ரங்கசாமியும் ஜானகியும் உண்டுகொண்டிருந்தனர். “அப்பா” என அழைத்தபடி முல்லை உள்ளே வர, “வாடா, வாங்க சம்மந்தி” என ரங்கசாமி எழவே, “உக்காருங்க உக்காருங்க, சாப்பிடறதை விட்டுட்டு எதுக்கு எழறிங்க” என்றபடி அவர்களருகே வந்தார் மாதவன்.
“அப்பா பிரசாதம்” என முல்லை நீட்ட, சர்கரை பொங்கலை கொஞ்சமாய் உண்டு, “நீயே வச்சுவிடுடா” என்று திருநீரை முல்லை கையால் இட்டுக்கொண்டனர் ஜானகியும் ரங்கசாமியும்.
“மாப்பிள்ளை பத்திரமா போய்ட்டாரா முல்லை. உனக்கு போன் செய்தாரா?” என்று ஜானகி விசாரிக்க, “உங்களுக்கு எப்படிம்மா தெரியும்? அவர் கிளம்பினது மாமாக்கே காலைலதான் தெரியும்” என்றாள்.
“அது, வாட்ச்மேன் சொன்னார் முல்லை, நைட் போகும்போது நம்ம வீட்டை பார்த்துட்டுதான் போனாராம்” என்று சமாளித்தார் ரங்கசாமி.
அத்தனை அவசரத்திலும் தாய் தந்தை பாதுகாப்பை நினைத்திருக்கிறான் என பெருமையாய் நினைத்தாள். “சாப்பிடுங்க சம்மந்தி” என்று ஜானகி தண்ணீர் கொடுக்க, “கோவில்ல இப்போதான் பொங்கல் சாப்பிட்டோம்” என்று தண்ணீர் மட்டும் பருகினார் மாதவன்.
“காலைலலயிருந்து கால் பண்ணவேயில்லனதும் பயந்துட்டேன்ப்பா, எழுந்ததும் போன் பண்ணியிருக்கலாமில்ல?” என குறைபட்டாள்.
“நீ வா முல்லை” என மகளை தனியே அழைத்துச்சென்று “அங்க எல்லாம் சௌகரியமா இருக்கா?” என்றார் ஆர்வமாக.
அன்னை கேட்க வருவது புரிந்து “ம் ம்மா” என்றாள் இன்முகமாக. மகிழ்ந்தவர் “சும்மா சும்மா இங்கையே நினைச்சிட்டிருக்கக்கூடாது” என்றார்.
“ப்ச் ம்மா, இதைத்தான ஒரு மாசமா சொல்லிட்டிருந்திங்க? அதெப்படி அப்பாம்மா நினைப்பு வராம இருக்கும்?” என்றாள் சிறு கோபத்தோடு.
“சரிம்மா” என வெக்கத்தோடு சிரித்து, “இதுக்குத்தான் தனியா அழைச்சிட்டு வந்தியா? வாம்மா” என தந்தையிடம் வந்தவள், “அப்பா முக்கியமான விசயம் பேசனும். மாமாவும் இருக்கும்போதே பேசிடலாமா?” என்றாள்.
“என்னம்மா?”
“பூர்வீக சொத்தை அவங்களுக்கு முன்ன பேசினபடியே கொடுத்துடலாம்ப்பா, அதை கொடுத்துட்டா உங்க மேல உள்ள கோபம் போய்டும்” என்றாள்.
“வேண்டாம் முல்லை” என்றார் இறுகிய முகத்தோடு.
“நீங்க சம்பாதிச்சதே எனக்கு அதிகம்ப்பா, அது வேற எதுக்கு?” என்று முல்லை சமாதானம் செய்ய, “அது உங்கப்பாக்கு உரிமைப்பட்டது முல்லை, உனக்குத்தான் நியாயப்படி வரனும்” என்றார் ஜானகியும்.
