இத்தனை அக்கறை கொள்பவன், தன் மகளை மணக்க சம்மதித்திருந்தால் என்ன என்ற ஆற்றாமை வர, “உங்க அக்கறைக்கு நன்றிங்க தம்பி. ஆனா இனி உதவி செய்யனு வராதிங்க, உங்களை வச்சு என் நாத்தனாரே அன்னைக்கு தப்பா பேசினாங்க. இப்படி அடிக்கடி வந்தா மத்தவங்களும் பேச ஆரம்பிச்சிடுவாங்க. என் மகளும் நாங்களும் ஏற்கனவே ரொம்ப நொந்து போயிருக்கோம்” என்றார் சோர்வாக.
ரங்கசாமி வெளியே வர, “வணக்கம்ங்க” என்று கை கூப்பினார் மாதவன்.
சற்று முன் உள்ளே கடுகடுத்தவருக்கு மாதவனையும் அன்பரசையும் நேரில் பார்த்ததும் கோபிக்க மனம் வராமல் போக, தன்னையே நொந்தபடி, “வணக்கம். என்ன விசயமா வந்திருக்கிங்க?” என்றார்.
தந்தையின் மறுப்பால் கோபத்தில் இருக்கிறார்கள் என்றுணர்ந்தவனுக்கு, தன்னை அந்தளவிற்கு பிடித்திருக்கிறதா என்று மனம் அதீத சந்தோசம் கொள்ள, “உங்களுக்கு உதவி செய்ய வரலைங்க” என்று ஜானகியிடம் சொல்லி, பின்னே ரங்கசாமியையும் பார்த்தவாறு “வரம் வேண்டி வந்திருக்கோம்” என்றான் இன்முகத்தோடு.
‘வரம்’ வேண்டி வந்திருக்கிறோம் என்ற வார்த்தையில் மொத்தமாய் மயங்கினார் ரங்கசாமி. மகளை ஏன் மறுத்தார் மாதவன் என்ற ஆற்றாமையெல்லாம் பனியாய் விலகியது. ஆகினும் மாதவனுக்கு இதில் சம்மதம்தானா என அவரின் முகத்தை ஆராய்ந்தார் தவிப்போடு.
ரங்கசாமியின் மனமறிந்து “நீங்க கேக்கும்போது எங்க குடும்ப சூழல் வேறங்க, அதனால அப்பா மறுத்திருக்கார்” என்றான் தன்மையாக.
“மெதுவா பேசுங்க, நான் உங்களை கேட்டது என் மகளுக்கு தெரியாது” என பதறினார் ரங்கசாமி.
“தெரியாதா? முல்லை விருப்பம் தெரியாம எப்படி என்னை கேட்டிங்க? இது தப்பில்லைங்களா?” என்றான்.
“தப்புதான். ஆனா அப்படி செய்யவும்தான் வேதனை என்னோட போச்சு. இல்ல என் பொண்ணும் கஷ்டப்பட்டிருப்பா” என்றார் வருத்தத்தோடு.
மாதவன் “என்னை மன்னிச்சுடுங்க. என் மருமகளை மறுக்க நான் அப்போ சொன்ன காரணம் மொத்தமும் இப்போ சரியாகிடுச்சுங்க” என்று, பெரிய மகன் வந்தது, அன்பரசு முயற்சியில் சத்யன் சுகந்தி திருமணம் நடந்தது என அனைத்தும் சொல்லி, “பொண்ணு மாப்பிள்ளையை மறு வீட்டுக்கு அனுப்பியதும் அன்புகிட்ட சொன்னேன். உடனே கிளம்பனும்னுட்டான்” என்றார் மகிழ்வோடு.
மாதவன் பேச்சினில் அவருக்கும் சம்மதம் எனப்புரிய மிகவும் மகிழ்ந்தார் ரங்கசாமி. ஆனாலும், கடந்த பத்து நாட்களாய் நடந்த நிகழ்வுகளை நினைத்து “இப்போ இருக்க சூழல்ல முல்லை சம்மதிப்பாளா தெரியலயே” என வருந்தினார் ரங்கசாமி.
“அப்படி என்ன சூழல் கெட்டுடுச்சுங்க?” என்றான் அன்பரசு.
“நீங்க என் மகளை வேணாம்னு சொன்னதுக்கப்புறம்” என ஆரம்பித்து மேட்ரிமோனியில் பதிந்து வரன் பார்த்தது, மகளை பார்க்க வந்தவர்களால் ஏற்பட்ட அவமானம் அனைத்தும் சொல்லி, “அதனால வீட்டோட மாப்பிள்ளையா வர யார் சம்மதிக்கிறாங்களோ அவங்களைத்தான் கட்டிக்குவேன், இல்ல கல்யாணமே வேணாம்னு சொல்லிடுச்சுங்க.
