கடம்பன் குன்று – 7
விகர்ணனின் உயிர் அவன் உடலை விட்டு நீங்கிய நொடி, தன் எஜமானர் புலிப்பாணி சித்தரின் காலடியில் அமர்ந்திருந்த புலியார் ஒரு சின்ன திடுக்கிடலுடன் எழுந்து கொண்டார்.
“விகர்ணா!இப்படி என்னைச் செய்ய வைத்துவிட்டாயே. உன் உயிரினை எடுத்த பாவத்தினை நான் ஏற்பது போல் ஆகிவிட்டதே” என்று எண்ணிய புலியார் சஞ்சலத்துடன் தன் குருநாதரை ஏறிட்டார். தன் ஆத்ம சீடனின் மனக் கவலையை உணர்ந்த புலிப்பாணி சித்தர், புலியாரின் கவலைப் போக்க எண்ணினார்.
“விகர்ணனுக்கும் உங்களுக்கும் இருந்த ஆழமான நட்பை பற்றி நன்கு நான் அறிவேன் புலியாரே!” என்று மொழிந்த புலிப்பாணி சித்தர்,
“அவரவருக்கு விதித்த பயனை அவரவர் அனுபவித்தே ஆக வேண்டும் என்பது நியதி. இறை வழிபாட்டின் மூலம், நடக்கவிருக்கும் பெரும் துயரங்களின் அளவைச் சுருங்கச் செய்ய இயலுமே தவிர முற்றிலும் நீக்குதல் நடாவத காரியம் அல்லவா! அது போலத்தான் இதுவும்.”
“விகர்ணனின் பிறவிக்கான பயன் முடிந்தவுடன் அவன் விதி முடிவு வெற்றுவிட்டது புலியாரே. அவன் இறப்பிற்கு தங்கள் மீது பழி போட்டுக் கொண்டு வருந்துவது அறிவீனம். ஆழ்ந்த நுண்ணறிவு பெற்றிருக்கும் தாங்கள் இப்படி கவலை கொள்வது சரியன்று” என்று கூறினான் புலிப்பாணி சித்தர்.
“அவன் விதி என்னால் முடிய வேண்டும் என்பது பற்றிய கவலை என்னை மிகவும் மனவருத்தம் கொள்ளச் செய்கிறது குருவே”
“ஆடுபவனும் அவனே, நம்மை ஆட்டுவிப்பனும் அவனே.எல்லாம் ஈசனின் திருவிளையாடல் அல்லவா. அதனால் விதியின் செயலை மீறி எவராலும் எதையுமே சாதிக்க இயலாது என்று உணர்ந்து கொள்ளுங்கள். விகர்ணன் குறித்தும், முக்கியமாக ஸ்ரீ சண்முகரின் சிலை குறித்தும் வீண் கவலை கொள்ள வேண்டாம்”
“அய்யனே, விகர்ணன் எனது தோழன் மட்டுமல்ல. தாங்கள் இங்கில்லாத இந்த 9 ஆண்டுகளில் அனுதினமும் அவனுடன் நான் பயணித்து உள்ளேன். பல சந்தர்ப்பங்களில் பல இன்னல்களில் இருந்து அவன் என்னைக் காத்துள்ளான். அவன் என் பாதுகாவலன். அப்படி இருக்கையில் அவனது இறப்பிற்கு நானே காரணம் ஆகிவிடுவேன் என்று ஒருநாளும் நான் எண்ணியதில்லை. இதை நினைக்கையில் என் மனம் மிகுந்த துக்கம் கொள்கிறது.”
“ஆசை, கவலை, துக்கம் இதெல்லாம் துறந்தவர் தான் சித்த புருஷராக இயலும் புலியாரே. தங்களது அறிவீனம் என்னை ஆச்சர்யமூட்டுகிறது. விகர்ணன் மானிடன். அவன் சித்த புருஷனல்ல. அவன் அச்சிலையின் மீது கொண்டிருந்த பக்தியும், தன் நாட்டு மக்கள் மட்டுமே நலம் பெற வேண்டும் என்று எண்ணிய சுயநலப்போக்குமே அவனது இன்றைய நிலைக்குக் காரணம் என்பதை அறிவீராக”
“ஐயனே! இவன் என் அறிவிற்குப் புலப்படுகின்றன. ஆனான் விகர்ணனின் மேல் பாசம் கொண்டு விட்ட என் மனம் சமாதானம் ஆக மறுக்கிறது.”
