அன்பரசு சென்று ஒரு மாதம் முடிந்திருக்க, வருவதற்கு மேலும் பத்து நாள்கள் ஆகும் என்றிருந்தான். படப்பிடிப்பெல்லாம் முடிந்திருந்தது.
டப்பிங் வேலை இரண்டு நாள்கள் இருக்க, அதற்கடுத்து படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொள்வதற்காகவும், மேலும் இரண்டு நாள் கழித்து பிரபல சேனலின் நிகழ்ச்சி ஒன்றில் தற்போது நடித்து முடித்த படத்திற்கான கலந்துரையாடல் இருக்கவே வீட்டிற்கு செல்ல முடியாத சூழல் வந்தது.
சிறு சிறு வேடங்களில் நடித்தபோது இப்படி வாய்ப்பு வராதா என்று ஏங்கியிருக்கிறான் அன்பரசு. ஆனால் தற்போது நியாபகமெல்லாம் முல்லைமேல் இருக்க, குவைத்திலிருந்து சென்னை வந்தபின்னே நாள்களை வெகு சிரமப்பட்டு கடத்தி வந்தான்.
தான் சொல்லி வந்தும் முல்லை தனக்கு அழைத்து பேசவில்லை என்ற கோபத்தில் இருந்தான் அன்பரசு. அன்று இரயில் பெங்களூருரை அடையும் முன்னே, முல்லை வீட்டில் நடந்ததை சத்யன் விளக்கியிருந்தான்.
முல்லை சுகந்தியிடம் இயல்பாக பேசியதாலும், தந்தை, சத்யனை மாமா என்றழைத்ததாலும் அவள்மேல் உள்ள கோபம் பாதிக்குமேல் போயிருந்தது. ஆனாலும் தனக்கு டென்ஷன் வேண்டாம் என்று தந்தைக்கு அழைக்கவேண்டாம் என்றதில் சிறு கோபம்தான். மேலே கை வைத்திருந்தால் என்னாவது? பெரிய சூரப்புலி… இவளே எல்லாம் பார்த்துப்பாளா? என்ற ஆற்றாமையில் இருந்தான் அன்பரசு.
அடுத்து வந்த நாள்களில் தினமும் முல்லைக்கு அழைத்து பேசுவதையும், அதை சத்யன், மாதவனிடம் பகிர்வதையும் வழக்கமாக்கியிருந்தாள் சுகந்தி.
அன்பரசுக்கு தினமும் தகவல் சென்றுகொண்டிருந்தது. ஆனால் அனைத்தும் வாட்ஸாப்பில் வாய்ஸ் மெஸேஜில்தான். சுகந்தி அழைப்பு விடுக்கும் நேரம் அன்பரசு அழைப்பை ஏற்பதில்லை என்பதால் தினமும் இரவு படுக்கும்போது அன்பரசுக்கு குறுஞ்செய்தி அனுப்பிவிட்டுத்தான் உறங்குவாள்.
அடுத்த நாள் காலையில் சுகந்தி அனுப்பிய செய்திக்கான பதில் அனுப்பியிருப்பான் அன்பரசு. பதினைந்து நாள்கள் கழித்து ஜனனியோடு வீடியோ காலில் பேசினான்.
ஜனனியின் பேச்சிலிருந்து முல்லை மகளுக்கு நன்கு பரிச்சயமாகிவிட்டாள் என்பதும், சுகந்தியும் சத்யனும் இயல்பாக இருப்பதும் புரிய அரைமணி நேரம் வரை மகளோடு இதமாக பேசிக்கொண்டிருந்தான்.
பிறகு மாதவன் சத்யனிடம் பேசி, சுகந்தியிடம் கொடுக்க சொன்னான். சுகந்தி திரையில் வர, பல வருடங்கள் கழித்து சுகந்தியின் மலர்ந்த முகத்தை பார்க்கிறான்.
