இன்னும் அந்த நொடி கூட தன் நம்ப முடியாத பார்வையிலேயே தான் அந்தப் பத்திரிக்கையை வைத்துக்கொண்டு நின்றாள் அஞ்சலி. கண்களில் இருந்து கரகரவென்று கண்ணீர் வந்துகொண்டே தான் இருந்தது.இப்போது வரை மகேஷ் சொன்ன விஷயத்தை நம்ப முடியாமலேயே கேட்டுக் கொண்டிருந்தாள்.
அதற்க்குள் அங்கே பானுமதியும், மீனாவும் வந்துவிட, தன் அன்னையை ஓடி வந்து கட்டிக் கொண்டாள் அஞ்சலி. சந்தோஷமாய் இருந்தாலும், இத்தனை நாள் தனக்குள்ளே தேக்கி வைத்த துக்கத்தை வெளிப்படுத்த சந்தர்ப்பமே அமையாமல் போனதால், அனைத்தையும் கொட்டித் தீர்த்தாள்.
“அஞ்சலி மா. சரி அழாத. விடு. இப்போ தான் நீ ரொம்ப சந்தோஷமா இருக்கணும். இப்போ போய் அழறியே.?” என்றார் பானுமதி.
“அக்கா, அவ இத்தனை நாளா அடக்கி வைச்ச வருத்தத்தைத்தான் நம்மகிட்ட கொட்டிட்டு இருக்கா. உனக்குப் புரியலையா.? எவ்ளோ கஷ்ட்டத்தை மனசுல அடக்கி வைச்சிருக்கா பாரு.” என்று சொன்ன மகேஷின் முகத்திலும் ஆனந்தக் கண்ணீர்.
ஒரு நிமிடம் அழுகையை விட்டு மகேஷைப் பார்த்தவள், “மாமா..” என்று அவரை செல்லமாய் அடித்து விட்டு, அவர் மேல் சாய்ந்து கொண்டாள்.
“எல்லாரும் என்னை பிளான் பண்ணி ஏமாத்திருக்கீங்க இல்ல.? இதுல அப்பா கூட சேர்ந்துட்டார்.” என்றாள்.
“அஞ்சலி மா, எங்களுக்கே அதுதான் இன்னும் நம்ப முடியாத உண்மை. இப்போ வரைக்கும், இது நிஜம் தானான்னு எங்களுக்குள்ளேயே கேட்டுப்போம்.” என்று கிண்டலாகச் சிரித்தார் மகேஷ்.
“மாமா, அந்த நிரஞ்சன் அவ்ளோ மோசமானவனா.? எப்படி தெரிஞ்சது.?” என்றாள்.
“எல்லாமே என்னோட ஃப்ரெண்ட் சொல்லித்தான் தெரியும் டா. அந்தப் பொண்ணு என்ன பண்றதுன்னு தெரியாம இருந்தப்போ, நான் தான் என் ஃப்ரெண்ட் கிட்ட சொல்லி போலீஸ்ல கம்ப்ளைண்ட் கொடுக்க சொன்னேன். அதுக்கப்பறம் தான் அவன் எவ்ளோ பெரிய ஃப்ராட்ன்னு தெரிஞ்சது. அவன் நாங்க நினைச்சத விடவே ரொம்ப மோசமானவனா இருந்திருக்கான்.” என்றார் மகேஷ்.
“ஹூம்ம்.. அவனோட பார்வையே சரியில்ல. அன்னைக்கு அஞ்சலிய பொண்ணு பார்க்க வந்தப்போ, அவன் அஞ்சலிய எப்படிப் பார்த்துட்டிருந்தான் தெரியுமா.? ச்சே.. சொல்லவே நாக்கு கூசுது.” என்றாள் மீனா.
“ஆனா, நான் அர்ஜூன விரும்பறது உனக்கு எப்படித் தெரியும்.? அம்மா சொன்னாங்களா.?” என்றாள் அஞ்சலி.
“ம்ஹூம்ம்.. உன்னோட டியரெஸ்ட் ஃப்ரெண்ட் மது. அவ தான் எனக்கு எல்லா விஷயத்தையும் சொன்னா. எப்படியாவது உங்க ரெண்டு பேரையும் சேர்ந்து வைக்கணும்னு சொன்னா. எனக்கு ஏற்கனவே இருந்த டௌட் அப்போதான் கிளியர் ஆச்சு. அர்ஜூனும் நல்ல பையன்னு தெரியும். அதனால தான், எனக்கு விசாரிக்க வேண்டிய அவசியம் இல்லாம போச்சு.” என்றார்.