“பாசப்பிணைப்பைத் துறந்து ஈசன் நினைவு ஒன்று மட்டுமே நமது வழித்துணை என்று நினைவில் கொள்ளும் புலியாரே!”
“விகர்ணனையும் சிலையையும் திரும்ப தேடிக் கண்டுபிடிக்க நான் செல்ல எனக்குத் தாங்கள் ஏன் அனுமதி அளிக்கவில்லை ஐயனே? நீர்வீழ்ச்சியில் இருந்து குதிக்க முற்பட்ட நான், என் மனதில் எதிரொலித்த தங்களின் குரல் கேட்டு ஸ்தம்பித்துப் போனேன். “வேண்டாம். விகர்ணன் செல்லட்டும். விட்டுவிடுங்கள்” என்று தங்களின் கட்டளை அசரீரியாய் என் மனதில் கேட்டதும் நான் தங்களின் கட்டளையை ஏற்று விகர்ணனைப் பின் தொடர்வதை நிறுத்திவிட்டேன்.”
“தங்களின் ஆதங்கம் எனக்குப் புரிகிறது புலியாரே. ஒரு வேளை நீர்வீழ்ச்சியில் தாங்கள் குதித்திருந்தால், தங்களால் நீர் சுழலில் இருந்து தப்பித்திருக்க இயலாது. மேலும், விகர்ணனைத் தொடர வேண்டாம் என்ற என் கட்டளை உண்மையில் என்னுடையதன்று. என் வாய்மொழியாக வந்துசேர்ந்த என் குருநாதர் போகரின் கட்டளை அது.”
“போகர் பெருமானின் கட்டளையா? அப்படியென்றால் சிலை களவு போனதைப் பற்றிய சஞ்சலம் அவருக்கு இல்லாமல் போவானேன் ஐயனே?” என்று புலியார் கேட்டதற்கு, புலிப்பாணி சித்தர், மந்தகாசமான புன்னகை ஒன்றைச் சிந்தினார்.
“நாடு, நிலம், மக்கள் என எல்லாவற்றையும் கடந்த சித்தன் என் குருநாதர். அவர் ஒரு விஷயம் கூறினால் அதற்கு ஆயிரம் அந்தர்ங்கள் இருக்கும் என்று தங்களுக்குத் தெரியாதா புலியாரே. மானிடர்களுடன் பழகிப் பழகி மானிடர்களைப் போலவே கவலை கொள்ளத் துவங்கி விட்டீரா?” என்ற புலிப்பாணி சித்தரின் கேள்வியைக் கேட்டு சற்றே வெட்கம் கொண்டது புலியார்.
புலிப்பாணி சித்தர் மேலும் தொடர்ந்தார், “என் குருநாதரது நிஷ்டையில் ஸ்ரீ சண்முகரை பிரதிஷ்டை செய்யும் இடமானது இந்த நிமிடம் வரையிலும் காட்கியளிக்கவே இல்லை. குவிகப் பிழை போலே அவர் சிந்தையில் இருந்து இவ்விஷயம் நீங்கிக் கொண்டே செல்கிறது. விகர்ணன் சிலையை எடுத்துக்கொண்டு சென்றுவிட்டான் என்று தாங்கள் என்னிடம் வந்து கூறிய பொழுது அதை நான் போகரிடம் தெரிவிக்க நேர்ந்தது.”
“அப்போது போகர், சிலையை தேடிச் திரும்ப செல்ல வேண்டாம் புலிப்பாணி. உன் சீடனை திரும்ப உன்னுடன் அழைத்துக் கொள். ஸ்ரீ சண்முகர் தன் பயணத்தைத் துவங்கி விட்டார் போலும். நாமும் நம் பயணத்தைத் தொடர சித்தமாவோம். நாம் மேரு மலைக்குச் செல்ல ஏற்பாடுகளை கவனிக்கவும்.” என்று கட்டளையிட்டுவிட்டார் என் குருநாதர் போகர். அக்கட்டளையையே யான் உமக்கு உரைத்தேன்.” என்று மொழிந்த புலிப்பாணிச் சித்தர், தன் ஆத்ம சீடனான புலியாரை அர்த்தத்துடன் பார்வையிட்டார்.
