அம்மையப்பன் 8
மலை கோவில் விளக்காக
ஒளியா வந்தவளே..
மனசோடு தொளை போட்டு
என்னையே கண்டவளே..
கண்ண மூடி கண்ட கனவே
பல சென்மம் தாண்டி வந்த உறவே..
கண்ண மூடி கண்ட கனவே
பல சென்மம் தாண்டி வந்த உறவே..
கோடி அருவி கொட்டுதே
அட என் மேல
அது தேடி உசுர முட்டுதே
நெதம் உன்னால..
என்று காரினுள் ஹைடெசிபலில் ஒலித்த பாடலுடன் சேர்ந்து.. மேலும் சத்தமாக பாடிகொண்டிருந்தான்.. அமுதன்..
அவன் உற்சாகத்திற்கு ஏற்ப.. உதகமண்டலத்தின் காலநிலையும் அமைந்தது போலும்… நான்கு மணியான மாலை வேளை ஆறுமணி போல் காட்சியளத்தது.. அதனோடு மெல்லியதான பனி மூட்டமும்.. சிறு சிறு பனித்துளியாய் மழைச்சாரலும் வீசியது..
மனதின்னுள்ளே காதலின் மழைச்சாரல்.. வெளியிலோ பனியின் மழைச்சாரல்.. செவியிலோ காதல் காணத்தின் இசைச்சாரல் என சொர்க்கத்தில் மிதந்து கொண்டிருந்தான்.. அமுதன்.
அவனின் மனநிலை போல்.. கொண்டை ஊசி வளைவுகளில் அவன் ஓட்டிக் கொண்டிருந்த நான்கு சக்கர மகிழுந்தும் சற்று வேகமாக இறங்கியது.. அதுவரை அவனின் அட்டூழியத்தை பொறுத்துக்கொண்டு அமர்ந்திருந்த அகத்தியன்.. அமுதனின் வேகம் வர வர அதிகரிப்பதைப் பார்த்து.. அவன் தோளில் நச்சென ஒரு அடி போட்டான்..
அதுவரை காதல் காற்றில் மிதந்து கொண்டிருந்தவன்.. தொபுக்கட்டீர்ரென கீழே விழுந்து.. தன் மாமனை ஒன்றும் புரியா மழலைப் போல் பார்த்து விழிக்க.. அதில் மேலும் கொலைவெறியான அகத்தியன்.. செவிலோடு ஓர் அறை விட்டு.. அந்த ஓரத்துல வண்டிய நிப்பாட்டுடா.. என பல்லைக் கடித்துக்கொண்டு கூறினான்..
கார் நின்றதும்.. டிரைவிங் சீட் அருகே வந்தவன்.. அமுதனை மாற்றி உட்கார வைத்துவிட்டு.. அவனே காரை ஓட்டினான்.. விடுமுறை நாள் என்பதால் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருந்தது.. கோவை மற்றும் அங்குள்ள சுற்று வட்டாரங்களில் உள்ள குடும்பத்தினர்கள் காதல் ஜோடியினர் கல்லூரி மாணவர்கள்… என்று அனைவரும் பெரும்பாலும் தங்களின் விடுமுறை நாட்களை ஊட்டியில் செலவழிக்க விரும்புவார்கள்..
அகத்தியன் அமுதனை முறைத்துக் கொண்டே மிதமான வேகத்தில் ஓட்டிக் கொண்டிருக்க.. அமுதனோ கன்னத்தில் கை வைத்து.. மாமனை பார்த்து ஈஈஈ என இளித்துக் கொண்டிருந்தான்..
இனி ஒருக்கா இப்புடி ஓட்டு.. கையகால இன்னுங்கி போடுறேன்.. எம்புட்டு நெரிசலா இருக்கு.. முன்னயும் பின்னயும் அம்புட்டு காரும் பைக்கும் வருது.. இதுல ஏரோபிளைன் கணக்கா ஓட்டிட்டு இருக்க.. எங்கயாவது போயி இடிச்சா என்னாகுறதுடா.. என அகத்தியன் திட்டிகொண்டிருந்தான்..
