அன்பரசு சென்று ஒரு வாரம் முடிந்திருக்க, அன்பரசுக்கு அழைத்து, “எப்படிடா இருக்க? எப்போ வருவ?” என்றான் சத்யன்.
“நான் வரது இருக்கட்டும், நீ என்ன கால் பண்ணியிருக்க? எதாவது முக்கியமான விசயமா?” என்றான்.
“ம் முக்கியமான விசயம்தான், அதுக்கு முன்ன நீ எப்போ வரனு சொல்லு”
“இன்னும் இரண்டே வாரம். அதுக்கப்புறம் ஒரு மாசத்துக்கு அன்பு ஃப்ரீ” என்றான் சந்தோசமாக.
தானும் சந்தோசித்தவன், ஒரு கம்பெனியின் பெயரை சொல்லி, “கம்பெனி ஆரம்பிச்சு மூனு வருசம்தான் ஆச்சு. லாஸ்ல போய்ட்டிருக்கு, ஷேர்ஹோல்டரா ஜாயின் பண்றேன், குவைத்ல விட வருமானம் கம்மியாதான் வரும், ஆனா போக போக பிக்கப் பண்ணிக்கலாம்” என்றான்.
“சத்யா… நீ சொல்றதெல்லாம் உண்மைதானா?” என்றான் நம்ப முடியாமல்.
“என் பொண்டாட்டி என்னை ரொம்ப தேடுறா, இனியெல்லாம் குவைத்ல இருக்க முடியாது” என்றான் உல்லாசமாக.
இப்படி தருணம் வரும் என எதிர்பார்த்தான்தான், ஆனால் இத்தனை சீக்கிரம் என நினைக்க, “சத்யா” என பெரிதாய் கத்தினான் பெரும்மகிழ்வோடு.
“ம், உன் கல்யாணத்துக்கு வரும்போதே ரிஸைன் பண்றேனு இன்ஃபார்ம் பண்ணிட்டுதான் வந்தேன், இன்னைக்கு போய்ட்டு ஃபார்மாலிட்டீஸ் முடிச்சு செட்டில்மண்ட் வாங்கிட்டு பத்து நாள்ல வந்திடுவேன், இது எதுவும் எருமைக்கு தெரியாது, குவைத் போறேனு உர்ருனு இருக்கா”
‘ம்… அண்ணிம்மாக்கு அவ்வளோ லவ் ஆகிடுச்சா?‘ என பெருமையாக நினைக்க, “சரி நீ பாரு” என இணைப்பை துண்டித்து, தனதறையிலிருந்து வெளியே வந்தான் சத்யன்.
கிளம்புவதை முல்லையிடம் சொல்ல நினைத்து “முல்லை எங்க சுகந்தி? ரொம்ப நேரமா ஆளைக் காணோம்.” என்றான்.
முல்லை வீட்டிற்கு வெளியே என்று சொல்லும் அளவிற்க்கெல்லாம் இன்னும் சத்யனை நெருங்கவில்லை சுகந்தி. ஆதலால், “அன்புதான் இல்லையில்ல, ஒருவாரம் அவ அம்மா வீட்டுல இருந்துட்டு வரேனு போயிருக்கா” என்றாள்.
“ஓ… சரி அப்போ போகும்போது வீட்டுக்கு போய் சொல்லிட்டு போலாம்” என்றான்.
கட்டினவன் வெளிநாடு போறானேனு கொஞ்சமாவது பதறுறாளா? என மகளை முறைத்து, “நீ சத்யனை கூட்டிட்டு போ, இன்னைக்கொருநாள் பேத்தியை நான் அழைச்சிட்டு போறேன்” என்ற அன்னையை முறைத்து அறைக்குள் சென்றாள்.
உள்ளே வந்தவன், “பாட்டு க்ளாசுல விடனும்னு எதுக்கு சாக்குபோக்கு சொல்லிட்டிருக்க? வர விருப்பமில்லைனா வர வேணாம் போடீ” என கடுகடுத்து தனது உடைமைகளை பேக் செய்ய ஆரம்பித்தான்.
உடம்பும் மனசும் தேடுதுனு சொல்லிவிட்டு ஒரு வாரமாக தன்னோடு இருந்தும் வெறும் அணைப்போடு கிளம்புகிறோனே என்ற தவிப்பு சுகந்தியினுள் இருக்க, சத்யன் ஊருக்கு செல்வதில் விருப்பமேயில்லை.
