“நீ சாதாரணமா யோசிக்காதேனு சொல்லிட்ட, இப்போ தான் எனக்கு யோசனை அதிகமாகுது. தப்பு பண்ணிட்டேனோன்னு வேற தோனுது. ராது ஃபேமிலி பத்தி எனக்கு நல்லாவே தெரியும், ரொம்ப ஸ்ட்ரிக்ட். அது தெரிஞ்சும் அவளை உன்கிட்ட காட்டி…!” என்றவள் முழுதாக முடிக்காமல் தலையில் அடித்துக் கொள்ள.
“நீயே காட்டலேன்னாலும், அவள் எனக்குத் தான்னு இருந்தா, கடவுளே அவளை என்கிட்ட கொண்டு வந்து சேர்த்திருப்பாரு. இப்பவும் அப்படி தான் நான் நினைக்கிறேன். கண்டதை யோசிச்சு குழப்பிக்காம ஃப்ரீயா விடு. முடிஞ்சா ஒரு ரெண்டு நாள் கழிச்சு திரும்பவும் அவள்கிட்ட கேட்டுப்பாரு. ‘யாரு தடுத்தாலும், அவ காதல் என்கிட்டத்தான்னு அவ முடிவெடுத்தாள்னா, கண்டிப்பா அவ எடுத்த முடிவுக்கு வருந்தும் படியோ அவளை கைவிட்டுடுவேன்னு பயப்படவோ தேவையில்லைனு மட்டும் சொல்லிடு!’ புரியுதா” என்க,
சுபஷ்வினியின் தலை தன்னால் சம்மதமாக அசைந்தது.
அன்று சுபஷ்வினி வீட்டிலிருந்து வந்தவன் தான், கடந்த இரண்டு நாட்களாக அந்தப் பக்கம் போகாமல் வாகா வீட்டில் நண்பர்களுடன் கடத்தியவன் என்ன முயன்றும் முற்றுகை இட்டு, கட்டுக்குள் அடக்கி தன்னை கட்டியாள முயலும் ராதாவின் நினைவுகளில் இருந்து மீள முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறான்.
‘நாளைக்கு பரீட்சை முடிஞ்சதும் மொத வேலை அங்க போறது தான்’ என மனதோடு உறுதியெடுத்தவன் வலுக்கட்டாயமாக நிகழ்காலத்துக்கு திரும்ப, படிப்பு இழுத்துக் கொண்டது.
மறுநாள் காலையில் எக்ஸாம் ஹாலுக்குள் நுழைவதற்கு முன், பள்ளி வளாகத்தில் ஆர்ச் வடிவில் அமைந்திருந்த மல்லிப் பந்தலின் நடுவில் குடிகொண்டிருக்கும் பிள்ளையாரிடம் ‘நடக்கிறதெல்லாம் நன்மையா முடியட்டும்!’ என ஓராயிரம் அர்த்தங்கள் பொதிந்த வேண்டுதலை மனு கொடுத்தவன் நண்பர்கள் வந்து சேரவும் அவர்களுடன் இணைந்து கொண்டான்.
“பரீட்சை பேப்பரை பார்த்ததும் படிச்சதெல்லாம் மறந்து போற வியாதி எனக்கு மட்டும் தானா டா மச்சான்” இரண்டு நாட்களாக விழுந்து புரண்டு படித்தும் படித்த ஒன்றும் மண்டைக்கு ஏறாத வாகா தலை சொறிந்தவன், அங்கு கூலாக காலாட்டிக் கொண்டிருக்கும் ரமணாவை ஏகத்துக்கும் முறைக்க,
“டேய்!!! என்ன எதுக்குடா முறைக்கிற? நான் என்ன பண்ணேன்” அவனோ ஸ்டைலாக ஒற்றை புருவம் தூக்கியவன் அறியாப்பிள்ளையாக தோள் குலுக்கினான்.
