அத்தியாயம் 12(1)
காவல் நிலையத்தை விட்டு வந்ததும், குழந்தைக்கு உணவு வாங்கி வருகிறேன் என்று சொல்லிவிட்டுச் சென்ற கெளதம், சிறிது தூரம் சென்று பார்க்க, அங்கே சின்ன ஹோட்டல் ஒன்று இருந்தது. அங்கே சென்று சூடான பால் வாங்கிகொண்டு ஓரமாக நிறுத்தபட்டிருந்த தனது காரை நோக்கி வந்தவன், வெளியே மிருதுளா இல்லாததைப் பார்த்து, ஒருவேளை காரின் உள்ளே உட்கார்ந்து இருக்கிறாளோ என்று நினைத்து பின்பக்க கதவை திறக்க, அவன் கண்ட காட்சியில் அதிர்ந்து போனான்.
உள்ளே மிருதுளா புதுகு காட்டி உட்கார்ந்திருக்க, குழந்தையை அவள் கைகளில் ஏந்தியிருக்க, அவளின் முந்தானை முழுவதும் கீழே சரிந்திருந்ததைப் பார்த்தவன் அவளின் செயல் புரிய, அதிர்ச்சியில், சட்டென்று கதவை சாத்திவிட்டு சற்று தள்ளி வந்து நின்று கொண்டான். மறக்காமல் ரிமோட் மூலம் கதவை லாக் செய்தான். நல்லவேளை, சற்று முன்பு, காரின் விளக்குகளை அணைத்துவிட்டு தான், காவல் நிலையம் சென்றிருந்தான்.
சற்று தள்ளி வந்தும் அவனின் படபடப்பு இன்னும் குறையவில்லை. தப்பான நேரத்தில் சென்றுவிட்டோம் என்பதனால் ஏற்பட்ட படபடப்பு இல்லை. மாறாகக் குழந்தையின் மேல் இந்த அளவுக்கு அவள் பாசம் உள்ளது என்பதைக் கண்டுகொண்டதனால் ஏற்பட்ட உணர்வு. குழந்தைக்கு வளர்ப்புத் தாயாகத் தான் இதுநாள் வரை மிருதுளா இருந்திருக்கிறாள் என்று நினைத்திருந்தான். ஆனால் இன்றுதான் அவள் அதற்கு மேல் சென்று, பெற்ற தாயாகவே இருந்திருக்கிறாள், அதை நாம்தான் புரிந்துகொள்ளவில்லை என்பதை உணர்கிறான். அப்பொழுது அவனுக்குத் தோன்றியது ஒன்று தான், ‘யாழினி மறுபிறவி எடுத்து வந்து விட்டாளோ?!’
இப்படி அவனால் நினைக்காமல் இருக்க முடியவில்லை. பிள்ளையின் மீது மிருதுளாவிற்கு இருக்கும் இந்த உறவு, எத்தனை நாளைக்கு நீடிக்க முடியும்?! நாளைக்கே அவளுக்கென்று ஒரு வாழ்க்கை அமைந்துவிட்டால், இருவரின் நிலைமையும் என்னவாகும்?! இப்பொழுதே சில விஷயங்களில் தேஜா மிருதுளாவை தேடுவதை இவனே பார்த்திருக்கிறான். இது இன்னுமே தொடர்ந்து, நாளை தேஜாவிற்கு மிருதுளவை விவரம் தெரிய ஆரம்பித்த பிறகு பிரிய நேர்ந்தாள், இருவரின் மனநிலையும் என்னவாவது?! ஒருவருக்கொருவர் சம்பந்தமில்லாத போது, குழந்தை விஷயத்தில் மிருதுளாவின் இந்த அதீத பாசம் எங்கு கொண்டுச்செல்ல போகிறதோ என்று கொஞ்சம் கவலையாகவும் இருந்தது அவனுக்கு.
கெளதம் இப்படி அங்கே யோசித்துக் கொண்டிருக்க, இங்கே மிருதுளாவிற்கோ அவன் வந்து போனது எல்லாம் கருத்தில் பதியவில்லை. தேஜா மட்டுமே அவளின் கருத்தில் இருந்தாள். குழந்தையின் உடல்நிலையை நினைத்து மிகவும் நொறுங்கி போயிருந்தாள். மடியில் இருக்கும் குழந்தையின் மீதிருந்து அவளால் கண்களை எடுக்க முடியவில்லை.