“விளங்குகிறது ஐயனே. என் அறிவீனத்தை மன்னித்து என்னை ஆட்கொள்ளுங்கள். என் மூடமதியை நினைத்து நான் வெட்கம் கொள்கிறேன்” என்று தன் எஜமானனின் தாழ்களை வணங்கியது புலியார்.
*********
சில நூறு வருடங்களுக்குப் பிறகு,
ஆயர் குடி என்னும் கிராமம்.
இளமாலை வெயில் கிராமத்தினைச் சூழ்ந்திருந்த அந்தி சாயும் நேரம் அது. மரத்தின் நிழல் நீளவாக்கில் கிழக்கு பார்த்திருக்க, அந்த பெரிய ஆலமரத்தில் ஏராளமான பறவைகளின் கூச்சல் ஒலி காதுமடலை மோதியது. அவ்வொலிக்கு இணையாக, காலையில் மேய்ச்சலுக்குச் சென்றிருந்த ஆடு மாடுகளின் மாலையில் வீடு திரும்ப, அவற்றின் கழுத்து மணிச்சத்தம் தெருக்களை ஆக்கிரமித்திருந்தது.
“ட்ரே.. ட்ர்ர்ர், ட்ர்ர்ர்” என்று தனியே பிரிந்து செல்லும் ஆடுகளை வழிநடத்திக் கொண்டே நடந்த இடையர்களின் சப்தமும் அங்கங்கே ஒலிக்க, அந்த சிறு கிராமம் மாலைவேளையில் பரபரப்பாக காணப்பட்டது.
தன் ஆட்டு மந்தைகளை வேகமாக அந்த ஆலமரத்தின் அடியில் கொணர்ந்து நிறுத்திய விருதய்யன், நொடி நேரம் தாமதிக்காமல் ஆடுகளை எண்ணும் பணியில் ஈடுபட்டான்.
“ஒரு கல் ஐஞ்சு, இரு கல் பத்து..” என்று ராகமாக பாடிக்கொண்டே தன் ஆடுகளை விரசாக எண்ணியவன், ஆலமரத்தின் அகண்ட வேரின் மீது அமர்ந்திருந்த பரமன் தாத்தாவிடம் வந்து நின்றான். பரமன் தாத்தாவிற்கு வயது தொண்ணூற்றைத் தாண்டியிருந்தது. அதனால் காது கேட்கும் திறன் வெகுவாகக் குறைந்திருந்தது.
மரம், செடி, கல்தூண்,ஆடுகள் போல, பரமன் தாத்தாவும் அந்த ஊரின் சொத்து. என்ன அவ்வப்போது அசைவார்,அவ்வளவே. பெரும்பான்மையான நடமாட்டம் குறைந்திருந்தது.
அவரிடம் சென்றவன், “தாத்தா! தாத்தா! என் ஆடுகளை சித்த நேரம் கவனமா பார்த்துக்க வேணும். சரியா?” என பரமன் தாத்தாவிற்குக் கேட்க வேண்டும் என்று பலமாகவே பேசினான்.
“ஆரு, மூக்கன் மகனா? என்ன சமாச்சாரம்?” என்று வினவிய பரமன் தாத்தாவிற்கு மருதய்யன் பேசியது எதுவுமே கேட்கவில்லை.
திரும்ப பலம் கொண்ட மட்டும் கத்திய விருதய்யன், மீண்டும் ஒரு முறை கை காலை அசைத்து,அபிநயம் பிடித்து தன் விஷயத்தை உரைத்தான்.
இம்முறையும்,”உங்கப்பன் எங்க ஆளைக் காணோம்? உடலுக்கு சுகமில்லைன்னு கேள்விபட்டேனே “என சம்பந்திமில்லாமல் வினவினார் பரமன் தாத்தா.
இவருக்கு என்ன சொல்லியும் விளங்க வைக்க இயலாது என்ற முடிவுக்கு வந்திருந்த விருதய்யன்,“தாத்தா எங்கே போய்விடப் போகிறார். இங்கே தானே இருப்பார்.” என்ற எண்ணத்தில், தன் தொரட்டிக் குச்சியை தாத்தாவின் கையில் திணித்து, தன் ஆடுகளின் பக்கம் கைகாட்டினான்.
