நிலைக்கண்ணாடி இல் முகம் பார்த்து தலை கோதி கொண்டிருந்த ரமணாவின் இதழ்கள் சிரிப்பில் துடிக்க, மனதுக்குள் இளையராஜா பிஜிஎம் வாசித்துக் கொண்டிருந்தார்.
அதுவும் அவன் தீவிரமான இளைய தளபதி ரசிகன். முதல் நாள் முதல் காட்சி முதல் பாலபிஷேகம் வரை கலக்கும் அடிமட்ட விசிறி. விஜய்யின் அத்தனை படமும் பாட்டும் அத்துப்படி. அதிலும் குறிப்பாக காதலுக்கு மரியாதை படமெல்லாம் சலிப்பில்லாமல் பார்த்து ரசிக்கும் படம். முன்பிருந்தே அந்தப் படமும் அதிலிருக்கும் பாடல்களும் பிடிக்கும் என்றாலும் இப்போது இன்னும் அதிகமாய் பிடித்தது.
அதிலும்,
கண்ணுக்குள் இமையாக இருக்கின்றாள்
நெஞ்சுக்குள் இசையாக துடிக்கின்றாள்
நாளைக்கு நான் காண வருவாளோ
பாலுக்கு நீரூற்றி போவாளோ
வழியோரம் விழி வைக்கிறேன்
வரிகளை காலையில் இருந்து நூறு முறையாவது அவன் உதடுகள் உச்சரித்து இருக்கும். அண்ணன் போன முறை வெளிநாட்டில் இருந்து அனுப்பிய ப்ரான்டட் வாட்சை இடது கையில் போட்டவன், பர்ஃப்யூமை அளவாக தெளித்துக் கொண்டு வெளியே வர,
தேவயானி, சமையல் கட்டில் பாத்திரங்களை ஒழித்து போட்டு நைட்டியில் கைகளை துடைத்து கொண்டே முன்னறைக்கு வந்தவர் “ரமா! இந்த நேரம் எங்கடா கிளம்பிட்ட? வரட்டு வரட்டுன்னு வெளிலே வெயில் வாட்டுதே. ட்யூஷன் க்ளாஸ் இருக்கா இன்னிக்கு…?” நேரத்தை பார்த்து கேட்க,
“ம்ம் ம்ம்” எல்லா பக்கமும் தலையை உருட்டியவன் தேவயானியை கழுத்தோடு கட்டிக்கொண்டு தோளில் முகம் உரசி, வாசத்தை நுகர, அவரோ
மகனை புதிராக பார்த்தார். கலக்கமாக பதற்றமான மனநிலையில் இருந்தால் தான் இப்படி செய்வது வழக்கம். ‘இன்னிக்கு என்னாச்சு?’ எனும் விதமாக கேள்விகள் ஓட
“சரி வரேன்மா. லேட்டாச்சு” மேலும் அவர் ஏதும் கேட்பதற்குள், தேவயானியின் அருகாமை உள்ளூர துளிர்த்த சிறு பட படப்பை மிகையாக குறைத்த உற்சாகத்துடன் வெளியே வந்தவன் எதிரில் முனீஸ்வரன் வேக நடையில் வரவும் ஜெர்க்காகி நின்றான்.
வாசற்படியில் ஒதுங்கி நின்ற மகனை மேலிருந்து கீழ் அளவெடுத்த முனீஸ்வரன், கருப்பு தோலும் பருத்த உடலும் தடித்த மீசையும் என ஐய்யனார் தோற்றத்தில் இருந்தார். தேவயானி அவனுக்கு அக்கா போலென்றால் இருவருக்கும் பொருத்தமே இல்லை என அவனே பல சமயம் யோசிப்பதுண்டு.