குழந்தையின் வயிற்றுப் பகுதியில் இருந்து கால் பாதங்கள் வரை மெதுவாகத் தடவி பார்த்தவளுக்கு அவளையும் அறியாமல் கண்களில் கண்ணீர் வழிந்தது. கொழுகொழுவென்று இருந்த குழந்தையின் உடல், ரொம்பவே மெலிந்து போய், நெஞ்சுக்கூடு பகுதியில் எலும்பு தெரிந்தது. அதையே பார்த்துக் கொண்டிருந்தவளுக்குக் கடத்தியவர்களை நினைத்து வயிறு பற்றி எரிந்தது. ‘உங்களுக்கெல்லாம் மனசாட்சியே இல்லையாடா. வாயத் துறந்து பேசகூடத் தெரியாத பச்சை குழந்தையை இப்படிப் பட்டினி போட்டுப் பிச்சை எடுத்துருக்கீங்களே, நீங்க எல்லாம் நல்லா இருப்பீங்களா டா. இந்த முகத்தைப் பார்த்தும் எப்படி டா உங்களுக்கு எல்லாம் இவளை கஷ்டபடுத்த மனசு வருது. நீங்களும் ரத்தமும் சதையும் இருக்கிற மனுஷங்க தானே!’ என்று உள்ளுக்குள் குமுறிக் கொண்டிருந்தாள். நினைக்க நினைக்கக் கோபம் பற்றிக்கொண்டு வந்தது. எங்கே தான் உணர்ச்சி வசப்பட்டாள், குழந்தைக்குத் தொந்தரவாக இருக்குமோ என்று நினைத்தவள், தனது கோபம், அழுகை எல்லாவற்றையும் அடக்கிக்கொண்டு அமைதியாக இருந்தாள். பார்வை மட்டும், தேஜாவின் மேலேயே நிலைத்திருந்தது.
குழந்தை பசியாறியதும் தூங்கிவிட, அதன்பிறகு தான் இவளுக்குச் சுற்றம் நினைவு வர, தன்னைச் சரி செய்துகொண்டவள், குழந்தையைச் சீட்டில் படுக்க வைத்துவிட்டு, கௌதமை தேடி கதவை திறக்க முயற்சிக்க, அது லாக் செய்யப்பட்டிருப்பது தெரிந்தது. உடனே தனது செல்போனை எடுத்து கௌதமிற்கு அழைத்து அவன் எங்கிருக்கிறான் என்று இவள் கேட்க, “கொஞ்சம் வேலையா பக்கத்தில் இருக்கேன். இதோ வரேன்.” என்றுவிட்டுப் போனை வைத்தவன், தன்னை ஆஸ்வாச படுத்திக்கொண்டு சில நிமிடங்களில் திரும்பி வந்தான். வந்தவன் ஒன்றும் சொல்லாமல் காரை கிளப்பிகொண்டு வீட்டை நோக்கி சென்றான். அபார்ட்மெண்ட் வந்து சேர்ந்ததும், காரை நிறுத்திவிட்டு தங்களது மாடியை நோக்கி இருவரும் செல்ல. குழந்தையைக் கௌதமிடம் கொடுக்காமல், மிருதுளா பாட்டிற்குப் படிகளில் சென்று கொண்டிருக்க, குழந்தையை தருவாளா! மாட்டாளா! என்ற குழப்பத்துடன் கெளதம் அவள் பின்னாலையே செல்ல, அவளோ இவன் வருவதையே கண்டுகொள்ளாமல் தனது வீட்டிற்குள் சென்றுவிட்டாள்.
மிருதுளா வீடுவரை பின்னோடு வந்தவன், அவள் வீட்டிற்குள் சென்றதும் வாசலிலேயே தயங்கி நிற்க, வேகமாக உள்ளே வந்து கொண்டிருந்த பேத்தியையும் பின்னாலேயே வந்த கௌதமையும் பார்த்ததும் அவனின் முகத்தில் இருந்த தவிப்பை புரிந்துகொண்ட பார்வதி, “கண்ணு, நில்லு.” என்று தனது பேத்தியை நிற்கச்சொல்ல, மிருதுளா அதைக் காதில் வாங்கிக் கொள்ளாமல் அறைக்குள் போக எத்தனிக்க, அவளின் முன்பு சென்று நின்ற பார்வதி, “நில்லுன்னு சொன்னேன் கண்ணு.” என்று அழுத்தி சொல்லவும், சட்டென்று நின்றுவிட்டாள் அவள்.