அம்மா இப்படி பேசுபவர் இல்லையே என முல்லை வியந்து பார்க்க, அதற்கு மேல் தாளமுடியாமல் ரங்கசாமி கண்டிப்பையும் மீறி நடந்ததனைத்தும் சொல்லி முடித்தார் ஜானகி.
கண்ணீர் பெருக்கெடுக்க, “உங்களுக்கு ஒன்னும் காயமில்லையேப்பா” என தாய் தந்தையை ஆராய்ந்தாள் தாளமுடியாத தவிப்போடு.
“ச்சே… ச்சே… அவ்வளோ தைரியம்லாம் அவனுங்களுக்கு இல்லைடா, என்னை பயமுறுத்த வாட்ச்மேனை கட்டி வச்சானுங்க” என தேற்ற, பேச்சற்று அமர்ந்துவிட்டாள் முல்லை.
“எந்த நேரம் எதுனாலும் எங்களுக்கு போன் பண்ணனும்ங்க, இப்படி இருந்திங்கனா எங்களால எப்படி நிம்மதியா இருக்க முடியும்? என் மருமகள் எப்படி சந்தோசமா இருக்கும்?” என்றார் மாதவன்.
“பண்ணக்கூடாதுனு இல்லை சம்மந்தி, எல்லாருக்கும் கல்யாண அலைச்சல், நைட் அசந்து தூங்கிட்டிருப்பிங்கனு சங்கடமா இருந்தது. இன்னைக்குத்தான் யாரும் இருக்க மாட்டாங்கனு அவங்களும் பதினொரு மணிக்கு ப்ளான் பண்ணி வந்துருக்கானுங்க” என்றார் வருத்தத்தோடு.
மாதவன் “என்ன அலைச்சலா இருந்தா என்ன? இப்படி சூழலை விட தூக்கமா முக்கியம்?” என்றார் அதற்கும் ஆற்றாமையோடு.
சற்று நேரம் ஆழ்ந்து யோசித்த முல்லை, “விடுங்க மாமா, எல்லாத்துக்கும் சேர்த்து ஒரு வழி இருக்கு” என தேற்றி, “அப்பா நீங்க முன்ன சொன்ன மாதிரியே சொத்தை எழுதி கொடுத்துடுங்க” என்றாள்.
ரங்கசாமி “இனி அந்த பேச்சுக்கே இடமில்ல முல்லை” என்றார்.
அந்த நேரம் அன்பரசிடமிருந்து அழைப்பு வரவே, அழைப்பை ஏற்றவள், “சேஃபா ரீச் ஆகிட்டிங்களா?” என்றாள்.
“ம்… கோவில் போய்ட்டு வந்தாச்சா? ரூம்ல இருக்கியா? இல்ல எல்லாரோடவும் இருக்கியா?”
“கோவில் போய்ட்டு வந்தாச்சு, நானும் மாமாவும் அம்மாப்பாவை பார்க்க வந்தோம்”
“ஓ” என்றவன் முல்லை முகம் பார்க்க முடியாத ஏமாற்றத்தில் அமைதிகாக்க, தனதறைக்கு வந்தவள் “பூர்வீக சொத்தை கொடுத்துட்டா பிரச்சனை பண்ணமாட்டாங்கனு சொல்றேன், அப்பா மறுக்குறார். நீங்க சொல்றிங்களா?” என்றாள் கோரிக்கையாக.
முல்லைக்கு அனைத்தும் தெரிந்துவிட்டதென புரிந்து “சொத்து கொடுக்கலனாலும் இனி பிரச்சனை பண்ண மாட்டாங்க, நீ தைரியமா இரு” என்றான்.
“நீங்க அவங்களை மிரட்டினதால இனி அப்பாகிட்ட வம்பு பண்ணமாட்டாங்கதான். ஆனா அப்பா ரொம்ப வருசத்துக்கு முன்னாடியே சொன்னது இது. இப்போ அவங்கமேல உள்ள கோபத்துல வேணாம்னு சொல்றார், ஆனாலும் நிதீஷோட அண்ணனையும் அவர் குழந்தைகளையும் பார்த்தா ஃபீல் பண்ணுவார்”
“ஓ அந்த நாய்க்கு அண்ணன் வேற இருக்கானா?”