முன்னிருக்கையில் காலை இரு பக்கமும் போட்டு இவர்கள் புறம் திரும்பி அமர்ந்திருந்த தமிழ், நகைச்சுவை கேட்ட ரீதியில் நக்கலாக சிரிக்கவும் “யூ ட்டூ ப்ரூஸ் லீ” என்றான் குறையாத கனன்ற ஆத்திரத்தோடு வாகா.
அதில் பக்கென கிளம்பிய வெடிச்சிரிப்பை அடக்கி “அது ப்ரூஸ் லீ இல்ல மச்சான், ப்ரூட்டஸ். எங்க சொல்லு பாக்கலாம்” என நொடியில் தமிழ், ஆசான் அவதாரம் எடுக்க முயற்சிக்கவும்
“டேய் டேய், அடங்குடா. உன் இங்க்லீஷூ பீட்டரெல்லாம் இங்க வேணாம். தெரிஞ்சே தான்டா சொன்னேன். என்னவோ எனக்கு ஒன்னுமே தெரியாதுங்கற ரேஞ்ச்ல உன் அறிவுவாளத்தை இங்க தொறந்து விட்றாதே, வெறியாய்டுவேன் பார்த்துக்க” என்று அவர்களின் சீண்டலில் சினந்தவன் சீற
உடனே இரு கைகளாலும் வாயை பொத்திய தமிழ் ‘சரி மச்சான் சரி மச்சான்!’ என்னும் மாடுலேஷனில் தலையை வேகமாக ஆட்டி, உதட்டை கடித்து வந்த சிரிப்பை வாய்க்குள் அடக்க, அவனைக் கண்டு ரமணாவும் உதட்டை மடித்து தலையை சரித்து சிரிப்பை மறைக்க முயன்றான்.
“டேய், பக்கி பன்னாடை பரதேசிங்களா!! நிஜமாவே வேணும்னு தான்டா சொன்னேன். நம்புங்கடாவ்” வடிவேலுவின் உடல் மொழியில் தலையில் அடித்துக் கொண்டே, வீறு கொண்டு எழுந்தவன் இருவரையும் நோக்கி அடிக்கப் பாய,
“வாட் இஸ் கோய்ங் ஆன்?!” என்ற கடும் தொனியில், அதட்டலொன்றுடன் அவர்கள் வகுப்புக்கு பொறுப்பான இன்சார்ஜ் சிதம்பரம் உள்ளே நுழைந்தார்.
மூக்கு கண்ணாடியை சரி செய்தவர், இரு கைகளையும் மார்புக்கு குறுக்கே கட்டிக்கொண்டு, நண்பர்கள் மூவரையும் கேள்வியாக பார்வையால் உறுத்து விழிக்க
“செத்தோம் டா சேகரா” வாகா, தலையை குனிந்த வாக்கில் அருகில் நின்ற தமிழுக்கும் ரமணாவுக்கும் மட்டும் கேக்கும் விதத்தில் முனகினான்.
அவர்களும் அதே பீதியில் எச்சிலை கூட்டி விழுங்க,
“இங்க்லீஸ் தெரியாதா? ம்ம்… இங்க என்ன நடக்குதுன்னு கேட்டேன். டெல் மீ…” என்றவர் சிறிது நேரம் அவகாசம் கொடுக்க, மூவரும் குனிந்த தலை நிமிரவில்லை. வாயை இறுக மூடி நிற்கவும் முறைக்கும் விழிகளால் மேலும் உறுத்தவர், மணிக்கட்டை உயர்த்தி வ்ரிஸ்ட் வாட்சில் நேரத்தை ஒரு முறை சரிபார்த்ததும் “என் கேள்விக்கு பதிலை சொல்லிட்டு பேப்பரை கலெக்ட் பண்ணிக்கோங்க” என்றதுடன் அவர்களை தவிர்த்து, வரிசையில் அமர்ந்து, அங்கு நடப்பதை அதிர்ச்சியும் சிறு பயமும் சிலர் சுவாரஸ்யமாகவும் பார்வையிட்டு கொண்டிருந்த ஏனைய மாணவர்களுக்கு வினாத்தாளை விநியோகித்தார்.
