படியாவது சம்மதிக்க வச்சிடலாம்” என்றான் நம்பிக்கையாக.
அன்பரசின் மனைவி என்ற ஒன்றே முல்லையை பிடிக்கும் சுகந்திக்கு. புது தொழிலில் கணவனுக்கு பெரும் உதவியாக இருக்கும் முல்லையை சகோதரியாகவே பாவித்தாள். தற்போது தன் அன்னை மீதான முல்லையின் அக்கறை சுகந்தியை இன்னும் ஈர்த்தது.
அன்பரசு தற்போதுதான் வந்திருக்கிறான் ஆகையால், முல்லைக்கும் அன்புக்கும் தனிமை கொடுக்க நினைத்து “சமையல் ரெடியாகும்வரை கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடு அன்பு. எனக்கும் கதவை சாத்தனும். நான்வெஜ் ஸ்மெல் ஒத்துக்காது” என்றாள் சுகந்தி.
“அப்போ அத்தையை செய்ய வேணாம்னு சொல்லியிருக்கலாமில்ல அண்ணிம்மா?”
“இதெல்லாம் பார்த்தா ஆகுமா? நான் கதவை சாத்திக்கிறேன். நீ போ.” என்றாள்.
பின்னே முல்லையும் அன்பரசும் தனதறைக்கு வந்தனர். “ம்… அத்தை மாமா என்ன சொன்னாங்க?” என்றான்.
“ரொம்ப ரொம்ப சந்தோசப்பட்டாங்க. இப்போவே வளைகாப்பு எப்படி பண்ணலாம்? பொண் குழந்தைனா என்ன பேர் வைக்கலாம், ஆண் குழந்தைனா என்ன பேர் வைக்கலாம்னு யோசிக்க ஆரம்பிச்சிட்டாங்க” என்றாள் மகிழ்வோடு.
அன்பரசு முகம் கனிந்திருக்க, “கொழுந்தனார் என்ன சொன்னார் தெரியுங்களா?” என்றாள் சிரிப்போடு.
“அட ஆமாம் முல்லை, இரு அவனுக்கு போன் போடுறேன்”
“வேணாம் வேணாம், எல்லாம் நாங்க பேசிட்டோம்” என்றாள் சிரிப்போடு.
“என்ன பேசுனிங்க?”
“நேத்து மாமா கால் பண்ணி உனக்கு பொண்ணு பார்க்க நேரம் வந்துடுச்சுடானு சொன்னார். கொழுந்தனார் என்ன சொன்னாரோ தெரியல, மாமாக்கு சிரிப்பை அடக்கவே முடியல. நம்மளைத்தான் எதோ சொல்றாங்கனு நினைச்சுட்டு, என்னடா கிண்டல் பண்ணிட்டிருக்கிங்களானு சுகந்திக்கா சத்தம் போடவும் கட் பண்ணிட்டாங்க.
அப்புறம் எனக்கு கால் பண்ணி, அவர் போட்ட சபதத்தை சொல்லி, “நான் சும்மா கிண்டலுக்குத்தான் அப்படி சொன்னேன். எதாவது சொல்லி பொண்ணு பார்க்குறதை தள்ளி வைங்க. இன்னும் இரண்டே வருசம் கழிச்சு பண்ணிக்கிறேனு ரொம்ப பாவமா கெஞ்சினார்” என்றாள் சிரிப்போடு.
தானும் சிரித்தவன், “எப்படி கெஞ்சினாலும் அவனை யார் விட்டா? இன்னும் ஒரு வருசம் கழிச்சு பார்க்க ஆரம்பிச்சுடலாம்” என்றவன், “உனக்கு என்ன வேணும்? பெரிய லிஸ்ட் இருக்குனு சொன்ன?” என்றான்.
“எனக்கு என்ன வேணும்?” என யோசிக்கும் பாவனை செய்தவள், இப்போதைக்கு ஒன்னும் தோணலையே” என்றவள், “நீங்க சின்ன வயசுல சுகந்திக்காவை பண்ணின கலாட்டாக்களையெல்லாம் சொன்னாங்க. ஆனாலும் மூனுபேரும் சேர்ந்து ரொம்பதான் படுத்தியிருக்கிங்க” என்றாள்.
தனிப்பட்ட விருப்பம் ஏதுமின்றி குடும்பத்தை பற்றியே பேசும் மனைவியை அன்பரசு ஆழ்ந்து பார்த்திருக்க, “நம்மளை பத்தி பேசாம மத்த கதைகளை பத்தி பேசி ரொம்ப போரடிக்கிறேனா?” என்றாள்.
இல்லை என்பதாய் அன்பரசு தலையசைக்க, உற்சாகம் வரப்பெற்றவளாய், “அப்பாம்மா குடும்பத்தை பார்த்துக்கிறது எங்கையும் இயல்பா நடக்குறதுதான். ஆனா இங்க கல்பனாம்மா… அத்தை இறந்தபின்ன குடும்பம் தள்ளாடி நிற்கும்போது பில்லரா வந்து தாங்கியிருக்காங்க.