கோபத்தில் தற்போது சென்றால் எப்பொழுது வருவான் என்றும் கேட்க மறந்திருந்தாள். “சும்மா போய்ட்டு போய்ட்டு வர வேலை வேணாம். முன்ன மாதிரி அங்கையே இருந்துக்கோ. இங்க வந்து நீதான் வெட்டி முறிச்சாகனும்னு ஒரு வேலையும் இல்ல” என்றாள் முறைப்பாக.
உள்ளுக்குள் சிரித்தவன் முகம் இலகுவாக, “எப்போடா வருவ?” என்றாள் முறைப்போடே.
சுகந்தி முகம் சோர்ந்திட, நானா இழுத்து மேல போட்டுக்கிட்டாலும் மரக்கட்டை மாதிரி கிடக்குறா, இதுல நான் இல்லாததுதான் பெரிய குறைச்சல் மாதிரி ரியாக்ஷன். என கடிந்தபடி உடமைகளை தயார் செய்தவன், “வரியா, இல்ல கேப் புக் பண்ணட்டா?” என்றான்.
காலை ஜனனி பள்ளிக்கு கிளம்பும்போதே இன்று கிளம்பிடுவேன் என்று மகளிடம் சொல்லியிருந்தான் சத்யன். முகம் வாடினாலும் ஜனனிக்கு இது பழக்கம்தான் என்பதால் ’சரி பெரியப்பா என்றிருந்தாள் சிறுமி.
“ஏழு வயசு பொண்ணு கூட என் சூழலை புரிஞ்சு போய் வாங்க பெரியப்பானு சொன்னா. இந்த எருமைக்கு ஏதும் புரியறதில்ல” என்ற நொடிப்போடு வெளியேறியிருந்தான் சத்யன்.
பின்னே சுகந்தி உடை மாற்றி வர, மாதவன் மற்றும் கல்பனாவிடம் சொல்லி கிளம்பினார்கள் இருவரும். முல்லை வீட்டிற்கு சென்று ஜானகி ரங்கசாமியிடம், “இனி யாரும் உங்களை தொல்லை பண்ணமாட்டாங்க. உடம்பை பார்த்துக்கோங்க. பத்திரமா இருங்க” என்று தைரியம் சொல்லி, முல்லையிடம் “அன்புக்கு ரொம்ப ஃப்ரீடம் கொடுக்காதம்மா, சும்மாவே வேலை வேலைனு ஓடுவான். அப்பப்போ பொண்டாட்டி இடத்தை காட்டனும்” என்று சிரிப்போடு எடுத்துரைத்து கிளம்பினான்.
சற்று நேரத்திற்கு பிறகு ஹைவேயில் பயணித்துக்கொண்டிருக்க, “ஹம்… நல்லாத்தான் ஓட்டுற” என்றான் மெச்சுதலாக.
இவள் நில்லாமல் செல்ல, “ஒரு முத்தத்துக்கு வழியில்ல. ஆனாலும் இவளை பார்த்து ஏங்கிட்டு நான் இங்கயே இருக்கனும்” என்றான் முறைப்பாக.
“அதெல்லாம் எனக்கு வராது” என்றாள் சன்னக்குரலில்.
தன்னிடமிருந்த ஒரு போட்டோவை சுகந்திக்கு அனுப்பி வைத்தவன், “என் போட்டோவை அனுப்பியிருக்கேன், தினமும் அதுக்கு முத்தம் கொடுத்து பழகு. நல்லா பழகின பின்ன எனக்கு கால் பண்ணு, நேர்ல வாங்க வந்துடறேன்” என்றான் மைய்யலாக.
“நாளைக்கே கால் பண்ணினா வந்துடுவியா?” என முறைக்க,
“ஹா ஹா… நீயாவது நாளைக்கே கால் பண்றதாவது- நான் வர இரண்டு மாசத்துக்கு மேல ஆகும். அதுக்குள்ளயாவது பழகுறியா பார்ப்போம்” என்றான் சவாலாக.
சுகந்தி அமைதியாகிட, மேலும் பத்து நிமிட பயணத்திற்கு பிறகு ஏர்போர்ட் வந்திட, காரை நிறுத்தி அமைதியாக அமர்ந்திருந்தாள். “உள்ள வரமாட்டியா?” என்றான்.