“டேய்! என்னடா பண்றார் இவரு? எவ்வளவோ முக்கியமான எக்ஸாம்” தமிழ் கலக்கத்துடன் ரமணாவின் காதைக் கடிக்க
“ஸாரி டா மச்சான், என்னால தானோ” மறுபுறம் வாகா மெல்லிய குரலில் முனகினான்.
உடனே மற்ற இருவரும் “டேய்!! என்ன டா லந்தா? என்ன பேசுற நீ, ஸாரி சொல்லுவியோ… எங்கள்ட்டயே” என ஒருமித்த குரலில் எகிற
அந்த களேபரத்திலும் கலக்கத்தை தாண்டிய சிறு முறுவல் வாகா முகத்தில் பளிச்சிட்டதென்றால், அது நண்பர்களால் அன்றி யாரால் சாத்தியப்படும்!
“என்ன நடந்தாலும் ஃபேஸ் பண்றது மூனு பேராவும்தான் இருக்கனும். பிரச்சினை வந்தா விட்டுக்குடுக்கிறதாடா நம்ம ஃப்ரெண்ட்ஷிப்! இதுக்கு முன்னாடி நம்ம இதுபோல மாட்டினதே கெடையாதா என்ன, விடு பார்த்துக்கலாம்” ரமணா, நண்பர்கள் இருவரையும் வார்த்தையால் தட்டிக்குடுக்க,
ஆமோதித்தனர் வாகாவும் தமிழும்.
கால்மணி நேரம் கடந்திருக்கும். இரண்டரை மணி நேர பரீட்சை. “மச்சான், டைமாகுது டா” தமிழுக்கு மயக்கமே வரும் போலிருந்தது. அங்கு வாகாவும் வியர்த்து வழிந்து விட்டால் அழுது விடுவான் போலிருந்தான். அதே கலக்கம் ரமணாவுக்குள்ளும் இருக்க, முனீஸ்வரன் வேறு திதும் திதுமென மனக்கண்ணில் தோன்றி மறைந்து இதயத்தை உலுக்கிக் கொண்டிருந்தார்.
“வேற வழியில்லடா மச்சான், டைமாகுது. பேசாம இந்த சொட்ட மண்டையன் கால்ல சாஷ்டாங்கமா விழுந்திட வேண்டியதுதான்” தமிழ் முடிவாக சொல்ல
“விழுந்தாலும் விழாட்டியும் எங்க வீட்டு மிலிட்டரி என்னை கொல்ல போறது உறுதி” என்ற ரமணாவின் குரலில், சிதம்பரத்தை நினைவுகூர்ந்த மரண பீதி நிரம்பி தளும்பியது.
“என்னடா மச்சான் பினாத்திற, பயத்தில கலக்கிடுச்சா” வாகா, அந்த இக்கட்டிலும் குசும்பாக அவன் காதோரம் குசு குசுக்க
“உன் வாய்லயே குத்த போறேன்டா” பதிலுக்கு கடித்த பற்களிடையே வார்த்தையை கடித்து துப்பிய ரமணா “இந்தாளு, எங்க வீட்டு மிலிட்டரி தோஸ்து டாவ், அன்னைக்கு வீட்டுக்கு வேற வந்திருந்தாரு. சொட்ட தல மட்டும் என்னைய அடையாளங்கண்டு அவருக்கிட்ட வத்தி வெச்சுச்சு, நெருப்பில்லாமலே புகைய ஆரம்பிச்சிடும். சும்மாவே அந்த மனுஷன் வெட்டுறேன் குத்துறேன்ங்கற மாறியே பார்த்து வைக்கும். இது மட்டும் தெரிஞ்சது, ஆணிய புடுங்க வேணாம். வீட்டோட இருனு, இருத்திடுவாரு.” என்ற போது சட்டைக்கு உள்ளாள் மின்விசிறியின் காற்றுக்கு மீறி வியர்வை ஊற்றெடுத்தது.
