இதென்ன இப்படி பார்க்குறா என நினைத்தவன் “எரும” என அதட்டல் விட, “ஹான்” என்றாள் திடுக்கிட்டு.
“போடீ… எனக்கு இட்லியும் வேணாம், ஒன்னும் வேணாம்” என்றெழுந்து அறைக்குள் சென்றிட, பிறகுதான் சாம்பார் போடாதது நினைவு வர, “சாரி சத்யா. வந்து சாப்பிடு, எதோ நியாபகத்துல இருந்துட்டேன்” என்றாள் கெஞ்சலாக.
நிச்சயம் சுகந்திக்கு பழைய நினைவு வந்திருக்காது என்று அறிந்தாலும், அவளுள் தனக்கான இடத்தை அவளிற்கு உணர்த்த வேண்டி, “எதோ நியாபகமா?” என்றான் அழுத்தப் பார்வையோடு.
“டேய் ச்சீய்… அந்த கருமத்தையெல்லாம் நான் இப்போ நினைக்கிறதேயில்ல” என கோபமாய் மறுத்து, “உன்னைதான்டா நினைச்சிட்டிருந்தேன்” என்றாள் மனதை மறைக்காமல்.
“ஓ… நீ பட்னி கிடந்தா நான் பரிதாபப்படுவனா? சான்ஸே இல்ல, சாப்பிட உக்கார வச்சிட்டு எதோ நியாபகத்துல சாம்பார் ஊத்தலதான? அதுக்கு தண்டனையா நீயும் பட்டினி கிட. எப்போப்பாரு என்னை அவமானம் பண்றதையே வேலையா வச்சிட்டிருக்க” என்றான் மனதின் மகிழ்வை மறைத்து.
“என்னடா அவமானம் செய்துட்டேன்?” என சண்டைக்கு நிற்க, “நமக்கு கல்யாணம் ஆன அன்னைக்கு என்னை தப்பா நினைச்சதான? அது போதாதா?” என்றான் முறைப்போடு.
“சாரிடா, அன்னைக்கு நான் இருந்த நிலைமை வேற” என கெஞ்சியவள், “சரி… இப்போ என்ன? நான் சாப்பிடாம இருந்தா சந்தோசப்படுவ. அவ்வளோதான? ஒரு நேரம் மட்டுமில்ல. இன்னைக்கு ஃபுல்லா பட்னியாவே இருக்கேன்” என்று அவளின் அறைக்கு சென்றாள்.
“அப்பாக்கு டிபன் வைக்கில?” என்று சத்யன் சிரிப்போடு வர, மாதவனுக்கென்றதும் முகத்தை துடைத்துக்கொண்டு வெளியே வந்தாள்.
பேத்தியை பள்ளியில் விட்டு மாதவனும் வந்திருக்க, “சாப்பாடு காத்திட்டிருக்கலாமா சத்யா?” என மகனை முறைத்தார்.
“போன் வந்திடுச்சுப்பா” என்றவன் சாப்பிட அமர்ந்து தானே போட்டுக்கொண்டான் சாம்பாரை.
சுகந்தி மாதவனுக்கு பரிமாற, “நீ இன்னும் சாப்பிடலயா சுகந்திம்மா? சத்யன் எப்படின்னாலும் சாப்பிட்டுக்குவான். உனக்கு ஆறிடுச்சுனா பிடிக்காதுதானே?” என அதட்டி, பக்கத்தில் இருந்த தட்டை சுகந்திக்கு வைத்து, “உக்காரு” என்றார்.
மாதவன் பேச்சை மறுக்க முடியாமலும், சத்யன் உண்பதாலும், சுகந்தியும் உண்ண அமர்ந்தாள். தன்னைப் பற்றி யோசிக்க ஆரம்பித்திருக்கும் சுகந்தியை அவ்வப்போது பார்த்தபடி உண்டு முடித்தவன், “அப்பா அடுத்தவாரம் குவைத் கிளம்பனும். லீவ் முடியுது” என்றான்.
மாதவன் “இங்கையே வேலைக்கு ஏற்பாடு செய்யக்கூடாதாடா?” என்றார் ஆற்றாமையாக.
“பார்க்கலாம்ப்பா. ஆனா உடனே முடியாது” என்றான்.
இவனின் பிரிவு இத்தனை பாதிக்குமா என்றறியாத சுகந்திக்கு இட்லி தொண்டைக்குள் செல்ல மறுக்க, கண்களும் கலங்கவே எழுந்து அறைக்குள் சென்றிருந்தாள்.
சுகந்தியின் இந்த பரிணாம்மும் மாதவனுக்கு சந்தோசத்தைதான் கொடுத்தது. “போய் மருமகளை சமாதானம் செய்டா” என்று மகனை அதட்ட, சத்யன் உள்ளே சென்றான்.
