ஞாயிறு அன்று காலை ரகுராம் காபி குடித்துக்கொண்டிருந்த வேளையில், பரபரப்பாக உள்ளே நுழைந்தார் மகேஷ். அன்று தான் அவர் ஊரிலிருந்து வந்திருந்தார். அவர் முகமே சரியில்லை.
“என்னாச்சு.? ஏன் இவ்ளோ பரபரப்பா இருக்கே.? அஞ்சலிக்கு இன்னும் இரண்டு வாரத்துல கல்யாணம். தலைக்கு மேல எவ்ளோ வேலை இருக்கு.? இப்போதான் வருவியா.? ஏதோ நான் வந்ததால பரவால்ல. அவள உன்னோட பொண்ணுன்னு சொன்னா மட்டும் பத்தாது, அதுக்குத் தகுந்த மாதிரி நடக்கவும் செய்யணும்.” என்று கோபமாய்ப் பேசினார் ரகுராம்.
“அவள என்னோட பொண்ணா நெனச்சதால தான் எல்லாத்தையும் விசாரிச்சுட்டு வந்திருக்கேன். நீங்க பாத்திருக்கீங்களே ஒரு மாப்ள, அவனோட லட்சணம் என்னன்னு உங்க பாட்னருக்கு போன் பண்ணி கேட்டுப் பாருங்க அப்போ புரியும்.” என்றார் மகேஷ் சற்று ஆவேசத்துடன்.
சத்தம் கேட்டதும் பானுமதியும், மீனாவும் வெளியே வந்தனர்.
“ஏண்டா, இப்போதான் ஊரிலிருந்து வந்திருக்க, வந்ததும் வராததுமா, எதுக்கு மாமாகிட்ட வாக்குவாதம் பண்ணிட்டிருக்க.?” என்றார் பானுமதி.
“என்னாச்சுங்க. ஏன் இவ்ளோ டென்ஷனா இருக்கீங்க.?” என்றாள் மீனா.
“ஒரு நிமிஷம் இருங்க. சொல்றேன். நீங்க சொல்லுங்க மாமா.” என்றார் ரகுராமைப் பார்த்து.
“ஏன். அவனுக்கு என்ன.? நிரஞ்சன் நல்ல பையன் தான். எனக்கு நல்லா தெரிஞ்சு தான் அவன நான் மாப்ளையா செலக்ட் பண்ணேன். அவனப் பத்தி பேச உனக்கு எந்த ரைட்ஸும் இல்ல.” என்றார் ரகுராம் பதிலுக்கு.
“உண்மை என்ன்ன்னு தெரிஞ்சா நீங்க இப்படிப் பேச மாட்டீங்க மாமா.” என்று மகேஷ் பேசிக்கொண்டிருந்த அந்த நிமிடம் ரகுராமிற்க்கு போன் வந்தது.
போனை அட்டன்ட் செய்து பேசியவர் அதிர்ச்சியில் உறைந்தார். தலையில் கையை வைத்தபடி ஷோஃபாவில் சரிந்தார். பானுமதி ஓடி வந்தார்.
“என்னாச்சுங்க.? ஏன் இப்படி உக்காந்திருக்கீங்க.? என்ன விஷயம்னு சொல்லுங்க. ஹய்யோ!! டேய் தம்பி. நீயாவது சொல்லுடா. என்ன தான் ஆச்சு.? அந்த மாப்ளைக்கு என்ன.? நீயேன் அவரப் பத்தி அப்படி சொன்ன.?” என்று பதறினார் பானுமதி.
“ம்ம்.. உன் புருஷன் பாத்த மாப்ளைய போலீஸ் அரெஸ்ட் பண்ணிடுச்சு. அக்கா, அவன் சரியான ஃபிராட். அதுவும் பொண்ணுங்க விஷயத்துல ரொம்ப மோசமானவன். அது தெரிஞ்சு தான் அவர் அப்படி உக்காந்திருக்கார்.” என்று மகேஷ் சொன்னதும்,
“என்னடா சொல்ற.?” என்று அதிர்ந்தார் பானுமதி.
