வாகா வீட்டு மொட்டை மாடியில் தலைக்கு முட்டுக்கொடுத்து படுத்திருந்தான் ரமணா, அருகிலே ஒலிநாடாவில் ‘ஒவ்வொன்றாய் திருடுகிறாய்!’ பாடல் கார்த்திக் மற்றும் பவ்யாவின் குரலில் ஒலித்துக் கொண்டிருந்தது.
கடும் இருட்டை வானில் பவனி வந்த தேய்பிறை நிலவும், மெல்லொளி கசிந்த விளக்கின் வெளிச்சமும் நீர்த்துக் கொண்டிருக்க, சிலு சிலுவென குளிர்ந்த காற்று புழுக்கத்தை விரட்டி அடித்த வண்ணம் சுழன்றது.
அவன் கண்கள், கனவில் மெய்மறந்து இருக்க, கனவுடன் கூடிய மோன நிலையில் அமிழ்ந்து தன்னை தொலைத்த ரமணாவும்
நோகாமல் என் தோழில் சாய்ந்தால் போதும்
உன் நுனி மூக்கை காதோடு நுழைத்தால் போதும்
கண்ணோடு கண் பார்க்கும் காதல் போதும்
இரு கண் கொண்ட தூரம் போல் தள்ளி இரு போதும்
பெண்மையில் பேராண்மை ஆன்மையில் ஓர் பெண்மை
கண்டறியும் நேரம் இது காதலியே
என்ற வரிகளை பாடலோடு சேர்ந்து பாடி உருகவும்,
பிஸ்னஸ் ஸ்டடீஸ் புத்தகம் ஒன்று பறந்து, அவன் மேல் வந்து விழுகவும் சரியாக இருக்க, விசுக்கென எழுந்தமர்ந்தவன் பாய் விரித்து அதில் தீவிரமாக பாடப்புத்தகத்தில் மூழ்கி இருந்த நண்பர்கள் இருவரும் தன்னை கொலை காண்டுடன் முறைத்துக் கொண்டிருப்பதைக் கண்டு லேசாக அசடு வழிந்தான்.
“ஸ்ஸ்!! டேய் சூனா பானா, பாட பொஸ்தகத்த எல்லாம் அள்ளி ஒசரமான இடமா பார்த்து வைடா…” திடீரென தமிழ் கூக்குரலிடவும்
பக்கென அதைப் பிடித்துக் கொண்ட வாகாவும் “கேப்டன் இங்க்லீஸ், இதுக்கு மேல நம்ம இங்கருந்தா நிலமை விபரீதமாகிறதுக்கும் சான்ஸ் இருக்கு, ஷிப்பை கிளப்புறது தான் இப்பத்தைக்கு நமக்கிருக்கும் ஒரே வழி” என ஓட்டித் தள்ளினான்.
இருவரும் அடித்த கூத்தில்
“டேய் டேய் போதும் டா, அடங்குங்கடா” பாய்ந்து அவர்களருகில் வந்த ரமணா இடுப்பில் கை குற்றி நண்பர்களை முறைக்க,
“நீ அடங்குடா மச்சான் மொத…” இருவரும் ஒருமித்த குரலில் கோரஸ் பாடினர்.
“ஒரு லட்சத்து ஆயிரம் சொச்சம் டா, நீ அந்த பாட்டை கேட்கறதும், கூட சேர்ந்து பாடறதும்” என தலையடித்தவன்
தொடர்ந்து,
“ப்ளே லிஸ்ட்டில் மீதம் இருக்கிற முன்னூறு சொச்சம் பாட்டும் உனக்கென்னடா பாவம் பண்ணுச்சு… ரெண்டு நாளா, நாப்பத்தெட்டு மணிநேரமா, ஒரே பாட்டை, ரிப்பீட் மோடுல நீ கேக்கிறதுல ஒரு நியாயம் இருக்கு… எள்ளு தான் எண்ணெய்க்கு காயுது, எலி புழுக்கை என்ன வென்றுக்கு காயனும்ங்கறேன்? யப்பா டேய்! ஆளை வுடுடா சாமி” கையெடுத்து ஒரே கும்பிடாக கும்பிடு போட
பக்கென்று விழுந்து விழுந்து சிரித்தான் ரமணா.
