“ஒருமாசம் கழிச்சு வந்தாலும் எத்தனை நாள் இங்க இருப்பேனு தெரியாதுப்பா. அதோட இப்போ சினி ஃபீல்ட்ல பெரிய நடிகர்கள்லாம் பழக்கமாகியிருக்காங்க. அவங்களை இன்வைட் பண்ணாம கல்யாணம் செய்ய முடியாது. ஆறு மாசத்துல கல்யாணம் பண்ணிக்கிறதே ரொம்ப கஷ்டம்” என்றான் உண்மையாக.
“மத்தவங்க கால்ஷீட் பார்த்தெல்லாம் நம்ம கல்யாணம் பண்ண முடியாது. மகளுக்கு கல்யாணம் ஆனாதான் சம்மந்தி நிம்மதியாவார். சினி ஃபீல்ட்ல இருக்கவங்களுக்கு ரிஷப்சன் வச்சிக்கலாம். ஆனா கல்யாணம் சீக்கிரம் செய்தாகனும். ஒரு வாரம் இங்க இருந்தினா போதும். மத்ததெல்லாம் நான் ஏற்பாடு பண்ணிடறேன்” என்றார் மாதவன்.
“அப்புறம் கல்யாணம் முடிஞ்ச கையோட கிளம்பிட்டானு என்னை குறை சொல்லக்கூடாது” என்று தந்தையை முறைக்க, “அது உன் பாடு. மருமக பாடு” என்றார் இலகுவாக.
“அப்பா” என அன்பரசு பாவமாய் பார்க்க, “கல்யாணத்தை சீக்கிரம் வச்சா பரவால்லனு சம்மந்தி நேத்தே சொல்லிட்டார். நாம எப்போ தேதி சொல்வோம்னு எதிர்பார்த்திட்டிருப்பார். ஆறு மாசம் கழிச்சினா சங்கடமா நினைப்பார் அன்பு”
அன்பரசு சுகந்தியை முறைக்க, அவனருகே வந்தவள் “முந்தா நாள் ஆரம்பிச்சு நேத்தே கல்யாணத்தை முடிச்சி என்னை நல்லா செஞ்சிங்கள்ல? அனுபவி” என்றாள் பழிவாங்கும் தோரணையில்.
“உன் கல்யாணத்துக்கும் எனக்கும் என்ன சம்பந்தம் இருக்கு? சத்யன் விருப்பம் சொன்னான். அவன் விருப்பத்துக்கு மறுக்க முடியாமலும், உன் மாமா மனசு கஷ்டப்படக்கூடாதுனும் சம்மதிச்ச. இதுல நான் எங்க வந்தேன்?” என்றான் முறைப்பாக.
அன்பு சொல்வது உண்மையென்பதால் சுகந்தி பாவமாய் பார்க்க, ‘அடப்பாவி’ என்று சத்யன் சத்தமில்லாமல் வாயசைக்க, மாதவனும் மௌனமாய் சிரித்தார்.
இருவரையும் முறைத்தவன், “அவங்க குடும்ப பழக்கம் வேற, நம்ம குடும்ப பழக்கம் வேற. இங்க வந்து எப்படி வாழப்போறோம்னு மனசளவுல முல்லை தயராக டைம் கொடுக்கனும். பத்து நிமிஷம் தனியா இருந்ததுக்கே ரொம்ப பயந்துட்டா. உங்க சம்மந்திக்கு சொல்லி புரிய வைங்கப்பா” என்றான்.
அப்பொழுதும் மாதவன் யோசனையோடிருக்க, “ஊர் உலகத்துல எல்லாரும் லவ் பண்றாங்க. நானும்தான் கொஞ்ச நாளைக்கு லவ் பண்ணி பார்க்குறேனேப்பா” என்றான் சின்ன சிரிப்போடு.
“டேய்…” என மாதவன் பொய் முறைப்போடு அதட்ட, “ஆறே ஆறு மாசம்… ஓடுற ஓட்டம் தெரியாம ஓடிடும். முல்லையும் என்னை புரிஞ்சிக்க டைம் கிடைச்சமாதிரி ஆகிடும்” என்றான் மீண்டும்.
“சரி நான் பேசிப்பார்க்குறேன்” என்றார் மாதவன்.
சேகர் “சுகந்திக்கு கொடுக்க வேண்டிய சீர் இன்னும் கொடுக்கல, போய்ட்டு நாளைக்கு சீரோட வரேன் மாமா” என்றான்.
“என்னடா பெரிய சீரு? சுகந்திம்மா போதும் எங்களுக்கு” என முறைத்தார் மாதவன்.
“உங்களுக்கு சுகந்தி போதும். ஆனா எனக்கு…” என கண்கலங்கியவன், “என்னைக்காவது ஓர்நாள் நாம தனியாள்னு சுகந்தி வருந்தும்னு நினைச்சு வேதனையடையாத நாளில்ல. சுகந்தி மேலான மொத்த துக்கத்தையும் சந்தோசத்தோட உச்சமா மாத்திட்டான் சத்யன். என் சந்தோசத்தின் வெளிப்பாடா என்னால முடிஞ்சதை கொடுக்குறேன். மறுக்காதிங்க மாமா” என்றான் பிணைப்போடு.