“அப்போ, நீங்களும், அப்பாவும் சென்னை வந்தது மதுவுக்கு தெரியுமா.?” என்றாள் அஞ்சலி.
“ம்ம்.. தெரியும். அதோட, அர்ஜூன் வீட்டுக்கு நாங்க போனப்போ, அவளும் தான் வந்திருந்தா. எங்களுக்கு எல்லா விஷயமும் அப்போதான் முழுசா தெரிஞ்சது. அவங்க அம்மாக்கும் இதுல முழு சம்மதம்.”
“இவ்ளோ விஷயம் நடந்திருக்கு. ஆனா, எனக்கு எதுவுமே தெரியல. மது.. நீ இருக்கியே.!” என்று அவளை நினைத்து கடிந்து கொண்டாள்.
“அட, விடு அஞ்சலி. எப்படியோ எல்லாமே நல்லபடியா நடந்ததுன்னு நினைச்சு சந்தோஷப்படுவியா.? அவளுக்கு நீ தேங்க்ஸ் தான் சொல்லணும்.” என்றாள் மீனா.
“ஆமா அஞ்சலி மா. மது உனக்காக நிறைய பண்ணிருக்கா. இப்போவே அவளுக்கு போன் பண்ணிப் பேசு.” என்று மகேஷ் சொல்ல,
அஞ்சலி போனை எடுத்துக்கொண்டு போனாள். இரண்டு மூன்று ரிங்கிற்க்குப் பிறகு, எடுத்தாள் மது.
“சொல்லு அஞ்சலி. என்ன பண்ற.? இன்னும் சோகப் பாட்டு கேட்டுட்டிருக்கியா என்ன.?” என்றாள் நக்கலாக.
“ஏய்.. மது, கள்ளி.. நீ என்னெல்லாம் பண்ணிருக்க.? என்கிட்ட எதுவுமே சொல்லாம எல்லாரும் சேர்ந்து இவ்ளோ சர்ப்ரைஸ் பண்ணிருக்கீங்க. ஆனா, உன்னைத் திட்டணும்னு தோணல. நீ மட்டும் நேர்ல இருந்தா உன்னைக் கட்டிப்பிடிச்சு முத்தம் கொடுத்திருப்பேன்.” என்று சொல்லிக் கொண்டிருக்க,
மது ஏனோ லைனில் இல்லாததைப் போல் தோன்றியது. “ஹலோ.. மது.. ஹலோ.. லைன்ல இருக்கியா.?” என்று சொன்னதும்,
“அஞ்சலி..” என்ற அர்ஜூனின் குரல்.
ஒரு நிமிடம் இதயமே அடைத்துவிட்டது அஞ்சலிக்கு. அத்தனை சந்தோஷத்துக்கும் காரணமானவன்.
திடீரென்று அனைத்தும் நடந்து விட்டாலும், அவனை எதிர்கொள்வது எப்படி என்று அவளுக்கு இன்னமும் தெரியவில்லை. அவனது குரலை திடீரென்று கேட்பாள் என்று சற்றும் எதிர்பார்க்கவில்லை.
ஒரு முறை தன்னுடைய மொபைலில் தான் அழைத்தது மதுவின் எண் தானா என்று பார்த்தாள். ஆம், அது மதுவின் எண் தான். இதற்க்கும் முதலில் மதுதான் பேசினாளே! பிறகு எப்படி அர்ஜூனின் குரல். ஒருவேளை திக்குமுக்காடிப் போன சந்தோஷத்தில் கேட்பதெல்லாம் அவனது குரலாய்க் கேட்கிறதோ என்ற எண்ணம் தோன்ற,
“அர்.. அர்ஜூன்..” என்றாள்.
“ம்ம்., நான் அர்ஜூன் தான். ஏதோ சொல்லிட்டிருந்தியே, யார கட்டிப்பிடிச்சு, முத்தம் கொடுத்து எல்லாம் பண்ணப் போற.?” என்றான்.
அவன் கேட்டுவிட்டானா.? அய்யோ.. என்று வெட்கத்தில் தன் நெற்றியில் தட்டி விட்டுக்கொண்டு பேசினாள்.
“இல்ல மதுன்னு நினைச்சு பேசிட்டிருந்தேன்.” என்றாள், இன்னும் அதே வெட்கத்துடன்.