அவங்க இல்லைனா ஜனனியை வளர்க்க ரொம்ப சிரமமாகியிருக்கும்ல? அதுக்கு சேகர் அண்ணாவும் சப்போர்ட் பண்ணியிருக்காங்க, மாமாவோட கல்யாணம் ஆகும் முன்னவே பாப்பாக்காக சுகந்திக்கா இங்க வந்துட்டாங்க. இதெல்லாம் எந்த எதிர்பார்ப்பும் இல்லாம நடந்திருக்கு. எத்தனை குடும்பத்துல இப்படி ஆள்கள் இருக்காங்க?” என பெருமையாய் பேசி,
“என் அப்பாக்கு இப்படி கூடப்பிறந்தவங்க ஏன் கிடைக்கலனு ரொம்ப வருத்தமா இருக்கு. அவர் ரொம்ப நல்லவர் தெரியுங்களா? எல்லார் மேலயும் சமமாதான் பாசம் வச்சிருந்தார். ஆனா அவரை யாரும் அப்படி நினைக்கல. அதனால எல்லாம் மாறிப்போச்சு.
அப்பாம்மா தவிர வேற உறவுகளே இல்லாம வளர்ந்த எனக்கு இப்போ அண்ணா, அண்ணி, அக்கா, மாமானு எல்லாரும் இருக்காங்க. முக்கியமா உண்மையான பாசத்தோட இருக்காங்க. இப்படிபட்ட வம்ச வாரிசை சுமக்க ரொம்ப பெருமையா இருக்கு, இதை விட வேற என்ன வேணும்னு எனக்கு யோசிக்க தெரியலையே” என்றாள் உணர்வுப் பூர்வமாக.
“உறவுகளோட வளரலைனாலும் புகுந்த வீட்டு உறவுகளை இப்படி சரியா புரிஞ்சுக்குற பொண்டாட்டி கிடைக்குறதும் பெரிய கொடுப்பினை” என்று மனைவியை அணைத்துக்கொண்டான் அன்போடு.
“கல்பனாம்மா பில்லர்தான். ஆனா சிதறியிருந்த உறவுகளை சேர்த்து வச்சி குடும்பத்தை அழகா வடிவமைச்சது என் புருசன். முக்கியமா ஜனனியோட அப்பாவா உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும்” என்றாள் பெருமையாக.
“பார்டா” என முத்தம் வைக்க, “மாமா கல்யாணம் செய்துக்காம நான் செய்துக்கமாட்டேனு நீங்க செய்த பிடிவாதத்தாலதான் மாமா சுகந்திக்காவை கல்யாணம் செய்ய யோசிச்சிருக்கார். இவங்க கல்யாணம் இரண்டு குடும்பத்துக்கும் நிம்மதியை கொடுத்திருக்கு” என கணவன் பெருமையை பேச நினைத்த முல்லைக்கு மீண்டும் உறவுகளை பற்றித்தான் பேச வந்தது.
ஏழு மாதங்களாய் முல்லையைப் பற்றி புரிந்தவரை, இரவின் தனிமைகளில் தனது விருப்பம் பற்றி மட்டுமே யோசிப்பவளுக்கு பகலில் குடும்பம் பற்றிய நினைவு மட்டுமே இருக்கும்.
மாமனார் மாமியார் முல்லையை உயிராய் பாவித்தபோதும், தத்துப்பிள்ளை என்ற காரணத்தினால் சுற்றியிருந்த உறவுகளால் நிறைய வேதனையை கடந்து வந்திருக்கிறாள். அதனாலேயே கிடைத்த உறவுகளை பொக்கிஷமாய் பிடித்துக் கொள்கிறாள் எனப்புரிந்திருந்தான் அன்பரசு.
அன்பரசு அணைப்பிலிருந்தவள், தலை நிமிர்த்தி, “ரொம்ப போரடிக்குறேனா? நீங்க எதாவது பண்ணுங்க, அப்போதான் எனக்கு சுத்தியிருக்க எல்லாமும் மறக்கும்” என்றாள் நாணத்தோடு.
“ஹேய்…” என சிரித்து அணைப்பை மேலும் கூட்டியவன், “புருஷனை நச்சு பண்ணாம அவன் இஷ்ட்டத்துக்கு விடுற பொண்டாட்டி கிடைக்கிறதெல்லாம் உலக அதிசயம். நீ என் அதிசயம்” என்றான் காதலாக.
“எல்லாமும் அபத்தமா தோணும்போது அற்புதமா நீங்க கிடைச்சிங்க. உங்க விருப்பத்துக்கு தடை போட்டு என்னை நானே தண்டிச்சுக்க மாட்டேன்” என்றாள் காதலாக.
“குண்டுமல்லி… என்னை ரொம்ப படுத்துற நீ” என முத்தமிட, “அப்படித்தான் படுத்துவேன், வேணும்னா உங்க புள்ளைகிட்ட கம்ப்ளைன் பண்ணுங்க” என்றாள்.
மனைவி வயிற்றை வருடிய அன்பரசு, மண்டியிட்டு தனது குழந்தைக்கு முத்தமிட, கணவனுக்கு பெரிய பரிசை கொடுத்த நிறைவில் முல்லை மனம் நிறைந்தது.
சத்யனின் அன்பு சுகந்தியின் பழைய ரணங்களை இல்லாமல் ஆக்கியது. அன்பு ஒன்றே மனதின் இருளை போக்கும் ஒளி. இங்கு தந்தை, மகள், அத்தை, மனைவி, அண்ணன், அண்ணி, தம்பி, மாமனார் மாமியார் என வெவ்வேறு பரிணாமங்களில் மொத்த குடும்பத்தின் ஒளியாய் அன்பரசன்…