இம்முறை தாத்தாவிற்குப் புரிந்து போனது.
“ஆடு மேய்க்ச் சொல்கிறியா விருதய்யா? எனக்கு முன் போல் உடலில் வலு இல்லையே” என சிரிப்புடன் பதில் சொன்ன போதும். பரமன் தாத்தா, மறவாமல் ஆடுகளை நோக்கி ட்ர, ட்ர்ர்ர்ர்ர், ட்ரக் என குரல் கொடுக்கத் துவங்கியிருந்தார்.
இதைக் கண்டு நிம்மதி அடைந்த விருதய்யன்,ஓட்டமும் நடையுமாக மேற்கு திசை நோக்கி நடக்கலானான்.
சிறிது, தூரத்தில் வடக்கே செல்லும் தாமரைக்குளம் பகுதியில் இருந்து விருதய்யனுடன் வந்து சேர்ந்து கொண்டான் அவன் நண்பன் சிவக்கொழுந்து என்பவன்.
“ஆடுகளை பட்டியில் அடைத்து விட்டாயோ விருதா?” எனக் கேட்டுக் கொண்டே உடன் நடந்தான் சிவக்கொழுந்து.
“இல்லை கொழுந்து, நம் பரமன் தாத்தாவிடம் ஒப்படைத்துவிட்டு அவசரமாக ஓடி வந்தேன். இன்னும் நேரம் இருக்கிறதா? இல்லை ஆட்டம் துவங்கியிருக்குமா?”
“அந்தி சாயும் வேளையில் தான் முதல் தீபமே ஏற்றப்படும். இரண்டாம் தீபம் ஏற்றுவதற்குள் நாம் நாயகியம்மன் கோவிலை அடைந்துவிட வேண்டும். வேகமாக போகலாம் வா” என்று துரிதமாக நடக்கத் துவங்கினான்.
“ஆம். எப்படியும் இம்முறை நான் அங்கையற்கன்னியின் நடனத்தைக் காண வேண்டும்.போன முறை நான் நடனம் காணச்சென்ற போது, கடைசி அடவு மட்டுமே பார்க்க நேர்ந்தது. அதிலும் கூட்டத்தில் வெகு பின்னால் அமர்ந்திருந்தேன். அங்கையின் முகம் கூட அவ்வளவு தெளிவாகத் தெரியவில்லை.”
“முகமென்று சாதாரணமாக சொல்லிவிட்டாயே? மலர்ந்த தாமரைப் பூவை ஓத்த முகவெட்டும், வயலில் துள்ளி விளையாடும் இரு கயல்கள் கண்களாகவும், சிரித்தால், வெட்டும் மின்னல் போன்ற ஒளிக்கீற்றும் என, இந்திர சபையின் ஆடலரசிகளை ஒத்த முகமல்லவல்லா அது?” என்று சிலாகித்த வண்ணம் உச்சு கொட்டினான் சிவக்கொழுந்து.
“ஏதேது விட்டால், அங்கையற்கன்னிக்கு கோவில் கட்டி கும்ப பூஜை செய்து பூஜிப்பாய் போலிக்கிறதே” என்றான் விருதய்யன் சிரிப்புடன்.
“நானென்ன இந்நாட்டின் மன்னனா, தளபதியா? நினைத்த மாத்திரத்தில் மாடமாளிகைகள் எழுப்ப. சுண்ண வீடு கட்டக் கூட இயலாமல் கல்வீட்டில் வாழும் சாதாரண இடையன் தானே நான்“என்ற சிவக்கொழுந்து பெருமூச்சு ஒன்றினை விட்டான். மன்னரைப் பற்றிய பேச்சு எழுந்ததும் விருதய்யன் வெகு சுவாரஸியமானான்.
“கொழுந்து, உனக்கு செய்தி தெரியுமா? என் தங்கை கணவரின், ஒன்று விட்ட சிற்றன்னை மகன் நம் அரண்மனையில் காவல் வேலை புரிகிறான் தெரியுமல்லவா உனக்கு?” என்று தன் சப்தத்தை வெகுவாக குறைத்த வண்ணம் பேசினான் விருதய்யன்.