“ம், அவருக்கும் என்னை பிடிக்காதுதான், ஆனா அவங்கம்மா செய்யிறதும் பிடிக்காது. அதனாலதான் இப்படி பிரச்சனைகளுக்கு மோஸ்டா வரமாட்டார். அதேபோலத்தான் அப்பாவோட தம்பி பொண்ணும். நல்ல டைப்.
என்னைக்காவது எங்கையாவது அவங்களை பார்த்தா கண்டிப்பா அப்பா ஃபீல் பண்ணுவார். சொத்து கொடுத்துட்டா இனம் புரியாத நிம்மதி கிடைக்கும் அவருக்கு. அப்பா நிம்மதியா இருந்தார்னா நானும் நிம்மதியா இருப்பேன்”
நேற்றிரவு அத்தனை நடந்தும் மாமனார் தன்னிடம் நிதீஷை விட்டுவிடுமாறு சொன்னது நினைவு வர, முல்லை சொல்வது சரிதான் என, “சரி உன் விருப்பம்போல செய், நைட் கால் பண்றேன்” என இணைப்பை துண்டித்தான்.
வெளியே வந்தவள், “அப்பா அவங்களை ஈவ்னிங் வர சொல்லுங்க” என்றாள்.
“வேண்டாம்மா” என ரங்கசாமி மறுக்க, மாமனாரிடமும் விசயத்தை பகிர எண்ணி, கணவனிடம் பேசியதை விளக்கி, “நேத்து நைட்டே நமக்கு சங்கடமாகிடும்னு சொல்லாம விட்டுட்டாங்க, இப்படி இருந்து எதாவது அசம்பாவிதம் ஆகிட்டா என்ன பண்றது மாமா?” என்றாள் கவலையாக.
“நீயும் சம்மந்தியும் முடிவு பண்றதுதான்ம்மா” என்றுவிட்டார் மாதவன்.
“உங்களுக்கு எதாவது உடம்புக்கு முடியாம ஆகிடுச்சுனா இதனால இருக்குமோனு என் மனசே என்னை கொன்னுடும். ப்ளீஸ் என் நிம்மதிக்காகவாவது அவங்களை வர சொல்லுங்கப்பா” என்றாள் மன்றாடலாக.
“சரிம்மா, இன்னொரு நாளைக்கு வச்சுக்கலாம். இன்னைக்கு வேணாம். நேத்துதான் கல்யாணம் ஆகியிருக்கு. இன்னைக்கு இங்க வந்துட்ட. இது தப்பு, நீ கிளம்பும்மா”
மாதவன், “மருமக தினமும் இங்க வரும்ங்க, அதுவும் பக்கத்து தெருவில அம்மா வீட்டை வச்சுக்கிட்டு பார்க்க வரக்கூடாதுனு எப்படி?” என்று ரங்கசாமி சங்கடத்தை போக்கி, “நீ இங்கையே இரும்மா, சாயங்காலம் வந்து கூட்டிட்டு போறேன்” என்று கிளம்பப்பார்த்தார்.
“ஈவ்னிங் வரும்போது சின்னமாமா இல்லைனா கொழுந்தனாரை அழைச்சிட்டு வாங்க மாமா, அவங்க இருக்கும்போது நீங்க இருந்தா எனக்கு கொஞ்சம் பெட்டரா இருக்கும்” என்றாள்.
சரியென தலையசைத்து கிளம்பினார் மாதவன். பிறகு மதிய உணவு உண்டு நன்றாக உறங்கி எழுந்து மாலை டீ குடித்த பின்னே வனிதா நாராயணனுக்கு அழைப்பு விடுக்க சொன்னாள் முல்லை.