“இல்ல, இப்படியே கிளம்பறேன்”
சுகந்தியின் கையைப் பற்றி தனது நெஞ்சோடு சேர்த்து பிடித்து, “என்னை நீ புருஷனா ஏத்துக்கிட்டதே லட்சம் முத்தம் கொடுத்ததுக்கு சமம்” என்று அவளின் கைக்கு முத்தமிட்டு, “பத்திரமா போ, வீட்டுக்கு போனதும் கால் பண்ணு” என்று கனிவாக சொல்லி இறங்கினான்.
சுகந்தி காரெடுத்த வேகத்திலேயே தன்னோடான பிரிவின் கோபம் புரிய, சிரித்தவாறு பார்த்திருந்தவன் தனது கண்களிலிருந்து கார் மறைந்த பின்னே வளாகத்தினுள் நுழைந்தான் இதமான மனநிலையோடு.
*** *** *** *** *** ***
அன்பரசு சென்ற நான்காம் நாள், ரங்கசாமி ஜானகி பாதுகாப்பு கருதி ஆதிராஜின் உறவுக்காரன் விஷாலை ரங்கசாமி வீட்டில் தங்கும்படி கேட்டிருந்தான்.
இரவில் மட்டும் ரங்கசாமி வீட்டில் தூங்க மாதம் ஐந்தாயிரம் சம்பளம் என்பதால் அவனும் சம்மதிக்கவே, ரங்கசாமியிடம் சொன்னான்.
ரங்கசாமி மறுக்க, “உங்க தம்பி, அக்காக்கு பயந்து இல்லப்பா, உங்களுக்காகத்தான். மிட்நைட்ல ஏதும் உடம்புக்கு முடியலைனா கால் பண்ணி சொல்லவாவது ஆள் வேணும்ல? படிக்கிற பையன்ப்பா, நம்ம வீட்டுல இருந்து அவனும் பீஸ்ஃபுலா படிப்பான். அவன் உங்களோட இருந்தா நானும் தைரியமா இருப்பேன்” என கெஞ்சி சம்மதிக்க வைத்திருந்தாள் முல்லை.
கணவனை இன்முகத்தோடு அனுப்பும்போது இருந்த தைரியம் அன்பரசு சென்று ஒரு வாரத்திலேயே காணாமல் போயிருந்தது முல்லைக்கு.
தாய் தந்தையின் பாதுகாப்பு முல்லைக்கு மிக முக்கியமான விசயம். அதை சுலபமாக கையாண்டிருந்த கணவன் மேல் மேலும் மேலும் காதல் கூடியது.
இரண்டு வாரங்கள் முடிந்திருக்க, ஹாலில் அமர்ந்து ஜனனிக்கு கணிதம் சொல்லிக் கொடுத்துக்கொண்டிருந்த முல்லைக்கு அன்பரசிடமிருந்து அழைப்பு வந்தது. பேசினால் அழுதிடுவோமோ என அழைப்பை துண்டித்து, ஜனனிக்கு பாடம் சொல்லிக்கொடுத்து கொண்டிருப்பதாக குறுஞ்செய்தி அனுப்பினாள்.
இதெல்லாம் ஒரு காரணமா என்று சந்தேகம் தோன்ற மீண்டும் அழைத்தான் அன்பரசு. அழைப்பை ஏற்று, “ம்” என்றாள்.
“பாப்பாகிட்ட கொடு” என்றான்.
முல்லை ஜனனியிடம் கொடுக்க, “அம்மா நல்லா சொல்லி தராங்களாடா?” என்றான்.
“ம் சூப்பரா சொல்லி கொடுப்பாங்களே”
“இன்னைக்கு நல்லா சொல்லி கொடுத்தாங்களா?”
“ம்” என்றாள் உற்சாகமாக.
“ஹம் சமத்தா படிக்கனும்” என்று அறிவுறுத்தி, “அம்மாகிட்ட கொடு” என்றான்.
“நா… நான் அப்புறம் பேசுறேன்” என இணைப்பை துண்டிக்க நினைக்க, “ப்பா, நெக்ஸ்ட் வீக் காம்படேஷன் இருக்கு, ஹோம் ஒர்க் முடிச்சிட்டு ப்ராக்டீஸ் பண்ணனும், போனை வைங்க” என்ற ஜனனியின் மிரட்டலில் “சரிடா சரிடா” என சிரிப்போடு இணைப்பை துண்டித்தாலும் குண்டுமல்லி வாடின மாதிரி தெரியுதே என யோசித்தான்.