“ஆம், அவனுக்கு என்ன வந்தது? அரசாங்க வேலையும், அதில் கிடைக்கும் செளகரியங்களையும் வைத்துக் கொண்டு சுகமாக வாழ்க்கையைக் கழிக்கின்றான்.நம் போல அவனுக்கு என்ன கஷ்டமா நஷ்டமா, காடு மேடு அலைந்து ஆடுகள் மேய்பதற்கு?” என்றான் சிவக்கொழுந்து.
“அடே, மூடனே, புலம்பாமல் விஷயத்தைக் கேள். அரண்மனையில் காவல் புரியும் அவனுக்கு அவ்வப்போது அரண்மனையில் நடக்கும் விஷயங்கள் செவிக்கு வந்து சேரும். அப்படி அவன் ஒரு நாள் மன்னரின் சயன அறைக் காவலனாக நின்றிருந்த ஒரு நள்ளிரவு நேரம், நம் மன்னர், நெடுவேல் ஆவிக்கும், அவர் துணைவியார் ராணி பவித்ரமங்களாம்பிகை தேவிக்கும் இடையே நடந்த வாக்கு வாதம் பற்றி அறிந்து கொள்ள நேர்ந்ததாம்.” என்று வெகு சுவாரசியமாகப் பேசினான் விருதய்யன்.
“அடப் போடா விருதா, மன்னர், ராணியே ஆனபோதிலும், கணவன் மனைவி என்றால் கருத்து வேறுபாடுகளும், சண்டைகளும் இல்லாமலா போய்விடும். இது என்ன பெரிய விஷயமா?” என்று அசட்டையாக பதிலளித்தான் சிவக்கொழுந்து.
“விஷயத்தை முழுவதுமாகக் கேள் கொழுந்து. வாக்குவாதம் என்றால் சாதாரணமாக இல்லையாம். ராணி வெகு ஆத்திரமாக நடந்து கொண்டாராம். அதிலும், இச்சண்டைக்குக் நம் தேவதாசி ஆடலரசி, அங்கையற்கன்னி தான் காரணமாம்.” என்று நாடகத்தனமாக கிசுகிசுப்பாகப் பேசிய விருதய்யன், நின்று சிவக்கொழுந்தின் முக மாற்றத்தை கவனிக்கலானான்.
“அங்கையின் காரணமாகவா? ஒரு தேவதாசிக்காக மன்னரும் ராணியும் வாக்குவாதம் செய்து கொண்டார்களா? ஆச்சர்யமாக அல்லவா உள்ளது?” என்று கண்களை அகல விரித்து ஆர்வமாக வினவினான் சிவக்கொழுந்து.
“இதை விட ஆச்சர்யமான விஷயம் ஒன்றும் நடந்ததாம். மன்னரிடம் கோபமுடன் பேசியபடிக்கே வாயில் வரை வந்துவிட்ட பவித்ரமங்களாம்பிகை தேவியார், “அப்படியென்றால் அவளையே ராணியாக்கி, அந்தப்புரத்தில் கொணர்ந்து வைத்து விடுங்களேன்” என்று ஆத்திரமாக வார்த்தைகளை உமிழ்ந்துவிட்டு அந்தப்புரம் நோக்கி நடந்தார்களாம்.” என்று முத்தாய்ப்பாய் விஷயத்தை முன்மொழிந்தான் விருதய்யன்.
“ஓ, சயன அறையின் மெய்க்காவலன் காதுகளில் இவ்வார்த்தைகள் கேட்டிருக்கின்றனவா? அவன் சென்று தன் நண்பர்கள்,உற்றார் உறவினர் என அனைவரிடமும் உளறிவைத்துவிட்டானா?”
“ஆமாம் ஆமாம். அவன் தனது மனைவியிடம் கூறியிருக்கிறான். அவள் தன் அண்ணனிடம் என, அங்கே இங்கே சொல்லப்பட்டு என் காதுகளுக்கும் எட்டியது கொழுந்து.”