ஏதும் வில்லங்கம் இருக்குமோ என வனிதா பயம் கொள்ள, “சொத்து கொடுக்கத்தான் கூப்பிடுறேன், அப்பா லாயரை வர சொல்லிட்டார். அவர் வரும் முன்ன நீங்க வந்திடுங்க, லாயர் அங்கிள் ரொம்ப நேரம் ஸ்பெண்ட் பண்ணமாட்டார்” என முல்லையே ரங்கசாமி மொபைலில் இருந்து அழைப்பு விடுத்தாள்.
இருவருக்கும் பழரசம் கொடுக்க, பருகிக்கொண்டிருக்கும்போதே வனிதாவும் நாராயணனும் வந்திருந்தனர்.
“நடு ராத்திரியில சொத்துக்காக மொத்த குடும்பமும் வந்திருந்திங்க, இப்போ நாமளா கொடுக்கறோம்னு சொல்றோம், இரண்டு பேர் மட்டும் வந்திருக்காங்க” என ஆச்சர்யமாய் வினவினாள் தந்தையிடம்.
“நைட் அன்பு பந்தாடிட்டான்ல? எழுந்துக்க முடிஞ்சாதானே வருவான்?” என சிரித்தான் சரவணன்.
சத்யன் முல்லையும் சிரிக்க, தன்னை கண்டுதான் சிரிக்கிறாள் என வனிதாவிற்கு அவமானமானதோடு ஆத்திரத்தையும் கிளப்ப, “என் தம்பிகிட்ட சொத்து வாங்க நாம வரோம். இவனுங்க எதுக்குடா வந்திருக்கானுங்க?” என நாராயணனிடம் முணுமுணுத்தார் கோபத்தோடு.
“எவனோ இருந்துட்டு போறானுங்கக்கா, நமக்கு உரிமைப்பட்ட சொத்து, ரோசப்பட்டுகிட்டு எங்கிருந்தோ வந்த முல்லைக்கு தாரை வார்க்கும் சூழலை உண்டாக்கிடாத” என எச்சரித்தார் நாராயணன்.
“அதுவும் சரிதான்” என முணுமுணுத்தபடி இருவரும் வந்தனர். ஜானகி ரங்கசாமி இருவரும் நேர்கொண்டு அவர்களின் முகத்தை பாராமல் அமர்ந்திருந்தனர்.
ரங்கசாமிக்கு வக்கிலிடமிருந்து அழைப்பு வர, ஏற்றவர் சில நொடி பேசி, “வக்கில் வர கால் மணி நேரம் ஆகுமாம்” என பொதுவாக சொன்னார் தகவல்.
வனிதாவை பார்க்க பார்க்க தன் அன்னையை அநாதை என்று சொன்னது இம்சிக்க, வனிதா முன் சென்று, “எங்கம்மாவையா அநாதைனு சொன்னிங்க?” என முறைத்து, “வயசானா எல்லா அப்பாம்மாவும் ஒரு நாளைக்கு சாகத்தான் செய்வாங்க, அதுக்கப்புறம் அவங்க பிள்ளைகள் அநாதையா?” என்றாள் சுள்ளென.
தன்னைத்தான் சொல்கிறாள் என “ஏய்” என வனிதாவும் முறைக்க, “அப்படிப் பார்த்தா எங்கம்மாக்கு முன்னாடியே நீங்க அநாதையாகிட்டிங்க” என்றாள் அழுத்தமாக.
இவள் பேசுவதையெல்லாம் கேட்கும் நிலை வந்துவிட்டதே என்று கோபத்தில் வனிதா கைகளை பிசைய, “என் அப்பாம்மா என்னை தத்தெடுக்கும்போது நமக்கு ஒரு குழந்தை வேணும்னுதான் எடுத்தாங்களே தவிர, நம்மளை பார்த்துக்க ஒரு வாரிசு வேணும்னு நினைக்கல.
என் உயிர் உடம்புல இருக்கும்வரை என் அப்பாம்மாவை பார்த்துப்பேன். ஆனா, கஷ்டப்பட்டு நீங்க பெத்து வளர்த்த வாரிசுகள் உங்களை பார்த்துக்கிறாங்களா?” என்றாள்.
