பகுதி – ௩
வெற்றிவேல் அலுவலகம் பரபரப்பாக இருந்தது.
“தேவி, கோப்பு எல்லாம் தயாரா?”- சந்திரன்.
“தயார் சார்.”
“தெளிவாக எடுத்து வைத்துக்கொள். கேட்கும்போது தேடிட்டு இருந்தால் … அவ்வளவுதான், கவனம்.”
“கபில் உன்னோடது…”
“தயார் சந்திரன்.”
“சார் சொன்னப்படி செய்த நகல் எடுத்து வச்சியிருக்கிறாயா ?, அது தான் கேட்பாங்க.”
வெற்றிவேல் வரவும் மூவரும் விறைப்பாக ஒரு சல்யூட் வைத்தனர்.
“தயாரா ..கிளம்பலாமா…?”
“எஸ் சார்” என தங்கள் பொருட்களை எடுத்து வெளியேறினர்.
அந்த பெரிய அரசு பொலிரோ வண்டி, பிரமாண்ட பள்ளியின் வாயிலில் நின்றது.
பள்ளி மேலாளர் வந்தார். வெற்றிவேல் மூன்று நட்சத்திரம் கொண்ட முழுச் சீருடையில், தலையில் தொப்பி, கண்ணில் கருநிற குளிர்க்கண்ணாடி அணிந்து தன் இடக்கையை பேன்ட் பாக்கெட்டில் விட்டு ஸ்டைலாக நின்றான். அவன் பின் அவனுடைய சகாக்கள். எல்லோர் கையிலும் கோப்புகள்.
அது ஒரு சின்ன மீட்டிங் ஹால் “இருங்க, சார், மேம் வருவாங்க” என்று சென்றார்.
முதல்வர், தாளாளர் இருவரும் வந்தனர்.
வணக்கம் சார் .. இங்கே என்ன நடக்குது என அனைவரையும் பார்த்து திகைத்து முதல்வர் கேட்டார்.
“உங்க பள்ளி ஆசிரியர் மேலே ஒரு குற்றச்சாட்டு”.
“அவர் மேலே தானே தப்பு ..அதற்கு இங்கே ஏன் ?”
“உங்கள் மீதும்தான். அவரைப் பற்றி நிறைய முறை புகார் செய்தும் நீங்க எந்த நடவடிக்கையும் எடுக்கல என்பதும்தான் குற்றசாட்டு.”
முதல்வர் மறுத்து, “சார் எங்க பள்ளி அப்படி இல்லை, வரும் வழியில் புகார் பெட்டி பார்த்தீங்க அல்லவா …எந்த புகாரும் விடுவதில்லையே முறையாக விசாரிப்போம் சார்.”
தாளாளர், “சார் கண்டிப்பாக இருக்கிற ஆசிரியர் என்றாலே, ஏதாவது இல்லாததையும் பொல்லாததையும் சொல்லுவார்கள்” எனவும் சட்டென கோவத்துடன் அவன் எழுந்து, கபிலை சைகை காண்பிக்க, தன் கோப்பைக் கொண்டு வெற்றியிடம் கொடுத்தான்.
“நாங்க வதந்தியை மட்டும் நம்பி வெறும் வெட்டியாக இங்கே வரவில்லை. எங்களவில் விசாரித்து, உரிய ஆதாரம் கையில் கொண்டே வந்திருக்கிறோம் சார் என்றான் வெற்றி.
‘இவை எல்லாமே ஆதாரங்கள் சார். இந்த கோப்பு முழுவதும் உங்களுக்கு கொடுத்த புகார்களின் நகல்கள், மேலும் எங்கள் பக்க விசாரணை, தெளிவுகள் என இன்னும் இன்னும் இருக்கிறது’.
“இதெல்லாம் உண்மை என்று எப்படி நம்புறது, நீங்க எங்களை குறிப்பிட்டு குறி வைக்கிறீங்க .. எங்கள் இனத்தை களங்கப்படுத்த பார்க்கிறீங்க?”
“இனம், மதம் எல்லாம் அங்கே தான்..” என எதிரில் கை காண்பித்தவன், ‘இங்கே’ (சட்டம்) என தன் புறம் கை காட்டி, கோப்புகளில் உரக்க தட்டி “இதில் ஒரே இனம்தான், குற்றவாளி இனம் மட்டும் தான்.