அதையும் என் அக்கா மகன் நிதீஷ் முன்னாடியே சொல்லவும், இன்னைக்கு காலைல குடும்பதோட திரும்பவும் பொண்ணு கேட்டு வந்துட்டாங்க. அவனை கட்டிக்கிட்டா நிம்மதியா இருக்க முடியாதுனு சொன்னா, என் நிம்மதி நிதீஷ்கிட்ட இல்லப்பா, உங்களோட இருக்கிறதுலதான் என் நிம்மதியிருக்கு. உங்களை விட்டு பிரிஞ்சி கிடைக்கிற சந்தோசம் எப்படிபட்டதா இருந்தாலும் வேணாம்னு ஒரே பிடிவாதம்.
முல்லை சம்மதிச்சும் நான் சம்மதிக்கலன்ற கோபத்துல, பொண்ணு கேட்டு வந்தவங்களை இரண்டாவது முறையா அசிங்கப்படுத்திட்டயில்ல? அப்படி யாரை இவளுக்கு கட்டி வைக்கிறேனு பார்க்கத்தான போறோம்னு சபிச்சிட்டு போகுது என் அக்கா.
முல்லைக்கு நிதீஷை கட்டிக்க சம்மதம்ன்ற தைரியத்துல இனி எவன் பொண்ணு பார்க்க வந்தாலும் நானும் முல்லையும் ஒரே வீட்டுல வளர்ந்தவங்கனு சொல்லுவேனும், என்னைக்கானாலும் நான்தான் முல்லை கழுத்துல தாலி கட்டப்போறேன், இனி எவனுக்கும் முல்லையை விட்டுகொடுக்க மாட்டேனும் பயமுறுத்திட்டு போறான் நிதீஷ்.
எதுக்கு இத்தனை பாடு? நிதீஷை கட்டிக்கிட்டா உங்களோடவே ஆயுள் பூரா இருக்கலாம்னு என்னை கன்வின்ஸ் பண்றா என் பொண்ணு. இந்த புள்ளைக்கு கல்யாணம்னா என்னானு தெரியுதா இல்லையானே தெரியல” என வருந்தினார் ரங்கசாமி.
வளர்ப்பு மகள் என்றாலும் தாய் தந்தை மீது முல்லைக்கு இருக்கும் பாசத்தில் நெகிழ்ந்தனர் அன்பரசும் மாதவனும்.
நிதீஷ் சொன்னதில் மகளை தவறாக நினைப்பார்களோ என ஜானகி பதட்டப்பட, “அவன்லாம் ஒரு ஆளுனு பயப்படுறிங்களா? அப்படி என்னதான் பண்றான்னு பார்த்துக்கலாம் விடுங்க. வம்பு தும்பு இல்லைனா வாழ்க்கை போரடிச்சிடும்” என இலகுவாய் சொன்னான் அன்பரசு.
“நீங்க என் மகளை தவறா…” என ரங்கசாமி தயங்க, மாதவன் “உங்க மகளை நினைச்சு பெருமையா இருக்குங்க. அப்பாம்மாவை தனியா விட்டுட்டு போகக்கூடாதுனு நினைக்கிறது எவ்வளோ பெரிய விசயம்” என்றார் பெருமையாக.
ரங்கசாமி முகம் சந்தோசத்தை காட்ட, “உங்க பொண்ணுக்கு என்னை பிடிக்குமானு தெரிஞ்சாதானே நானும் சந்தோசப்பட முடியும்?” என்றான் அன்பரசு.
“அது வீட்டோட மாப்பிள்ளை வேணும்னு உளறிட்டிருக்கு, என் மகதான் உங்க மருமகள்னு முடிவா சொல்லிட்டிங்கள்ல? இரண்டொரு நாள்ல எடுத்து சொல்லி புரிய வச்சிடறேன்” என்று மகளுக்காக அவகாசம் கேட்டார் தந்தை.
கிளம்பலாமா என மாதவன் அன்பரசப் பார்க்க, “முல்லையை பார்த்துட்டு, ஒரு லெமன் ஜுஸாவது குடிக்காம நான் கிளம்பப்போறதில்ல” என சிரித்தான் அன்பரசு.
பிறகுதான் வந்தவர்களுக்கு ஏதும் தரவில்லை என்ற நினைப்பு வர, “அச்சோ… இருந்த மனநிலைல ஏதும் கொடுக்கக் கூட தோணல” என்று தன்னையே கடிந்தவாறு அவசரமாய் கிச்சன் சென்றார் ஜானகி.