“ஓ!! அப்போ மதுவுக்கு மட்டும் தானா.?” என்று அவன் கேட்ட கேள்வியில், அவன் என்ன கேட்கிறான் என்று புரிந்தது அவளுக்கு.
அதற்க்கு வெட்கச் சிரிப்பொன்றை பதிலாய் உதிர்த்தாள்.
“எல்லாரும் என்கிட்ட மறைச்சுட்டீங்கள்ல.? நான் உன்னைப் பார்க்கணும் அர்ஜூன்.” என்றாள் காதல் நிறைந்த மனதுடன் ஒரு ஆவலில்.
“ம்ம்.. பார்க்கலாமே! எங்க பார்க்கலாம்.?” என்றான்.
“உடனே முடியாதுன்னு தெரியும். நாளைக்கு நீ இங்க வரியா.?” என்றாள்.
“எதுக்கு அவசியமே இல்ல. நான் உடனே வரேன்.” என்று போனை வைத்து விட்டான்.
எப்படி உடனே வர முடியும். அவன் சென்னையில் இருக்கிறானே! என்றவளுக்கு அவன் அவளுக்கு மிக அருகில் தான் இருக்கிறான் என்பது ஏனோ தெரியாமல் போனது.
ஒரே நிமிடம், அவளது அறையின் கதவு தட்டும் ஓசை. அர்ஜூன் சொன்னதையே யோசித்துக் கொண்டே சென்றவள், கதவைத் திறந்தாள். அவள் கண்களை அவளால் நம்ப முடியவில்லை.
அர்ஜூன் சொன்னது போலவே, அவள் அறையின் கதவு ஓரமாய் நின்றபடி சிரித்துக் கொண்டிருந்தான்.
“நீ எப்படி அதுக்குள்ள, இங்க.?” என்றாள் அஞ்சலி.
“ம்ம்.. பறந்து வந்துட்டேன் என் கண்மணிக்காக.” என்றான்.
“விளையாடாத அர்ஜூன். சொல்லு.” என்றாள்.
“உனக்காக இவ்ளோ தூரம் வந்திருக்கோம். நீ இப்படி தான் வெளிலயே நிக்க வைச்சு பேசிட்டிருப்பயா அஞ்சலி.?” என்றபடி பின்னாலேயே வந்தாள் மது.
அவளைப் பார்த்ததும், “ஏய்.. மது உன்ன..” என்று செல்லமாய் அடிக்கச் சென்றாள்.
“சரி விடு, விடு அஞ்சலி. அடிக்காத.” என்று அவள் கையைப் பிடிக்க, அஞ்சலி அவளை அப்படியே அணைத்துக் கொண்டாள். கண்களில் சிறு துளி கண்ணீர் கூட வந்தது.
“ரொம்ப தேங்க்ஸ் மது. நீ எனக்காக எவ்ளோ பெரிய விஷயம் பண்ணிருக்க. என்னோட லைஃப் அவ்ளோ தான்னு நினைச்சேன். ஆனா, சடர்ன்னா இப்படி ஒரு சந்தோஷமான விஷயம் நடக்கும்னு நான் நினைக்கவே இல்ல மது.” என்றாள் அவளைப் பிடித்துக்கொண்டே.
“ஏய்.. எதுக்கு இவ்ளோ எமோஷனல் ஆகற அஞ்சலி. விடு, அதான் எல்லாமே இப்போ சரியாகிடுச்சே. அப்பறம் என்ன.? நல்ல வேளை அந்த நிரஞ்சன போலீஸ் அரெஸ்ட் பண்ணிட்டாங்க. சரியா அந்த நேரம் தான், நான் உங்க மாமாகிட்ட போன் பண்ணி எல்லா விஷயத்தையும் சொன்னேன். கரெக்ட்டா எல்லாமே சிங்க் ஆயிடுச்சு. நீயும், அர்ஜூனும் எப்படியோ ஒண்ணு சேர்ந்துட்டீங்க. இப்போ தான் எனக்கு கொஞ்சம் நிம்மதியா இருக்கு.” என்றாள்.
“இக்கும்ம்.. இக்கும்ம்..” என்று இருமினான் அர்ஜூன். அவன் வேண்டுமென்றே செய்தது அவர்களுக்குப் புரிந்தது.
“ம்ம்.. அஞ்சலி நம்மோட பாசம் இருக்கட்டும். நம்ம ஹீரோ சாரையும் கொஞ்சம் கவனி.” என்றபடி மது சென்றுவிட்டாள்.