அவன் சிரிப்பை கண்டு தங்களுக்குள் பேசிக் கொண்ட வாகாவும் தமிழும் கூட சேர்ந்து சிரித்துக் கொண்டே, “க்ரூப் ஸ்டடீங்கற பேர்ல, ரெண்டு நாளா நீ இங்க வந்து, படிக்காம லவ்ஸ் விட்டதெல்லாம் போதும். நாளைக்கு பரீட்சை, இப்போவாச்சும் வா ராசா, வந்து படி, வா வா…”
என ஆளுக்கொரு பக்கமாக பிடித்திழுக்க
“மச்சா…ன்” கொஞ்சலாக இழுத்தவனை முடிக்க விடாமல்
“மச்சான்!” என்ற அதட்டல் வேலை செய்தது.
வேறு வழியில்லாமல் படித்தே ஆகவேண்டிய கட்டாயத்தில் கைக்கெட்டிய புத்தகத்தை விரித்து பார்வை ஓட்டிய ரமணா, உள்ளிருந்து முணுக் முணுக்கென எட்டிப்பார்த்து ‘அவ்வளவு சீக்கிரம் என் ஞாபகத்தில் இருந்து உன்னை போகவிட்ருவேனா’ என வசீகரமான புருவ உயர்த்தலில் சவால் விட்டு, கண்களால் கட்டியிழுக்க முயன்ற பாவை முகத்தை முயன்று ஓரம்கட்டி, புத்தகத்தில் ஆழ்ந்தான்.
அப்போது தான் நிம்மதியாக மூச்சு விட்டுக்கொண்டனர் வாகாவும் தமிழும்.
இந்த வருடத்தோடு பள்ளிப்படிப்பு முடிவுக்கு வருகிறது, அதனால் அடிக்கடி பரீட்சைகளும் மாதிரி பேப்பர்ஸும் செமினார் என அவர்கள் நாட்கள் றெக்கை கட்டிக்கொண்டு பறந்தது. இடையிடையே ‘ஸ்ட்டீ ஹாலிடேய்ஸ்’ தருவதால் நண்பர்கள் மூவரும் இணைந்து படிப்பதும் வழக்கமே!
கடந்த இரு தினங்களாக படிக்க வருகிறேன் பேர்வழியென குத்தகைக்கு எடுத்த மொத்த சோகத்தையும் முகத்தில் கட்டிக்கொண்டு, அவனும் படிக்காமல் தங்களையும் படிக்கவிடாமல் ஒரு பாடு படுத்தியவனை ஒருவாறு மீட்டெடுத்த உற்சாகத்தில் ரமணாவோடு அவர்களும் இணைந்து ஆளுக்கொரு கேள்வியை கேட்பதும் சந்தேகத்தை தீர்ப்பதுமாக நேரம் கடக்க,
அவர்களின் முயற்சி புரிந்த ரமணா, நண்பர்கள் இருவரினதும் புரிதலில் தனக்குள் நகைத்துக் கொண்டான், அவர்களை அறியாதவனல்லவே அவன்!
இரண்டு நாட்கள், வெறும் நாற்பத்தெட்டு மணி நேரங்கள், இரு யுகங்கள் போல கடக்கும் என இரு தினங்களுக்கு முன் யாரேனும் சொல்லி இருந்தால் கூட வாகா, தமிழுடன் சேர்ந்து கைகொட்டி சிரித்திருப்பான்.