“குழந்தையைக் கெளதம் தம்பிகிட்ட கொடு கண்ணு.” என்று பார்வதி சொல்லவும், மிருதுளாவோ, “இனி பாப்பா நம்ம கூடவே இருக்கட்டும் ஆச்சி.” என்றாள் அடக்கப்பட்ட கோபத்துடன். “விளையாடாத கண்ணு. குழந்தைய கொடுக்காம இதென்ன அடம். பாரு அந்தத் தம்பி வாசல்ல நின்னிட்டு இருக்கு. அவங்களும் குழந்தையைப் பார்க்கனும்ன்னு தேடுவாங்க. போய்க் கொடு.” என்று கொஞ்சம் சத்தமாகச் சொல்ல, “அவங்களால பாப்பாவை ஒழுங்கா பார்த்துக்க முடியாது. அவங்களோட அலட்சியத்தால தேஜா பட்டது போதும்.” என்று சொல்ல, கேட்டுக் கொண்டிருந்த கௌதமிற்கோ, ‘என்னடா இது! தேஜா என் குழந்தையா, இல்லை அவங்க குழந்தையா!’ என்று குழப்பம் வந்த அதே நேரம், அவளின் வார்த்தையின் வீரியத்தில் சங்கடமாகவும் இருந்தது.
மிருதுளா அப்படிச் சொன்னதில், ‘இந்தப் பெண் என்ன முட்டாள் தனமா பேசுகிறாள்!’ என்று நினைத்த பார்வதி, “சொன்னா புரிஞ்சிக்கோ கண்ணு. குழந்தையை நம்மோட வச்சுக்க நமக்கு எந்த உரிமையும் இல்லை. குழந்தையைப் பெத்தவரு அவரு.” என்று அவளுக்குப் புரியவைக்க முயல, மிருதுளாவோ திரும்பி கௌதமை முறைத்தவள், “குழந்தையைப் பெத்தா மட்டும் போதுமா?! அவளைக் கவனமா பார்த்துக்க வேண்டாமா?!” என்று கோபமாகக் கேட்க, கெளதம், பார்வதி இருவருமே அதிர்ச்சி அடைந்தனர்.
“இப்படிலாம் பேசக்கூடாது கண்ணு.” என்றவர், குழந்தையை அவளிடம் இருந்து வாங்க முயல, அவளோ விடாது அழுத்தமாகப் பிடித்திருந்தாள். “வேண்டாம் பாட்டி. ப்ளீஸ்.” என்று அவளும் போறாட, ஒருகட்டத்தில் கோபம் அடைந்த பார்வதி, அவளை அடிக்கப் போக, அதற்குள் அவரின் செயலை புரிந்துகொண்ட கெளதம், சட்டென்று காலனியை கழட்டிவிட்டு உள்ளே வேகமாக விரைந்தவன், மிருதுளாவை மறித்து நின்றுகொண்டு, “பாட்டி ப்ளீஸ்.” என்று அவரிடம் தணிவாகச் சொல்ல, அதன்பின் அவர் அமைதியாகி விட்டார்.
மிருதுளாவிற்கோ, இதுநாள் வரை ஒருவார்த்தை கூடக் கடிந்து பேசாத ஆச்சி இன்று அடுத்தவர் முன்பு அடிக்க வந்ததை நினைக்கையில், மொழுக்கென்று கண்களில் கண்ணீர் நிறைந்துவிட, அங்கு நிற்க விரும்பாமல் குழந்தையுடன் அறையில் நுழைந்து கதவை தாழ் போட்டுக் கொண்டாள்.
அவள் சென்றதும், “ரொம்பப் பயந்துபோய் இருக்காங்க. அதான் இப்படிலாம் பேசுறாங்க. எதிர் வீடுதான. பாப்பா இங்க இருக்கட்டும் பாட்டி. நான் வரேன்.” என்றவன் பூட்டிய கதவை வெறித்துவிட்டு வெளியே சென்றுவிட்டான்.