வெற்றி தன் போனை தூக்கி காண்பித்து, “இது நம்மை தொடரும் மூன்றாவது கண். இந்த மூன்றாவது கண் நெற்றிக்கண்ணும் கூட ..தப்பைக் கண்டால் பொசுக்கி விடும்.
ஆதாரத்துடன் பிடித்தியிருக்கிறோம், தப்ப முடியாது. இது போல வேறவங்க சம்பந்தப்பட்டிருந்தாலும் களை எடுங்க ..இப்பவே அவனை எங்க அலுவலத்திற்கு வரச் சொல்லுங்க, நீங்களும் விசாரணைக்கு ஒத்துழையுங்க. அது தான் உங்களுக்கும் நல்லது.
லெட்ஸ் கோ ..” என கம்பீரமாக வெளியேறினான்.
மாலை விசாரணை இடைவேளையில், வெளியே வரும்போது பத்திரிக்கையாளர்கள் வெற்றியை சூழுந்து கொண்டனர். வெற்றியுடன் சந்திரனும் இருந்தான்.
“சார் … சார் …விசாரணைப் பற்றி என்றால், நடந்து கொண்டு இருக்கிறது”…சந்திரன் சொன்னான்.
ஒரு நிமிடம்..
“எஸ் ..கேளுங்கள்” என்றான் வெற்றி.
“சார் எப்படி சார் தெரிந்தது ? என்ன சொல்றார்?,
யாரோ ஏதோ சொன்னங்க… அதுக்காக ஒரு ஆசிரியர் மேல பழி போடறது சரியா சார் ?
அவர் குற்றத்தை ஒத்துக்கிட்டாரா ?” படபட என பல கேள்விகள் அம்புகளாக விழுந்தன.
கூட்டத்தை நோக்கி, “விசாரிச்சுட்டு இருக்கிறோம், விசாரணை முடிவில் தெரிய வரும்”.
“குற்றத்த ஒத்துக்க வைக்கிறது தான போலீஸின் brilliance… இல்லையா ?” என ஒரு பெண் குரல் கூட்டத்தில். சட்டென வெற்றி நிமிர்ந்து பார்த்தான். பின் திரும்பி சந்திரனை முறைத்தான். அவன் சங்கடமாக பார்வையைத் திருப்பிக் கொண்டான்.
வெற்றி கோபத்தை அடக்கி இறுக்கமாக, “பரபரப்பு தேவை என்று அவனை ஹீரோ ஆக்கிடாதீங்க ?
“போலீஸ் இல்ல பொறுக்கின்னு, நீங்க தான் ஹீரோயிசம் காண்பிக்கிறீங்க”
அவள் பதிலையே ஒதுக்கி, “இதை விட ஆக்கப்பூர்வமான செய்திகள் தேடிப் போடுங்க. உங்க டிஆர்பி க்கு எங்களை ஊறுகாய் ஆக்காதீங்க”.
“பரபரப்பு நாங்க தேடலை..நீங்க தான் சார். எத்தனை வழக்குகள் கிடப்பில் கிடக்க, இதில் உடனடி நடவடிக்கை வருது..என்ன வேகம்.
பிரபலங்கள் என்பதால் தானே இந்த வேகம் …பரபரப்புகாகவும் , நீங்க பேர் வாங்க தானே? என அந்த பெண் நிருபர் விடாமல் மீண்டும் சொன்னார்.
வெற்றி அமைதியாக, “அப்படி இல்லை எங்களுக்கு எல்லா வழக்குமே ஒன்று தான்”.
“அப்ப தன் கணவரைக் கண்டுபிடிச்சு தரச் சொன்ன அந்த பெண் வழக்கு என்னாச்சு ? மீண்டும் சந்திரன் பக்கம் பார்த்தான். அவன் தன் தொப்பியை சரி செய்து சமாளித்தான். ‘இவளால் இன்று நமக்கு நல்ல மண்டகப்படி’ என பொறுமினான்.