“என்ன மாமா, இதெல்லாம் எப்படின்னு பாக்கறிங்களா.? நீங்க அவன் தான் மாப்ளன்னு முடிவு பண்ணதும், அவனப் பத்தி தெரிஞ்சுக்க, ஆஸ்திரேலியால இருக்கற எனக்குத் தெரிஞ்ச ஃப்ரெண்ட விட்டு, அவன அப்பப்போ ஃபாலோ பண்ணி அவனோட நடவடிக்கைகள எனக்கு சொல்லச் சொன்னேன். அப்போவே எனக்கு நிறைய இன்பார்மேஷன் வந்தது, அவன் சரியில்லன்னு. ஆஸ்திரேலியா போனவன் அங்க இருக்கற ஒரு பொண்ண காதலிச்சு, வயித்துல குழந்தையும் கொடுத்துட்டு ஏமாத்திட்டான். அந்த பொண்ணு நம்ம ஊர் பொண்ணுங்க மாதிரி பயப்படாம ஆஸ்திரேலியா போலீஸ் கிட்ட கம்ப்ளைன்ட் பண்ணிட்டா. அதான் போலீஸ் அரெஸ்ட் பண்ணிட்டாங்க. அதுவும், இந்தப் பொண்ண மட்டும் இல்ல, இதே மாதிரி நிறைய பொண்ணுங்கள ஏமாத்திருக்கான்னு கூட போலீஸ் கேஸ்ல ஃபைல் ஆகியிருக்காம்.” என்றார் மகேஷ்.
“நிஜமா அவன் இப்படிப்பட்டவன்னு நான் நினைக்கவே இல்ல. பாட்னரோட பையன் தானே, நல்லவனா இருப்பான். நாளைக்கு எங்களுக்கு அப்பறம் எங்க பிஸ்னெஸ்ஸ நல்லபடியா பாத்துப்பான்னு நெனச்சேன். அதனால தான் அவன செலக்ட் பண்ணேன்.” என்று தழுதழுத்தார் ரகுராம்.
அதைக் கேட்டு பானுமதிக்கு கோபம் தலைக்கேறியது.
“போதும், நிறுத்துங்க. இப்போ கூட உங்க பிஸ்னெஸ்க்கு எந்த பாதிப்பும் வரக்கூடாதுன்னு தானே இந்த முடிவு எடுத்தீங்க.? அப்பவும், நம்ம அஞ்சலியப் பத்தி யோசிக்கல இல்ல. நானும், உங்கள எதிர்த்து எதுவும் செய்யக் கூடாதுன்னு தான் அமைதியா இருந்தேன். ஆனா, என் பொண்ண இப்படி ஒரு குழில தள்ளத் துணிஞ்சிருக்கீங்க. ஒரு நாளாவது அவகிட்ட நல்ல விதமா சிரிச்சுப் பேசிருக்கீங்களா.? அவளுக்கு உங்க மேல இருக்கற பாசத்தை விட, பயம் தான் அதிகமா இருக்கு. பாவம் அவ, சொல்லவும் முடியாம, என்ன பண்றதுன்னு தெரியாம மனசுக்குள்ளயே எல்லாத்தையும் பூட்டி மறைச்சிட்டு நீங்க சொன்ன எல்லாத்துக்கும் தலையாட்டிட்டு அமைதியா இருக்கா. நானா இருந்தா கூட இவ்ளோ பொறுமையா இருக்க மாட்டேன்.” என்று ஆவேசமாய்ப் பேசினார் பானுமதி.
ரகுராம் எதுவும் பேசவில்லை. அமைதியாகவே இருந்தார்.
“அவ மனசுல என்ன இருக்குன்னு ஒரு நாளாவது கேட்டிருக்கீங்களா.? அவ என்ன அடிமையா நீங்க என்ன சொன்னாலும் செய்யறதுக்கு. நீங்க இவனைத்தான் கல்யாணம் பண்ணிக்கணும்னு சொன்னா, அவன அவளுக்குப் பிடிச்சிருக்கா, இல்லையா.? இதெல்லாம் எதுவும் யோசிக்க வேண்டியதில்ல. சொன்னா உடனே செஞ்சிக்கணும். ஆனா, வாழப் போறது யாரு.? அவதானே! அதெல்லாம் உங்களுக்கு யோசிக்கத் தோணாதா.?” மனதில் உள்ள எல்லா கேள்விகளையும் கேட்டார் பானுமதி.
“நான் அப்படி யோசிக்கல மா. ஏற்கனவே முடிவு பண்ணது. இதுல, என்னோட பார்ட்னருக்கும், எனக்கும் எந்த ஒரு சங்கடமும் வரக்கூடாதுன்னு தான் அந்த முடிவெடுத்தேன். ஆனா, இப்படி நடக்கும்னு நான் நினைக்கவே இல்ல.” என்றார் ரகுராம் அதிர்ச்சியாகவே.