“விடு விருதய்யா. நமக்கெதற்கு மன்னர் வீட்டு பொல்லாப்பு. என்ன வாகினும் அவர் மன்னர். நாம் குலக்குடியினர். இவ்விஷயம் நமக்குத் தெரிந்திருப்பது எனக்குப் பெருமையாகத் தோன்றவில்லை. மாறாக, துன்பம் வந்து சேரும் என்றே தோன்றுகிறது விருதா. நீ என்னிடம் சொன்னது போல மற்ற எவரிடமும் இது பற்றியெல்லாம் மூச்சுவிட்டுவிடாதே. உன்னைப் பிடித்துச் சென்று சிறையிலடைத்து விடுவர்” எனத் தன் மனதின் எண்ணத்தைத் தன் நண்பனிடம் வெளிப்படையாகப் பகிர்ந்திருந்தான் சிவக்கொழுந்து.
சிவக்கொழுந்து பேசியது உண்மையில் விருதய்யனுக்கு பயத்தைக் கொடுத்திருந்தது. ஒரு வேளை அப்படியும் நடந்து போகுமோ என்று அச்சம் தோன்றியது.
“ஆமாம்.ஆமாம். நீ சொல்வதும் சரி தான். நமக்கெதற்கு இந்த வீண் பேச்சுகள் எல்லாம். சதிராட்டம் காணச் சென்றோமா? அங்கையின் அழகை எட்டி நின்று ரசித்தோமா என்றில்லாமல், நாம் ஏன் வீணாக விவாதிக்க வேண்டும்” என்று சற்றே பயந்து போன விருதய்யன் இறுதியாச் சொல்லி முடித்துக் கொண்டான்.
பேசிக் கொண்டே இவ்விரு நண்பர்களும் அங்கையற்கன்னியின் நடனம் நடைபெறவிருக்கும் நாயகி அம்மனின் கோவிலின் சமீபத்தை எட்டியிருந்தனர்.
நாயகி அம்மன் கோவிலுக்கு 100 அடிகள் தென்புறம் அமைந்திருந்த சுயம்புவான அச்சிறு மாரியம்மன் கோவிலின் உள்ளே ஒற்றை தீபம் ஏற்றப்பட்டிருந்தது. விருதய்யன், நேரமாகிவிட்ட காரணத்தினால், கருவறைக்குள் செல்லாமல், கோவிலின் வெளியே நின்று பயபக்தியுடன் கன்னத்தில் போட்டுக் கொண்டான்.
“ஆத்தா மாரியம்மா! இந்த வீணன், சிவக்கொழுந்திடம் அரச விவகாரம் பற்றி நான் உளறி விட்டேன். அது தவறு தான். இதனால் எனக்கு மேற்கொண்டு எந்த துன்பமும் வந்துவிடாதவாறு பார்த்துக் கொள்ளம்மா” என்று மனதினுள் வேண்டிக் கொண்டான்.
இருவரும் நாயகி அம்மன் கோவிலின் உள்ளே நுழையும் பொழுதே தூரத்தில் சலங்கை ஒலிகள் மெல்ல எதிரொலிப்பது கேட்டு, வேகமாக நாட்டியம் நடைபெறும், நடராஜர் சன்னதியின் அர்த்த மண்டபம் நோக்கி ஓட்டமும், நடையுமாகச் சென்றனர்.
இருவரும் சென்று சேரும் சமயம், நாட்டியம் ஆரம்பமாகியிருந்தது.
பச்சை வண்ண சரிகை சேலையில் அங்கையற்கன்னி, பார்ப்பவர் மனதை கொள்ளை கொள்ளும் படிக்கு இருந்தாள். சபைக்கு வணக்கம் தெரிவித்த அங்கையற்கன்னி, பக்கவாட்டில் முன்வரிசையில் அமர்ந்திருந்த, மன்னர், நெடுவேல் ஆவிக்கும், ராணியார் பவித்ரமங்களாம்பிகை தேவிக்கும் தன் முதல் வணக்கத்தைத் சமர்பணம் செய்துவிட்டு நடனமாடத் துவங்கினாள்.
“தை யா தை” என்று தட்ட அடவு முடித்து, “தா தை தா ஹ, தித் தை தா ஹ” என்று பக்க அடவு பிடித்து அரைமண்டியில் அமர்ந்து, கைகளில் திரிபதகம், கடகமுத்திரை என்று அபிநயம் பிடித்து, தன் நயங்களை உருட்டி ஆடத் துவங்கியிருந்தாள் அங்கையற்கன்னி.
அவள் உடல் அசைவிற்கு ஏற்ப, பக்க வாத்தியம் ஒலிக்க, தன் கணீர் குரலால், அடவு தாளம் சொல்லிக் கொண்டிருந்தாள் அங்கையின் அன்னை சோமவல்லி.