“என்னடா அப்படி பார்க்குற?” என்று சுகந்தி கேட்க, “ஹம்… உனக்கென்ன அண்ணிம்மா? புது தங்கை, புது ஃப்ரண்டு” என்று ராமிழுத்தான் மகிழ்வோடு.
“ம்… ஃப்ரண்டுதான். எனிமியா இருந்திருந்தா இந்நேரம் உன் முகத்துல எள்ளும் கொள்ளும் வெடிக்குமே” என்றான்.
சத்யன் சிரிக்க, பிறகுதான் சத்யனை சொல்கிறான் எனப்புரிய, “சொல்ற பேச்சை ஒன்னு கூட கேட்க மாட்டேங்கிறான். அவன்லாம் எனக்கு ஃப்ரண்டா?” என முறைத்தாள்.
“என்ன கேட்க மாட்டேங்கிறான்?” என கோபம் போல் கேட்க,
“நைட்டெல்லாம் லேப்டாப் எடுத்து வச்சிக்கிறது. காலைல டிபன் பனெண்டு மணிக்கு சாப்பிடறது. அதுவும் இரண்டு இல்ல மூனு இட்லி மட்டும். மதிய சாப்பாடு நாலு மணி, நைட் பதினொரு மணிக்கு கொஞ்சம் போல கொறிக்கிறது. இல்ல பால் மட்டும் போதும்னு சொல்றது.
முக்கியமா நான்வெஜ் எடுத்துக்கமாட்டேங்கிறான்டா, சின்ன வயசுல சாப்பிட்டுதான இருந்தான்? இப்போ என்னவோ ரொம்ப பண்ணிக்கிறான். இரண்டு பீஸ்க்கு மேல சாப்பிட மாட்டேங்கிறான். இவன் முன்னாடி சாப்பிட எனக்கு சங்கடமா இருக்கு” என்றாள் கோபமாக.
மகன் மீது அக்கறையாக புகார் வாசிக்கும் மருமகளை மகிழ்வோடு பார்த்த மாதவன், அன்பரசிடம்தான் மனம் விட்டு பேசுவாள் என்று “சுகந்திம்மா, இன்னைக்கு பேத்தியை நானே ஸ்கூல்ல விட்டுடறேன்” என்றார்.
“அச்சோ இவன்கிட்ட பேசிகிட்டே ரெடியாகாம விட்டுட்டேன், இன்னும் லன்ஜ் பேக் பண்ணல” என புலம்பியவள், “நீ வைடா, நான் அப்புறம் பேசறேன்” என்றாள் அன்பரசிடம்.
“நீ பேசு சுகந்திம்மா, நான் போய்ட்டு வரேன்” என்று மாதவன் மீண்டும் சொல்ல, “இல்ல மாமா, இன்னும் லன்ச் பேக் பண்ணல” என சுகந்தி மறுக்க, “அதான் அப்பா சொல்றாரில்ல? பேசு. அப்புறம் அன்புக்கு டைம் இருக்காது, லன்ச் நான் போய் கொடுத்துட்டு வந்துக்கிறேன்” என்றான் சத்யன்.
“இன்னைக்கு பாப்பாக்கு ஸ்கூல் இருக்கா? சார்ட்டர்டே லீவ்னு நினைச்சேன்” என்றான் அன்பரசு.
மாதவன் பேத்தியோடு கிளம்ப, இருவரும் சென்றுவிட்டதை உறுதி செய்தவள், “எதோ லவ் பண்றேன்ன? பண்ணுனியாடா?” என்றாள் ஆர்வமாக.
சிரித்தவன், “ம்க்கூம்… போன் செய்ய சொல்லிட்டு வந்தும் ஒரு முறைகூட பண்ண மாட்டேங்குறா” என்றான் சலிப்பாக.
“சரி டைம் இருக்கும்போதே முல்லைகிட்ட பேசு” என்று இணைப்பை துண்டிக்கப்போக, “அண்ணிம்மா” என்றான்.