இப்போதும் மானசீகமாக தலையில் கொட்டி அந்த எண்ணங்களை விரட்டி அடித்தவன் அடிக்கண்ணால் பார்க்க, அவரும் கேள்வியாக புருவம் சுருக்கி ஏறிட,
அதற்கே பயத்தில் உள்ளங்கால் வரை நடுங்கி எச்சிலை விழுங்கி கொண்டே “ட்..ட்யூஷன் க்ளாஸ்” திக்கித் திணறினான்.
‘ம்ம்’ என்னத்த படிக்கிறியோ என்னும் ரீதியாக அவர், அவனைப் பார்த்து தலையசைத்து கொண்டே வேட்டியை ஒரு கையால் பிடித்தபடி தன் அக்மார்க் வேக நடையில் உள்ளே நுழைய ‘தப்பினேன்டா சாமி’ கண்ணை இறுக மூடி திறந்து பீதியில் உறைந்த முகத்தை தலையை குலுக்கி சரி செய்தவாறு அவரை விட வேக நடையில் வெளியேறியவன் செவியில் “என்னத்த இங்க வேடிக்கை பார்த்து நிக்கிறவ” என்ற அதட்டலுடன் அவர் உள்ளே செல்வது விழ
சிறு பெருமூச்சுடன் கேட்டை திறந்து வீதிக்கு இறங்கியவனை அங்கு தெருமுனையில் காத்திருந்த வாகா கை தட்டி அழைக்க, ஓட்டமும் நடையுமாக விரைந்தான்.
அடுத்தடுத்து வீடுகள் நிறைந்த ஏரியா. வாகாவின் வீடு அங்கிருந்து கால்மணி நேர நடையில் தான். பைக்கில் என்றால் ஐந்து நிமிடம் கூட அதிகம் அவர்கள் வேகத்திற்கு.
இப்போதும் பைக்கில் தான் ஏறி அமர்ந்திருந்தான். அவன் எதிரில் தமிழ், சைக்கிளில் அமர்ந்து கையிலிருந்த தடினமான புத்தகத்தை ஒற்றை விரலால் சுற்றிக் கொண்டிருக்க, ரமணா வந்ததும் பைக்கின் சாவியை தூக்கி எறிய
வாகாக கேட்ச் பிடித்தவன் முகத்தின் புன்னகையே அவன் இரு நண்பர்களுக்கும் அவன் மனநிலையை உணர்த்த,
“மச்சி, பார்க்காமலே இந்த ரவுசுலாம் அதிகம்டியோய்” தமிழ் கிண்டல் அடித்தான்.
“ம்ப்ச்… நீ வேற ஏன்டா, சும்மா இருடா டேய்! டென்ஷன்ல உள்ளருக்கிறதுலாம் வெளியே வந்திரும் போலருக்கு” கைகள் இரண்டையும் பரபரவென தேய்த்து முகத்தில் அங்கும் இங்குமாக கோர்த்த வேர்வை அரும்புகளை துடைத்தெறிந்தவன் வாகா இறங்க காத்திருந்து, பைக்கில் ஏறி அமர்ந்து சாவியை போட, உறுமியது பல்சர்.
“ஆல் தெ பெஸ்ட் மச்சி! வெற்றி நிச்சயம் இது வேதசத்தியம் கொள்கை வெல்வதே நான் கொண்ட லட்சியம்” இருவரும் கோரஸாக, பாட்டாகவே எடுத்து விட
பக்கென்று பொத்துக் கொண்டு வந்த சிரிப்புடன் ரமணா பைக்கை கிளப்பி எடுத்ததும் எண்பதில் பறக்க, “லைசென்ஸ்ங்கற வஸ்து பேருக்குக் கூட கிடையாது. எந்த ஸ்பீடுல ஓட்டிக்கு போறான் பாரு. எந்த போலீஸ்காரங்கிட்ட மாட்டப்போறானோ… யாரு பெத்த பையனோ” வாகா தலையில் அடித்துக் கொள்ள
“டேய் டேய்! மூட்றா வாயை. அந்தாளூ ஏரியா. எந்த சந்துபொந்துக்க இருந்து வர்வாரோ மிலிட்டரி” அவனை அடக்க
தலையை சிலுப்பியன் ‘நான் யாருக்கும் அடங்காதவன்டே’ கெத்தாக போஸ் கொடுக்கவும், சரியாக அடுத்த அரை செக்கனில் ரமணாவின் வீட்டை விட்டு தாண்டிய புல்லட் சத்தத்தில் அடித்துப் பிடித்து சைக்கிளில் ஏறி அமர்ந்து பெடலை மிதித்தவன் ஒரே ஓட்டமாக அடுத்த முக்கில் நுழைந்திருக்க,
“உங்கொப்பன் மவனே. ஒத்தைல விட்டுட்டு போறுது பாரு” தலையில் அடித்துக் கொண்டே இங்கு அவன் பின்னோடு ஓடினான் வாகா.