“அப்போ குழந்தைகள் இங்க இருக்கட்டும், நீங்க போய்ட்டு வாங்க, நாளைக்கு அழைச்சிட்டு போவிங்க” என்றார்.
“ம்ஹும்… என் மகனும் மகளும்தான் அவன் அத்தைக்கும் மாமாக்கும் சீர் கொண்டு வரப்போறோங்க” என்றான் மகிழ்வோடு.
சேகரை தனியே அழைத்துச்சென்ற அன்பரசு, “சுகந்தியோட பழசு ஏதும் சீர்ல இருக்கக்கூடாது, ஒரு கர்சீப் கூட” என்றான் கட்டளையாக.
“அவன்கிட்டயிருந்து விவாகரத்து வாங்கின அன்னைக்கே கல்யாணத்துக்கு எடுத்த பட்டு சாரி முதற்கொண்டு எல்லா துணிமணியும் ஆஸ்ரமத்துக்கு கொடுத்தாச்சு.
சுகந்தியோட முதல் கல்யாணம் இனி எந்த வகையிலும் நியாபகம் வரக்கூடாதுன்றதுக்காக சீரா கொடுத்த பாத்திரம், தங்க நகை உட்பட பழசு அத்தனையும் போட்டுட்டு அப்போவே புதுசு மாத்திட்டோம் அன்பு” என்றான் இன்முகத்தோடு.
அன்பரசு முகம் நிம்மதியாகிட, அங்கே வந்த சத்யன் “என் பொண்டாட்டிக்கு என்ன வேணுமோ நானே வாங்கிப்பேன். ஆனாலும் நமக்கு சத்யனோட கல்யாணம் ஆகிடுச்சுனு சுகந்திக்கு ஆழப் பதியனும்ன்றதுக்காக சீர் வாங்கிக்கிறேன்.
குழந்தைகளை வச்சிக்கிட்டு ரொம்ப அலைய வேணாம். சம்பிரதாயப்படி முக்கியமா கொடுக்கனும்ன்ற பொருள் மட்டும் வாங்கு. மத்தபடி உன் பாசத்தையெல்லாம் சீர்ல காட்டி என்னையும் அப்பாவையும் சங்கடப்படுத்தக்கூடாது” என்று அறிவுருத்தினான் சத்யன்.
சேகர் சரியென தலையசைக்க, “நான் இன்னைக்கு கிளம்பிடுவேன் சேகர். சத்யன் ஒரு மாசத்துக்கு இங்கதான் இருக்கப்போறான். பகல்ல அப்பா இன்ஸ்டியூட் கிளம்பிடுவார். ஜனனிம்மா ஸ்கூல் போய்டும். சரவணன் இரண்டு நாள் கழிச்சு கிளம்பறான். அத்தையோட சுகந்தி இருந்தா அட்வைஸ் பண்ணிட்டே இருப்பாங்க.
நாளைக்கு சீர் கொடுத்துட்டு கிளம்பும்போது அத்தையையும் உன்னோடவே அழைச்சிட்டு போ. தனியா இருந்தா சுகந்தி சத்யனோட இயல்பா இருக்க முயற்சிக்கும். சத்யன் குவைத் கிளம்பும்போது அத்தை இங்க வந்தா போதும்” என்றான் அன்பரசு.
உள்ளே வந்து மகளிடம் “அப்பா மூனு மணிக்கு கிளம்பறேன் ஜனனிம்மா. பெரியம்மாகிட்ட சமத்தா இருந்துக்கனும்” என்று வழக்கமான அறிவுரையை வழங்கினான் அன்பரசு.
சேகர் குழந்தைகள் சென்ற வருத்தத்தில் இருந்தவளுக்கு தற்போது தந்தையும் செல்லவிருப்பதால் முகம் வாடினாள். “நான் இல்லைனா என்னடா? இன்னும் ஒரு மாசத்துக்கு பெரியப்பா இங்கதான் இருக்கப்போறான்” என தேற்ற, “சித்தப்பாவுமா?” என்றாள் ஆர்வமாக.
“சித்தப்பாவுக்கு வேலையிருக்குடா ஜனனிம்மா, ஆனா இன்னும் இரண்டு நாளைக்கு உன்கூடதான் இருப்பேன், உனக்கு எங்க போகனுமோ சொல்லு, கூட்டிட்டு போறேன்” என்று சரவணன் சொல்ல, சமாதானம் ஆனாள் ஜனனி.
“இன்னும் இரண்டொரு வருசத்துல உனக்கும் கல்யாணத்துக்கு பார்க்கனும். அதுக்குள்ள இங்கையே வேலை பார்க்குறமாதிரி ஏற்பாடு செய்துக்கோ” என்றார் மாதவன்.
“சரிப்பா” என்றான் தாமதிக்காமல்.
மாதவன் சந்தோசம் கொள்ள, காதல் தோல்வியிலிருந்து வெளி வந்திருக்கும் சரவணனை நினைத்து குடும்பத்தினரும் சந்தோசம் கொண்டனர்.