“அது தனியாக விசாரணை போய் கொண்டு தானிருக்கிறது” அழுத்தமாக சொன்னான் வெற்றி.
“அந்த கடற்கரை பங்களாவில் இறந்தவர் வழக்கு ? அது கொலையா ? அல்லது தற்கொலையா ? யார் என்று கண்டுப்பிடிச்சாச்சா ..?”
“ஏன் மேடம், நீங்க வேண்டுமானால் அந்த வேலையை விட்டு இங்கே வந்துடலாமே?”
சட்டென ஒரு சிரிப்பலை எழுந்தது.
“நீங்களே முடிவு பண்ணி கேட்டால் எப்படி மேடம் ? உடற்கூறாய்வு வந்தால் தெரிய வரும்”.
“எல்லாமே சாமாளிப்பு பதிலாகவே இருக்கு?”
“எல்லாமே உங்ககிட்ட சொல்லிட்டு செய்ய முடியாது, விசாரணையின் முடிவில் சொல்லுவோம் அதுவரை பொறுமை அவசியம்”.
“ராஜகோபால் மட்டுமா இல்ல, வேற பெரிய ஆட்கள் யாருக்கும் தொடர்பு இருக்கா ?” என மற்றவர் இடை புகுந்து முதல் வழக்குக்கே வந்தார்.
“அது விசாரணையின் முடிவில் தெரியும். இது மாணவர்களின் எதிர்காலம் சம்மந்தப்பட்டது… விட்டுடுங்க, ப்ளீஸ், போதும்”.
இன்னும் ஒன்றே ஒன்று சார் என அந்த பெண் நிருபர் கேட்டு, “உங்கள் முரட்டுத்தனத்தால் செய்யாதக் குற்றத்தைக் கூட ஒத்துக்க வச்சுடுவீங்கன்னு உங்க துறை ஆட்களே பேசிக்கிறாங்களே ..(ரௌடி போலீஸ் என வாயசைத்து) அது பற்றி உங்கள் கருத்து ப்ளிஸ்”.
மற்றவர்கள் இவ என்ன வம்பு இழுக்கிறாள் என நினைக்க, வெற்றி கூலாக
“சட்டம் தன் கடமையைச் செய்யும்” என கூறி விலகி நடக்கவும், பத்திரிக்கையாளர்கள் கலைந்தனர்.
வெற்றி கட்டடத்தின் உட்புறம் நின்று பார்த்துக் கொண்டு இருந்தான்.
அந்த பெண் நிருபர் மட்டும் தன் இருச் சக்கர வாகனத்தை இயக்க போராடிக் கொண்டிருந்தாள்.
விரைந்து அவளை நெருங்கியவன் பின்னிருந்து அவள் கையை திருக்க, பயந்து கத்தபோனவளின் வாயை பொத்தி, “ரௌடி போலீஸ் என்கிற, ஊடகத்துறையில் இருக்கிறன்னா என்னனாலும் கேட்பியா ? உன்ன”… என மேலும் முறுக்க…
“சார் வலிக்குது சார் …விட்டுடுங்க சார்” என கெஞ்சினாள்.
“ரௌடி ன்னா அப்படித்தான்”
சட்டென ப்ளாஷ் ஒலி கேட்க சட்டென அவளை விட்டான்.
எதிரில் அவளுடன் வந்த ஒளிப்பதிவாளன் வினய் நின்றான்.
“என்ன சார், எங்க மேலேயே கை வைக்கிறீங்க … அதுவும் ஒரு பொண்ணை …பொது இடத்தில் மிஸ் பிகேவ் பண்றீங்க..இதுக்கு கண்டிப்பாக நீங்கள் பதில் சொல்லியே ஆகணும்”
தன் முறுக்கிய கையை தடவிய வண்ணம், நல்லவேளை வந்த வினய் .. செய்றதை சொல்லக் கூடாது, வா பார்க்க வேண்டிய இடத்தில் பார்த்துக்கலாம்.. ஏறு… என ஒரு உதையில் வண்டியை இயக்கி, பறந்தாள்.
இதற்குள் வெற்றியைத் தேடி வந்த சந்திரனும், வெற்றியும் செய்வதறியாது திகைத்து நின்றனர்.
மீண்டும் வருவான்.