‘எங்கே!’ தமிழை ஆங்கிலத்தில் உட்புகுத்தி தங்க்லீஸில் வந்திருந்த குறுஞ்செய்தியை ட்ரௌஸர் பாக்கெட்டில் இருந்து வெளியெடுத்த சாம்சங் கீபேட் போனில் படித்த ரமணா, ஒரு கை பைக்கை ஓட்ட, மறுகை ‘ஆன் தெ வே’ மெசேஜை தட்ட, ‘சென்ட்’ பட்டனை அமுக்கி தலை நிமிர்த்தியவனை மின்னல் நொடியில் கடந்து சென்றிருந்தது, அவன் கண் பார்வையில் இருந்து மறைந்து கொண்டிருந்த பச்சை கலர் ஆட்டோ.
பார்த்ததும் பார்வையில் இருந்து மறைந்ததும் ஒரு நொடிக்கும் குறைவாக தான் இருக்கும். அதற்குள்ளேயும் கண்ணில் விழுந்த உருவத்தை மூளை பசை போட்டது போல் மனக்கண்ணில் அழுத்தம் திருத்தமாக பதிய செய்திருக்க, கை தன்னிச்சையாக பைக்கின் இயக்கத்தை படிப்படியாக நிறுத்தியது. ஒரு கட்டத்தில் தரையில் ஒற்றைக்கால் ஊன்றி லேசான படபடப்புடன் கண்களை அழுந்த மூடியவனின் கண்களுக்குள் பக்கவாட்டு மட்டுமே தெரிந்த குழந்தை முகமொன்று!
வரைந்தார் போன்ற திருத்தமான புருவம், கருவிழிகளுக்கு பின்னால் பால்வெளி நர்த்தனமாடிய கண்கள், அவசரத்தில் பொருத்தி வைத்த நாசி அதை மெருகூட்ட அதில் கண்ணுக்கு தெரியாத ஒரு மச்சம். மிருதுவான, இலேசான காற்றில் ஆடும் பூ போல சிவந்த கன்னம். சிவந்த ரோஜா பூவில் இருக்கும் இதழ்கள் போல இதழ்கள்!
சுவாசிக்க காற்று எங்கே! தேட வேண்டிய நிலையில் ஒரு கணம் அவன் மூச்சுக்காற்றுக்காக தவித்தான்.
உயிருக்குள் உருவமில்லா வஸ்து ஒன்று மொட்டவிழும் நிகழ்வு சப்தமில்லாமல் அரங்கேறியது.
பைக்கில் இருந்து இறங்கியவன் குறுக்கும் நெடுக்கும் நடை போட்டவாறு காற்றை, வாயை குவித்து உள்ளே இழுப்பதும் வெளியேற்றுவதுமாக இரண்டு நிமிடங்கள் தத்தளித்த பின் மெல்ல மெல்ல இயல்புக்கு திரும்ப, மீண்டும் குறுஞ்செய்தி வந்ததற்கு அடையாளமாக ரிங்டோன் சிறு ஓசையெழுப்ப, அது வரை அவனை சுற்றி பிணைந்திருந்த மாயவலை பட்டென்று அறுந்தது.