கெளதம் வெளியே வரவும் சற்று முன்பு போன் செய்து வீட்டுக்கு வந்து கொண்டிருப்பதாகச் சொன்ன ஜெய்யும், ஆராவும் வராண்டாவில் நின்று கொண்டிருக்க, கௌதமின் வீட்டு வாசலில் சேகர் நின்று கொண்டிருந்தார். மூவருமே சற்று முன்பு நடந்த நிகழ்வை பார்த்துக் கொண்டுதான் இருந்தனர்.
வெளியே வரும் தன் அண்ணனை, ‘என்னன்னா இது!’ என்பது போல ஜெய் பார்க்க, ஒன்றும் இல்லை என்பது போலக் கண்களை மூடி திறந்த கெளதம், அவனின் தோள்களில் கைபோட்டு தனது வீட்டுக்கு அழைத்துச் சென்றான்.
போகும் இருவரையும், தனது வீட்டையும் மாறி மாறிப் பார்த்துக்கொண்டிருந்த ஆரா, முகத்தில் அதிர்ச்சியுடன் வீட்டுக்குள் செல்ல, பார்வதி நடந்ததை அவளிடம் சொன்னார். ‘அக்காவா இப்படிப் பேசினது?!!’ என்று அவளும் ஆச்சரியப்பட, மிருதுளாவின் அறை கதவை தட்டி, அக்காவை இவள் அழைக்க, அவளோ எந்தப் பதிலும் சொல்லவில்லை.
இப்படியே நேரம் கழிய, இரவு அறையை விட்டு வெளியே வந்த மிருதுளா, பார்வதி, ஆரா இருவரும் எவ்வளவோ சொல்லியும் இரவு உணவை சாப்பிடாமல், குழந்தைக்கு மட்டும் உணவை எடுத்துக்கொண்டு போய் ஊட்டிவிட்டவள், தேஜாவை உறங்கவைத்துவிட்டு தானும் அவள் அருகில் படுத்துக்கொண்டாள்.
இரவு முழுவதும் தூங்காமல் குழந்தையின் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தவளின் மனதில் பல்வேறு கலவையான எண்ணங்கள் ஓடிகொண்டிருந்தது. நல்லது – கெட்டது, சரி – தவறு என்று தேஜாவின் விஷயத்தில் உள்ள பலவற்றை யோசித்துக் கொண்டிருந்தாள் மிருதுளா. அதிலும் இரவு பார்வதி, “நம்மளால அந்தத் தம்பிக்குத் தொந்தரவு இருக்கக் கூடாது கண்ணு. எட்டி நின்னு பழகுற நமக்கே இவ்வளவு துடிக்கும்போது, அவங்க குழந்தையைப் பெத்தவங்க. குழந்தையைக் கடத்திட்டு போனவங்க, கஷ்டத்தைக் கொடுத்த மாதிரி, குழந்தையை நம்மகூடவே வச்சுக்கிட்டு நாமளும் அந்தத் தம்பிக்குக் கஷ்டத்தைக் கொடுக்கிறது சரியில்லை கண்ணு.” என்று சொன்னது தற்பொழுது செவிகளில் மீண்டும் ஒலித்தது. அதன்பின் அவள் மனதில் ஒரு தெளிவு பிறந்தது. அந்தத் தெளிவுடனேயே உறங்கி போனாள்.
அடுத்த நாள் காலை, குழந்தைக்குத் தேவையானவற்றைச் செய்துவிட்டு அவளைத் தூக்கி கொண்டு எதிர்வீட்டிற்குச் சென்ற மிருதுளா, வெளியே வந்த கௌதமிடம், “மன்னிச்சிடுங்க, நேத்து நான் அந்த மாதிரி பேசி இருக்கக் கூடாது.” என்று கூறிவிட்டு, தேஜாவை அவனிடம் கொடுக்க, அவளின் கைகளின் தொடுகையில் தெரிந்த நடுக்கமும், சில்லிடலும் அவள் எந்த மனநிலையில் இருக்கிறாள் என்பதை கௌதமிற்கு தெள்ளத் தெளிவாக உணர்த்தியது. குழந்தையைக் கொடுத்தவள், “அவ உங்க பொண்ணு. நான் இனி அவ விஷயத்தில் தலையிட மாட்டேன்.” என்று கூறியவள் தன் மனதில் இருந்த துக்கத்தில் கண்களில் துளிர்த்த கண்ணீரை சட்டென்று திரும்பி துடைத்துக்கொண்டு, “மிருதுளா, நில்லுங்க!!” என்ற கௌதமின் அழைப்பையும் காதில் வாங்கிகொள்ளாமல் விறுவிறுவென்று தனது வீட்டை நோக்கிச் சென்றாள்.