“நகுமோமு காணலேனி நா ஜலி தெலிசி.
நனு ப்ரோவக ராதா ஸ்ரீ ரகுவரா நீ” என்று தியாராஜரின் கீர்த்தனை ஒன்றிற்கு அபிநயம் பிடித்துக் கொண்டிருந்தாள் அங்கை. மேற்குத் தொடர்ச்சி மலைகள் சூழ்ந்திருந்த அப்பொருந்தல் நிலப்பரப்பில், பொழுது சாயத் துவங்கியிருந்த அச்சமயத்திலேயே மென்பனி படரத் துவங்கியிருந்தது.
குளிர் காற்றை கொஞ்சமும் சட்டை செய்யாத, அங்கே குழுமியிருந்த வேளிர் மற்றும் ஆயர் குடி மக்கள் அங்கையின் நாட்டியத்தை தங்களை மறந்து ரசித்துக் கொண்டிருந்தனர்.
அங்கையின் இந்நாட்டியம் வரவிருக்கும் பெரும் நிகழ்ச்சிக்கான ஒத்திகையே என்ற பேச்சு அங்கே மக்களிடம் பரவலாக பேசிக் கொள்ளப்பட்டது.
கூட்டத்தின் நடுவில் அமர்ந்திருந்த விருதய்யனும், சிவக்கொழுந்தும் கூட இவ்விஷயம் பற்றி தங்களுக்குள் விவாதம் செய்து கொண்டனர்.
“விருதா, என் வலப்பக்கம் அமர்ந்திருக்கும் வேளிர் என்ன பேசிக் கொண்டிருக்கிறார் என்று தெரியுமா? மாமூலனார் என்ற கவிஞர், சில நூற்றாண்களுக்கு முன்னே நம் பொதினி மலையைப் பற்றி கவிபாடியிருக்கிறாராம்.”
“அப்படியா? நூற்றாண்டுகளுக்கு முன்னர் பாடிய பாடல் பற்றி இப்போது எப்படி தெரிந்ததாம்.?” என்று அறிவுப்பூர்வமாக தன் நண்பன் சிவக்கொழுந்தை மடக்க நினைத்தான் விருதய்யன்.
“அதுவா, நம் பொருந்தல் நிலத்தில், ஒரு வேளிரின் வீட்டில் கிணறு வெட்ட பள்ளம் பறித்தனராம். அங்கே ஒரு பானையில் சில அரிச்சுவடிகள் கிடைக்கப்பெற்றனவாம். அதில் இச்செய்தி குறிப்பிட்டிருந்ததாம் சிவக்கொழுந்து”
“அப்படியா விஷயம்? அப்படியென்ன பாடலாம் அது?”
“என்ன பாடல் என்று முழுவதுமாக அவனுக்கு உரைக்கத் தெரியவில்லை. ஏதோ, அகனாநூற்றுப் பாடல் என்று மட்டும் தான் கூறுகிறான்.”
“சரி,அதற்கும் பெருநிகழ்ச்சிக்கும் என்ன சம்பந்தம் கொழுந்து?”
“அட, நம் ஊரைப் பற்றி பெருமையாக பல ஆண்டுகளுக்கு முன்னரே பாடல் பாடியிருக்கின்றனர் என்றால் அது பெருமை தானே. அதனால் மன்னர் அச்சுவடிகளைப் பற்றியும், பாடல் பற்றியும் நம் மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக விழா எடுக்கிறார்” என்று தான் கேள்விபட்ட விஷயத்தைப் பற்றி மொழிந்தான்.
நண்பர்கள் இருவரும் ஆர்வமாக உரையாடிக் கொண்டிருக்க, அங்கே, அங்கையின் முகத்திலிருந்து கண்களை விலக்காமல் ரசித்துக் கொண்டிருந்தார் மன்னர் நெடுவேல் ஆவி. அவர் அருகில், கண்களில் அங்கிஜீவாலை பற்றி எரிய, தீராப் பகையுடன் அங்கையின் முகத்தை வெறித்தவண்ணம் அமர்ந்திருந்தார் மன்னர் நெடுவேல் ஆவியின் துணைவி, ராணி பவித்ரமங்களாம்பிகை.