“டேய் மச்சான், இங்காருடா. உருட்டுறதுக்கும் ஒரு அளவில்லாம போச்சு” என நக்கலடித்திருப்பான் சர்வ நிச்சயமாக…
நிதர்சனம் அனுபவிக்கையில் உரைத்தது, அவை எத்தனை சத்தியவார்த்தைகள் என்று!
அதன் காரணமான அன்றைய நாள் மனக்கண்ணில் விரிய, படிப்பில் இருந்த ரமணாவின் கவனம் படிப்படியாக குறைய, ராதாவுடனான அன்றைய உரையாடலை சுபஷ்வினி அவனிடம் பகிர்ந்த நாளுக்கு பயணித்தது அவன் மனம்.
சுபஷ்வினி, ட்யூஷன் முடிந்து வர காத்திருந்த ரமணா, கொஞ்சம் டென்ஷனுடன் கால் மாற்றி கால் அமர்ந்திருந்தான். கை விரல்கள் தொடையில் தாளமிட, மற்றைய கை தலை கோதுவதும் கோதிய சிகையை கலைத்து விளையாடுவதுமாக இருந்தது.
அவனருகில் அஸ்வின், ‘ஜீவா’ திரைப்படம் டீவியில் ஒலிபரப்பாகிக் கொண்டிருக்க, கையிலிருந்த கணக்கு நோட்டில் ஒரு கண்ணும் திரையில் மறு கண்ணுமாக மூழ்கியவனை பார்க்க பார்க்க, ரமணாவின் முகத்தில் காரணமின்றி எரிச்சல் கோடுகள் மண்டியது.
இரவெல்லாம் உறக்கமில்லாத அவன் விழிகள் வேறு சிவப்பேறி இருக்க, “தலைவலி மண்டைய பொளக்குது, சூடா ஒரு கப் காபி குடு” என வந்திறங்கியவுடன் கேட்டவனுக்கு,
அப்போது தான் பாரதி கொண்டு வந்து கையில் திணித்திருக்க, அதை சிப்பிக் கொண்டே அஸ்வினை முறைத்தான்.
“டேய், முதல இந்த டீவியை ஆஃப் பண்ணி தொலைடா. ஒன்னு படி இல்லே படத்தை பாரு, ரெண்டையும் ஒன்னா பார்த்தா ஒரு மண்ணும் மண்டைக்கு ஏறாது” சிடு சிடுத்தவன்
“இதெல்லாம் என்னனு கேக்குறதில்லயா நீ” என கிட்சனுக்குள் நுழைந்த பாரதிக்கும் ஒரு அதட்டல் போட்டான்.
அங்கிருந்தே எட்டிப்பார்த்த பாரதி, “நான் சொல்றத எங்க டா காதில வாங்கிறான், எப்போ பாரு அஞ்சாறு பசங்களோட சேர்ந்து ஊர் மேயுறதையே வேலையா வெச்சிருக்கான். வயசு பதினாலாகுது, கொஞ்சமாச்சும் பொறுப்போட இருடான்னா, ம்ஹூம்… சுத்தம்!” தலையில் அடித்துக்கொண்டே ஈவ்னிங் ஸ்நாக்ஸ் செய்வதற்கான வேலையில் இறங்க,
அவனை, மேலிருந்து கீழ் பார்வையால் அளவெடுத்தவன் கழுத்தோடு வளைத்து, தனக்கருகில் இழுத்தெடுத்ததில் “டேய் மாமா, வலிக்கிது டாவ்!” அலறியவனை அசட்டை செய்து
“குத்தி, உன் குடலை உருவி, அதை உனக்கே மாலையா போட்ருவேன்” அவனுக்கு மட்டும் கேட்கும்படி காதோரம் சொன்னவன் குரலின் அழுத்தத்தில் ஜெர்க்காகிய அஸ்வின், ஒரு நிமிடம் விழித்து மறுகணமே அவன் கை லாக்கில் இருந்து லாவகமாக ரிலீஸாகியவன்,
ஜாக்கிரதையாக இரண்டு இருக்கை தள்ளிச் சென்றமரவும் சரியாக அந்நேரம் ‘ஒவ்வொன்றாய் திருடுகிறாய்’ பாடல் ஒலித்தது.