சத்தம் கேட்டு வெளியே வந்த சேகர், ‘ஏதாவது தற்காலிக கோபமா இருக்கும்.’ என்று சொல்லி கௌதமை சமாதன படுத்தியவர், அவனை உள்ளே அழைத்துச் சென்றுவிட, இங்கே மிருதுளாவின் செயலை ஆச்சரியமாகப் பார்த்துக் கொண்டிருந்தனர் ஆராவும் பார்வதியும். ஆனால் ஒன்றும் சொல்லவில்லை. ஏதோ அப்போதைக்கு இருக்கும் கோபத்தினால் அப்படிச் செய்கிறாள் என்று நினைத்தனர். ஆனால் அவள் தீவிரமாக ஒரு முடிவு எடுத்துவிட்டாள் என்று அவர்களுக்குத் தெரியவில்லை. அதன்பின் ஆரா அலுவகலம் கிளம்பி சென்றதும், பார்வதியிடம் சொல்லிக்கொண்டு பக்கத்தில் எங்கோ சென்று வந்தாள் மிருதுளா.
அதே நேரம் இங்கே கௌதமின் வீட்டில், நடந்து முடிந்திருந்த சம்பவங்களால் மனதளவில் சோர்வடைந்திருந்த கெளதம், நாளை அலுவலகம் வருவதாகக் கூறிவிட்டு அன்று விடுமுறை எடுத்துக்கொண்டான். ஹாலில் அமர்ந்து, தேஜாவுடன் தொலைகாட்சியைப் பார்த்துக்கொண்டிருந்த கௌதமின் கண்கள், தொலைக்காட்சி திரையில் இருந்தாலும், மனம் அன்று காலை பார்த்த மிருதுளாவின் கலங்கிய முகத்தைத் தான் நினைத்துக் கொண்டிருந்தது. குழந்தையைக் கொடுக்கும்போது அவளுக்குள் இருந்த உணர்வுகளை இவனால் புரிந்துகொள்ள முடிந்தது. ஆனால் இதில் தன்னால் என்ன செய்யமுடியும்?! என்ற கேள்வி திரும்பத் திரும்ப மனதுக்குள் ஓடியது. மிருதுளா சொன்னது போலக் குழந்தையை அவளிடம் கொடுக்க முடியுமா?! நிச்சயமாக அது முடியாது. தன் குழந்தை, அதையும்விட யாழினியின் நினைவு சின்னம் அல்லவா தேஜா! என்று கௌதமிற்குத் தோன்றினாலும், மிருதுளாவின் தாய் பாசமும் அவனுக்குப் புரிந்தது.