“என்னாச்சு லூசு? தமாசுக்குத்தானே சாப்பிட வேணாம்னு சொன்னேன்? அதுக்கே இப்படி அழுவியா? நான் சாப்பிட உக்கார்ந்தும் கூட உன்னை டீஸ் பண்ணத்தான் சொன்னேனு புரியலையா? சின்ன வயசுல போலவே இப்போவும் அப்பாகிட்ட திட்டு வாங்க வச்சிட்ட, எரும” என திட்டினான் செல்லமாக.
கண்களை துடைத்தவள், “திரும்ப எப்போ வருவ?” என்றாள்.
“பார்டா” என அதிசயித்தாலும், “முன்ன மாதிரி ஜனனிம்மாவை விட்டுட்டு இருக்கிறது ரொம்ப கஷ்டம் போல. சான்ஸ் கிடைக்கும்போதெல்லாம் வருவேன்” என்றான்.
சுகந்தி முகம் தெளியாமல் இருக்க, “என்ன?” என்றான்.
“அங்க போய் உன்னை நீ நல்லா கவனிச்சுக்கனும். இங்க போல சாப்பிடாம இருக்கக்கூடாது”
“உத்தரவு” என்று சிரிப்போடு சொன்னவன், வெளியே சென்று இட்லியை எடுத்து வந்து “இன்னும் ஒரு வாரம் இங்கதான் இருப்பேன், தினமும் அட்வைஸ் பண்ணு. இப்போ சாப்பிடு” என்று தட்டை நீட்ட, “இல்ல பசிக்கல” என்று இவள் மறுக்க, இட்லியை கையிலெடுத்து வாயருகே நீட்டினான்.
சுகந்தி அதிர்ந்து விழிக்க, “நான் வருடிவிட்டதும் தூங்குற மாதிரி, நான் ஊட்டிவிட்டா பசிக்கும். ஆ காட்டு” என்று அத்தனை கனிவாய் சொல்ல தானாய் திறந்தது சுகந்தியின் வாய்.
*** *** *** *** *** ***
ஒரு வாரம் முடிந்திருக்க, இரண்டு நாள் முன்பு சத்யன் குவைத் கிளம்பியிருந்தான். தனது வேலைகளை முடித்து வீட்டிற்கு வந்து கொண்டிருந்த அன்பரசுக்கு மனம் எல்லையில்லா மகிழ்ச்சியில் இருந்தது.
கிளம்பும்போது சுகந்தி முகம் வாடியிருந்ததையும், என்ன சமாதானம் செய்தும் சமாதானம் ஆக மறுத்ததையும், இரண்டு மாசம் கழிச்சு கண்டிப்பாக வரேன் என்று சொன்ன பின்னேதான் சற்று சமாதானம் ஆனாள் என்றதையும் சத்யன் அன்பரசிடம் சொல்ல, “அண்ணிம்மாக்கு அண்ணன் மேல லவ் வந்துருச்சுடோய்” என்று ஆர்பரித்தான் அன்பரசு.
“ஆமா வந்துருச்சு” என்று ஒப்புக்கொண்டவன், “ஆனா உண்மையை சொன்னா எருமை உதைக்கும்” என்று பெருமகிழ்வோடு சத்யன் சொன்னதை நினைத்தவாறு பயணித்தான்.
பிறகு முல்லை நியாபகம் வர, அத்தனை சொல்லியும் போனே பண்ணாம சாதிச்சிட்டாளே… சுகந்தி, ஜனனிம்மாகிட்ட மட்டும் தினமும் பேசுறது… நேர்ல இருக்குடி உனக்கு என நினைத்துகொண்டான்.
சுகந்தியிடமிருந்து அழைப்பு வர, ஏற்றவன், “அண்ணிம்மா” என்க, “ஹப்பா… கால் அட்டன் பண்ணிட்டியா?” என மகிழ்ந்து “அன்பு… டிவில செம்ம அழகா இருக்கடா. உன்னோட சேர்ந்து பார்த்திருந்தா நல்லாயிருந்திருக்கும்” என சந்தோஷித்து, “சொன்ன மாதிரியே நாளைக்கு வந்திடுவதானே?” என்றாள் ஆர்வமாக.
“ம் பாப்பா எங்க?”
“இந்த நேரத்துல எங்க இருப்பா? ஸ்கூல்லதான்”
“ஓஹ் ஆமாம்ல?” என்றவன், “அப்புறம்… உன் புது தங்கை என்ன சொன்னா?” என்றான்.
“என்னவோ சொன்னா… நீ போன் பண்ணலயில்ல? அப்புறம் எதுக்கு விசாரிக்கிற?” என்றாள் கோபமாக.
“முல்லை வெக்கப்பட்டுகிட்டு கூட பண்ணாம இருந்திருப்பா. நீ பண்ணினா என்னவாம்?”
“போன்ல பேசக்கூட என்ன வெக்கமோ” என முணுமுணுத்து “எனக்கெல்லாம் வெக்கம் வராதா?” என்றான் சிரிப்போடு.