முதல் பட்டனை திறந்தவன் கழுத்தூடாக புறங்கையால் தொண்டைக் குழி, பின் கழுத்தில் அரும்பிய வியர்வையை வழித்தெடுத்து பதற்றத்தை தணிக்க முயன்றவனின் மற்றக்கை விரல்கள் தொடையில் தாளமிட்டது.
அவனே டென்ஷனாகி விட்டான் என்றதும் மற்ற இருவருக்கும் அது இன்னும் அதிகமாகிட,
ஒருவாறு மூவரும் ஒருமனதாக முடிவெடுத்த பின், சிதம்பரத்தை நெருங்கி “சாரி சார், இனி இது மாதிரி நடக்காது” என தழைந்த குரலில் செப்ப
அவரோ, சட்டமாக நாற்காலியில் அமர்ந்திருந்தவர் இவர்களை கண்டு கொள்ளாமல் கையிலிருந்த வினாத்தாளிலே கவனமாக இருந்தார்.
‘கெஞ்ச வைக்க ப்ளான் பண்றான்டா மச்சான் சொட்ட மண்டையன்’ பார்வையால் தங்களுக்குள் பேசிக்கொண்ட மூவரும் கடு கடுப்பை உள்ளூர மறைத்து “சாரி சார், இனி இந்த தப்பு எங்க பக்கமிருந்து நடக்காது, லேட்டாகுது சார், பேப்பரை குடுங்க சார்” என கெஞ்சலில் இறங்க, முகத்திலோ அள்ள அள்ள குறையாமல் பரிதாபம் சொட்டியது.
கையில் இருந்த பேனாவை இரு விரல்களுக்கு இடையே ஆட்டிக்கொண்டே, நிமிர்ந்து இருக்கையில் நன்றாக சாய்ந்தமர்ந்தவர் மூவரையும் கூர்மையான பார்வையால் துளைக்க, “சார் சார் லேட்டாகுது சார், இனி பண்ண மாட்டோம், வீட்டுல தெரிஞ்சா பிரச்சினை ஆகிடும் சார்” என தமிழ் பதற, மற்ற இருவரும் அதை முகத்தில் காட்டினர்.
மேலும் சில நிமிடங்களுக்கு அவர்களை கெஞ்ச விட்ட பின்பே மலையிறங்கிய சிதம்பரம், “எக்ஸாம் ஹாலுக்குன்னு ஒரு மரியாதை இருக்கு, ரவுடி பயலுங்க மாறி இங்க வந்து அடிதடில இறங்க கூடாது. உங்க மூனு பேரையும் நான் ஒன்னா பார்க்கிறது இதுவே கடைசியா இருக்கட்டும்” என்ற எச்சரிக்கையுடனே போனால் போகிறதென வினாத்தாளை மூஞ்சியில் எறிவது போல் வீச
‘போயா நீயும் உன் பேப்பரும்’ விட்டால் பாய்ந்து விடுவான் போல அவரை நோக்கி ஓரெட்டு வைத்த ரமணாவை வாகாவும் தமிழுமாக அவசரமாக, அவர் பார்வைக்கு படாமல் ஆளுக்கொரு பக்கமாக பிடித்து நிறுத்த, உஷ்ண விழிகளால் நண்பர்களை சுட்டெரித்தவனை கண்ணை காட்டி அமைதிப்படுத்தவும் தான் அடங்கினான்.