ப்ச் கதவை தாழ்போடாம தூங்க சொல்ல மறந்துட்டேனே என நினைத்தவன், பத்து மணிபோல போய்டுவோம், அதுக்குள்ள தூங்கிடுவாளா என்ன? என முல்லையின் கனவோடு பயணித்தான் அன்பரசு.
இரவு பதினொரு மணிபோல வீட்டிற்கு வர, அனைவரும் உறங்கியிருப்பார்கள் என தன்னிடம் உள்ள சாவியால் சத்தமின்றி கதவை திறந்து உள்ளே வந்து தனதறைக் கதவை தட்ட, இந்த நேரத்துல யாரா இருக்கும்? ஒருவேளை அப்பாக்கு ஏதும் என்ற பதட்டத்தோடு அவசரமாக கண்களை துடைத்துக்கொண்டு கதவைத் திறந்தவளுக்கு கண்ணிர் பெருகியது அன்பரசைக் கண்டதும்.
“ஹேய் முல்லை” என நெருங்க, அணைத்துக்கொண்டாள் இறுக்கமாக. தானும் அணைத்தபடி நின்றிருந்தான் ஐந்து நிமிடம் வரை. பிறகு முல்லையை விலக்கி கதவை தாழிட்டு, “குளிச்சிட்டு வந்திடறேன்” என்றவனை தவிப்பாய் பார்த்தாள் முல்லை.
“அஞ்சே நிமிஷம்” என உள்ளே போக முயல, “வரேனு சொல்லவேயில்ல? சாப்பிட்டிங்களா? வீட்டுல ஏதும் இருக்கானு தெரியலையே” என்றாள் கவலையாக.
“சாப்பிட்டுத்தான் வந்தேன்” என்று குளித்து வந்தவனுக்கு தன்னை மிகவும் தேடியிருக்கிறாள் எனப்புரிந்தது. மன்னிப்பு கோர நினைத்தபோதும், இன்னும் சில வருடங்களுக்கு இப்படித்தான் இருக்க நேரும். பொய் ஆறுதல் சொல்வதை விட, நிதர்சனத்தை எடுத்துரைப்பதே நல்லது என, முல்லையருகே நெருங்கியமர்ந்து, “எதாவது மனசுல பட்டா சொல்லனும் முல்லை” என்றான் வருத்தமாக.
“உங்க சுட்டிவேஷன் புரியுது. கொஞ்சம் கேப் கிடைச்சாலும் கால் பண்ணி பேசிடுறிங்க”
“எல்லாம் தெரிஞ்சாலும் ரூமை சாத்திட்டு அழறதுதான் உன் புரிதலா? கண்ணெல்லாம் எப்படி சிவந்திருக்கு”
அன்பரசு முல்லையையே பார்த்திருக்க, “தண்ணி கூட குடிக்கலையே” என எழுந்தவளை இழுத்து அணைத்துக்கொண்டவன், “தண்ணி வேணும்னா கேட்பேன், இல்ல நானே எடுத்துப்பேன், எப்பவும் என் சைடே யோசிக்காத. உன் விருப்பத்தையும் உரிமையா சொல்லனும். இத்தனை நாள் விட்டுட்டு போனதால ரூம்க்குள்ளயே விட்டுருக்கக்கூடாது, நானா தண்ணி கேட்டாலும் கொடுக்காம சண்டை போடனும். புரியுதா?” என்றான் குழைவாக.
“சண்டையா?” என அதிர்வாய் விழிக்க, “ம் சண்டைதான். இப்போ எனக்கு நீ வேணும். ஆனா முடியாதுனு மறுப்பு சொல்லு, என்னை நெருங்க விடாத” என்றவன் இதழை ஆக்ரமிக்க, மூச்சு விட திணறிய போதும் மறுக்கவில்லை முல்லை.
கண்கள் மூடியிருந்த போதும் முல்லை இதழ்களின் நளின அசைவுகள் சொன்னது அவளின் நாணத்தை. கூடலுக்கு பிறகான முல்லையின் வெட்கம் அன்பரசனை மேலும் மேலும் பித்தாக்க, கட்டில் பாடங்கள் கடினமானது.
முல்லையினுள் தன்னை தொலைத்து நிறைத்த பின்னும் தன்னை கட்டுப்படுத்த இயலாமல் “கண்ணைத் திறந்து என்னை பாருடீ” என மனைவிடமே கெஞ்ச, கண் மலர்ந்ததோடு புன்னகையை பதிலாய் கொடுத்து அன்பரசு மார்பிலேயே தலைசாய்த்தாள் துவண்டவளாக.