சுகந்தி முறைக்க, “எதுக்கு அண்ணிம்மா முறைக்கிற? யாரையாவது சத்யன் கல்யாணம் செய்துக்கமாட்டானா? அவன் வாழ்க்கை நல்ல படியா அமையாதானு எத்தனை வருஷம் எல்லாரும் ஏங்கியிருக்கோம்?
யாரையாவதுனு நினைச்சது போய் எனக்கு ரொம்ப பிடிச்ச சுகந்திம்மாவையே சத்யன் கல்யாணம் செய்துருக்கும்போது இப்படி கூப்பிடாம எப்படி கூப்பிடறதாம்?
“ஹம்… நீ கூடத்தான் கல்யாணம் வேணாம்னு சொன்ன? ஏன் அப்படி முடிவெடுத்தனு இதுவரைக்கும் எனக்கு தெரியாது. அதுபோல சத்யன் நான்வெஜ் ஏன் சாப்பிடாம இருக்கானு நமக்கென்ன தெரியும்?
அவனோட பாஸ்ட்டுக்கும் இதுக்கும் ஏதும் சம்மதம் இருக்குமோ என்னவோ? ஏழு வருசமா அவன் என்ன சாப்பிடுறானு யாருக்கும் தெரியாதே… சின்ன வயசுல இருந்த மாதிரி இப்போவும் இருக்க முடியாதில்ல?
எதனால நான்வெஜ் சாப்பிடமாட்டேங்குறானு கண்டுபிடிச்சு அதை சரி செய்ய முடியுமா பாரு. அவன் மனசை கண்டுபிடிக்க முடியலைனா, பழைய வாழ்க்கையை மறக்க அவனுக்கு கொஞ்சம் டைம் கொடு. அதை விட்டுட்டு உனக்கும் சாப்பிட சங்கடமா இருக்குனு சொல்வியா?”
சுகந்தி அதிர்ந்து விழிக்க, ‘சுத்தி வளைச்சு குழப்பிவிட்டாச்சு’ என மனதிற்குள் சிரித்தவன், “சரி சரி லவ் பண்ண டைமாகுது. நான் வைக்கிறேன்” என்று இணைப்பை துண்டித்தான் சிரிப்போடு.
வீடியோ காலில் பேசியதால் அறையிலிருந்து இவர்கள் பேசியதை கேட்டுக்கொண்டுதான் இருந்தான் சத்யன். “எரும… உன் ஜால்ராகிட்டதான பேசிட்டிருந்த? அப்புறம் ஏன் பேயடிச்ச மாதிரி உக்கார்ந்திருக்க?” என உள்ளடக்கிய சிரிப்போடு அதட்டி, “டீ வைக்கிறேன், உனக்கு வேணுமா?” என்றபடி கிச்சனுக்குள் சென்றான் சத்யன்.
“உன்னை வீட்டு வேலை செய்யாதேனு எத்தனை முறைடா சொல்றது?” என முறைத்தவாறு சுகந்தியும் கிச்சனுக்கு வர, “ஏழு வருசமா நான்தான் போட்டு குடிச்சிப்பேன். இதுல என்னயிருக்கு?” என்றபடி அடுப்பில் பாத்திரத்தை வைத்தான்.
“இதையே யோசிச்சிட்டிருந்தா எல்லாம் சரியாகிடுமா? இப்படி ஆகும்னு நினைச்சு நீ எதையும் செய்யலையே, அவளுக்கு விதி அவ்வளோதான் போல” என தேற்ற முயல, “ம்… புரியுது” என்றான் இயல்பாக.
நொடிப்பொழுதில் முக பாவனையை மாற்றிக்கொண்டவனை பார்க்க பாவமாய் இருந்தது சுகந்திக்கு. ஏழு வருடமாக இப்படித்தான் வருந்துவதும், தன்னைத் தானே தேற்றிக்கொள்வதுமாக இருக்கிறான் எனப்புரிய பேச்சற்று நின்றிருந்தாள் சுகந்தி.
“சரி இரண்டு இட்லி வை. உனக்காக ட்ரை பண்றேன்” என்று சாப்பிட அமர்ந்தான்.