என்னாகும்.. மலையில இருந்து உருள வேண்டியது தான் என மனதுக்குள் முனுமுனுத்துக் கொண்டிருந்தான்.. அமுதன்
என்ன மலையில இருந்து உருள வேண்டியதான்னு நினைக்கிறயோ.. நாம மட்டும் உருண்டா பரவாயில்லை.. முன்னாடி போற காரு அதுக்கு முன்னாடி போற பைக்குன்னு எல்லாரும் சேர்ந்துதான் உருளனும்.. எத்தனை மனுசர் அதுல இருப்பாங்க… என கோபமாக கூறினான் அகத்தியன்.. அப்பொழுது தான் நிலைமையின் தீவிரம் புரிந்த அமுதன்.. மன்னிப்பாய் தன் மாமனை பார்த்தான்..
இதுதான் கடைசி அமுதா.. இனி வண்டி ஓட்டும் போது வேற நெனப்பு வச்சுக்காத என அழுத்தமாக சொன்னவன்.. மருமகனின் முகத்திலேயே அவன் வருத்தபடுவதை உணர்ந்து பேச்சை மாற்றினான்..
காலையில இருந்து பாக்குறேன்.. கோட்டிக்காரன் கணக்கா சுத்திகிட்டு திரியிற.. என்னடா விசயம்.. என அகத்தியன் அதட்டலாக கேட்டதும்.. அவனுள் அமிழ்ந்திருந்த காதல் கனவுகள் மீண்டும் உலா வர ஆரம்பித்தது..
அந்த கனவினோடே.. தன் மாமனை ஒரக்கண்ணால் பார்த்தவன்.. மெல்ல அவனிடம் நூல் விட ஆரம்பித்தான்..
சும்மா ஒரு யோசனை மாமு..
கவனம் இங்கில்லாத அளவுக்கு அப்படியென்ன அய்யா யோசிக்குறீங்க.. என கேட்க.. இதற்காகவே காத்திருந்தவன்.. ஒன்றுமறியா பிள்ளை போல் முகத்தை வைத்துக்கொண்டு.. தன் மனதின் புகைச்சலை கொட்டினான்..
நம்ம வூட்டுல வர வர எல்லாமே மாறிடுச்சுங்க மாமா.. என மரியாதை பன்மையில் ஆரம்பிக்க. அகத்தியன் அவனை ஒரு மாதிரி பார்த்தான்..
ஆத்தி.. ஆரம்பத்துலயே இப்புடி பாக்குறாரே.. இதுக்கே இப்படின்னா இனி போக போக அடி வெளுத்துடுவாரோ.. என உள்ளுக்குள் புலம்பி விழிக்க.. அகத்தியன் அவனை மேலே பேசுமாறு பார்த்தான்..
ஹுக்கும் இப்படி பார்த்தா என்ன பேசுறதாம்.. அடுத்து என்னன்னு மறந்திடுச்சே.. என உள்ளுக்குள் நினைக்க.. அகத்தியன் அதை உணர்ந்தார் போல் அவனுக்கு குறிப்பு கொடுத்தான்..
அப்படி என்னடா மாறிடுச்சு..
அதான் மாமா.. நம்ம வூட்டு சாஸ்திரம் சம்பிராதாயம்.. பழக்க வழக்கம் எல்லாம் மாறிடுச்சு.. முன்னாடி இருந்த மாதிரி இப்போ இல்ல..
எப்படி சொல்ற..
என்ற அப்பச்சிக்கு எப்போ கண்ணாலம் ஆச்சு.. அப்போ அப்பத்தா வயசு என்ன இருக்கும் என கேள்வி கேட்டான்..
ஐயனுக்கு அவரோட பதினாறு வயசுல ஆச்சு.. ஆத்தாக்கு ஒரு பன்னென்டு பதிமூனு இருக்கும்..
ஹ்ம்ம்.. சரி அடுத்த தலைமுறையில என்ற ஆத்தாக்கு எப்போ கண்ணாலம் ஆச்சு..
ம்ம்ம்ம் அவங்களோட பதினாறு வயசுல.. என பல்லைக் கடித்துக் கொண்டு கூறினான்.. மருமகன் எதற்கு சுத்தி வளைக்கிறான் என அவனுக்கு புரிந்து போனது..
ஹ்ம்ம்.. பதினாறு வயசு.. பவளம் ஆத்தாக்கும் அப்படித்தான் பண்ணியிருப்பாங்க.. உங்களுக்கு இருபத்தியிரண்டு பண்ணாங்க.. அதோட நம்ம வூட்டு பழக்கத்தையே எல்லாம் மறந்துட்டாங் மாமா.. மூனு தலைமுறை வரைக்கும் கரக்ட்டா இருந்தவுங்க.. இப்போ மாறிட்டாங்க மாமா.. யாரு செஞ்ச சதியோ என ஒரக்கண்ணால் மாமனை பார்க்க..