“பதட்டபடாதிங்கம்மா, நீங்க பேசிட்டிருக்கும்போதே செய்துட்டேன்” என முறுக்கு, பஜ்ஜி தட்டில் வைத்துக் கொடுத்து, “எடுத்துட்டு போங்க, நான் டீயும், தம்பிக்கு ஜுஸும் போட்டு வைக்கிறேன், அதை முல்லைகிட்ட கொடுத்தனுப்பலாம்” என்றார் சமைக்கும் பெண்.
பெரியவர் அவகாசம் கேட்டும் கொடுக்காமல், இன்றே முல்லையை பார்த்தாக வேண்டுமென அமர்ந்திருக்கும் மகனிடம் “முறைப்படி நாளைக்கு பார்க்கலாம்னுதான சொன்ன?” என முறைத்தார் மாதவன்.
“அது… இங்க வந்த பின்னதான முல்லைக்கு தெரியாம என்னை கேட்டுருக்காங்கனு தெரிஞ்சது? அவளுக்கு பிடிச்சிருக்கானு தெரியாம எப்படிப்பா கிளம்பறது?” என்றான் பாவமாக.
மகனின் பாவனையில் மாதவன் சிரித்திட, அன்பரசும் சிரித்தான் சிறு வெக்கத்தோடு.
“இதை சாப்பிடுங்க சம்மந்தி, நான் போய் முல்லையை அழைச்சிட்டு வரேன்” என்று திண்பண்டத்தை நீட்டினார் மாதவனிடத்தில். பிறகு இன்னொரு தட்டை அன்பரசிடம் கொடுக்க, வாங்கி எதிரில் இருந்த சிறிய டேபிளில் வைத்தவன், “முல்லை வந்த பின்ன சாப்பிட்டுக்கிறேன்” என்றான் சிரிப்போடு.
தனது தந்தையை சம்மந்தி என்றழைத்ததால் அன்பரசும் இயல்பாய் பேச அதில் மகிழ்ந்த ஜானகி உற்சாகத்தோடு மகள் அறைக்கு சென்றார்.
இவர்கள் பேசியதை கேட்டுக்கொண்டுதான் இருந்தாள் முல்லை. தன்னை அழைக்கத்தான் அன்னை வருகிறார் என்றதும் படபடப்போடு அமர்ந்திருந்தவள், ஜானகியை கண்டதும் தலைகுனிந்தாள்.
“உன்னை அன்புக்கு கேட்டு வந்துருக்காங்க முல்லை, எழுந்து சீக்கிரம் ரெடியாகு. உன்னை பார்த்தாகனும்னு அன்பு பிடிவாதமா வெய்ட் பண்ணிட்டிருக்கார்” என்றார் உற்சாகமாக.
கனவு கண்ட வாழ்க்கை கண் முன் நிற்கிறது. ஆனால் ஏற்க மனதோடு போராடிக்கொண்டிருந்தாள் முல்லை. “ம்மா, நிதீஷ்க்கு நம்பிக்கை கொடுத்துட்டு எப்படி இவர் முன்ன வந்து நிக்கட்டும்?” என்றாள் தவிப்பாக.
“ச்சு… மெல்ல பேசு முல்லை. கட்டிக்கிறேனு நிதீஷ்கிட்ட சம்மதம் சொன்னியா? இல்லையில்ல? வீட்டோட மாப்பிள்ளையா யார் வந்தாலும் சம்மதம்னுதான சொன்ன? அதோட நிதீஷ்க்கு உன்னை கொடுக்க நாங்க சம்மதிச்சோமா? தேவையில்லாம யோசிக்காத. எழுந்து முகம் கழுவி வா” என்றார் அதட்டலாக.
“ம்மா” என தடுமாற, “ஜானகி சீக்கிரம்” என குரல் கொடுத்தார் ரங்கசாமி.
“ம்மா, இன்னொரு நாளைக்கு பார்க்கலாமே” என முல்லை தவிக்க, “இந்த சம்மந்தம் தள்ளி போய்டுச்சினா எங்களால தாங்க முடியாது முல்லை” என்றார் கெஞ்சலாக.
ஜானகி முல்லை அறைக்கு போய் ஐந்து நிமிடம் ஆகியிருக்க, “மேக்கப்லாம் வேண்டாம், அப்படியே வர சொல்லுங்க” என குரல் கொடுத்தான் அன்பரசு.
அன்னையிடம் பழகியவன் போன்ற பேச்சில் முல்லையின் படபடப்பு மேலும் அதிகமானது. “போகலைனா அவங்களை அவமதிக்கிற மாதிரி ஆகிடும், வா” என கையை பிடிக்க, இவங்க வேணாம்னு சொன்னா நாம மறந்துடனும், வேணும்னு வந்தா சம்மதிக்கனுமா? என்ற ஆற்றாமையிலும், நிதீசிடம் அப்படி பேசிய குற்றவுணர்வால் அன்பரசை காண்பதை தவிர்க்கவும், “வீட்டோட மாப்பிள்ளையா வர சம்மதிச்சிட்டாங்களா?” என்றாள் அன்னையிடம்.