ரமணாவை ஒரு பார்வை பார்த்தவன், அவன் கவனம் தன் மீதில்லாத போது, ரிமோட்டை எக்கி எடுத்து வால்யூமை கூட்டினான்.
அவன் நழுவலில் ஒற்றை புருவம் உயர்த்தி நக்கலுடன் அவனை ஏறிட்டு, வேண்டா வெறுப்பாக திரையில் பார்வை பதித்த ரமணாவின் கவனம், அடுத்த சில நிமிடங்களுக்கு வேறு எங்கும் திரும்ப மறுத்தது.
திரையில், குறிப்பாக அந்த பாடலில், அதன் வரிகளில், ஶ்ரீ திவ்யாவின் அழகில், யூனிஃபார்மில் என முற்றிலும் தன் வசமிழந்த ரமணாவின் சிந்தையெங்கும் தன் சித்தத்தால் ஆக்கிரமித்த ராதாவின் ஊர்கோலமே!
வானம் மேக மூட்டத்துடன் காண படும்
விட்டு விட்டு மின்னல் வெட்டும்
சத்தம் இன்றி இடி இடிக்கும்
இருவர் மட்டும் நனையும் மழை அடிக்கும்
இது கால மழை அல்ல காதல் மழை!!
ஒவ்வொன்றாய் திருடுகிறாய்
யாருக்கும் தெரியாமல் திருடுகிறாய்
முதலில் என் கண்களை கண்களை
இரண்டாவது என் இதயத்தை இதயத்தை
மூன்றாவது முத்தத்தை ஹே ஹே ஹே ஹே
முத்தத்தை ஹே ஹே ஹே ஹே
முத்தத்தை
கண்களை மெதுவாக மூடித் திறக்க, மூடிய கண்களுக்குள் நர்த்தனமாடிய அவள் மதி முகம், ரமணாவின் உயிர் வரை ஊடுருவிச் சென்று பேரதிர்வுகளை ஏற்படுத்தியது.
இதயம் ஆயிரம் மடங்கு பேரிரைச்சலுடன் அவள், ராதா, இந்த ரமணாவின் ராதா என்ன பதிலை சொல்லிருப்பாள் என்றறியும் பேராசையில் எகிறி குதித்தது. நாடி, நரம்பெங்கும் குபுக்கென பொங்கி, சீறிப்பாய்ந்த செந்நிற குருதியில் காதல் ஹார்மோன்கள் தாண்டவமாட, அவன் அவனாகவே இல்லை.
ஆட்டோவில் அவளை பார்த்தது, கண்சிமிட்டும் மைக்ரோ செக்கனில் மூளையில் பதிந்த அவள் முகம், அதன் வனப்பு, சுபஷ்வினி வீட்டு கேட்டை திறந்து அவள் நடைபயின்ற அழகு என அவனது அகம், நாழிகை வாரியாக, அவளின் புகைப்பட தொகுப்புகளை பளிச்சிட்டு மறைய,
நொடிக்கு நொடி உணர்ச்சிகளை கொட்டித் தீர்த்த அவன் முகங்காட்டிய உணர்வுகளை படித்துக் கொண்டே மெல்ல அவன் தோள் தொட்டு உலுக்கிய சுபஷ்வினி, வீட்டில் அணியும் பாட்டியாலா பேண்ட், தீ ஃபோர்த் காட்டன் டாப்ஸில் கையில் நொறுக்குத்தீனியுடன் அவனெதிரில் நின்றிருந்தாள்.
“எப்போ டி வந்த” என்றான் மெல்ல சுயநினைவு மீண்டவனாக அவளைக் கண்டு.