அகத்தியன் அவனைத்தான் மிகவும் பாசமாக பார்த்துக் கொண்டு இருந்தான்.. ஆத்தி.. மீசை பயங்கரமா முறைக்குறாரே.. இதுக்கு அப்பொறமும் பேசணுமா.. கண்டிப்பா நம்ம பேச்சுக்கு அடி விழத்தான் போகுது.. அத முழுசா சொல்லிட்டு வாங்குவோம்.. என அவனே கேள்வி கேட்டு.. பதிலும் சொல்லிக்கொண்டான்..
இனி அடுத்த தலைமுறை நானும் உன்ற மவளும் தானே மாமா.. எங்களுக்கும் வயசு போயிக்கிட்டு இருக்கு பாருங்க.. எனக்கு இருப்பத்தியிரண்டு முடியப்போது.. உன்ற மவளுக்கு இன்னும் கொஞ்ச மாசத்துல பதினேழு ஆரம்பிச்சுடும்.. என இழுத்துக் கூறியவன்.. அகத்தியனை பார்க்காது தன் ஜோகங்களை சொல்லிகொண்டிருந்தான்..
இப்போ இல்லைனாலும் ஒரு ரெண்டு இல்ல ஒரு ஒருவருசம் செண்டு கண்ணாலாம் வச்சுக்கலாம்ன்னு யாரும் நினைக்க மாட்டுறாங்க.. எங்களுக்கு அடுத்த தலைமுறைய பாக்குற ஆசை யாருக்குமே இல்ல.. என சோகமான முகத்துடன் சொல்லி முடிக்கவும்.. ஆஆஆ.. ஆஆஆஆ.. மா.. மாமா.. என அமுதனின் அலறல் கேட்கவும் சரியாக இருந்தது..
என்னங்க தொரை.. நீங்க சொன்னதை கொஞ்சம் மறுக்கா சொல்லுங்க.. என அகத்தியன் கேட்டான்.. அவன் விரல்களோ அமுதனின் செவியை இழுத்துக் கொண்டிருந்தது.. அது கொடுத்த வலியில் தான் சின்னவர் அலறிகொண்டிருந்தார்..
ஆஆஆஆ.. மாமா.. மாமா.. வுடு.. மாமா.. ஆஆஆஆ.. ஆஆஆஆ..
என்னடா.. ஆ.. ஆ.. உன்ற குறைய மறுக்கா சொல்லு சரியா கேட்கல.. என அழுத்தமாய் கூறி மேலும் இழுத்தான்..
ஆஆஆஆ.. யோவ் விடுய்யா.. எத்தனை வருசம் ஆனாலும் நான்தான் உன்ற மருமவன்.. அதை மறந்துடாத.. நாளைக்கு நான் மாப்பிளை முறுக்க காமிச்சேன் தாங்கமாட்ட பாத்துக்க.. என்ன நினைச்ச என்ன பத்தி.. எனக்கு மட்டும் கோபம் வந்துச்சு.. என அந்நிலையிலும் கெத்தாக பேச.. அதனில் எழும்பிய புன்னகையை இதழ்களின் உள்ளேயே அடக்கிய அகத்தியன் அப்பொழுதும் கையை எடுக்காது அவனை சீண்டிக்கொண்டிருந்தான்..
ஹ்ம்ம்.. சொல்லுங்க தொரை.. கோபம் வந்த என்ன பண்ணுவிங்க.. அப்படியே கிழிச்சு கேப்பைய நட்டுடுவீங்களோ.. குஞ்சுமணிய புடிச்சு ஒழுங்கா ஒன்னுக்கு போக தெரியாது.. டிங்கு டிங்குன்னு ஆட்டிகிட்டு.. மாமா ஒன்னுக்கு போகணும் வந்து புடின்னு.. பின்னாடியே வந்த பயலுக்கு வாயப்பாரு.. என அகத்தியன் சொல்லவும்.. அமுதன் தன் மாமனை முறைப்பும் வெட்கமுமாய் பார்த்தான்..
யோவ் மாமா.. அது நான் குட்டி பப்பாவா இருக்கும் போது நடந்ததுய்யா.. என பல்லைக் கடித்து.. முகத்தை சுழித்து கூறினான்..