வனிதாவின் பெரிய மருகள் வனிதாவோடு பேசுவதற்கே யோசிப்பாள். நாராயணன் மருமகளும் அப்படித்தான். இந்த காலத்து பொண்ணுங்க அப்படித்தான், நீங்க அட்ஜஸ்ட் பண்ணிப்போங்க என்பான் மகன்.
இருவருக்கும் முகம் சிறுத்துவிட, வக்கில் வரவும் அமைதியானாள் முல்லை. “நீங்க சொன்னமாதிரி பத்திரம் பண்ணியாச்சு. முல்லை கையெழுத்து போட்டு ரிஜிஸ்தர் பண்ணிட்டா முடிஞ்சது” என்றார் வக்கில்.
பின்னே பத்திரத்தை வக்கில் வாசிக்க, “என்ன? தான செட்டில்மண்ட்டா?” என அதிர்ந்தார் வனிதா.
உயில் முல்லை பேரில் இருப்பதால் அவளிடமிருந்து தானம் பெற்றதாக இருக்குமே என்று ஆத்திரம் வந்தது. ஆனால் பலகோடி மதிப்பான சொத்து என்பதால் பொறுமையை இழுத்துப்பிடித்து, “தான செட்டில்மண்ட் வேணாம், கிரயம் பண்ணிக்கறோம்” என்றார் வனிதா.
“என்ன பண்ணனு முடிவெடுத்துட்டு கால் பண்ணுங்க” என்று வக்கில் கிளம்பிட, “தானமா கொடுக்குறோம். எங்க விருப்பப்டிதான் கொடுப்போம். என் பொண்ணுகிட்டயிருந்து தானம் வாங்கிக்க விருப்பமில்லைனா நீங்க கிளம்பலாம்” என்றார் ரங்கசாமி.
சத்யன், சரவணன் அறியாவண்ணம் வனிதா முல்லையை முறைக்க, கவனிக்காததுபோல் அமர்ந்திருந்த சத்யன், “என் தம்பி பொண்டாட்டியை முறைச்சி வீணா அந்த வீணாப்போனவனை நொள்ளை கண்ணனாக்கிடாதிங்க. நீங்க பண்ற ஒவ்வொன்னுக்கும் அவன்தான் டேமேஜ் ஆகுவான். பாவம் இன்னும் கல்யணாம் கூட ஆகல போல” என எச்சரித்தான் அழுத்தமாக.
நேற்று வனிதா கொட்டிய வார்த்தைகள் முள்ளாய் குத்த, “சொத்து வேணும்னுதான வந்திங்க? அதுவும் நைட் பனெண்டு மணிக்கு” என பிச்சை என்ற அர்த்தத்தோடு சொல்லி, “இப்போ அதைத்தான என் மகள் கொடுக்குறா? கேட்கும்போது இல்லாத கூச்சம் வாங்கும்போது வந்துடுச்சா?” என்றார் ஜானகி.
“தானமாத்தான் கொடுப்பேன், விருப்பமிருந்தா காலைல போன் பண்ணுங்க. இப்போ கிளம்புங்க” என ரங்கசாமி சொல்ல, இருவரும் கிளம்ப எழுந்தனர்.
முல்லை “உங்க நல்லதுக்குத்தான் சொல்றேன், பல வருசமா நெஞ்சுல முள்ளா குத்திட்டிருக்க முல்லையை தூக்கி எறிஞ்சிடுங்க. என்னை சுமக்குறதை விட்டுட்டு முகம் கொடுத்து கூட பேசாத மருமகளோடவும், அவங்களுக்கு சப்போர்ட் பண்ற உங்க மகனோடவும் எப்படி காலத்தை ஓட்டுறதுனு யோசிங்க.
இனி என் அப்பாம்மாக்கு எதாவது மன உளைச்சல் கொடுத்திங்க… என் அப்பாவே உங்களை மன்னிக்க சொல்லி கேட்டாலும், கண்டிப்பா மன்னிக்கமாட்டார் என் புருசன்” என எச்சரித்தாள் கடுமையாக.