கீர்த்தியின் கல்யாண பத்திரிக்கையைக் கையில் வைத்துக்கொண்டு கதிரவன் அந்த வீட்டின் ஹாலில் அமர்ந்திருக்க சேனாவின் விழிகள் சுற்றிலும் மாட்டப்பட்டிருந்த புகைப்படங்களில் பதிந்தது.
திலோத்தமாவின் தந்தையும் இரண்டாம் மனைவியும் தங்கள் பிள்ளைகளுடன் வாழும் வீடு அது, ஒரு இடத்தில் கூட அவளின் புகைப்படம் இல்லை காலடி சத்தத்தில் பார்வையை அங்கே பதிக்க கணவனும் மனைவியும் மேலிருந்து இறங்கிவந்தனர்.
“வாங்க வாங்க தம்பி, வெங்கிடேசன் அங்கிள் சொன்னார் உங்க தங்கச்சிக்கு கல்யாணம்னு, ரொம்ப சந்தோசம் மாப்ள என்ன பண்றார்” என்று சாதாரணமாகப் பேசினார்.
அவனும் மிகச் சுருக்கமாகவே பதிலுரைத்தான், இவர்களைத் திருமணத்திற்கு அழைக்கும் எண்ணமெல்லாம் அவனுக்கு இல்லை ஒன்றரை வருடமாக எங்கோ சென்று ஒளிந்துகொண்டு கண்ணாமூச்சி ஆடும் அவளைப் பற்றி ஏதேனும் தகவல் கிடைக்குமா என்று தெரிந்துகொள்ளவே வந்தான்.
அன்று கதிரவன் விடுதியில் விட்டுவந்த பிறகு திலோத்தமா யாருடனும் பேசவில்லை, புதிதாக ஒரு பழைய மாடல் போன் மட்டும் வாங்கிக்கொண்டாள், அலைபேசி என்னையும் மாற்றிவிட்டாள் எப்பொழுதும் படிப்பு மட்டுமே.
நடந்த ஏதும் அறியாத கீர்த்தி எப்பொழுதும் போல இருந்துவிட்டாள், திலோவிடம் வந்த மாற்றங்கள் அவளுக்குத் தெரியவில்லை, தேர்வுகள் அனைத்தும் முடிந்து அனைவரும் ஊருக்குச் செல்லத் தயாராயினர்.
கொஞ்சம் கொண்டாட்டங்கள் முடிந்து மறுநாள் செல்லலாம் என்று அனைவரும் முடிவு செய்திருக்க திலோத்தமா யாருக்கும் சொல்லாமல் வார்டனிடம் கூறிக்கொண்டு புறப்பட்டுவிட்டாள் நேரே சென்றது அவளின் தாத்தா வீட்டிற்கு பாரம்பரியமான பழையகால வீடு.
அதனுடைய சாவியை அவள் யாருக்கும் கொடுப்பதில்லை அவர்கள் குடும்பத்தில் பல வருடங்களாக வேலை செய்யும் மங்கா தவிர யாரையும் அந்த வீட்டிற்குள் செல்ல அவள் அனுமதிப்பதில்லை.
அது அவளின் உரிமை போராட்டம் தாயும் தந்தையும் தங்களுக்கான துணையை தேடி தனியே சென்றுவிட்டார்களே, இந்த வீடு அவளின் உணர்வுகளோடு கலந்தது பிறந்தது முதல் தாத்தாவின் மரணம்வரை அவள் வாழ்ந்த வீடு, இங்கே வந்துவிட்டாள் தாத்தாவுடன் இருப்பதை போன்ற பாதுகாப்பு உணர்வைத் தரும் ஆகையால் இங்கே வந்துவிட்டாள்.
மறுநாள் மங்காவுக்கு அழைத்து வீட்டுக்கு வரச்சொன்னாள் வந்தவர் “என்ன திலோமா இப்படி சொல்லாம வந்து நிக்குற நல்லா இருக்கியா, என்ன இப்படி எளச்சுட்ட சாப்பாடு ஒன்னும் சரி இல்லையா உடம்பு சரியில்லையா” என்று கேள்வியாய் கேட்டுத் துளைத்துவிட்டார்.
“அக்கா… அக்கா! எனக்கு ஒண்ணுமில்ல எக்ஸாம் டென்ஸன் அதான்” என்றவள் “வீட்டைக் கொஞ்சம் கிளீன் பண்ணுங்க என்றுவிட்டு குளித்துத் தயாராகி வந்தாள்.
“வீட்டுக்குப் போறியா திலோ” என்றவரை பார்த்தவள் “இதுதான் என் வீடு மங்காக்கா அது அவரோட வீடு, நான் கடைக்குப் போறேன் சமையலுக்கு தேவையான கொஞ்சம் பொருள் வாங்கணும்”.