அவரை ஒன்றும் செய்ய முடியாமல் சபித்துக் கொண்டே தத்தம் மேஜையில் வந்தமர்ந்த மூவரும் விநாடியில் பேப்பரில் மூழ்க, ரமணாவின் மனநிலையோ முற்றிலும் மாறியிருந்தது, வரும் போதிருந்த உற்சாகம் முற்றாக அழிந்து.
“இந்தாளை எவன்டா இன்சார்ஜா போட்டது? எப்பவும் நமக்கு அன்வர் சார் தானே வருவார்” பரீட்சை பேப்பரை சப்மிட் செய்ததும், அங்கு வினாத்தாள்களை எல்லாம் ஒன்றாக அடுக்கி, பைக்குள் திணித்து கவனமாக எடுத்து வைத்துக் கொண்டிருக்கும் சிதம்பரத்தை பார்வையால் எரித்துக் கொண்டே ரமணா நண்பர்களிடம் காய,
“ஆமா, நான்தான் அவரை, இங்க வந்தே ஆகணும்னு வெத்திலை, பாக்கு நீட்டி வரவழைச்சேன். போடாங்!! கேக்கிறான் பாரு கேள்வியை. நாங்களும் உன்னோட தானே டா இருக்கோம். எங்களுக்கு மட்டும் எப்பிடி தெரியுமாம்” என்றான் அவனுக்கு குறையாத கடு கடுப்புடன் தமிழும்.
“விடு டா, அதான் எப்பிடியோ பேப்பரை முடிச்சிட்டோம்ல. அதுவரை சந்தோஷம்னு விட வேண்டியது தான்” வாகா நிம்மதி பெருமூச்சு விட்டான்.
“பயந்திட்டியோ…” தமிழ் நமட்டுச் சிரிப்புடன் கேட்க,
“பின்ன! மிலிட்டரியாச்சும் ஒரேடியா கொன்னுடுவாரு, உசுரு போய்டும். எங்கப்பன்காரன் இருக்கானே, தெனோம் பேசிப்பேசியே கொலையா கொன்னுடுவான் மச்சான். அதுக்கு இந்தாளே தேவலாம். நாலு வார்த்தையோட விட்டாரு மனுஷன்” என்றவன், அதை நினைத்து இப்போதும் ஆசுவாசப்பட்டுக் கொள்ள
“என்னவோ போ. இன்னிக்கு தடுத்திட்டீங்க, இன்னொரு நாள் அந்தாளு என்கிட்ட மாட்டாமலா போவான். அப்போ வெச்சு, தரமா செஞ்சுவுட்றேன்” என்ற ரமணாவின் குரலில் அடக்கப்பட்ட கோபம் மிதமிஞ்சி நிறைந்திருந்தது.
“சரி டா, அதை அப்புறம் பாத்துக்கலாம். இப்போ வா கெளம்பலாம், நீ வேற உன் அக்கா வீட்டுக்கு போறேன்ன…” என, அவன் மனதை மாற்ற, கிண்டல் தொனிக்க தமிழ் சொன்னது, சரியாக வேலை செய்தது.
பளிச்சென்று முகம் மலர்ந்து,
“ஸ்ஸ்!!! மறந்திட்டேன். நல்லவேளை ஞாபகப்படுத்தின மச்சான். கெளம்புறேன்டா, சாயந்திரம் நம்ம ஸ்பாட்டில் பாக்கலாம்” உள்ளங்கையை மடக்கி நெற்றியில் குற்றி தலையை ஆட்டியவன் அதே கையை விரித்து பின் தலையை கோதியவாறு, விறு விறுவென நடந்து கொண்டே, இரு விரலால் சல்யூட் அடித்து ‘வருகிறேன்’ என சொல்லிச் சென்றவனின் நடையில், ராதாவின் நினைவில், உற்சாகம் தொற்றி கரைபுரண்டோட, அதே மனநிலையில் சைக்கிளை மிதித்தவன் பாரதியின் வீட்டின் முன்பு நின்றுதான், இளைப்பாற மூச்சு வாங்கினான்.