அழகிய கனவு கலைந்த பிரம்மை, கசப்பாக அவன் தொண்டைக்குள் இறங்கியது.
மானசீகமாக தலையில் தட்டிக் கொண்டான். சுள்ளென்ற வலியை உணர்ந்த போது தான் நிஜமாக தலையில் அடித்துக் கொண்டோம் என்பதே உறைக்க, ‘எதுக்கு வந்திட்டு என்ன வேலை பார்க்கிறடா ரமணா! பொசக்கெட்டவன். இருந்திருந்து பதினெட்டு வயசுக்கு இப்போ தான் லவ் செட்டாக போகுது. அதுக்குள்ள எவளையோ பார்த்து மதி கிறங்கி மூச்சுக்கு தவிக்கிற!! கிறுக்கா’ வசை பாடியவன் விருட்டென வண்டியில் அமர்ந்து கிளப்பினான்.
பார்த்தோம், ஒரு நிமிடத்திற்கு குறைவே ஆனாலும் ரசித்தோம், அத்துடன் முடிந்தது என விட முடியாமல் மனம் அந்தப் பாவையே சுற்றி சுற்றி வர ‘இத்தனை வருஷத்துக்கு உன்கிட்ட நான் கேட்டதெல்லாம் ரொம்ப குறைவு தான் ஆஞ்சநேயா. அதுவும் எனக்காக ம்ஹூம்! எதுக்காக அந்த புள்ளைய கண்ல காட்டினியோ தெரியலை, பார்த்த நிமிஷமே மனசுக்குள்ள போய் உட்கார்ந்துக்கு பிராண்டி எடுக்கிறா… நான் பார்க்க போற புள்ள எப்பிடி இருப்பாளோ தெரியல… இவளை போல பார்த்ததுமே மனசுக்கு பிடிக்கிறவளா மட்டும் இருந்தா போதும்’ அவசர மனுவை கடவுளுக்கு அனுப்பி வைத்து வண்டியை நிறுத்திய போது
எந்த பாவையை பார்த்து ஒரே நொடியில் தலைகுப்புற விழுந்தானோ, யாரைப் போல் தான் காண வந்திருக்கும் பெண் இருக்க எண்ணினானோ, அவளே அவன் காண வந்திருப்பவளாக இருக்கும் சாத்தியக்கூறுகள் இருப்பதற்கேதுவாக பச்சை கலர் ஆட்டோவில் இருந்து மின்னல் கீற்று போல் பளிச்சென வெளிச்சம் வீசி கீழிறங்கிய பதுமை அன்னம் போல அசைந்தாடி திறந்திருந்த கேட்டை தாண்டி வீட்டினுள் நுழைய,
இரவும் பகலும் என்னை வாட்டினாள்
இதயம் அவள் பெயரில் மாற்றினாள்
காதல் தீயை வந்து மூட்டினாள்
மீண்டும் இளையராஜா அவனுக்குள் பிஜிஎம் வாசிக்க, விடலைப் பருவத்தில் அரும்பு மீசையில் ஐந்தடி உயரம் கொண்டு ஆண்மகனாக மாறிக் கொண்டிருக்கும் அவன் உடலெங்கும் புது ரத்தம் சீறிப்பாய்ந்து, காதல் ஹார்மோன்கள் ஜிவ்வென்ற உணர்வில் பேயாட்டம் போட்டது.
‘இவளைத் தான் பார்க்க வந்திருக்கோமா இல்ல இவ வேற யாருமா’ என்ற சந்தேகமும் குறு குறுவென உள்ளிருந்து எட்டிப்பார்த்து அவன் சந்தோஷத்திற்கு வேட்டு வைக்க,
‘இருந்தாலும் இருக்குமோ…?’ ஒரு நிமிடம் ஜெர்க்காகித் தான் போனான். முன்னரே பட்ட அனுபவம் அப்படி என்றவனின் நினைவுகள் சில நாட்கள் முன் நடந்த நிகழ்வுகளை கடுப்புடன் அசைபோட தொடங்கியது.