“லூசு, நீ நம்பர் தரலைனா அவனால வாங்க முடியாதா?” என சத்யன் சிரிக்க, சுகந்தியை மகிழ்விப்பதற்காக “அவ தரமாட்டா போல சத்யா. பத்து நிமிஷம் தனியா இருந்தும் பேசவேயில்ல. அண்ணிம்மாகிட்ட சரணைடையறதை தவிர வேற வழியில்ல” என்றவன் சுகந்தியை பார்த்தான் கெஞ்சுதலாக.
“ம் அப்படி வா வழிக்கு” என்றவள், “ஊருக்கு போய்ட்டு எப்போ வருவ?” என்று பல கேள்விகளை அதிகாரமாய் கேட்டு, “டைமுக்கு சாப்பிடனும்” என்பதுபோன்ற அன்பு கட்டளைகளையும் பிறப்பித்து முல்லையின் எண்ணை கொடுத்தாள் சுகந்தி.
கல்பனா, “சரவணா, நீங்க மூனு பேரும் வந்ததுலயிருந்து கறியே செய்யல, போய் வாங்கி வரியா? மதியத்துக்கு செய்யலாம்” என்றார் கல்பனா.
“இனி அன்பு சைவமா மாறினாலும் மாறிடுவான் அத்த” என்று சரவணன் சிரிக்க, “அப்படியாடா?” என்று சுகந்தி வியந்தாள்.
“ஆமாம் அண்ணிம்மா, யோசிச்சிட்டிருக்கேன்” என்று அன்பரசும் யோசிக்கும் பாவனை செய்ய, சிரிப்போடு அறையிலிருந்து வெளி வந்த மாதவன், “சாப்பாடு விசயத்துல என்னை மாத்திக்கமாட்டேனு நேத்தே சொல்லிட்டான் சுகந்திம்மா” என்று, “நான் போய் வாங்கி வரேன்” என்றார்.
“நாலு கிலோ வாங்கி வாண்ணா. அன்புக்கு தனியா எண்ணை ஊத்தாம செய்யனும்” என்க, சம்மதமாய் தலையசைத்து கிளம்பினார் மாதவன்.
பின்னே மதிய உணவு அமர்க்களப்பட, உண்டு முடித்ததும் அன்பரசு கிளம்ப ஆயத்தமாகி, “சத்யா, முல்லையை நிச்சயம் செய்தது எனக்குதான்னு தெரிஞ்சா காம்ப்ளக்ஸ் ஓனரோட தம்பி, அக்கா பசங்க சண்டைக்கு வரமாட்டானுங்க.
வேற யாரோனு நினைச்சு இரண்டு நாளைக்குள்ள முல்லை வீட்டுக்கு வருவானுங்க. நீ கொஞ்சம் கவனமா வாட்ச் பண்ணு” என்றவன், தந்தையிடமும் “அப்பா, எதுனாலும் உங்க நம்பர்க்கு கால் பண்ண சொல்லிட்டுதான் வந்திருக்கேன். பார்த்துக்கோங்க” என்றான்.
“ம்… ஜானகிக்கு போன் செய்து ஒரு வார்த்தை சொல்லிட்டு கிளம்புறிங்களா? ரொம்ப சந்தோசப்படுவா, முல்லையும் கொஞ்சம் தைரியமா இருப்பா” என்றர் தயக்கத்தோடு.
முல்லையிடம் சொல்லி செல்ல வேண்டும் என்று நினைக்கிறாரோ என, “வீட்டுக்கே போய் சொல்லிட்டு போறேன்” என்று கிளம்பினான்.
“சரவணா, முல்லை வீட்டுக்கு போ”
“எதே…” என சரவணன் பொய்யாய் முறைக்க, “ப்ச் போடா. என் மாமியாரை பார்க்கத்தான் சொல்றேன்” என்றான் சிரிப்போடு.
வாயிலிலேயே நின்றிருந்தார் ஜானகி. “வாங்க மாப்பிள்ளை” என்று வரவேற்க, “ம்” என்ற புன்னகையோடும் சரவணனோடும் உள்ளே வந்தவன், “முல்லை எங்க காணோம்?” என்றான்.
“உள்ள இருக்கா, நீங்க வருவிங்கனு அவங்கப்பா போன் செய்யவும் உள்ள போய்ட்டா, உக்காருங்க. தண்ணி எடுத்து வரேன்” என பரபரக்க, “இப்போதான் சாப்பிட்டோம்” என மறுத்து, “எதாவது பிரச்சனைனா அப்பாக்கு கால் பண்ணுங்க” என்றவன் முல்லை அறையை பார்க்க, திறந்துதான் இருந்தது.
“முல்லையை எனக்கு கால் பண்ண சொல்லுங்க, இப்போ டைம் ஆகுது. கிளம்பறேன்” என்றான்.
“முல்லை” என்று ஜானகி குரல் கொடுக்க, போகவில்லை என்றால் தவறாக நினைப்பானோ என்றும், தனக்கும் அன்பரசை பார்க்கும் ஆசை இருக்கவே, வெளியே வந்தாள்.