“இந்தா நீ எதுக்கு இப்போ வெயில்ல போற குடு நான் போய் வாங்கிட்டு வரேன்”.
“இல்லக்கா எனக்குக் கொஞ்சம் வெளில போகணும் படிப்பு படிப்புனு மண்டை காஞ்சுருச்சு, நீங்கக் கிளீன் செஞ்சுட்டு பூட்டிட்டு போங்க நான் வர லேட் ஆகும்” என்றுவிட்டு தன்னுடைய ஸ்கூட்டியை எடுத்துக்கொண்டாள்.
நேரே பேருந்து நிலையம் சென்று வண்டியை விட்டவள் அங்கிருந்து பஸ் பிடித்து நத்தம் சென்றாள், அதுவரை ஒரு வேகத்தில் வந்துவிட்டவளுக்கு அதற்குமேல் என்ன என்று தயக்கம் வந்தது, அவனை ஒருமுறை பார்க்க வேண்டும் என்ற உந்துதலே இத்தனை தூரம் வரவைத்தது.
ஒரு முடிவோடு ஆட்டோ பிடித்து அவனின் ஜிம் இருக்கும் இடம் எது என்று விசாரித்து அங்குச் சென்றாள், தலையில் ஷால் இட்டு நன்றாக முகத்தை மறைத்துக்கொண்டாள், யாருடைய கவனத்தையும் கவராமல் அங்குச் சென்று நிற்க “சொல்லுங்க மேம் என்ன வேணும்” என்றான் உள்ளிலிருந்த வந்த ஒருவன்.
“கார்டு குடுங்க” என்று வாங்கிக்கொண்டவள் “பாத்துட்டு சொல்றேன்” என்று அங்கே ஒரு ஓரமாக அமர்ந்துகொண்டாள், அவன் “சரி” என்று உள்ளே சென்றுவிட திலோவின் விழிகள் அலைபாய்ந்தது அவனைத் தேடி.
கண்டுகொண்டாள் யாரோ ஒருவனுடன் பேசிக்கொண்டே வெளியில் வந்தவனின் முகத்தில் மிதமான புன்னகை, கையிலிருந்த பேப்பரில் முகத்தைப் புதைத்துக்கொண்டாள் உடன் வந்தவனை வழியனுப்பித் திரும்பிவந்தவன் அங்கு அமர்ந்திருந்தவளை ஒரு நொடி திரும்பிப் பார்த்து உள்ளே சென்றான், சட்டென்று அவன் நடை நின்றது.
“திலோ!…” என்றது அவன் உள்ளுணர்வு, அந்தக் கண்களை மட்டுமே பார்த்திருந்தான் வேக நடையில் திரும்பி வர அவள் அங்கில்லை, சென்றிருந்தாள் சி.சி.டீ.வியில் ஒன்றும் சரியாகத் தெரியவில்லை.
‘அவளேதான் ஏன் வந்தாள் ஏன் பேசாமல் சென்றாள்’ என்ற கேள்விமட்டும் அவனுள் குடைந்துகொண்டிருந்தது, பொருட்கள் ஒன்றும் வாங்காமல் வீட்டிற்கு திரும்பியிருந்தாள் திலோ.
அறைக்குச் சென்றவள் தன்னுடைய பேகில் மறைத்துவைத்திருந்த அவனுடைய சட்டையை எடுத்துக்கொண்டு கட்டிலில் விழுந்தாள் இதையே பல மாதங்களாகச் செய்கிறாள் அவன்சட்டையை இறுக்கமாக நெஞ்சோடு வைத்துக்கொள்பவள் சிறிது நேரத்தில் அதை விசிறியடிப்பாள்.
‘இந்தச் சட்டையைப் போட்டுக்கொண்டு அவளுடன் போயிருப்பானோ’ என்ற எண்ணம் தோன்ற அதற்குமேல் அழுகையில் கரையும் அவளுடைய இரவெல்லாம்.
ஏனோ அதைக் கடந்து வர முடியவில்லை அவளால், இடையில் கரண் வந்து அவளை மிரட்டியே சென்றிருந்தான் “இனிமேலும் உனக்காகக் காத்திருக்க முடியாது சீக்கிரம் திருமணம் செய்துகொண்டு சொத்துக்களை விற்க ஏற்படு செய் இல்ல இந்த வீட்டை இடிச்சு தள்ளிடுவேன், விக்குறதுக்குத்தான் உன் அனுமதி வேணும் இடிக்கறதுக்கில்லை” என்றான்.