“இப்போ சொல்றேன் மாமா. ஸ்வேதா எவ்வளவோ பரவால்ல. நீங்க செலக்ட் பண்ண மாப்ளைய விட, அவளோட மாப்ள சொக்கத் தங்கம். அவ, இப்போ அந்தக் குடும்பத்துல எவ்ளோ சந்தோஷமா இருக்கா தெரியுமா.? நீங்க அவ கூட பேசறதில்லைங்கற குறை மட்டும் தான் அவளுக்கு. (Adipex) இன்னும் ஒரு முக்கியமான விஷயம், அவ இப்போ ஒரு குழந்தைக்கு தாயாகி இருக்கா.” என்று மகேஷ் சொன்னதும்,
ரகுராம் அதிர்ச்சியாகி பார்த்தார். அப்போது, அவளுடன் எல்லோருமே சகஜமாகிவிட்டனர். ஆனால், தான் தான் அனைத்தையும் விட்டு விட்டு பணம் சம்பாதிக்கும் பொருட்டு பாசத்தைத் தொலைத்து விட்டேனா.? என்ற கேள்வி அவருள் எழுந்தது.
“இப்போ சொல்றேன். அஞ்சலியும் ஒரு பையன விரும்பறா. ஆனா, நீங்க என்ன சொல்வீங்களோன்னு பயத்துல எல்லாத்தையும் மனசுக்குள்ள பூட்டியே வைச்சுட்டா. உங்க உயிருக்கு எதுவும் ஆபத்து வரக்கூடாதுன்னு தான், அவளுக்கு விருப்பம் இல்லைன்னாலும் இந்தக் கல்யாணத்துக்கு சம்மதிச்சா.” என்றார் பானுமதி.
அவர் இத்தனை நாள் அஞ்சலியைப் பற்றி ஒரு நிமிடம் கூட யோசிக்காமல் விட்டுவிட்டோமே!! என்று நினைத்தார்.
“என்னோட பொண்ணுங்க அவங்க மனசுக்குப் பிடிச்சு காதலிச்சவங்க ரெண்டு பேருமே சொக்கத் தங்கம் தான். ஆனா, உங்களுக்கு அதெல்லாம் எங்க புரியப் போகுது.?”
“அஞ்சலி விரும்பற பையன் யாரு.?” என்றார்.
“அர்ஜூன், மாமா. அக்காவ கோயில்ல மயங்கி விழுந்தப்போ காப்பாத்திக் கூட்டிட்டு வந்தானே, அவன் தான். நீங்க கூட ரொம்பப் பாராட்டுனீங்களே!” என்றார் மகேஷ்.
அவர் சொன்னதும், சிறிது யோசித்துப் பிறகு நினைவுபடுத்தினார் அர்ஜூனை. அவருக்கு அவனின் எளிமையான முகமும், நடந்துகொண்ட விதமும் நினைவுக்கு வந்தது. அப்போதே ஒரு முடிவுக்கு வந்தார்.
“சரி டா மகேஷ். இவ்ளோ நாள் நான் தப்பு பண்ணிருக்கலாம். அதுக்கு பிராயச்சித்தமா, ஒரு விஷயம் பண்ணனும். அந்தப் பையனோட வீட்டுல போய் பேசிட்டு வரலாம் வா.” என்று கூறியவரை நம்ப முடியாமல் பார்த்தனர் அனைவரும்.
“மாமா, நீங்க தான் பேசறீங்களா.? உண்மை தானா.?” என்று தன்னை ஒரு முறை கிள்ளிப் பார்த்துக் கொண்டவரைப் பார்த்து,
“டேய்.. படவா.. வா, இப்போவே எந்த ஃப்ளைட் இருக்கோ பாரு. போயிட்டு வந்திடலாம். ஆனா, நாம சென்னை போறது அஞ்சலிக்குத் தெரிய வேண்டாம். அப்பறம், பானு நீ நம்ம ஸ்வேதாக்கு போன் பண்ணி நாம எல்லாரும் நாளைக்கு அவங்க வீட்டுக்கு வரதா சொல்லிடு.” என்று இன்ப அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சியை ஏற்படுத்தினார் ரகுராம்.
ஒரு மனிதன் தன் ஆணவ நிலையை விட்டு மனது மாறி, புரிந்து கொண்ட நொடி அனைத்துமே அவர்கள் வாழ்க்கையில் நல்ல விஷயங்களை நிகழ்த்திக் கொண்டிருந்தது.