சத்யன் சரவணனிற்கு அழைத்து அன்பரசு முல்லையின் கல்யாண தேதியை சொல்லி, “இன்னும் அன்புகிட்ட கூட தேதி சொல்லல, நீங்க அங்கயிருந்து வரனுமேனு உங்களுக்குத்தான் முதல்ல சொல்றேன், இன்னும் இருபத்தஞ்சு நாள் இருக்கு. பத்து நாள் முன்னாடியே வந்து சேருங்க” என்றிருந்தார் மாதவன்.
பிறகு அன்பரசுக்கு சொல்ல, தந்தை இப்படி செய்வார் என எதிர்பார்த்ததுதான் ஆகையால் “சரிப்பா, ஆனா நான் சொல்றதுக்கு முன்ன மண்டபம் புக் பண்ணிடாதிங்க” என்றிருந்தான்.
இன்னும் இருபது நாள் கழித்து பர்சனல் வேலையாக செல்ல வேண்டியிருக்கு என்று டைரக்டரிடம் அனுமதி கேட்க, அதிருப்தியாய் பார்த்தார்.
எப்படியாகினும் திருமணமானது பின்னாளில் தெரிய வந்தால், தான் அழைப்பு விடுக்கவில்லை என்று வருத்தமாகிடும் என, ரங்கசாமியின் நிலை விளக்கி, “என் மாமனாருக்காக அப்பா இந்த மாசமே கல்யாணம் வச்சாகனும்னு சொல்லிட்டார் சார். இரண்டு நாள் கேப் இருந்தா கூட போதும். தாலிய கட்டிட்டு ஓடி வந்துடறேன்” என்று உண்மையையே சொன்னான் தன்மையாக.
“தாலிய மட்டும் கட்டிட்டு வந்திடுவியா மேன்?” என்று இயக்குனர் சிரிக்க, நிம்மதியாகி “வேற வழியில்லைங்களே சார்” என்று தானும் சிரித்தான் வெக்கத்தோடு.
“யாரையும் இன்வைட் பண்ணலயா”
“பண்ணனும் சார். அப்பா இப்போதான் டேட் ஃபிக்ஸ் பண்ணியிருக்கார். இன்விடேஷன் அடிக்க இன்னும் ஒருவாரமாவது ஆகும். அடுத்தவாரம் ஃபுல்லா நான் பிஸி, எந்த ஹோட்டல்ல தங்கியிருப்பேனு எனக்கே தெரியாது. எந்த அட்ரஸ்க்கு இன்விடேஷன் அனுப்பி வைக்க சொல்றது? ஊருக்கு போய்ட்டேன்னா கல்யாணம் முடியாம என்னை திரும்ப அனுப்பமாட்டாங்க” என்றான் யோசனையாக.
இயக்குனர் சொல்லவே, நடித்துக்கொண்டிருக்கும் படத்தின் ஆர்ட் டைரக்டரிடமே இன்விடேஷன் மாடல் கேட்டு அதிலிருந்து இரண்டு டிஷைன்களை தேர்வு செய்து முல்லைக்கு அனுப்பி வைத்து அவளிற்கு பிடித்ததை தேர்ந்தெடுக்க சொன்னான்.
“நானா?” என முல்லை தயங்க, “எனக்கு ரொம்ப நேரம் பேச நேரமில்லை முல்லை, எதாவது செலக்ட் செய்து அனுப்பி வை” என்று இணைப்பை துண்டித்து, தந்தைக்கு அழைத்தான்.
மாதவனிடம் விசயத்தை சொல்ல, “பத்திரிக்கையை நம்ம கோவில்ல வச்சு பூஜை செய்த பின்னதான் கொடுக்கனும் அன்பு” என்றார் மாதவன்.
“அதுக்கெல்லாம் நேரமில்லப்பா, நான் இங்க வச்சு கும்பிட்டு கொடுத்துக்கிறேன்” என்றவன், எந்த மண்டபத்தை முன் பதிவு செய்ய வேண்டும் என்பதையும் சொல்லி, “நான் ஆதிக்கு கால் பண்ணி சொல்லிடறேன், இரண்டு பேரும் இன்னைக்கே போங்க, ஆதி பேசி முடிச்சிடுவான். சப்போஸ் ஆல்ரெடி புக் ஆகியிருந்தா எனக்கு கால் பண்ணுங்க” என்று இணைப்பை துண்டித்தான்.