“ஹான்… இருக்கு” என்று இட்லியை எடுத்து வந்து வைத்தாள்.
இருபது நாள்களாய் சுகந்தியை ஊன்றிப் பார்த்துக் கொண்டிருக்கிறான் சத்யன். நடந்து முடிந்த ஒரு வருட திருமண வாழ்க்கையில் ஒருமுறை கூட தாம்பத்ய சுகம் என்னவென்று அறிந்திருப்பாள் என்று தோன்றவில்லை.
அவனோடு இவளறிந்ததெல்லாம் காதலில்லாத அருவருக்கத்தக்க காமம். பழைய வாழ்வை நினைத்தாலே ஒவ்வாமையாகும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறாள் எனப்புரிந்திருந்தான்.
திருமணத்தின் முதல் நாளன்று ஆரம்பித்த வருடல் இன்றுவரை தினமும் தொடர்கிறது. முதல் இருந்த அலைபுறுதல் தற்போதெல்லாம் சுகந்தியிடம் இருப்பதில்லை. இப்போ உன்னோட தனியறையில தூங்க சங்கடம் இல்லை, இது வேணாம். உன் வேலையை செய். என்னை தூங்க வச்சிட்டு வேலையை முடிக்க லேட்நைட் பண்ணிடுற என்று பல முறை சொல்லியிருக்கிறாள்.
ஆனால் சத்யன் விடுவதாய் இல்லை. ’உன்னை தூங்க வைக்கிறது எனக்கு பிடிச்சிருக்கு, கண்ணை மூடு என்பான்’ அன்போடு.
பழைய வாழ்க்கை கொடுத்த காயங்களை எல்லாம் இவனின் வருடல் போக்கியிருந்தது. உடலால் அப்போது பட்ட கஷ்டமெல்லாம் எதோ பூர்வ ஜென்ம நினைவாய் மங்கியிருக்க, சுகந்திக்கு கண்கள் கலங்கியது.
’என்னடி?’ என சத்யன் பதறி கேட்க, ‘என் அம்மா கூட என்னை சரியா புரிஞ்சிக்கிலடா, நீ எப்படி?’ என்றாள் வியப்பாக.
“இதெல்லாம் ஒரு விசயமா?” என தேற்றியவன், “அத்தைக்கும் உன்னைப் புரியாம இல்ல சுகந்தி. எல்லா ஆம்பிளைங்களும் ஒன்னுபோல இருக்கமாட்டாங்க. எப்படியாவது உன் வாழ்க்கையை சரி பண்ணிடலாம்னுதான் போராடியிருக்காங்க. இது எல்லா அம்மாங்களுக்கும் இருக்கும் ஆசைதானே? அவங்க பக்கமிருந்து பார்த்தா அவங்க சரிதான்” என்றான்.
அன்றைய நீண்ட பேச்சிற்கு பிறகு தற்போது ஒருவாரமாக இன்னும் இயல்பாய் பேச ஆரம்பித்தாள் சுகந்தி. இரவில் அத்தை மகளுக்கு வருடிக் கொடுத்தபடி லேப்டாப்பை பார்த்துக்கொண்டிருந்தாலும், அவனின் வேலைகளைப் பற்றி கேட்பது, குவைத்தில் சுற்றி பார்க்கும்படி என்ன இருக்கு? என்பது போன்ற ஓரிரு கேள்விகளை இயல்பாக கேட்டவாறு உறங்கிப்போவாள்.
இத்தனை நாள்களில் தவறான பார்வையோ, தொடுகையோ மனைவி என்ற உரிமையோ சத்யனிடம் உணர்ந்ததேயில்லை. அதனாலோ என்னவோ சத்யனோடு அறையை பகிர்வது தற்போது சுகந்திக்கு பழக்கமானதோடு பிடித்தும் இருந்தது.
தனக்காக எத்தனை பார்க்கிறான். நான் அவனின் வேதனைகளில் பங்கெடுக்கவில்லையே என்று தோன்ற, சத்யனையே பார்த்திருந்தாள் சுகந்தி.