ஹுக்கும் பெரிய குட்டி பப்பா.. அஞ்சு வயசு வரைக்கும் சட்டியே போடாம அம்மணமா திரிஞ்ச பயலுக்கு கண்ணாலம் கேட்குதோ.. என மேலும் அவனை பங்கம் செய்தான் அகத்தியன்..
அதோட எனக்கு இன்னும் நீ டிங்கு டிங்குன்னு ஆட்டிகிட்டு கிடந்த அஞ்சு வயசு அமுதனாட்டம் தான் தெரியுற.. என்னைய என்றா பண்ண சொல்ற.. என இதழ்துடித்த புன்னகையை மென்றவாரு சொன்னான் அகத்தியன்..
போதும்.. ரொம்ப ஓவரா போயிக்கிட்டு இருக்கு.. என்ற இமேஜ ரொம்ப டேமேஜ் பண்ற.. இதோட நிறுத்திக்குவோம் என முதலில் கோபமாக ஆரம்பித்தவன்.. பின் காலில் விழாத குறையாக கெஞ்சினான்.. ஆனால் அகத்தியன் ஒரு முடிவோடு தான் இருந்தான் போலும்.. சிறுவயதிலிருந்து அமுதன் செய்த சேட்டைகளை எல்லாம் பட்டியலிட ஆரம்பித்து.. அவன் முகத்தை அஷ்டகோணலாக்கிக் கொண்டிருந்தான்..
யோவ் உனக்கு கொஞ்சமாச்சும் வருங்கால மருமவன்னு மட்டுமருவாதி இருக்கா.. இப்போ நான் என்ன கேட்டுட்டேன்னு இப்படி அவமான படுத்துற.. என ஆத்திரமாக கேட்டான்..
என்னடா குட்டா கோபமா இருக்கியா.. என அவனை சட்டையே செய்யாது.. அகத்தியன் சாதாரணமாக கேட்க.. அமுதன் பொங்கிவிட்டான்..
வண்டிய நிறுத்துய்யா.. நிறுத்துங்குறேன்ல.. என அமுதன் கத்தவும்.. மேட்டுப்பாளையம் உள்ளே வந்துவிட்டதால் காரை ஓரமாக நிறுத்தியவன்.. அமுதனை பார்த்து புருவம் உயர்த்தினான்..
இப்போவே இங்கனவே.. ஒண்டிக்கு ஒண்டி பாப்போம் வா.. அப்போ தெரியும் இந்த அமுதன் யாருன்னு என சிறுபிள்ளையாய் முகம் சுழித்து கோபமாக கூறி.. வெளியே செல்ல.. அகத்தியன் அவனையே மென்சிரிப்புடன் பார்த்தான்..
கார் பெனட்டின் மேலே வலது கரத்தை வைத்தவன்.. மற்றொரு கரத்தை பின்னால் வைத்து.. அகத்தியனை பார்த்தான்..
அடேய் என்னடா என சிரிப்பாக கேட்டான் பெரியவன்..
என்ன என்னடா.. சும்மா இருந்த சிங்கத்தை சீண்டிவிட்டா அதோட சீற்றத்தை தாங்கிக்கத்தான் வேணும் மாமோய்.. இன்னைக்கு உன்ன ஒரு கை பாக்காம விடப்போறதில்லை.. சீக்கிரம் வா நேரம் போயிட்டே இருக்கு.. என்றான்..
மாமனும் மருமவனும் நடுரோட்டுல நின்னு என்னடா வெளாண்டுட்டு இருக்கீங்க.. என அவர்களை கேட்டுகொண்டே அங்கே வந்தார் சரவணன்..
வாடா.. எப்போ ஊருல இருந்து வந்த.. தங்கச்சியும் புள்ளைகளும் வந்துருக்காங்களா.. என அகத்தியன் கேட்டான்..
இன்னைக்குதான் எல்லாரும் வந்தோம் மச்சான்.. அவைங்களா வீட்டுக்கு அனுப்பி வச்சுட்டு தான் வாரேன்…
ம்ம்ம்ம்.. உன்ற மாமனார் இப்போ எப்படி இருக்காரு..