“அந்த மண்டபம் ரொம்ப தூரம் அன்பு, எல்லாரும் டையர்ட் ஆகிடுவாங்க” என்று மாதவன் மறுக்க, “அந்த மண்டபத்துலதான்ப்பா மேல நிறைய கெஸ்ட் ரூம் இருக்கு. சப்போஸ் என் ஃபீல்ட்ல இருக்கவங்க வந்தா தங்க வசதியா இருக்கும். இல்லைனா அதுக்கு தனியா மெனக்கெடனும்” என்றான்.
மகன் சொல்வதும் சரியெனத் தோன்ற, மாதவன் அன்பரசு சொன்ன மண்டபத்தை ரங்கசாமியிடம் சொன்னார். மகிழ்வோடு ஒப்புக்கொண்டு, “உங்க பசங்க மூனு பேரும் வெளில இருக்காங்க, நீங்க அலைய வேணாம், கேட்ரிங், மேக்கப், ஃபோட்டோ, அன்பரசுக்கு உடை, என அனைத்தும் தான் பார்த்துக்கொள்வதாக சொன்னார் ரங்கசாமி.
அந்த மண்டபத்தின் முன் பணமே சில லட்சங்களில் இருக்கும் ஆதலால் “அதெப்படிங்க நீங்களே எல்லாம் பார்த்துக்க முடியும்?” என மாதவன் மறுக்க, “மனசுக்கு பிடிச்ச மாப்பிள்ளைக்கும் என் ஒரே பொண்ணுக்கும் செய்யாம யாருக்கு செய்ய போறேன்? இதெல்லாம் செய்யத்தானுங்க இந்த வயசுலயும் இன்னும் கொஞ்சம் ஆயுளை நீட்டிக்க கடவுள்கிட்ட வேண்டிட்டிருக்கேன்” என்றார் நெகிழ்வோடு.
அப்பொழுதும் மாதவன் “பாதி பணமாவது நாங்க கொடுக்குறோம்” என்க, “பணம் யார்னாலும் சம்பாதிக்கலாம்ங்க. சாகப்போற வயசுல என்னை நிம்மதியா ஃபீல் பண்ண வைக்கிறிங்க பாருங்க, இதை யாரால கொடுக்க முடியும்? என் காலத்துக்கு பின்ன என் பொண்ணுக்கு எல்லாமும் நீங்கதான்.
இந்த பொல்லாத உலகத்துல என்னை பொருத்தவரை பெரிய விசயம் எது தெரியுங்களா? நிராதரவா இருக்க மனுஷனுக்கு நீ அநாதையில்ல. நாங்க இருக்கோம் உனக்குனு வெறும் வார்த்தையா இல்லாம செயல்ல காட்டுறது.
முல்லையை பொண்ணு கேட்டு வந்தவங்க எல்லாரும், உங்க காலத்துக்கு பின்ன உங்க பொண்ணுக்கு எல்லாமும் நாங்கதான பார்க்கனும்னு சொல்லுவாங்க. முக்கியமா என் பொண்ணை என் பொண்ணா யாருமே பார்த்ததில்ல.
வளர்ப்பு மகள்தானேனு இளப்பமா சொல்லும்போது நெஞ்சுல ஈட்டி பாயுற மாதிரி இருக்கும். நீங்க மட்டும்தான் என் பொண்ணை என் பொண்ணா பார்க்குறிங்க.
உங்களை பொருத்தவரை என் மகளை உங்க மருமகளாக்கிக்கிட்டது பெரிய விசயமில்ல. ஆனா எனக்கு அன்பரசை மருமகனாக்கினது வாழ்நாள் சாகசம்.
என் பொண்ணை சேர்க்க வேண்டி இடத்துல சேர்த்துட்டேன்ற பரிபூரண நிம்மதியிருக்கே… அதுக்கு இந்த பணமெல்லாம் ஈடாகுங்களா?” என்று இன்னும் என்ன சொல்ல வந்தாரோ…
ரங்கசாமியின் கண்கள் நெகிழ்வில் கலங்கிக்கொண்டிருக்க, அதீத சந்தோசத்தால் தன் மனைவிக்கு ஏற்பட்டது போல் ஆகிடக்கூடாதெனப் பதறி “சரிங்க சம்மந்தி, உங்க விருப்பம் போல செய்யுங்க” என ஆசுவாசப் படுத்தினார் மாதவன்.