“ப்ச் போடா” என சலித்தவள், “இங்க வந்தாலும் இப்படியே வெக்கப்பட்டுகிட்டே இருக்கனும். முல்லைகிட்ட பேச நினைச்ச அவ்வளோதான் பார்த்துக்க” என்று எச்சரிக்க, அன்பு பலமாய் சிரிக்க, “மாமா கால் பண்றாங்க அன்பு. மாமாகிட்ட பேசிட்டு கால் பண்றேன்” என்று இணைப்பை துண்டித்தாள்.
பத்து நிமிடம் கழித்து அழைப்பு வரவே, சுகந்தியிடமிருந்து அழைப்பாக இருக்கும் என நினைத்தவனுக்கு, முல்லை அழைக்கவும், என்ன ஆச்சர்யம்? குண்டுமல்லி போன்லாம் பண்ணுது… என்” வியந்தவாறு முல்லை அழைப்பை ஏற்றான்.
எதோ வேகத்தில் அழைத்துவிட்டாள். என்ன பேசுவதென்று தெரியவில்லை முல்லைக்கு. அழுகை வெளிக்கிளம்ப, “க்கூம்” என்று தன்னை சரி செய்ய முயல, “முல்லை… எதாவது பிரச்சனையா? அழற மாதிரி இருக்கு?” எனப் பதறினான் அன்பரசு.
“இல்ல” என்றவள் குரல் பலவீனமாய் ஒலிக்க, “ப்ச் இரு அப்பாவை அனுப்பி விடறேன்” என்றான்.
“இல்ல வேணாம். இங்க பிரச்சனை ஏதும் இல்ல” என்று இணைப்பை துண்டித்தாள்.
‘எதுக்கு போன் செய்திருப்பா? ஆசையா பேசலைனாலும் சொல்ல வந்த விசயத்தையாவது சொல்லியிருக்கலாமில்ல?’ என நினைத்தவனுக்கு இறங்கும் இடம் வரவே, நேர்ல போய் பேசிக்கலாம் என்று தனது உடமைகளை எடுத்து இறங்க தயாரானான்.
அடுத்த அரைமணி நேரத்தில் அன்பரசு வீட்டிற்கு வர, “இல்ல நான்வெஜ் சமைக்கல, நீ என்ன சாப்பிட்ட?” என்றாள் சுகந்தி.
“வத்தல் குழம்பும் தயிரும் சாப்பிட்டேன்க்கா” என்றவள், “அம்மா கூப்பிடுறாங்க, அப்புறம் பேசுறேன்க்கா” என்று இணைப்பை துண்டித்திருந்தாள்.
“வச்சிட்டாளா?” என்று யோசனையோடு முணுமுணுக்க, “யார்கிட்ட அண்ணிம்மா பேசிட்டிருந்த?” என்றான்.
அன்பரசின் குரலில் திடுக்கிட்டு திரும்பியவள், ஆனந்த அதிர்ச்சியோடு “பேயே… வந்துட்டிருக்கேனு சொல்றதுக்கென்னடா?” என்றவளுக்கு சந்தோசத்தில் கண்கள் கலங்கியது.
தான் சென்ற இரண்டு நாள்களில் சரவணனும் கிளம்பியிருந்தான். அப்பா சாப்பிடும் நேரம் தவிர்த்து எப்பொழுதும் டைப் இன்ஸ்டியூட்டில்தான் இருப்பார் என சுகந்தி அறிந்ததுதான்.
திருமணமாகி ஒருமாதம் ஆகிறது. சத்யன் இருக்கும் வரை தெரியாத தனிமை தற்போது தெரிகிறது என அன்பரசுக்கு சுகந்தி நிலை புரிய, மனதினுள் மகிழ்ந்தவன் “என்ன பண்ண அண்ணிம்மா? எல்லாருக்கும் பொழப்பு அப்படியிருக்கு” என்றான் இவனும் பாவமாக.
“நீயாவது வந்தியே” என மகிழ்ந்து, “முன்னவே சொல்லியிருந்தா கறி செய்திருப்பேன்ல? இப்போ சாம்பார், பட்டானி கிழங்கு மசாலாதான் இருக்கு. அதுவும் கொஞ்சம்தான் இருக்கு. நீபோய் குளிச்சிட்டு வா. அதுக்குள்ள சாதம் வச்சி முட்டை குழம்பாவது வைக்கிறேன்” என்றாள்.
“யார்கிட்ட பேசிட்டிருந்த?” என்றான் மீண்டும்.
“முல்லைகிட்டதான் அன்பு, ஏனோ டல்லா பேசினா” என்க, “சரி நீ போய் சமை, நான் வரேன்” என்று அறைக்குள் போனான்.
முகம் கழுவி இலகுவான உடைக்கு மாறியதும் முல்லைக்கு அழைத்தான். அழைப்பு முடியும் தருவாயில் முல்லை அழைப்பை ஏற்க, “என்ன பிரச்சனை?” என்றான்.