அன்றும் வழக்கம்போல மாலைநேர ட்யூஷன் வகுப்புகள் முடிவடைய, நண்பர்களுடன் வெளியே ஊர்சுற்ற கிளம்பியவனை “ரமா, இந்தா இதைப் பிடி. கொண்டுபோய் பாரதி வீட்டுல குடுத்திட்டு வந்திடு” தேவயானி, மதியம் செய்த பலகாரங்களை கிண்ணத்தில் போட்டு நீட்ட, “ம்மாஆ!” என சலித்தவனின் பார்வை வட்டத்தில் முனீஸ்வரனின் உருவம் விழ, படக்கென கையில் வாங்கிக் கொண்டவன் குனிந்த தலை நிமிராமல் வெளியே நிறுத்திய சைக்கிளில் அமர்ந்து புறப்பட்டிருந்தான்.
மகனை எண்ணி செல்லமாக சிரித்தவாறே தேவயானி பிற வேலைகளை கவனிக்க செல்ல, அங்கு ரமணாவோ உச்சகட்ட கடுப்பில் சைக்கிளை மிதித்துக் கொண்டிருந்தான்.
நண்பர்கள் அனைவருமாக தியேட்டருக்கு செல்வதாக இருந்தது. ‘இந்த அம்மா வேற சரியா அவர் வர்ற நேரம் பார்த்து கோர்த்து விட்டுடிச்சு’ பொருமியவன் வேண்டா வெறுப்பாக தான் பாரதி, அவனுக்கு அக்கா முறையாக வேண்டும். அவள் வீட்டுக்குள் நுழைய,
“டேய் மாமா, இங்கே எங்கேடா” என்றான் அஸ்வின், அக்காள் மகன். ரமணாவை விட நான்கு வயது இளையவன். மூத்தவள் சுபஷ்வினி, அஸ்வினை விட இரண்டு வயது பெரியவள். அவள் வீட்டில் இல்லாததை அவன் கண்கள் குறித்துக் கொள்ள, அது மெய்யே என்னும் விதமாக அப்போது தான் ட்யூஷன் வகுப்புகள் முடிந்து தோழிகள் பட்டாளத்துடன் வீட்டுக்குள் நுழைந்து கொண்டிருந்தாள் சுபஷ்வினி.
கலகலப்பு பேர்வழி. அதனாலே எக்கச்சக்க தோழிகள் கூட்டம் எப்போதும் அவளை சுற்றியிருக்கும்.
“நான் இருக்கிறது இருக்கட்டும், நீ இந்த நேரம் வீட்ல என்ன பண்ணிட்டிருக்க… பிரபஞ்சன் சார், இன்னிக்கு உன் பேட்ச் ஆளுங்களுக்கு ஸ்பெஷல் எடுக்கிறாராம்னு கேள்விப்பட்டேன்” என அவன் கேள்வியை தவிர்த்து அஸ்வினிடம் எதிர்க்கேள்வி கேட்ட ரமணா மூத்தவனாக கண்டிப்பு பார்வை வீச,
“ஸ்ஸ்! மறந்திட்டேன்டா மாமா. இரு நிமிஷத்தில் கெளம்புறேன்” மறுவிநாடியே அங்கிருந்து ஓடியிருந்தான் அஸ்வின்.
ரமணா, எவ்வளவுக்கெவ்வளவு ஜாலி பேர்வழியோ அதைவிட அதிகமாக தன்னைக் காட்டியும் இளையவர்களிடம் கண்டிப்போடு நடந்து கொள்வதால், அவனை கண்டாலே இளையவர்கள் மத்தியில் பீதி தான்.