அதெல்லாம் உன்ற சித்தப்பா நல்லா குத்துகல்லாட்டம் தான் இருக்காரு.. சும்மா பேதிதான்.. அதுக்கே உன்ற தொங்கச்சி.. அது இதுன்னு ஒப்பாரி வச்சு என்னைய ஒருவராம் அங்க இருக்க வச்சுட்டா.. மனுஷன் வயசான காலத்துல வாயகட்டாம கண்டதையும் வாயில போட்டு.. இப்போ அவஸ்தை படுறாரு என அலுத்துக் கொண்டான்.. அப்பொழுது அகத்தியன் அவன் பின்னே பார்த்து வா மல்லிகா.. எப்படி இருக்க என கேட்கவும்.. அதிர்ச்சியாக பின்னே திரும்பிய சரவணன் அங்கு யாரும் இல்லாததைக் கண்டு நிம்மதியானன்..
ஏன் மச்சான்… உண்மையிலேயே என் பொண்டாட்டி தான் வந்துட்டாளோன்னு பயந்துட்டேன்டா..
அதான் சித்திக்கு இவ்வளவு பயப்படுறேல.. அப்பொறம் எதுக்கு சித்தப்பு உனக்கு இம்புட்டு வாயி.. என அமுதனும் அவன் பங்கிற்கு நக்கல் அடித்தான்..
எல்லாம் நேரம்டா..
மொத நான் கேட்டதுக்கு பதில் சொல்லுங்க ரெண்டுபேரும்.. இங்க நின்னுகிட்டு என்ன பண்ணுறீங்க.. எனவும் அமுதன் நியாபகம் வந்தது போல்.. யோவ் மாமா.. வாயா.. என மீண்டும் அழைத்தான்..
இவேன் என்னடா சண்டைக்கு கூப்பிடுற மாதிரி எகுருறான்..
சின்னவரு சண்டைக்கு தான் கூப்புடுறாரு.. என சிரிப்புடன் கூறினான் அகத்தியன்..
அப்படியா.. என்னத்துக்கு.. என ஆச்சரியமாக கேட்டான்..
ம்ம்ம்ம்ம் தொரைக்கு கண்ணாலம் பண்ணனுமா.. என்கிட்ட பொண்ணு கேட்டாரு.. என சரவணனை பார்த்து கண்ணடிக்க..
ஹுக்கும் இப்போ இவருக்கு என்ன வயசு ஆகிடுச்சுன்னு கண்ணாலம் பண்ணனுமா.. எனக்கு இவனை பாத்தாலே அஞ்சு வயசுல ஜட்டி போட மாட்டேன்னு அம்மணகட்டையா வூட்டை சுத்தி ஓடுவானே.. அதான்டா நியாபகம் வருது.. இவனுக்கு போயி கண்ணாலம்.. இதெல்லாம் ரொம்ப தப்புடா அகத்தியா என ஆருயிர் தோழனின் சமிக்ஞையை சரியாக புரிந்துகொண்டு அமுதனை கிண்டல் செய்து சிரிக்க.. அகத்தியனும் கூட சேர்ந்து கொண்டான்..
என்ன சித்தப்பு லந்தா.. சித்தி வூட்டுல தான இருக்கு.. என அவன் ஒருமாதிரி வினவவும்.. சரவணனின் சிரிப்பு சுவிட்ச் போட்டார் போல் நின்றது..
ஏன்டா ஆனாஊனா மாமனும் மருமகனும் அவகிட்டயே போறீங்க.. என பாவமாக கேட்டான் சரவணன்..
ஹ்ம்ம் அப்போதானே உன்ற ஓட்ட வாயி அடங்குது.. என்ற மாமன் கண்ணாலம் அப்போ.. உனக்கும் கண்ணாலம் பண்ணி வைக்க சொல்லி.. அப்பத்தாகிட்ட சீவக்கட்டையால அடிவாங்குன கதையெல்லாம் எங்களுக்கும் தெரியும்.. என நக்கல் அடித்தவன்
என்ற அப்பாறு அதேன் உன்ற மாமனார்.. போனா போகுதுனு உனக்கு பாவம் பாத்து பொண்ணு கொடுத்தா.. நீ அவரையே கேலி செய்யுற.. பொரு அவருக்கிட்ட போட்டுக்கொடுக்கிறேன்.. என மிரட்டினான்..