“உங்களுக்கு எந்தச் சொத்து வேணுமோ எடுத்துக்கோங்க அதுக்காக நான் கல்யாணம் செஞ்சுக்க முடியாது திரும்ப என்னைக் கட்டாயப்படுத்துனா அதுக்கப்புறம் என்னை நீங்கப் பாக்கவே முடியாது” என்றாள்.
ஒருமாதம் பொறுத்த கரண் மீண்டும் வந்து பிரச்சனை செய்தான் இந்த முறை கோபமாக அவனிடம் கத்தியவள் சில முடிவுகளை எடுத்துவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டாள், எங்கிருக்கிறாள் என்ன? ஒன்றும் தெரியவில்லை.
கீர்த்தியின் திருமணம் அவளின் அத்தை மகனுடன் முடிவாகியிருந்தது நண்பர்கள் அனைவருக்கும் அழைப்பு விடுத்திருந்தாள், திலோத்தமாவை தொடர்புகொள்ள முடியவில்லை.
சேனாவின் நிலை கதிருக்குப் புரிந்தது அவள் எங்கு என்று தெரியாமல் தவிக்கிறான், கீர்த்தியின் திருமணத்தைச் சாக்காக வைத்துத் திலோவின் வீட்டிற்கு சென்று பார்க்கலாம் என்ற எண்ணம் தோன்ற சேனாவிடம் அதைப் பற்றிப் பேசினான்.
“இல்ல வேண்டாம்” என்று முதலில் மறுத்தவன் “எங்கடா போயிருப்பா” என்றான் தவிப்பாக.
“முடிஞ்சவரைக்கும் தேடிட்டோம் இதையும் முயற்சி செஞ்சு பாக்கலாமே” என்றான் கதிர்.
அவளைக் குன்னூரிலிருந்து அனுப்பியபிறகு இரண்டு மாதங்கள் அவன் நத்தம் வரவில்லை, தன் மீதே வெறுப்பு கோபம் இயலாமை அனைத்தும் அவன் நிம்மதியை பறித்தது, கீர்த்திக்கு திருமணம் செய்யலாம் என்று வீட்டினர் பேச அப்பொழுத்துதான் திரும்பி வந்தான்.
“பிரெண்ட்ஸ் எல்லார்க்கும் கீர்த்தி பத்திரிகை அனுப்பிட்டா போன்ல சொல்லிட்டா, திலோக்கு கூப்பிட்டா போகவே மாட்டது சரி நமக்குத் தெரிஞ்ச பொண்ணுதானே நேர்ல பாத்து குடுத்துடலாம்னு நாங்களே வந்துட்டோம், எல்லா பிரெண்ட்ஸும் வருவாங்க திலோ வரலைனா எப்படின்னு கீர்த்தி வருத்தப்பட்டுச்சு” என்று கதிரவன் சொல்லியதை கேட்டவர்கள் கீர்த்தியும் திலோவும் மிகவும் நெருங்கிய தோழிகள்போல என்று நம்பிவிட்டார்கள்.
“அவ இங்க இல்லைங்களே” என்றார் கரண்.
“அது தெரியுது” என்ற சேனாவின் பார்வை கரணை குற்றம் சாட்டியது “இந்த வீட்டில உங்க பொண்ணு போட்டோ ஒண்ணுகூட இல்லையே” என்றவனை பார்த்த கரண் ‘அதை இவன் ஏன் கேட்கிறான்’ என்பதாக அவனைக் கூர்ந்து நோக்க.
“அவ எங்களோட நின்னு எடுக்கமாட்டா” என்றாள் கரணின் இரண்டாம் மனைவி
“அவளுக்கு எப்படி எடுக்கப் பிடிக்குதோ அப்படி எடுக்கலாமே” என்றவன் “எக்ஸாம் முடிஞ்சு வந்தாளா” என்க.
“நீங்க ஏன் இதெல்லாம் கேக்குறீங்க” என்றான் கரண்.
“பொண்ணை பத்திரமா கூட்டிட்டுவர என்கிட்டே சொல்றதுக்கு முன்னாடி இதை யோசிச்சிருக்கணும்” என்றவன்.
“இன்னும் பதில் வரல, பொண்ணு எங்க போனான்னு தெரில, நீங்கத் தேடின மாதிரியும் தெரில எங்க இருக்கா என்ன ஆச்சு எதுவுமே உங்களுக்குத் தெரியவேண்டாமா”.
“அப்படிலாம் ஒன்னும் எங்கயும் தொலைஞ்சு போகல, இருக்குற இடம் மட்டும்தான் சொல்லல மத்தபடி மங்காவுக்கு எல்லா ஞாயித்து கிழமையும் போன் போட்டுப் பேசுறா” என்க.
“யார் மங்கா?” என்றான் சேனா.