இப்படியாக அவன் யோசித்துக் கொண்டிருக்க, பொன்னம்மா வந்து இரண்டு முறை அழைத்த பின்பே நினைவுக்கு வந்தவன், “என்ன அக்கா?” என்று கேட்க, அவரோ தயக்கத்துடன், “தம்பி, எதிர் வீட்டு பொண்ணு வந்ததில இருந்து நான் அதைப் பார்க்கிறேன். அந்தப் பொண்ணு வீட்டில நம்ம பாப்பா மேல ரொம்பப் பாசமா இருக்காங்க. அதிலும் அந்த மிருதுளா பொண்ணு, நம்ம தேஜா பாப்பாவை அது பொண்ணாவே நினைக்குது. பாப்பா மேல உசுரையே வச்சிருக்கு தம்பி. நம்ம யாழினிமா தேஜாவை எப்படிப் பார்த்துகிச்சோ அதே மாதிரி அந்தப் பொண்ணும் நம்ம பாப்பாவை பார்த்துக்குது. சில சமயம் அந்தப் பொண்ணைப் பார்க்கும்போது நம்ம யாழினிமாவை நேருல பார்க்கிற மாதிரியே இருக்கும்.” என்று சொல்லிவிட்டு அவன் முகம் பார்த்தவர், பின் தனது குரலை தாழ்த்திக்கொண்டு, “வீட்டு வேலை செய்றவ நான் சொல்றேன்னு தப்பா நினைக்காதீங்க தம்பி, உங்களுக்கும் தேஜா மேல உரிமை இருக்கு. அந்தப் பொண்ணுக்கும் நம்ம பாப்பா மேல பாசம் இருக்கு. பேசாம அந்தப் பொண்ணை நீங்க கல்யாணம் செஞ்சுக்கோங்க தம்பி. நம்ம தேஜா பாப்பாக்கு அந்தப் பொண்ணைவிட நல்ல அம்மா கிடைக்காது.” என்று தயக்கத்துடன் சொல்ல, அவரின் பேச்சில் அதிர்ந்தவன், இருக்கையை விட்டு எழுந்தேவிட்டான்.
“அக்கா!!!” என்று அதிர்ந்தவன், “இந்த மாதிரி இனி பேசாதீங்க.” என்றான் சற்றே கோபமாக. “தம்பி நான் சொல்ல வரத்தை கேளுங்க….” என்று அவர் மீண்டும் ஆரம்பிக்க, “அக்கா, ப்ளீஸ். வேண்டாம்.” என்று சொல்லிவிட்டு அவன் உள்ளே போக எத்தனிக்க, அப்பொழுது அறையை விட்டு வெளியே வந்த சேகர், “பொறுப்பா, பொன்னம்மா என்ன சொல்ல வரான்னு கேட்போம்.” என்று அவனை நிறுத்த முயற்சிக்க, அவனோ, “அப்பா, அவங்க…..” என்று சலிப்புடன் ஏதோ சொல்ல வர, சேகர் கை அசைக்கவும், ஒன்றும் சொல்லாமல் அப்படியே நின்றுவிட்டான். பேசவா வேண்டாமா என்பது போலப் பொன்னம்மா தயங்கி நிற்க, ‘பேசு’ என்பதுபோலச் சேகர் சைகை செய்யவும், பொன்னம்மா பேச ஆரம்பித்தார்.
“நான் இந்த வீட்டில பத்து வருஷத்துக்கு மேல வேலை செய்றேன் தம்பி. நீங்களும் யாழினிமாவும் எவ்வளவு அன்னியோனியமா வாழ்ந்துக்கீங்கன்னு எனக்கு நல்லா தெரியும். யாழினிமா இறந்து ஒரு வருஷம்கூட ஆகல. இந்த நேரத்தில வேற பொண்ணைக் கல்யணம் செய்யச் சொல்றது உங்களுக்குக் கஷ்டமா தான் இருக்கும் தம்பி. ஆனா நான் உங்களுக்காக, வேற கல்யாணம் செஞ்சுக்கச் சொல்லல. நம்ம தேஜா பாப்பாக்காகச் சொல்றேன். என்னைப் பத்தி உங்களுக்கு நல்லா தெரியும் தம்பி. நானும் புருஷனை இழந்தவத் தான். ரெண்டு பொண்ணுங்களை வச்சுக்கிட்டு ரொம்பக் கஷ்டப்பட்டேன். அப்புறம் கடவுள் புண்ணியத்துல வீட்டு வேலை கிடைச்சு, என் புள்ளைங்கள கஷ்டம் இல்லாம பார்த்துக்கிட்டேன். சாப்பிட சோறு, உடுத்த உடை, படிப்புப் இதெல்லாம் என் பொண்ணுங்களுக்கு என்னால கொடுக்க