மகிழ்ந்த ரங்கசாமி, “கல்யாணத்துல நான்வெஜ் போடுற பழக்கம்னா சொல்லுங்க, அதுக்கும் சேர்த்து சொல்லிடறேன்” என்க, “இல்லைங்க, கல்யாணத்துல போட மாட்டோம், அடுத்தநாள் விருந்துலதான் போடுவோம். அதைப்பத்தி நீங்க கவலைப்படாதிங்க. நான் பார்த்துக்கிறேன்” என்று கிளம்பினார் மாதவன்.
இங்கே சத்யனோ… அப்போ நாம சீக்கிரம் போயாகனும்ன்ற அவசியம் இல்ல. ‘எரும நல்லா காயட்டும். அப்போதான் அவளே அவளை உணர்வா, கல்யாணத்துக்கு இரண்டு மூனு நாள் முன்ன போனா போதும்’ என நினைத்துக்கொண்டான்.
நாள்கள் வேகமாய் நகர, இன்னும் நான்கு நாள்களில் திருமணம் என்னும் நிலையில்தான் வீட்டிற்கு வந்தான் சரவணன். அதற்கடுத்த நாள் அதிகாலை அன்பரசு வந்தான்.
சரவணன் “நம்ம வீட்டு மருமகளான பின்ன அண்ணிம்மா ரொம்ப மாறிட்டாங்க அன்பு. என்கிட்ட கூட சரியா பேசல, நேத்தெல்லாம் உர்ருனு முகத்தை வச்சிக்கிட்டு சாப்பிடுடானும் போது, இருந்த பசி பறந்தே போய்டுச்சு” என்றான் பாவம்போல்.
சரவணனை முறைத்த சுகந்தியின் முகம் சத்யன் வராத கோபத்தை அப்பட்டமாக வெளிப்படுத்த, “அண்ணிம்மாக்கு என்ன ஆச்சு? உடம்பேது சரியில்லையா?” என்று சுகந்தியின் நெற்றி, கன்னம் தொட்டான் அன்பரசு.
“நல்லாத்தான்டா இருக்கேன்” என கையை தட்டிவிட்டு, “இதான் கல்யாணத்துக்கு வர லட்சணமா?” என முறைத்தாள்.
“கல்யாணத்துக்கு இன்னும் முழுசா இரண்டு நாள் இருக்கே. சீக்கிரம் வந்துட்டேன்தான? எதோ வேற கோபத்தை என்கிட்ட காட்டுற மாதிரி இருக்கு” என்றான் சிரிப்போடு.
“போய் குளிடா” என அதட்டி மகளை எழுப்பப்போனாள் சுகந்தி.
“வரேன்ப்பா” என வெளியே வர, ரங்கசாமியும் ஜானகியும் வந்திருந்தனர். “வாங்க மாமா, வாங்க அத்தை” என்றான் இன்முகமாக.
மருமகனின் அத்தை மாமா என்ற அழைப்பில் நெகிழ்ந்த ரங்கசாமி “இன்னைக்கு மகளுக்கு முதல் நலங்கு வைக்கிறோம். அதான் சொல்லிட்டு போக வந்தேன். மாமன் முறை நலங்கை நாளைக்கு நீங்களே வச்சிடுறிங்களா?” என்றார் கோரிக்கையாக.
“கல்யாணத்துக்கு வந்தாதான் பூர்வீக சொத்துனு சொல்லி பத்திரிக்கை வச்சிருந்தா கண்டிப்பா வந்திடுவாங்க. ஆனா எனக்கு அதுல விருப்பம் இல்ல. என் மகள் கல்யாணம் நல்லவங்க ஆசிர்வாதத்துல நடக்கனும்னு அழைக்கலை அன்பு”
“அப்போ சரி விடுங்க. நாங்களே வந்து செய்துக்கிறோம்” என்றான் இன்முகத்தோடு.
“அடேய் அண்ணா, நலங்குக்கு நீ வரக்கூடாது. உன்னைத் தவிர மற்ற எல்லாரும் போய் செய்துட்டு வருவோம்” என்றான் சரவணன்.
“ஆமா… நீ பெரிய இவன். உனக்கு எல்லா சம்பிரதாயமும் தெரியும்” என அன்பரசு முறைக்க, “எல்லாமும் தெரியலனாலும் கல்யாணம் வரைக்கும் நீ அண்ணியை பார்க்கக்கூடாதுனு மட்டும் நல்லா தெரியும்” என்றான் சிரிப்போடு.