“என்ன பகல் கனவா. எந்த கோட்டையை பிடிக்கிறதா கனவு கண்டீங்க மாம்ஸூ” என அவனை நக்கலடித்தவள் “நான் வந்து அரைமணி நேரமாச்சு” என்றவள் சம்மணமிட்டு அவனுக்கு எதிரில் இருந்த இருக்கையில் அமர்ந்தாள்.
அவள் சொன்னதை தலையசைப்புடன் தலையில் ஏற்றிக்கொண்டவன் எதிர்பார்ப்புடன் அவள் முகம் பார்ப்பதைக் கண்டவள் முகம் லேசாக மாற, அதைக் கவனித்தவன் முகத்திலோ அடக்க முடியாத தவிப்பு!
“எ…என்னவாம்” என்றவன் கர கரத்த தொண்டையை லேசாக செருமி சரி செய்ய,
சுபஷ்வினியின் தொண்டைக்குழி ஏறி இறங்கியது.
கை விரல்களை கோர்த்து நீட்டி மடக்கி சில நொடிகளை கடத்தியவளை பார்வையால் உறுத்தவன் “ராதா என்ன சொன்னா, என்ன நடந்துச்சுன்னு மறைக்காமல் சொல்லு” என்க,
“டேய் மாமா” என்றவளை ஒற்றை விரலை வாயில் பதித்து ‘வாயை மூடு!’ எனும் விதமாக சைகையால் கோபத்தை வெளிப்படுத்தியவன்
“இங்க பாரு, பொண்ணுங்களை பார்த்தே இல்லாதவன் இல்ல நான். எந்த பொண்ணை பார்த்தும் ‘இவ எனக்கே எனக்குன்னு கிடைச்சா நல்லாருக்கும்னு!’ யாரை பார்த்தும் தோனாததால மட்டும் தான் காதல்ங்கற வலையில் சிக்காமருந்தேன். எப்போ ராதாவை முதல் முதலா பார்த்தேனோ, அந்த நிமிஷமே ‘கடவுளே! இவளை மாதிரி ஒருத்தி தான் எனக்குன்னு’ பிக்ஸ் பண்ணிட்டேன். மனசுல பதிஞ்ச அவளோட மூஞ்சியை அவ்வளோ சீக்கிரமால்லாம் அழிச்சிட முடியாது, சொல்லி வையி அவள்ட்ட” என்றவன் குரலின் உறுதியில் சுபஷ்வினி செய்வதறியாமல் விழிக்கத் தான் செய்தாள்.
விழியகற்றாமல் தன் முகத்தை பார்த்திருப்பவள் முன்னால் சொடக்கிட்டவன் “ஏய், எவ்வளவு சீரியஸா பேசிட்டிருக்கேன். என்ன சொல்லிட்டு இங்க நீ தான் இப்போ முழிச்சிட்டே கனா காண்ற!” சிடு சிடுத்தவன், எக்கி அவள் தலையில் கொட்ட,
“ஸ்ஸ்!” வலியில், வலித்த இடத்தில் தேய்த்து விட்டுக்கொண்டே”வலிக்குது டா மாமா!” சிணுங்கினாள்.
மறுகணமே “பார்த்து, முழுசா ஒரு நாள் கூட ஆகலை, அதுக்குள்ள எப்பிடி இவ்வளவு உறுதியா அவள் தான் வேணும்ங்கற?” என்றவள் ‘தப்பு பண்ணிட்டேனோ?’ என உள்ளூர கலங்கித் தான் போனாள் சுபஷ்வினி.
“ஏய், ரொம்ப யோசிக்காதடி. அவள் தான் எனக்குன்னா அதை யாராலும் மாத்த முடியாது. எனக்கு நம்பிக்கை இருக்கு, அவள் எனக்கு தான்னு. நீ ரொம்பலாம் யோசிக்க தேவலை, ஃப்ரீயா விடு” என்றான்.