டேய் மச்சான்.. எப்புடி நீ என் மவனுக்கு பொண்ணு தரமாட்டேன்னு சொல்லலாம்.. அவன் அழகென்ன.. அறிவென்ன.. அவன் தாடைக்குழிக்காகவே நிறைய பொண்ணுங்க வரிசையில நிக்கிறாங்க.. என்ற மவன் ஆணழகன்டா.. வயசு.. என்ன வயசு.. ஏன் நீ இருப்பதியிரண்டுல கண்ணாலம் பண்ணலையா.. உனக்கு ஒரு நியாயம்.. என்ற மவனுக்கு ஒரு நியாயமா.. என மூச்சு விடாது அமுதனுக்காக வக்காலத்து வாங்கினான் சரவணன்..
அது என கெத்தாக தன் சித்தப்பனை பார்த்து புருவம் உயர்த்தியவன்.. மாமனை நக்கலாக பார்த்தான்..
அகத்தியன் நண்பனை முறைக்க.. அவனோ அதனை கண்டுகொள்ளாது அவனை பார்த்து ஈஈஈ என இளித்தான்..
சகிக்கல.. இனி இப்படி பல்ட்டியடி.. மொத்த பல்லயும் தட்டி கையில கொடுக்கிறேன்.. அப்போதான் புரண்டு பேசுற நாக்கு அடங்கும் என பல்லைக் கடித்தான்..
ஆத்தி.. இவேன் செஞ்சாலும் செய்வான்.. என நினைத்து அமுதன் அருகே நின்றான் சரவணன்..
என்ன மாமோய்.. ஒரு கை பாக்கலாமா..
விடமாட்ட.. சரி வா.. என அகத்தியனும்.. வலது கரத்தை பேனட்டின் மேல் வைத்து.. இடது கையை பின்னால் வைத்தான்..
டேய் மவனே.. இப்போ நீ என்ன மிரட்டுனாலும் நான் என் மச்சான் பக்கம் தாண்டி நிப்பேன்.. ஏன்னா அவன்தான் செயிப்பான்.. என் தன் நண்பனின் அருகே நின்றான் சரவணன்..
சித்தப்பு.. கொஞ்சம் என்ற ஆர்ம்ஸ பாருங்க.. இதபாத்துமா உன்ற தோஸ்து ஜெயிக்கும்ன்னு சொல்றிங்க..
அடேய் இதெல்லாம் என்ன பிஸ்க்கோத்து.. என் மச்சான் ஆர்ம்ஸ பாரு.. என அகத்தியன் அருகே சென்று அவன் கரத்தின் வலிமையை காண்பித்தான்.. அது அமுதனை விட மூன்று மடங்கு அதிகமாக இருந்தது..
அதனைக் கண்டு அமுதன் விழித்தாலும்.. யாரு ஜெயிக்கிறான்னு பாக்கலாம்.. என்றான்..
இருவரின் கரமும் இறுக்கமாக பிடித்துக்கொண்டது.. முழுபலமும் கொடுத்து ஒருவர் மற்றவர் கரத்தை சாய்க்க முயற்சித்து கொண்டிருந்தனர்.. இருவரின் சதைக் கோளங்களும் வீறுகொண்டு திமிறிக்கொண்டிருந்தனர்.. அமுதனை தோற்கடிக்கும் இறுதி நேரம்.. அகத்தியன் தன் மருமகனின் முகத்தை பார்த்தான்.. அவன் மாமனை தோற்கடிக்கும் மும்மரத்தில் இருக்க.. அகத்தியன் தன் கரத்தை சாதாரணமாக வைக்க அமுதன் அதனை சாய்த்து விட்டான்..
அடேய் உனக்கு பில்டப் எல்லாம் கொடுத்தா.. இப்படி தோத்துட்ட…
சித்தப்பு.. உன்ற மச்சான் வேணும்னுதான் தோத்துருக்காரு.. இந்த மாதிரி விட்டுக்கொடுத்தெல்லாம் நான் ஜெயிக்க வேண்டாம்.. என முகத்தை தூக்க.. அகத்தியன் அவன் கழுத்தை தன்னருகே வளைத்து கொண்டான்..
என்ற மருமவன்கிட்ட தோக்குறது தான்.. இந்த மாமனுக்கு சந்தோசம் சின்னவரே.. என அவன் தலையை கலைக்க.. அமுதன் மாமனை அன்புடன் அணைத்துக்கொள்ள.. சரவணன் அவர்களிருவரையும் மகிழ்ச்சியுடன் பார்த்தான்..
இதோ இவ்விருவரும் தான் இன்னும் சிறிது நாளில்… யாட்சினியவள் வருகையில்.. ஒருவருக்கொருவர் கோபமாய் முட்டிக்கொள்ள போகின்றனர்..