முடிஞ்சுது. ஆனா அவங்களுக்குத் தேவையான பாதுகாப்பை என்னால கொடுக்க முடியல தம்பி. நாள்பூரா வெளிய வேலைக்குப் போய்டுறேன். பள்ளிக்கூடம் முடிஞ்சு அதுங்க தனியா தான் வீட்டில இருக்குங்க. போற வர பொறிக்கிங்களால எத்தனை நாள் அவங்க பயந்துபோய், நான் வந்ததும் நடந்ததை என்கிட்டே சொல்லி பயபடுங்க தம்பி. என் புள்ளைங்க தனியா இல்லை. அம்மாவா நான் இருக்கேன். இருந்தும் அவங்ககிட்ட இந்தப் பிரச்சனை செய்றாங்க ஏன், ஆம்பளை துணை இல்லாததால தான். அதுக்காக ஆம்பளைங்க இருக்கிற வீட்டுப் பொண்ணுகளுக்குப் பிரச்சனை இல்லைன்னு நான் சொல்லல. ஆனா எங்கள மாதிரி குடிசை பகுதியில இருக்கிற புள்ளைங்களுக்கு நிச்சயம் ஒரு துணை வேணும் தம்பி. இல்லனா தைரியமா குடிச்சிட்டு வீடு முன்னாடி வந்து பிரச்சனை பண்ணுவாங்க. சில சமயம் கதவை துறந்துட்டு வீட்டுக்குள்ளையே வந்துடுவாங்க. அந்த ஒரு காரணத்துக்காகத் தான் நான் இன்னொரு கல்யாணம் செஞ்சுகிட்டேன். இப்போ நானும் அவரும் சந்தோஷமா இருக்கோம். புருஷன் பொண்டாட்டியா இருக்கிறது பேரு சந்தோசம் இல்லை தம்பி. அவருக்கு நானும் எனக்கும் அவரும் பக்கபலமா இருக்கோம். இதுக்குப் பேரும் கல்யாணம் தான் தம்பி.”
“எல்லாரும் ஆசைப்பட்டு ரெண்டாவது கல்யாணம் செஞ்சுகிறது இல்லை. ஒவ்வொரு நிலைமை அவங்களைச் செஞ்சுக்க வைக்குது. என் அனுபவத்தில சொல்றேன் தம்பி, பொம்பளை பிள்ளையை வளர்கிறது அவ்வளவு சுலபம் இல்லை. இப்போ உங்களுக்குத் தெரியாது தம்பி. நாளைக்கு நம்ம பாப்பா வளர்ந்து, பெரிய மனுஷியாகி, கல்யாணம் காட்சி, அதுக்கு அப்புறம் பிரசவம் அது இதுன்னு வரும்போது உங்களுக்குப் புரியும் அவளுக்கு ஒரு அம்மா இல்லையேன்னு. நிறைய நேரத்தில பொண்ணுங்க அப்பாவை விட, அம்மாவை தான் மொதல்ல எதிர்பார்ப்பாங்க. என்னதான் அப்பாவா நீங்க இருந்தாலும் சில விஷயங்கள அம்மாகிட்ட தான் தம்பி சொல்ல முடியும். உங்களுக்குத் தெரியாத பல விஷயம் பொண்ணுங்களைப் பத்தி இருக்கு. பொம்பளை பிள்ளைங்க மனசில என்ன இருக்குன்னு அப்பாவை விட அம்மாவால தம்பி கண்டுபிடிக்க முடியும். பெத்தவச் சொல்லித்தான் அப்பனுக்கே சில சமயங்கள்ல விஷயமே புரிஞ்சிக்க முடியும். என்னதான் அப்பான்ற சொந்தம் இருந்தாலும், பொண்ணுங்களுக்கு அம்மான்ற சொந்தம் கட்டாயம் வேணும் தம்பி. இப்போ சொல்லாட்டியும் என்னைக்காவது ஒரு நாள் நம்ம தேஜா பாப்பாவே, எனக்கு அம்மா இல்லையே இதை எல்லாம் சொல்லிக்கொடுக்க அப்படின்னு கட்டாயம் சொல்லும் தம்பி. தேஜா பாப்பாக்கு நல்ல அம்மாவா, அந்த எதிர் வீடு பொண்ணால மட்டும் தான் இருக்க முடியும். ரொம்ப நல்ல பொண்ணு தம்பி அந்தப் பொண்ணு. நல்லா யோசிச்சு ஒரு நல்ல முடிவா எடுங்க.” என்று தன் மனதில் உள்ள அனைத்தையும் சொல்லி முடித்தவர், “நான் கிளம்புறேன் ஐயா! வரேன் தம்பி” என்று அவர்களிடம் விடைபெற்றுக் கொண்டு சென்றார்.