மகளின் பேச்சில் பதறிய ரங்கசாமி எழுந்து முல்லையிடம் வந்தார். “அப்பா” என முல்லை தவிக்க, “அன்பரசு உன்னை கட்டிக்கிட்டா எனக்கு மகன் இல்லைன்ற குறையும் போய்டும்டா, வீட்டோட மாப்பிள்ளையா இருக்க சம்மதமானு கேட்டு அவங்களை அசிங்கப்படுத்திடாத” என்றார் கெஞ்சலாக.
“ஏங்க… அவங்களை உக்கார வச்சிட்டு நாம இப்படி பேசிட்டிருக்கிறது சரி கிடையாது. நீங்க போங்க நான் முல்லையை அழைச்சிட்டு வரேன்” என்க, “நானே அழைச்சிட்டு போறேன், வாடா” என கை நீட்டினார் ரங்கசாமி.
தந்தையை மீற முடியாமல், ரங்கசாமி பின்னோடு முல்லை வர, அவளையே பார்த்திருந்தான் அன்பரசு. கிச்சன் சென்று பழரசத்தை எடுத்து வந்து மகளிடம் கொடுத்து, “போய் கொடு” என்றார் ஜானகி.
“நீயே கொடும்மா, நான் இங்க இருக்கிறேன்” என முணுமுணுக்க, ரங்கசாமி மகளை பார்க்க, தன்போல் அன்னையிடமிருந்து பழரசத்தை வாங்கிக்கொண்டு மாதவனிடத்தில் நீட்டினாள்.
அறையினுள் அன்னையிடம் தான் கேட்டதில் கோபமாகிட்டானோ என முல்லை பார்க்க, “வீட்டோட மாப்பிள்ளையா வந்துதான் உன் அப்பாம்மாவை பார்த்துக்கனும்னு இல்ல. எங்கயிருந்தாலும் என்னால பார்த்துக்க முடியும். அந்த நம்பிக்கை என்மேல உனக்கும் இருக்குதுனா சொல்லு, ஜுஸ் குடிக்கிறேன்” என்றான்.
அன்றே எந்த உதவினாலும் கால் பண்ணுங்க என்று எவ்வித எதிர்பார்ப்புமின்றி தந்தையிடம் சொல்லிச்சென்றவன் ஆதலால் அன்பு மேல் நம்பிக்கையெல்லாம் அதிகமாகவே இருக்கிறது. ஆனாலும் இப்படி நேரடியாக கேட்பவனுக்கு பதிலளிக்க முடியாமல் போக அன்னையோடு போய் நின்று கொண்டாள் முல்லை.
சில நொடி அமைதிக்குப் பின் அன்பரசு எழுந்துகொள்ள, “கொஞ்சமாவது குடிங்க, இல்ல அப்பா வருந்துவார்” என்றாள் சன்னக்குரலில்.
புன்னகையோடு மொத்த பழரசத்தையும் குடித்து முடித்தவன், “உங்க பொண்ணுகிட்டயும் உங்ககிட்டயும் எனக்கிருக்க ஒரே கண்டிஷன்… சாப்பாடு விசயத்துல என் விருப்பம் என்னைக்கும் மாறாது. அதே போல உங்க பொண்ணும் எனக்காக மாறனும்னு எதிர்பார்க்கமாட்டேன். இதுக்கு சம்மதிச்சிங்கனா போதும்.
நாளைக்கு ஈவ்னிங் நான் பெங்களூர் கிளம்பறேன், ஒரு வாரம் அங்கயிருந்துட்டு குவைத் கிளம்பிடுவேன். குவைத் போனேன்னா வர ஒரு மாசத்துக்கு மேலயே ஆகிடும்” என்று ரங்கசாமி ஜானகியிடம் சொல்லி,
முல்லையிடம் “அப்பாகிட்ட என் நம்பர் இருக்கு. என்னை பிடிச்சிருக்குனா கால் பண்ணு. ரொம்ப பிடிச்சிருக்குனா அப்பாகிட்ட என் நம்பர் வாங்கி உன் நம்பர்லயிருந்து கால் பண்ணு” என்றவன், கிளம்பலாம் என்பதாய் தந்தையை பார்த்தான்.
மாதவன், “அன்பு ஊருக்கு கிளம்பறதுக்குள்ள சொன்னிங்கனா சந்தோசமா கிளம்புவான்” என்று ரங்கசாமியிடம் சொல்லி, “வரேன்ம்மா” என முல்லையிடமும் விடைபெற்று இருவரும் கிளம்பினர்.