ஜானகி சிரிக்க, மாதவனும் சிரித்து “எத்தனை மணிக்கு நாங்க அங்க இருக்கனும் சொல்லுங்க, வந்திடறோம்” என்றார்.
“நாளைக்கு காலைல ஏழு மணிக்கு நல்ல நேரம். இன்னைக்கு எங்க நலங்குக்கும் வந்திட்டு வாங்க, எட்டு மணிக்கு வைக்கிறோம்” என்றார்.
“சரிங்க” என்று மாதவன் சம்மதிக்க, மகளோடு வெளியே வந்த சுகந்தி, ஜானகி, ரங்கசாமியிடம் நலம் விசாரித்து, டீ கொண்டு வந்தாள். தேநீர் பருகி இருவரும் கிளம்பினர்.
பிறகு ஜனனி அன்பரசிடம் ஒரு மாத நிகழ்வுகளை பகிர்ந்துகொண்டிருந்தாள். “சரி சரி, பேசிட்டே இருந்தா லேட் ஆகிடும். எட்டு மணிக்கு மருமக வீட்டுக்கு போகனும். போய் ரெடியாகுற வேலையை பாருங்க” என மாதவன் விரட்ட, “பெரியம்மா நான் எந்த டிரஸ் போட்டுக்கட்டும்” என்று சுகந்தியிடம் சென்றாள்.
மகளும் சுகந்தியும் உள்ளே போனதும் தனதறைக்குள் வந்து முல்லைக்கு அழைத்தான் அன்பரசு. அழைப்பை ஏற்றதும் “முன்ன போன் செய்திருந்தேன், ஏன் அட்டன் பண்ணல?” என்றான்.
“குளிச்சிட்டிருந்தேன்”
“என்ன டல்லா பேசுற?” என்றான் விசாரணையாக.
“பயமா இருக்கு”
திருமணத்தை நினைத்தோ என “எதுக்கு?” என்றான் இலகுவாக.
“அத்தை எதுக்கு தனியா மேனேஜ் பண்ணனும்? அப்போ எங்களுக்கெல்லாம் என்ன வேலை?”
“நீங்கதான் ஊர்லயே இருக்கிறதில்லயே” என்றாள்.
“அந்த எங்களுக்குன்றதுல நான் மட்டும் இல்ல. நம்ம மொத்த குடும்பமும் இருக்கு. உன் அப்பாம்மா எனக்கு மாமனார் மாமியார். என்னை பெத்தவங்களுக்கு அடுத்த ஸ்தானத்துல இருக்கவங்க. நான் இல்லைனாலும் என் அப்பா பார்த்துப்பார்” என்றான்.
முல்லை அமைதியாக இருக்க, “நான் இல்லாத நேரம் என் அப்பாக்கு ஒன்னுனா நீ பார்க்க மாட்டியா?”
“பார்ப்பேனே” என்றாள் அவசரமாக.
“அது மாதிரிதான் அப்பா மாமாவை பார்த்துக்கிறதும். அதோட உனக்கும் அண்ணிம்மாக்கும் என்ன வேலை? தினமும் போய் பார்த்துட்டு பேசிட்டு வாங்க. அப்போ அவங்களை தனியா விடுற ஃபீல் இருக்காது. சரியா?”
“ஹம்… நீ போன் செய்து நான் அட்டன் பண்ணலனா சண்டைலாம் போட மாட்டியா?”
“போடுவேனே… அந்தளவுக்கு முக்கியமான விசயமா இருந்தா”
“பார்டா… பரவால்லையே” என பாராட்டுதலாக சொன்னவன், “அப்பாம்மா பத்தி கவலைப்படாம, என்னை எப்படி சமாளிக்கனு யோசி. இன்னும் இரண்டு நாள்தான் இருக்கு” என்றான் மைய்யலாக.
“அம்மா நலங்குக்கு ரெடியாக சொன்னாங்க, நான் வைக்கிறேன்” என்று இணைப்பை துண்டித்திட, “வச்சிட்டாளா?” என சிரிப்போடு வெளியே வந்தான்.
“அப்பா இந்த டிரஸ் ஓகேவா?”
“என் பட்டுக்குட்டி ரொம்ப அழகா இருக்க” என கொஞ்ச, “நீங்க ரெடியாகல?” என்றாள்.
“அப்பாக்கு டையர்டா இருக்குடா, நீங்க எல்லாரும் போய்ட்டு வாங்க” என்க, பிறகு அனைவரும் முல்லைக்கு நலங்கிட கிளம்பினார்கள்.