“பெரியவீட்டில வேல செய்ற அம்மா என் மாமனார் காலத்துல இருந்து அவங்கதான் அங்க வேலை செய்றாங்க” என்றான் கரண்.
“உங்க அக்கறை சக்கரை எல்லாம் எங்களுக்கும் தெரியுது, மங்கா நம்பர் வேணும் அவ்ளோதான்” என்று எழுந்து நின்றவனை பார்த்துக் கரணும் எழுந்துகொண்டான்.
“சொத்து கைக்குக் கிடைக்க நானும் சேந்து கையெழுத்து போடணும், இல்லனா இந்த ஜென்மத்துல சல்லிக்காசு கைக்கு வராது” என்றவனை அதிர்ச்சியோடு பார்த்தனர் கணவன் மனைவி இருவரும்.
மங்காவை அழைத்துப் பேச அவர் பிடிகொடுக்கவில்லை “இல்லை தெரியாது ரொம்ப நாள் ஆச்சு பேசி” என்றே சொல்லிக்கொண்டிருக்க கதிரிடமிருந்து அலைபேசியை வாங்கியவன் “அப்போ உங்களுக்கும் அவ இங்க வரக் கூடாது, இந்தச் சொத்துல உங்களுக்கும் பங்குத்தறேன்னு சொன்னாரா அவ அப்பா” என்க.
“என்ன தம்பி இப்படி எல்லாம் பேசுறீங்க, அது நான் தூக்கி வளத்த கொழந்த அதுக்கு கொஞ்சம் நிம்மதி கிடக்குதுன்னா போகட்டும்னு நெனச்சுதான் போகச்சொன்னேன்” என்றவரிடம் அவரின் முகவரியை வாங்கிக்கொண்டான்.
நேரே அவர் வீட்டிற்குத்தான் சென்றனர் “பரீட்சை முடிஞ்சு வந்து கொஞ்ச நாள் இங்கதான் இருந்துச்சு தம்பி, எப்போவும் ஏதோ யோசனையில் இருக்கும் சில நேரம் அழும், தனியா விட எனக்குப் பயமா இருந்துச்சு அதனால நானும் என் பேத்தியும் ராத்திரி அங்கபோய் படுத்துப்போம்”.
“பெரியய்யா இறந்தத்துக்கப்புறம் பகல் எல்லாம் இங்க இருந்தாலும் ராத்திரி அவங்க அப்பாரு வீட்டுக்குப் போயிடும், இந்தத் தடவ இங்கேயே இருந்துருச்சு சின்னையா வந்து சத்தம் போட்டாரு, அப்பவும் போகல ஒருநாள் வீட்டை இடிக்கிற வண்டியைக் கொண்டுவந்து வீட்டோட வெளிச்சுவரை இடிச்சுட்டாரு”.
“கல்யாணத்துக்கு ஒத்துக்கலைனா இந்த வீட்டை மொத்தமா இடிச்சு தரைமட்டமாக்கிடுவேன்னு மிரட்டுனாரு, புள்ள ரொம்ப மன்சோடிஞ்சு போயிடுச்சு வக்கீல் அய்யாவை கூப்பிட்டு கல்யாணம் செஞ்சுக்காம சொத்தை விக்க ஏதாவது வழியிருக்கா கேட்டுச்சு அவர் இல்ல சொல்லிட்டாரு”.
“எனக்குச் சொத்தை விக்க உரிமை இருக்கானு கேட்டுச்சு, இருக்கு… ஏற்பாடு பண்ணலாம் ஆனா எல்லாத்தயும் அப்படி பண்ண முடியாதுன்னு சொன்னாரு, அப்போதைக்கு தோப்பை மட்டும் வித்து அப்பா அம்மா ரெண்டுபேருக்கும் பணத்தை குடுத்துடுச்சு, அடுத்த ஒரு வாரத்துல எனக்கு இங்கேயும் நிம்மதியில்லை மங்கம்மா நான் வேற ஊர் போறேன் போன் பண்றேன் வீட்டை மட்டும் நல்லா பாத்துக்கோன்னு சொல்லிட்டு போச்சு, வாராவாரம் போன் போடும் எங்கேயிருக்குனு எனக்கும் தெரியாது தம்பி” என்றார் அவர்.
மீண்டும் ஆரம்ப கட்டத்திற்க்கே வந்ததைப் போல மலைப்பாய் இருந்தது, சேனாவின் அலைப்பேசி அடித்து அடித்து ஓய அது எடுக்கப்படாமலே இருந்தது, திலோவின் பூர்விக வீட்டின் முன்னே ஜீப்பை நிறுத்தி வைத்து வீட்டின் முன்னில் வராண்டாவில் அமர்ந்திருந்தனர்.